பொங்கல் அன்று கணவனுக்கு ஏதேனும் ஒரு பரிசு வாங்கி கொடுக்க தீவிரமாக இருந்தாள் மது. ஆடம்பர பொருட்களை விரும்புபவன் அல்ல அவள் கரிகாலன். காசு போட்டு வாங்குவது பயன்படனும் என்பான். நெடு நேரம் யோசிக்கும் போது அவள் கண்டது ஆடை தான்.
கரிகாலன் உடுத்தும் உடைகளில் அதிக கவனம் செலுத்த மாட்டான். ஏதோ ஒன்று சுத்தமா அணிந்தால் போதுமானது தான். கந்தையானலும் கசக்கி கட்டு என்னும் வகை சார்ந்தவன். மது அப்படியல்ல, அவள் உடுத்தும் உடைகள் நேர்த்தியாக இருக்க வேண்டும். தனக்கு பொருத்தமாக, தன் நிறத்தை தூக்கி காட்டும், பார்ப்போரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தான் அணிவாள். சேலை, சுடிதார்,ஜீன்ஸ் எதுவென்றாலும், ஒரு இரண்டு பேராவது பாராட்டினால் தான் அவளுக்கு திருப்தியே. விசேஷ நாள் தான் என்றில்லாமல், தேவை என்று எண்ணும் நேரமெல்லாம் ஷாப்பிங் தான்.
அதன் படி கணவனையும் மேம்படுத்த நினைத்து விட்டாள். அவனுக்காக உடையை பார்வையிட தொடங்கினாள். வீட்டிலேயே போன் மூலம் எந்த வகை, விலை, தரம் என்று அனைத்தையும் தீர்மானம் செய்து வைத்தாள்.
தன்னை அலங்கரித்து கொண்டு, தாயின் அருகே வந்தாள் மது. அங்கு தான் அமர்ந்திருந்தாள் ரம்யா. வெள்ளை நிற காட்டன் குட்டி டாப்பும், கருப்பு ஜீன் என்று படு அமர்க்களமாக ரெடியாகி வந்தாள். மது பேக் டூ ஃபார்ம் என்பது போல் தான் இருந்தாள்.
அவளை பார்த்தவுடன் ரம்யா முகத்தில் எரிச்சல் மண்டியது. பாரதியின் வார்த்தையான, “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்பது போல தான் மது நடத்தை இருந்தது. அதையே தான் ரம்யாவும் நினைத்தாள், “ஊரே காறி துப்புது இவ வாழ்க்கையை பார்த்து, இவ பெரிய மகாராணி தோரணை தான். மாமியார் நாய் பேச்சு பேசுனா, புருசன் துரத்தி விட்டான். கொஞ்சமாது சூடு சொரணை இருக்க பாரு, எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இருக்கா… வேற ஒருத்தியாக இருந்தா கம்பில சேலையை போட்டு இருப்பா…” என்று மனதில் தாளித்து கொண்டாள்.
மது கிஞ்சித்தும் ரம்யாவை கண்டு கொள்ள வில்லை. தன் தாயின் அருகே வந்து, “ அம்மா… ஷாப்பிங் போகணும், பணம் போட்டு விடுங்க. கொஞ்சம் அதிகமாகவே போட்டு விடுங்க…” என்று கேட்க.
மீனாட்சி முறைத்தார். “இவ வாழ்க்கைக்கு வழி தெரியாம நான் முழிச்சு நிக்குறேன். இவளுக்கு இது ஒன்னு தான் கேடு” என்று நினைத்தவர் வேற பக்கம் திரும்பி கொண்டார்.
இவர்கள் யோசிப்பது போல் அதிகப்படியான கவலை, யோசனை, அலட்டல் அதிகமில்லை மதுவிடம்… அவளை பொறுத்த வரை, தன் வாழ்வை சரி செய்து கொண்டாள். இனி அதை நோக்கிய பயணம் தான்.
