நம்மை மீறி போறவளா இருந்தா ஏன் இப்படி அழுது வடிஞ்சு அரை உடம்பா தேஞ்சு போய் கிடக்குறா… பேத்திக்கு வக்காலத்து வாங்கிய எழுபது கடந்த சுசிலா அதிசயமே…
பாட்டி நான் சங்கர நாராயணன் பொண்ணு… வாக்கு மீற மாட்டேன். இப்போவும் சொல்றேன் எந்த காலத்திலும் ஹரியை தான் கட்டிக்குவேன்னு உங்கட்ட வந்து கெஞ்சி நிற்க மாட்டேன்.
நான் ஹரியை ஆழமா விரும்பிட்டேன். இனி அந்த இடத்துல யாரையும் கொண்டு வந்து பொருத்தி பார்க்க சத்தியமா என்னால முடியாது.
தற்கொலை செய்துக்கலாமா? இதோட என் வாழ்க்கை முடிஞ்சுடுச்சுன்னு எல்லாம் உடைந்து உட்கார்ந்துட மாட்டேன். எல்லா காதலும் கல்யாணத்தில் முடியணும்னு கட்டாயம் இல்லை. என்னை விட்டுடுங்க!
நான் விரும்பின ஹரியை உங்களால் ஏத்துக்க முடியாது அதே மாதிரி நீங்க கை காட்டுற மாப்பிள்ளையை என்னால ஏத்துக்க முடியாது.
நான் செத்து போயிருவேன், சாப்பிடாம உண்ணாவிரதம் இருப்பேன்னு மிரட்ட போறதில்லை.
உங்களை நோகடிக்க நான் விரும்பல…. சுயநலமா என் வாழ்க்கையை தேடிக்க எனக்கு உடன்பாடில்லை.
எனக்கு வேலைக்கு போகணும்… நான் நிம்மதியா இருக்கணும்! வழிந்த விழி நீரை உள்ளிழுக்க முயன்றவள் இனி இது பற்றி பேச வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும் என்றாள் தீர்மானமாக.
அவளும் எவ்வளவு தான் தாங்குவாள்? வலித்து வலித்து வலி பிடித்து விட்டதோ?
பாட்டி இந்தாங்க என்னோட ஃபோன். நான் ஹரியோட பேசிட்டு இருப்பேன்னு நீங்களா கற்பனை பண்ணிக்க வேண்டாம்.
நான் அவரோட போனில் பேசணும்னு இல்லை. நான் எப்போ என்ன நினைப்பேன், என்ன பேசுவேன்னு அவருக்கு ரொம்ப துல்லியமா தெரியும்.
போன் நீங்களே வச்சுக்கோங்க! என்னை தேடி அவங்க யாரும் வரமாட்டாங்க. நானும் அவங்களை தேடி ஓடிப் போயிட மாட்டேன்.
என்கிட்ட ஏன் தங்கம் கொடுக்குற? உன் மனசு புரியாதவளா நானு? பேத்தியின் பேச்சுக் கேட்டு அழுதே விட்டார் சுசிலா.
சோ… எர்ரபள்ளி மகாராணி பவித்ரா ஹரிசரண் வேலைக்கு போறாங்க! அகிலன் கேலியாய் சிரித்தான்.
ம்ம்ம்ம்… பனிரெண்டாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போறா…
இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரியுமா?
அய்யோ வேற வினையே வேண்டாம்… என் மருமகளுக்காக மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலே கட்டுவேன்னு என் நயனா கிளம்பி நிற்பாரு.
அட தடிமாடு என் லைஃப் உனக்கு த்ரில்லிங்கா இருக்கா? முதுகில் பொத்தென்று வைத்தான்.
குழந்தை இனியன் உவ்வ்வ் ஊ ஊ என்று சப்தமிட தொடங்க…. உங்கப்பனை அடித்தா நீ அழுவியா…. குழந்தையை செல்லமாய் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.
சௌமி இன்னைக்கு ஹரிக்கு பிடிச்ச ஐட்டமா சமைச்சிடு… குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் அகிலன்.
