ஒரு வழியாக மீட்டிங் முடிந்து, ரிசோர்ஸ் இண்டெர்வியூ அட்டென்ட் பண்ணிவிட்டு, உணவுன்பதற்காக, கஃபேக்குள் நுழைத்து ஒரு டேபிளில் மூவரும் அமர்ந்தனர்.
(ரிசோர்ஸ் இண்டெர்வியூ என்பது ஒரு புது ப்ரொஜெக்ட்டில் அவர்கள் இணைவதற்கு முன்பு வைக்கப்படுவது.)
“ஹே சூப்பரு… சாம்பார் சாதம் எனக்கு தான்…” என்று மது டிபன் பாக்ஸ் திறந்ததும் ரேகா சொல்ல,
“அதானப் பாத்தேன்… சரியான சாம்பார் சாதம் தான் நீ…” என்று விமல் நக்கலடிக்க,
“விமல் அது தயிர் சாதம் இல்ல?…” என்று சிரிப்புடன் மது, தன் சந்தேகத்தை விமலிடம் கேட்க,
“ம்க்கும்… நீ என்ன சாதம் சொன்னாலும் அதுக்கு புரியாது… அந்த சாதத்தை எப்படி சாப்பிடலாம்னு மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்… அங்கப்பாரு, நான் சொல்லல…” என்பது போல் விமல் ரேகாவை பார்க்க சொல்ல,
அவளோ சாம்பார் சாதத்தை ரசித்து சாப்பிட்டுக் கொண்டே, இவர்களை பார்த்து, “என்ன நீங்க சாப்பிடலையா?…” என்று வினவ,
“ஓஹ்… உனக்கு நாங்கலாம் கூட இப்போ, உனக்கு தெரியுறோமா என்ன?… நான் கூட நீ நல்லா மொக்கிட்டு தான் எங்களை நிமிர்த்து பாப்பேன்னு தப்பா நினைச்சிட்டேன் ரேக்ளா ரேஸ்…” என்று உச்சுக்கொட்டி பேச,
“நீ இப்போ என்னவேனும்னாலும் சொல்லிக்கோ… ஐ டோன்ட் கேர்… ஐ கேர் ஒன்லி மை சாம்பார் சாதம்…”
“என்ன மது, நான் சரியா சொன்னேன்ல?…”
“ஆனாலும் உனக்கு இந்த பெட்டெர் மாக்ஸ் லைட் தான் வேணும்னு சொல்லுறியே… அதை நான் என்னனு சொல்லுறது?”
“சரி சரி… விடு… நாம சாப்புடுவோம்…” என்று நழுவ,
“அஹான்… உனக்கு என்ன, அவ பாக்ஸ் தான் வேணுமா?”
“இவ சமைச்சி எடுத்துட்டு வந்திருக்கானு நீ நினைக்கிற?… அதுலாம் அவ கனவுல கூட வராது… வேணும்னா என்னலாம் சப்புடலாம்னு வரும்… நாம ஷேர் பண்ணியே சாப்டுக்கலாம்” என்று விமல், மதுவின் அருகில் வந்து அமர்ந்தான்.
அதற்குள் சாப்பிட்டு முடித்த ரேகாவோ, “என்ன நீங்க இன்னும் அப்படியே உக்காந்திருக்கிங்க, எனக்கு இது போதும், நீங்க என்னோட சப்பாத்தியை எடுத்துக்கோங்க…”
“ஹா ஹா ஹா… ரேக்க்கா…” என்று மது சிரித்து, விமலிடம் “உன் வாழ்க்கை ரொம்ப அமோகமா இருக்கும்னு எனக்கு இதுலேருந்து தெரியுது…” என்று மேலும் சிரிக்க,
“என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது உனக்கு…” என்று அவனும் சிரிக்க,
ரேகா, “ஹே, என்ன ரெண்டு பெரும் சிரிச்சிட்டு இருக்கீங்க?… சாப்பாடு வேணாமா?…” என்று வினவ,
“அடியேய்… நீ முதல்ல சாப்பாட்டுலருந்து வெளில வா… உன்னைய வச்சிக்கிட்டு என்னத்த பண்றதுன்னு தெரியல போ… ரொம்ப பாவம் அவன்… கொஞ்சம் சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு… இதுக்கு மேல உனக்கு எப்படி நான் தெளிவா விளக்குறதுனு தெரியல…”
ரேகா உடனே இவர்கள் இருவரையும் பார்த்துட்டுவிட்டு, பின்பு தன்னையே ஒருமுறை குனிந்து பார்த்து, அடுத்து தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து, அங்கும் இங்கும் சுற்றி பார்த்துவிட்டு அமர்ந்து, “பார்த்துட்டேன் போதுமா… ஒன்னும் பெருசா நடக்கல…” என்று சொல்ல,