“உனக்கு எதுக்கு பணம் மது?…” கேள்வி ரம்யாவிடம் இருந்து வந்தது.
கடுப்பான மது, “ உங்களுக்கு எதுக்கு இந்த கேள்வி?… உங்க வேலையை மட்டும் பாருங்க. நான் எங்கம்மாட்ட பேசிட்டு இருக்கேன்…” என்றாள் முகத்தில் கடுமையை மறைக்காமல்
“இப்ப ரம்யா கிட்ட எதுக்கு மூஞ்சிய தூக்குற… அவ கேக்குறது சரி தான. இப்ப இருக்குற நிலைமையில ஷாப்பிங் எல்லாம் அவசியமா…” மீனாட்சி கேட்க.
“எனக்கு அவசியம் தான்…” பிடிவாதம் மதுவிடம்.
ரம்யா சாதுரியமாக காய்களை நகர்த்தினாள். அவள் பேசும் வார்த்தைகளை யோசித்து, அளவாக பேசி, மாமியாரை தூண்டி விட்டாள்.
“இங்க பாரு மது, மாமா முடியாம இருக்காங்க. அதை நினைச்சு அத்தை சாப்பிட கூட இல்லை. வீட்ட பார்த்தியா எப்படி இருக்குன்னு, இந்த நேரத்துல உனக்கு ஷாப்பிங் எதுக்கு?… இது நல்லாவா இருக்கு. வேற ஏதாவது முக்கியம்ன்னா கூட நான் பணம் தாரேன்…” என்ற ரம்யாவின் பேச்சு, மதுவை தூண்டி விட்டது.
“ஹலோ, நான் என்ன உங்கப்பா வீட்டு காசவா கேட்டேன். எங்கப்பா வீட்டு காசா கேட்டேன். நீங்க இந்த வீட்டில வாழ வந்தா, அந்த வேலையை மட்டும் பாருங்க. எம் வாழ்க்கையில என்ன நடந்தா உங்களுக்கு என்ன?… உங்க வாழ்க்கை மாறாம தான போகுது. எங்கப்பா, அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன். உங்க விஷயத்துல நான் தலையிடல, அதே போல…” என்று சொல்லி கையால் செய்கை செய்ய, ஒதுங்கி கொண்டாள் ரம்யா.
அம்பு தான் ஏற்கனவே எய்தாகி விட்டதே…
“நாக்கை அடக்கி பேசுடி… என்னா வாயி, ஒரு பொண்ணுக்கு இந்த வாயி ஆகாது. அண்ணன் பொண்டாட்டின்னு மரியாதை இருக்கா. எனக்கப்புறம் இந்த வீட்டை பார்க்க போவது அவ தான். கொஞ்சம் அனுசரிச்சு நட, இந்த வீட்டுல இருக்க அவ தயவு வேணாம்…” என்று ஏகத்துக்கும் பேசி விட,
தாயிடம் இது மாதிரி ஒன்றை எதிர்பார்க்காதவள், மனம் அடி பட்டு போனாள். என்ன எதிர்வினை ஆற்றுவது என்று கூட தெரிய வில்லை. ரம்யாவின் முதல் வெற்றி, மெளன கொண்டாட்டம் தான்.
விறுவிறுவென்று தந்தை அறை நோக்கி மது செல்ல, “அந்த மனுசன் உயிரோட இருக்கிறது உனக்கு பிடிக்கலையா… வீட்டு வரவு, செலவு எல்லாம் ரம்யா தான் பாக்குறா, அப்ப அவ கேட்க தான் செய்வா…”கோபத்தில் கத்தினார் மீனாட்சி.
கண்கள் கலங்கி விட்டது மதுமிதாக்கு. “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?…” என்று கேட்க.