அதெல்லாம் வேண்டாம் சௌமி சிம்பிளா சமைத்தா போதும்.
டேய் என் பிரண்ட் நீ வீட்டுல கோவிச்சுக்கிட்டு என்னை தேடி அடைக்கலமா வந்திருக்க…. உனக்கு அறுசுவை விருந்தளித்து நட்பின் இலக்கணம் பாராட்ட வேண்டாமா? புருவம் உயர்த்தி தோளை குலுக்கி ஜம்பமாய் கள்ள சிரிப்புடன் அகிலன் டயலாக் பேச…
கேத… உனக்கு வாயிக்கு ருசியா வேணும்னா உன் பொண்டாட்டியை செய்ய சொல்லி கொட்டிக்கோ… என்னை ஏன்டா கோத்து விடற…? பாவம் ரெண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு சௌமி என்ன செய்ய முடியும்? நீ கூடவே இருந்து ஹெல்ப் பண்ணு.
நான் என்னோட அப்பார்ட்மென்ட் போய் பார்த்துட்டு வரேன் ஹரி சென்றுவிட்டான்.
கொஞ்சம் வலி, கொஞ்சம் நிம்மதி என கலவையான மனநிலை அவனுக்கு. மூச்சு முட்டும் வீட்டு சூழலில் இருந்து தற்காலிக விடுதலை.
பவித்ராவை பார்த்து, பேசி ஒரு மாதம் கடந்து விட்டது. அவள் நினைவு இதயத்தின் ஒரு மூலையில் சிறு வலியாக ஊசி முனையால் நிரண்டுவது போல் நிரந்தரமாக அழுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த வலியை மூளை ரசிக்க தொடங்கியது தான் ஆச்சரியம்! காதலின் பல்வேறு பரிமாணங்களில் இதுவும் ஒன்றாக இருக்க கூடுமோ….?!
தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற வல்லமை இருந்தும் அமைதியாய் கைகட்டி நிற்பது கடினம்.
அவன் நிலை இப்போதைக்கு அது தான்.
ஒரு வார்த்தை உன்னோடு வருகிறேன் என்று பவித்ரா சொல்லி இருந்தால் அள்ளி வந்திருப்பான்.
அவள் விருப்பத்தில் அவன் கருத்தை முன்வைக்க விரும்பவில்லை. உன் முடிவு எதுவோ அது தான் என் முடிவு என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் இவ்வளவையும் சமாளிக்கிறான்.
பெருமூச்சுடன் கதவை திறந்து பால்கனிக்கு வந்தான்… சுவரில் சாய்ந்து கீழே இருக்கும் ரோஜா செடியை பார்த்தான்.
இங்கு நின்று தான் தினமும் பவித்ராவை பார்த்து ரசிப்பான்.
இந்நேரம் என் அம்மாயி என்ன செய்வா? கண்டிப்பா இளைத்து களைத்து போயிருப்பா….
வயசு புள்ள மாதிரியா இந்த பவித்ரா பொண்ணு இருக்கு… எடுத்துட்டு போற சாப்பாடு அப்படியே திரும்பி வருது… ரெண்டு இட்டலி ஒரு தோசைன்னு சாப்பிட்டு எப்படி தான் ஓடி ஆடுதோ… அது தலை எழுத்து இப்படியா இருக்கணும்…?
மணவாளன் தங்கையிடம் அதிகம் பேசுவதில்லை. அவரும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துவிட்டார்.
தமையா அவங்க ரொம்ப நல்ல மனுஷங்க… பெரிய கோடீஸ்வர குடும்பம்… அருமையான பையன் எங்கே தேடினாலும் இப்படி ஒரு வரன் அமையாது… நமக்கு இதை விட வேறென்ன வேணும்?
தமயந்தி வாயை திறக்கவே இல்லை…
அக்கம் பக்கத்துல பவியை பார்த்து கிசுகிசுன்னு
பேசிக்கிறாங்க… நாலு பேரு நாலு பேருன்னு சொல்வாளே உன் தங்கச்சி.. அந்த நாலு பேரு இப்போ நாலு விதம் பேசத் தொடங்கிட்டாங்க.