மதுவோ கடுப்பாகி, விமலை பார்த்து முறைத்துவிட்டு, “ஒழுங்கா சாப்பிட்டு கிளம்புற வழியை பாக்குற… இவ லூசா, இவ கூட இருக்குற நாம லூசானு தெரியல எனக்கு…” என்று உண்ண ஆரம்பிக்க,
ரேகா, “என்னடி… சாம்பார் சாதத்துல உருளைக்கிழங்கை மறச்சி வச்சி சாப்பிடுற மாறி சொல்லுற…”
மதுவோ தலையில் அடித்துக் கொண்டு, “ஏண்டி இதுக்கும் இப்படி சாப்பாடுனு தான் பேசுவியா?… அடடா! என்ன ஒரு உவமை…” எண்டு நக்கலாக சொல்லிவிட்டு,
இங்க பாரு விமல், “உனக்கு இந்த பீஸ் தான் வேணுமான்னு நல்லா இப்பவே யோசிச்சிக்கோ…” ஒரு நல்ல தோழின்ற முறையில, உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு அக்கறை எனக்கு இருக்கு… முடிஞ்சதுக்கு அப்பறம் ஒன்னும் பண்ண முடியாது… இப்போவே சொல்லிட்டேன்.
“நீ சொல்லுறதும் சரி தான் மது… இருந்தாலும்…” என்று இழுக்க,
ரேகாவோ, “என்ன பீஸ்?…” என்று அதி முக்கியமான கேள்வியை கேட்க,
விமல் மற்றும் மது இருவரும் அவளை கொலைக் காண்டாக பார்க்க, மதுவோ இதுக்கு மேல தயவு செய்து, “சாப்பிட்டு கிளம்புற வரைக்கும் ஒரு வார்த்தையும் பேசிடாத சொல்லிட்டேன்…”
“போடி… இவன் கூட சேர்ந்து, நீ இன்னைக்கு ரொம்ப பண்ணுற…”
மதுவோ முந்திக்கொண்டு, “வேணாம் விமல்… நீ இப்போ என்ன கேட்டாலும், அவ புரியாத மாறி தான் உளறுவா…”
ரேகாவோ பாவமாக இவர்களை பார்த்து, “உண்மையாவே எனக்கு தெரியல மது… சாப்பிட்டா, நான் எதுவும் கவனிக்க மாட்டேன்னு தெரியும்ல… தெரிஞ்சும் நீ இப்படி சொல்லுற பாத்தியா… போடி…” என்று சொல்லிவிட்டு, நிமிர்த்து அமர்ந்து வினாடி நேரத்தில், “நான் கவனிச்சிட்டேன், புது லீட் இங்க தான் வராரு…” என்று சிரிப்புடன் கூறி, எழுந்து நிற்க,
அங்கே அவர்களிடம் வந்தான் பிரகதீஷ். “ஹலோ கைஸ்…” என்று பொதுவாக கூறிவிட்டு, ஒரு நொடி நேரம் மதுவை பார்த்துவிட்டு, மற்றவர்களிடம் கவனம் வைக்க,
ரேகாவோ சிரித்துக் கொண்டே, “ஹாய் சார்…” என்று முகமன் தெரிவிக்க,
மதுவோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் உண்பதில் கவனமாக இருக்க, விமல் எழுந்து அவனுக்கு கைக்கொடுத்து, “வாங்க சார் சாப்பிடலாம்…” என்று அழைக்க,
“சார்லாம் வேணாம் கைஸ்… சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க, ப்ரகதீஷ்ன்னு…”
விமல், “ஒகே ப்ரகதீஷ்…” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு, “அப்பறம் சொல்லுங்க…” என்று அவனிடம் கேட்க,
பிரகதீஷ், “நானும் உங்களோட ஜாயின் பண்ணிக்கலாமா?… யாருக்கும் எந்த அப்ஜெக்ஷன்ஸ் இல்லையே…” என்று மதுவை பார்த்துக் கொண்டே கேட்க,
“ச்ச… ச்ச… என்ன பிரகதீஷ் இப்படிலாம் கேக்குறீங்க… வாங்க உக்காருங்க…” என்று ரேகா அவளுக்கு பக்கத்தில் உள்ள சேரை காமிக்க,
விமலும், மதுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பிரகதீஷை அமரச் சொன்னான்.
“மேடம் எதுவும் பேசலையே?… நான் உங்ககூட ஜாயின் பண்ணுனது அவங்களுக்கு பிடிக்கலையா?…”
மதுவோ இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து, “ஹாய் சார், சாப்டதுல உங்களை பாக்கல…” என்றாள்.