“உம் தலையெழுத்து, வேற என்னத்த சொல்ல. உனக்கு நல்லது தான் சொல்றேன், அது ஏன் புரிய மாட்டது மது. காலத்துக்கும் நீ இங்கதான்னு போது, கொஞ்சம் விட்டு கொடுத்து போ… உன் அண்ணன் துணை உனக்கு வேண்டாமா… நீயும் அனுசரிச்சா தான் மது, இந்த வீட்டில இருக்க முடியும். உங்கண்ணணை பகைக்காத மது…” என்ற தாயின் அறிவுரை மண்டையில் ஏற வில்லை.
மனம் கணக்க உள்ளே சென்று விட்டாள். மூடே கெட்டு விட்டது. மீனாட்சி நிதர்சனத்தை பேசினாலும், மனம் ஒப்புகொள்ள வில்லை. கணவனோடு வந்து போகும் பெண்ணுக்கு தான் மதிப்பு இருக்கும், தாய் வீட்டோடு இருக்கும் பெண்கள் சுய மரியாதையை உதுத்து விட வேண்டும் போல…
பொங்கல் அன்றும் மது சோகமாக தான் இருந்தாள். வீட்டில் யாரோடும் பேசவே இல்லை. கரிகாலன் உடன் பேசும் நேரம் மட்டுமே ஆறுதல். முதல் நாள் பொங்கல் அப்படியே போக, அன்று இரவே மீண்டு கொண்டாள் பெண். அவள் உக்தி அது தான். அடக்க வேண்டாம் அழுது விடு அழுத்தம் குறையும், தெளிவு பிறக்கும்.
இவர்களின் பேச்சை தூசி போல் தட்டி விட்டவள், அடுத்து என்ன என்று யோசிக்க தொடங்கினாள். சற்று நேரத்திற்கு முன்பு தான் கரிகாலன் பேசி விட்டு வைத்தான். கையில் அவன் கொடுத்த ஐயாயிரம் தான் இருக்கிறது. மத்தபடி அந்த பணத்தை மது தொடவே இல்லை. கணவனுக்கு என்ன செய்யலாம்…
ஆடம்பர பொருட்களில் மட்டுமா அன்பு வெளிப்படும். கணவனுக்கான மனைவியின் அன்புக்கு ஆயிரம் வழிகள் உண்டு. சற்று முன்பு கணவன் சொன்னது மனதில் உதித்தது. நாளை விடுமுறை என்பதால் ராமநாடு வந்து போகணும், சில பொருள் வாங்கணும் மது என்றான். அவன் இருக்கும் இடத்திற்கு செல்ல ஒரு மணி நேர பயணம். மதுரையில் இருந்து ராமநாடு இரண்டு மணிக்கு நேரத்திற்கு மேல் ஆகும். ஒரு முடிவுக்கு வந்து விட்டாள் மது.
காலை மணி மூணு இருக்கும். அப்போதே கிட்சனில் உருட்டி கொண்டு நின்றாள். நடுநிசி என்பதால் ஒரு சத்தமும் இல்லை. மது கையில் ஒரு நோட்புக் குடி இருந்தது. அவளது தான், அவள் அம்மாட்சி சொல்லிய சமையல் குறிப்புகள். நீ பெரியவள் ஆனதும் உதவும் என்று சொல்லியே எழுத வைத்தார். சிணுங்கி கொண்டே எட்டாம் வகுப்பு படிக்கும் போது எழுதினாள். இத்தனை வருடத்தில் இன்று தான் கை கொடுக்கிறது.
மது மெதுவாக சமைக்கும் பழக்கம் உள்ளவள் என்பதால், மூணு மணி முதலே சமையல் அறையை காத்து கொண்டாள். அவளின் எழுத்து பிழை உள்ள தமிழ் வார்த்தையை ரசித்து கொண்டே, சமைக்கும் பொருட்களை எடுத்து வைத்தாள். மலரும் நினைவுகள் தான் அவை, பேசாமல் இந்த பிழையான எழுத்துகளை எல்லாம் படம் பிடித்து கணவனுக்கு அனுப்பினால் தான் என்ன… கொஞ்சம் சுவாரஸ்யம் தான். கணவன் தமிழ் வாத்தியார், மனைவியோ , பருப்பை… செருப்பு என்று எழுதும் ரகம்.