என்னை மூலவீட்டு தலையாரி பொண்டாட்டி கேட்குறா… என்னத்த உன் பேத்திக்கு கல்யாண யோகம் இன்னுமா வரலன்னு… அவ பேச்சுல அம்புட்டு நையாண்டி.
இந்த சின்ன கிராமத்துக்குள்ள எவ்வளவு நாள் மறைச்சு வைக்க முடியும்..?
இப்படியே பிடிவாதமா இருந்து பொண்ணை பெத்து அடைக்காத்து ஊறுகா போட சொல்லு உன் தங்கச்சிய… இயலாமையில் பொறுமி விட்டு போனார் சுசிலா. பேத்தியின் வேதனை அவரை வெகுவாய் தாக்கியது.
அங்கே எர்ரபள்ளி குடும்பத்திலும் ஹரிசரணை தினமும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர்.
ஆசைபட்ட அம்மாயியை கட்டிக்கவும் இவனுக்கு துணிச்சல் இல்லை… நல்ல நல்ல வரன் வருது அதையாவது பார்க்கலாம்னு முடிவு எடுக்க தைரியம் இல்லை.. அதுவும் இல்லாம இதுவும் இல்லாம இழுபறியா இருக்கு இவன் நிலைமை.
இவன் கோழை மாதிரி அமெரிக்காவில் போய் உட்கார்ந்திருக்கான்… குடும்பமே அவனை தாளித்தது.
ராம்சரண் மனைவி சர்வதனிக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது.
தம்பி குழந்தையை அவ்வப்போது வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருக்கும் ஹரிக்கு நேரில் பார்க்க வேண்டும் என்று பேராவல். ஆனாலும் போய் நின்றால் விளைவுகள் விபரீதமாக அல்லவா இருக்கும்.
“——————-“
பவித்ரா சிஸ்டர் உங்களை பார்க்க ஒருத்தர் வந்திருக்கார் ரிசப்ஷனில் வெயிட் பண்றார்…. இன்னொரு நர்ஸ் வந்து தகவல் சொன்னார்.
பக்கென்று இருந்தது அவளுக்கு…. ஹரி அமெரிக்கா சென்றுவிட்டதாக யுவி சொன்னானே…?
பெயர் சொன்னாங்களா சிஸ்டர்…? படபடப்புடன் கேட்டாள்.
இல்லையே…!
சரி நான் பார்க்கிறேன் என்று வேக நடையுடன் வந்து சேர்ந்தாள்.
அங்கு மின்விசிறிக்கு அடியில் அமர்ந்து கசகசத்த கழுத்து பகுதியில் வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தார் மணவாளன்.
மாமா… சற்று ஆசுவாசத்துடன் அருகில் சென்றாள்.
என்ன மாமா என்னை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?
சும்மா தான் பவிம்மா… வீட்டுல ஃப்ரியா பேச முடியல அதுதான் உன்னை பார்க்க இங்கே வந்துட்டேன்.
விஷயம் பெருசுன்னு புரியுது மாமா…. சோர்வுடன் அவர் முகம் பார்த்தாள்.
அவள் திருமணம் தவிர வேறென்ன விஷயமாக இருந்துவிட முடியும்?
பவிம்மா தில்லையாடியில் இருந்து ஒரு வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை ஹெல்த் இன்ஸ்பெக்டர். ஒரே பிள்ளை சொத்து பத்துக்கும் குறையில்லை.
மாமா ப்ளீஸ்…. உள்ளம் நைந்து போனாள்.
ஒரு வகையில் எம்பொண்டாட்டிக்கு சொந்தம்.
மாமா… திகைத்து நின்றாள்.
பவிம்மா அவங்க ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறாங்க.
மாமா என் நிலைமை உங்க தங்கச்சிக்கு தான் புரியலன்னா உங்களுக்குமா புரியல…?
ஏற்கனவே மனதிலும் உடலிலும் வலுக்குன்றி திராணியின்றி இருப்பவளுக்கு மீண்டும் நெருக்கடி என்றால்?