“இல்லனா, இவ என்னைய பார்த்துருப்பா…” என்று மனதினுள் அலுத்துக் கொண்டு, “நீ என்னைய தெரியாதது போல இருக்கல்ல… நானும் அப்படி தான் இருப்பேன், போடி…” என்று மனதினுள் அவளை திட்டிக்கொண்டே மதுவை பார்த்துக் கொண்டே அவளுக்கு நேரெதிராக அமர்ந்தான்.
“நீங்க நியூ ஜாயினி ஆஹ் இந்த கம்பெனிக்கு…” என்று விமல் விசாரிக்க,
“என்னைய பார்த்தா அப்படி தெரியுதா உங்களுக்கு?…” என்று இவன் மறுக்கேள்வி கேட்க,
“அப்படி இல்ல பிரகதீஷ்… இப்போ தான் உங்களை இங்க பாக்குறேன்… அதனால தான்… சாரி…” என்று சொல்ல,
“ஓஹ் ப்ளீஸ் விமல்… நான் சும்மா தான் உங்ககிட்ட அப்படி கேட்டேன்… ஜாப்னு ஜாயின் பண்ணதிலிருந்து… இந்த கம்பெனி தான்… ஒன் இயர் ப்ராஜெக்ட்க்காக லண்டன் போயிருந்தேன்…இப்போ திரும்பி இங்க வந்துட்டேன்…” என்றான் மதுவை பார்த்துக் கொண்டே சொல்ல,
அவளோ தனக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இருந்தாள்.
விமல் பேச வர, அதற்குள், “ஓஹ் சூப்பர் பிரகதீஷ்… அப்பறம் எவ்வளோ நாள் இங்க?…” என்று ரேகா ஆர்வமாக கேட்க,
“இனிமே இங்க தான், இந்த ப்ராஜெக்ட் முடியுற வரை….” என்று மென்னகையுடன் கூற,
“வாவ்… நாங்களும் ரிசோர்ஸ் இண்டெர்வியூ அட்டென்ட் பண்ணிருக்கோம்… ரிசல்ட் எப்போ சொல்லுவாங்க… உங்க ப்ரொஜெக்ட்ல நாங்க இருக்கோமா?…” என்று ரேகா தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்க,
“ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல, இருக்கே ரேகா… ரொம்ப இன்டெர்ஸ்டெட் ஆஹ்…” என்று சிரித்துக் கொண்டே வினவ,
“இந்த அதிகப்ரசங்கியை, என்னத்த நான் சொல்லுறதுனு தெரியலே ஆண்டவா…” என்ற நொந்துக் கொண்டு அவன் மதுவை பார்க்க,
மதுவோ சிரிப்பை வாய்க்குள் ஒளித்து வைத்து விமலை பார்த்துவிட்டு, ரேகாவை பார்த்தாள்.
இவளையே அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்த பிரகதீஷ்ஷோ, அவளின் அந்த சிரிப்பை கண்ணெடுக்காமல் பார்க்க,
விமலோ, மதுவின் நடவடிக்கையையும், பிரகதீஷ் மதுவை, பார்க்கும் பார்வையையும் பார்த்த பின்பு… என்னவோ புரிபட, அமைதி காத்தான்.
அவனின் கவனம் இங்கில்லை என்பதை பார்த்து, “பிரகதீஷ்… இங்க பாருங்க…” என்று ரேகா டேபிள் தட்ட,
“ஓஹ் சாரி… வேற யோசனை… நீங்க சொல்லுங்க…” என்றான்.
“நீங்க ரிசோர்ஸ் யாருனு இன்னும் சொல்லவே இல்லையே…” என்று திரும்ப அதையே கேட்க,
விமலோ ரேகாவை பார்த்து எதையோ சொல்லவர, அதை பார்த்த பிரகதீஷ்ஷோ, அவனை பேசவிடாமல், ” அது உங்களுக்கு மெயில் வரும்… நான் லீக் பண்ணக்கூடாது…” என்று முடித்தான்.
“சரி அதை விடுங்க… அப்பறம் பிரகதீஷ் உங்களை பத்தி சொல்லுங்க…” என்று மகிழ்வுடன் ரேகா அவனை பற்றி தெரிந்துக் கொள்ள கேட்க,
விமலோ, “ரேகா… அவரு லீட்…” என்று அழுத்தமாக சொல்ல,
ரேகாவை பார்த்து சிரித்துவிட்டு, “விமல் சொல்லுறது கரெக்ட்… நான் லீட், சோ நீங்க எல்லாம் முதல்ல சொல்லுங்க…” என்று சிரிப்புடன் பார்த்தான்.