கரிகாலன் முகத்தை கற்பனை செய்து சத்தமாக சிரித்து கொண்டாள். தன்னை தானே சந்தோசமாக வைக்கும் வித்தை கற்ற பெண்.
காலை ஆறு மணிக்கு சமையல் கடை முடிந்தது. பையில் அடுக்கினாள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை, கிரேவி, பிரெட் அல்லவா என்று ரொம்பவும் கவனமெடுத்து தான் செய்தாள். தன் ஸ்கூட்டியில் மாட்டு தாவணி நோக்கி பறந்தவள், தன் பேச்சு திறமையை பயன்படுத்தி டிரைவர் உடன் நட்பாகி கொண்டாள். ஏதேதோ கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்லி, சாப்பாட்டு கூடையை ராமநாடு வரை கொண்டு செல்ல வழி வகுத்து விட்டாள். அந்த பேருந்தின் நம்பர் தெரியுமாறு தன்னை செல்ஃபி எடுத்து கணவனுக்கும் அனுப்பி வைத்தவள், ஒரு குறுஞ்செய்தி மூலம் விசயத்தை பகிர்ந்த பின் தான் ஓய்ந்தாள். போன் பேசினால் ஒப்பு கொள்ள மாட்டேன். இப்போது தான் மனதில் ஒரு திருப்தி…
தனக்கு வந்த செய்தியை பார்த்த கரிகாலன் அதிர்ந்து போனான். மனைவிக்கு போன் போட, எடுக்கவில்லை. ராட்சசி… பஸ் பிடித்து பேருந்து நிலையம் சென்றான். பார்சல் வாங்க வேண்டுமே…
மது அனுப்பிய நம்பர் பார்த்து, வண்டியை சுத்திவர… “ஏய்!… இந்தாப்பா , நீ கரிகாலன் தான… உம் சம்சாரம் என்கிட்ட தான் குடுத்து விட்ருக்கு…” என்று டிரைவர் வர,
மெல்ல புன்னகை புரிந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டான் கரிகாலன்.
“ என்னை எப்படி கண்டு புடிச்சீங்க…” கரிகாலன் கேள்விக்கு.
“அதே தான் நானும் உம் சம்சாரத்திட்ட கேட்டேன். அதுக்கு அந்த பிள்ளை தான், கோழி திருடனா மாதிரி ஒருத்தன் வண்டிய சுத்தி வருவான். அவன் தான் வீட்டுக்காரன்னு சொல்லுச்சு. என்னாட சொல்லுது இந்த புள்ளன்னு நினைச்சா… அதே திருட்டு முழியோட தான் நீ வந்த, உடனே புடிச்சிட்டேன் பார்த்தியா… நான் மதுரைகாரன்…” கலகலவென்று அவர் சிரிக்க.
வாயை வைத்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்று நினைத்தவன், “வாங்கண்ணே ஒரு டீய குடிப்போம்…” என்று அழைத்து சென்றான் கரிகாலன். இவ்வளவு தூரம் கொண்டு வந்தவருக்கு ஒரு சின்ன அழைப்பு கொடுக்க வேண்டும் தான்.
“நம்மூர் பையன்னு காட்டுற… வேற ஒருத்தனா இருந்தா சார்ன்னு தான் சொல்லுவான். அப்புறம் கரிகால ரெண்டு நாளைக்கு ஒருக்க தான் ட்ரிப் அடிப்பேன். நான் வரும் போது எல்லாம் உம் சம்சாரம் கொடுத்து விடுமாம் சொல்லுச்சு, மறக்காம வந்து வாங்கிக்க…” என்க.
அடிப்பாவி என்று மனதில் ஒரு குரல். டீ, வடை எல்லாம் முடிந்த பின் தான் பார்சலை கையில் வாங்கினான் கரிகாலன்.
அதில் வாழை இலை இரண்டு இருக்க, “ இந்த ஊர்ல இலை இருக்காதாக்கும். மதுரையில இருந்து தான் வருமா… மதுரை மல்லி தான் வாசம் வீசும், இலையுமா?…. என்று கேலி செய்ய, கொஞ்சம் வெட்கம் தான் கரிகாலனிடம்.
“குடுத்து வச்சவன் தான். நான்லாம் ஒட்டலே கதின்னு கெடக்கேன். காதல் கல்யாணமா?…” என்று கேட்க.
“ சிரித்து கொண்டவன். கல்யாணத்துக்கு பின்னாடி வர காதல் அண்ணே…” என்று சொன்ன கரிகாலன் முகம் விகாசித்து இருந்தது.
“ ரைட்டு” என்று சொன்னவர் முகமும் சிரிப்பில் மலர்ந்தது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேர பயணம் கடந்து குடுத்து விட்ட சாப்பாடு, ஒரு மாதிரி இருந்த போதும் கெட்டு போகவில்லை. வாழை இலை கொஞ்சம் வாடி போனது. அதனால் என்ன… அதன் பின் இருக்கும் பாசம் யாருக்கு?… எனக்கான ஏக்கம் உன்னிடம் இல்லை என்றவன், இன்று அவள் அன்பில் உருகி நிற்கிறான்.
இங்கு வேலைக்கு வந்த பத்து வருடத்தில் யாரும் இப்படி ஒன்றை செய்தது இல்லை.அவன் தாய் கூட, “கோழி அடிச்சேன். உம் நினைப்பு தான் சின்ன பாண்டி. நல்லதா வாங்கி சாப்பிடு…” என்று தான் சொல்லி இருக்கிறார்.
எல்லாவற்றையும் எடுத்து சூடு செய்தான். அல்வா கொஞ்சம் இறுகி இருக்க, சூடு செய்து கொண்டான். அதன் சுவை அபாரமாக இருந்தது. உண்மையில் அதன் சுவை அவனுக்கு தெரியவில்லை, மனைவியின் அன்பு சுவையை கூட்டி கொடுத்தது. வீட்டு சாப்பாடு அதுவும் மனைவி கையால், அது கொடுக்கும் திருப்தி… அடி நாக்கு வரை இனித்தது.
நேரம் பார்த்து தான் மது போன் செய்தாள்.
“உங்களுக்கு புடிச்சு இருந்ததா கரிகாலன்?…”
“ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆனா, ஏன் மது உனக்கு இந்த வேலை. கஷ்டப்படுத்திக்காத…” என்ற கணவனுக்கு.
“உங்களுக்கு புடிச்சு இருக்கு தானே… இனி என் வேலையே இது மட்டும் தான்…” என்றவள். சும்மா இருக்காமல் பாட்டை வேறு பாடினாள். அவனுக்கு பிடித்த பழைய பாடல்களை தேடி பிடித்து, கேட்க ஆரம்பித்து இருந்தாள் அல்லவா… அதை தெரிய படுத்த தான்.
“சென்றது கண் உறக்கம்
நெஞ்சில் நின்றது உன் மயக்கம்….
இனி ஓய்வதேது, தெய்வதேது ,
உந்தன் ஞாபகம்…”
அல்வாவை வாயில் அடைத்தது கொண்டே கேட்டு கொண்டு இருந்தான்.
“மது… என்னை ரொம்ப மிஸ் பண்ணுறியா?…” என்று கரிகாலன் கேட்க.
“ ரொம்ப ரொம்ப கரிகாலன்…” என்றாள் மனைவி.
மனம் கனத்து போனது. இது எல்லாம் அவனின் இயலாமை அல்லவா… வசதி இருந்தால், இங்கேயே நல்ல வீட்டில் குடி வைக்கலாம். அரசு வேலை, கை நிறைய சம்பளம் தான். ஆனால், கட்டிய மனைவியை வைத்து காப்பாற்ற துப்பு இல்லை.
மதுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. சொந்த வீட்டில் அனாதையாக உணர்ந்தாள். கணவனின் கஷ்டம் ஒரு புறம். அதை தீர்க்கும் வழி தெரிந்தும், மார்க்கம் அறியவில்லை. தந்தையால் மட்டுமே உதவ முடியும். ஆனால், அவர் தான் கரிகாலன் என்றே பெயர் ஆகாது என்கிறார். தாய் பற்றி சொல்லவே வேண்டாம். அண்ணன் ஒரு அரை லூசு, அவன் பொண்டாட்டி ஒரு முழு லூசு.
இவர்களை சரி கட்டுவதற்கு பேசாமல் கேஸ் போட்டு வாங்கி கொண்டாள் என்ன?… குறைந்த பட்சம் எனக்கு உரியதை கொடுங்கள் என்றாவது சண்டை போடலாம். அவர்கள் கோபப்படுவார்கள். அதற்கு எல்லாம் அசரும் ஆள் நீ இல்லை மது . ஆனால், உனக்கு வாக்கப்பட்டவன் சரியில்லை. நீதி, நேர்மை என்பான். முதுகை காட்டு அடி கொடுக்க என்றால், வாட்டமாக காட்டி கொண்டு நிற்கும் நல்லவன். இப்படி சண்டை போட்டு வாங்கி கொண்டு போனாள், தன்னையும் சேர்த்து துரத்தி விடுவான். அந்த மலமாடு மாதவன் வரானாம், வரட்டும் அவனோடு பேசி தான் காரியம் சாதிக்க முடியும். நல்ல அண்ணனாக காட்ட முயற்சிக்கிறான், நான் கேட்டதை கண்டிப்பாக செய்வான். சொத்தில் பங்கா கேட்டோம். என் நகை மட்டும் கை சேர்ந்தால் போதும்.
அடுத்த நாள் விட்டு அதற்கு அடுத்த நாள், சமையல் குறிப்போடு வேலையில் இறங்கி விட்டாள். இந்த முறை வைத்து சாப்பிடும் குழம்பு வகையை தேர்வு செய்தால். நிற்காமல் ஓடும் கணவன் வேலை நேரத்தில் தனக்கென தனிப்பட்ட சமையலை செய்ய மாட்டான் என்று தோன்ற, அதற்கு தோதாக பொருட்களை தேர்வு செய்தாள்.
நல்லெண்ணெயில் வத்தல், பூண்டு வதக்கி எடுத்து, தனியாக தக்காளி அரைத்து அதனுடன் பெருங்காயம் சேர்த்து, நல்லெண்ணெயில் தாளித்து நீர் விடாமல், எண்ணெய் பிரியும் அளவுக்கு வதக்கி விட்டவள். ஒரு கண்ணாடி பாட்டலில் சேர்த்து கொண்டாள்.
அதனுடன், கலவை சாதத்துக்கு ஏற்ப பருப்பு பொடி, நெய், எள்ளு பொடி, கறிவேப்பிலை பொடி என்று வகை வகையாக வீட்டிலே தயார் செய்து, டப்பாவில் அடைத்து விட்டவள். கையோடு கொண்டு போய் குடுத்து விட்டு தான் வந்தாள்.
“ஏன் மது… உன்னை சிரமபடுத்திகாதே. உனக்கு தான் கஷ்டம்…” என்று வருத்தப் பட்டாலும், அவன் மனம் விரும்பியது.
உண்மையில் மது நினைத்தது போல தான் அவன் வேலை நேரம். ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு வருபவன் உடலில் சுத்தமாக தெம்பு இருக்காது. ஒட்டல் சாப்பாடு கட்டுபடியாகாது. வெறும் பிரெட் தான் அவன் இரவு உணவு. இல்லையென்றால் காலை வைத்த சாதத்தில் நீர் விட்டு ஊறுகாய் தொட்டு கொள்வான்.