“நான் சொல்லுறேன்… நான் சொல்லுறேன்…” என்றுஆர்ப்பாட்டமாக விமல் எதுவும் சொல்லவர்றதுக்குள் ரேகா பேச,
விமல் கடுப்பாக ரேகாவை பார்க்க,
இவனின் பார்வையை உணர்ந்து, “டேக் இட் ஈஸி விமல்… நான் எதும் நினைக்க மாட்டேன்…”
“நான் ரேகா… இங்க சென்னை தான்… இந்த வேலைக்கு நானும், மதுவும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரே பேட்ச்ல ஜாயின் பண்ணினோம்… அப்பறம் இந்த விமல், எங்களோட ஒரு ஆறு மாசம் சீனியர் இந்த ஆபீஸ்ல, எப்படியோ எங்க கூட பிரென்ட் ஆகிட்டான்.” என்று சொல்லி சிரித்தாள்.
“ஓஹ் நைஸ்… மேடம் எதும் பேசவே மாட்டாங்களா?…” என்று மதுவை பார்த்து கேட்க,
அவள் பதில் கூறாமல் அமைதியாக இருக்க, அவளுக்கும் சேர்த்து ரேகாவே, “அவ அப்படிதான் பிரகதீஷ்… கொஞ்சம் பேசி பழகுனாத் தான் நல்லா பேசுவா…”
“ஆமா பிரகதீஷ்… அவளுக்கும் சேர்த்து இவளே பேசிடுவா…” என்று விமல் நக்கலடித்தான்.
“என்னோட ரெண்டு பிரெண்ட்ஸ் இன்னும் லண்டன்ல தான் இருக்காங்க… அப்பறம் நிர்மல், இன்னொரு லீட், அவன் பிரீ இல்ல… நான் சாப்புடலாம்னு வரும் போது, உங்களை பார்த்தேன்… அப்படியே ஜாயின் பண்ணிட்டேன்…”
இவர்கள் பேசுவதில் தலையிடாமல் இருந்த மதுவோ, தற்போது கண்களால் கஃபே சுற்றி பார்த்துவிட்டு, அவனை நிமிடத்திற்கு குறைவான நேரம் பார்த்து விட்டு அமைதியானாள்.
இவளையே பாராது பார்த்துக் கொண்டிருந்த பிரகதீஷ்ஷோ, “நிறைய பேரு இருக்காங்க… எங்க கூட எதுக்கு வந்திருக்கன்னு பாக்குறா பாரு… இவளை என்ன பண்றது…” என்று மதுவை பற்றி யோசிக்க,
ரேகா, “பிரகதீஷ்… நீங்க சிங்கள் ஆஹ்?…” என்று கேட்டுவிட,
விமல் அவளை முறைத்து பார்க்க,
பிரகதீஷ்ஷோ சிரித்துவிட்டு, “இதுக்கு தான் என்னைய பத்தி சொல்ல சொன்னீங்களா?… என்று கேட்டுவிட்டு, மதுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஒரே ஒரு முறை தெரியாம கல்யாணம் ஆகிட்டு…” என்றான்.
ரேகாவோ அவன் சொல்லியதில் அதிர்ச்சி அடைந்து, “என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்களே…” என்று கேட்க,
விமலோ இது உனக்கு தேவையா என்பது போல் நக்கலாக ரேகாவை பார்த்து சிரித்து, பின்பு மதுவை ஒருமுறை பார்த்து விட்டு, பிரகதீஷ்ஷிடம் சிரித்துக் கொண்டே, “அப்போ தெரிஞ்சி எத்தனை முறை கல்யாணம் நடந்திருக்குனு சொல்லுங்க…”
மதுவை பார்த்துக்கொண்டே, “தெரிஞ்சினா இனிமே தான், இன்னொரு முறை கல்யாணம் பண்ண கேட்கணும்…” என்றான் விளையாட்டாக,
மதுவோ இப்போது அவனை முறைத்து பார்த்துவிட்டு, “ஓகே… நான் என் சீட்க்கு போறேன்… நீங்க பேசிட்டு வாங்க…” என்று யாரின் பதிலையும் பெறாமல் எழுந்து சென்றாள்.
அடுத்து விமலும், “ஓகே பிரகதீஷ்… நாங்களும் கிளம்புறோம்…” என்று ரேகாவோடு கிளம்பினான்.
பிரகதீஷ்ஷோ, “அட்லாஸ்ட் முறைக்குறதுக்காகவாது என்னைய பார்த்துட்டா…” என்று சிரித்துக் கொண்டே அவனின் இடத்திற்கு சென்றான்.