தற்போது கை வந்த பொருட்கள், அவனுக்கு மிக திருப்தி. ஆசையாக உண்ண தொடங்கினான். சுடு சோத்தில் நெய், பருப்பு பொடி அபாரம் தான். ராத்திரி சாப்பாட்டு பிரச்சனை முடிந்தது. அதை மனைவியிடம் சொல்லவும் செய்தான்.
அடுத்த இரண்டு நாளில் வேலையில் இறங்கி விட்டாள். இந்த முறை ஸ்நாக்ஸ் வகை தான் இடம் பிடித்தது. மது படித்தது கணிப்பொறியில் என்ற போதும், அதில் ஒரு பிரிவாக,ஏதேனும் வேலைக்கு தகுதியான ஒன்றை தேர்வு செய்ய சொன்னார்கள். அவள் தேர்வு செய்தது பேக்கரி, ஸ்வீட்ஸ் தான். இனிப்பு அவளுக்கு பிடிக்கும் என்பதால், அதையே தேர்வு செய்தாள். கேக் அவளுக்கு கை வந்த கலை.
குட்டி குட்டியான டீ டைம் கேக், கிறிஸ்துமஸ் கேக், ஹனி கேக், கடலை மாவு பக்கோடா, ரிப்பன் பக்கோடா, தேன் மிட்டாய், மிக்ஸர் என்று பெரிய வகைகள் தான். தனித்தனியாக சம்படம் வைத்து அடுக்கினாள். ஆட்டோ பிடித்து தான் தூக்கி சென்றாள், அவ்வளவு இருந்தது.
டிரைவர் அண்ணாக்கும் தனியே பார்சல் கொடுத்து விட்டாள். அவருக்கு அவ்வளவு நிறைவு. மது மேல் ஒரு தனி மரியாதையே வந்து விட்டது.
“லேட்டா வருவேன் என்றால்… வெளியே சாப்பிட்டு விடுங்கள் என்று சொல்லும் பெண்கள் மத்தியில், இந்த பெண் சலிக்காமல் ஒருநாள் விட்டு ஒருநாள் பை பிடித்து வந்து விடுகிறாள்…”
தினமும் டவுன் வேலைக்கு செல்லும் ஒருவரை பிடித்து வைத்திருந்தான் கரிகாலன். அவன் நண்பன் தான். பக்கத்து வீடு. இவன் வேலை பளுவில் ராமநாடு சென்று வருவது முடியாத காரியம். ஆதலால், அங்கேயே வேலைக்கு போய் வரும் நண்பன் சிக்க, பிடித்து கொண்டான் கரிகாலன்.
இந்த முறை உணவு பண்டம் அதிகம் என்பதால் எல்லோருக்கும் சிறிது பகிர்ந்து கொடுத்தான்.
“இந்தாங்க சார். எடுத்துக்கோங்க… ஊர்ல இருந்து என் வீட்டுக்காரம்மா செஞ்சு குடுத்து விட்டாங்க…” என்று சிரித்த முகமாக சொல்வான். உண்மையில், அவனுக்கு அதில் பெருமை அதிகம்.
இவளின் அலப்பறை எல்லாம் ரம்யா பார்த்து கொண்டு தான் இருந்தாள். வசமாக சிக்கும் நாளுக்கு காத்திருந்தாள். விரைவில் கிட்டியது.
அன்று கணவனுக்கு பிடித்த ஹனி கேக் செய்யும் போது, அண்ணன் மகள் குட்டி வாண்டு வர… அவளுக்கும் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்தாள். அதை ரம்யா பார்த்ததால் தான் பிரச்சினையே…
வேகமாக வந்து பிள்ளையை வெடுக்கென்று இழுத்தவள். அதன் முதுகில் சுள்ளென்று ஒன்று போட்டாள். குழந்தை பதறி துடிக்க, கோபம் வந்தது மதுமிதாக்கு…
“கொஞ்சமாது அறிவு இருக்கா… சின்ன குழைந்தைய போட்டு அடிக்கிற…” காட்டாமாக மது கேட்க.
“உன் கூட பழக கூடாதுன்னு அவ்வளவு சொல்லியும் அத்தைன்னு ஒட்டிக்கிட்டு திரியுறா… குடும்ப புத்தி. நாளைக்கு உன்னை மாதிரியே ஒன்னுமில்லாமல் போக…” என்று ரம்யா வசை பாட தொடங்கினாள்.
காரணம் புரிந்தது மதுக்கு. இவள் குணம் தெரிந்து தான் ஒட்டாமல் இருந்தாள், உணவு பண்டம் பார்த்து குழந்தை வந்து விட்டது. சாதாரண கேக், இதில் என்ன வரப்போகிறது என்று தான் உண்ண கொடுத்தாள். நிச்சயம் வரும் என்றாள் ரம்யா.
“எனக்கும், உனக்கும் ஒரே வயசு. நான் புருசன், புள்ளைங்க, வீடு, வசதின்னு நிறைவா இருக்கேன். நீ?… ஊருக்கே தெரியும் உன் சேதி… ஒருத்தன காதலிச்சு, அவன் கூட ஊர்ல சுத்தாத இடல்லை. அப்புறம் ஒன்னுமே நடக்காத மாதிரி வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிட… சரி, அங்கையாவது ஒழுங்கா இருந்தியா… இங்க வந்து எங்க கழுத்தை அறுக்குற… உன்னால, எங்க வீட்டு நிம்மதி போச்சு…” என்று சாட
“உங்க வீடா” மது குரலில் கோபம்.
“ஆமா, எங்க வீடு தான். நான் இந்த வீட்டுக்கு தான வாக்கப்பட்டு வந்தேன். சுந்தர் மருமகள், மாதவன் பொண்டாட்டி. இந்த வீட்டுக்கு வாரிசும் இருக்கு. இன்னும் உன்னை தான் செல்லம், தங்கம், இளவரசின்னு கொஞ்சுவாங்களா… என் நல்ல வாழ்க்கைய பார்த்து உனக்கு பொறாமை…”
“உன்னை பார்த்து எனக்கு பொறாமையாக … குட் ஜோக். இந்த வீட்டுல மொத நீ இருந்த இருப்பு என்ன?… என்கிட்ட நீ பேசுனது எங்கப்பாக்கு தெரிஞ்சது. திரும்பவும் ரோடு தான். எங்கண்ணன் கூட உம் பக்கம் கிடையாதாம். சென்னையில ரொம்ப கஷ்டமாம், வேற வழி இல்லாம தான் இங்கு வந்து உட்கார்ந்து இருக்கீங்க போல. இதுல நீ என்னை சொல்ற… நியாயம் தான்… நீ தான் தைரியமான ஆள் ஆச்சே, எங்கப்பா முன்னாடி சொல்லேன், உங்க மக இப்படி, அப்படின்னு…” படு நக்கலாய் மது சொல்ல, கொதித்து போனாள் ரம்யா.
கொஞ்சமும் அடங்க மாட்டேன் என்கிறாளே…
“நான் எப்படி இருந்தாலும் எம் புருசன் கூட தான் இருக்கேன். ஆனா நீ… விதியத்து போய் எங்க நிக்குற. உன் அதிகாரமெல்லாம் இங்க செல்லாது. உம் புருசன் பிறந்த ஒன்றடி ஓட்டு வீட்டுல போய் கேளு. அங்க வாயடிக்க துப்பு இல்லாம இங்க வந்து காரியத்தனம் செய்ற, அடங்கி போக கத்துக்கோ…” என்று ஏகத்துக்கும் பேச,
மது அமைதியாகி விட்டாள். தன்னோடு வாய் பேச முடியாமல், தன் ஒழுக்கத்தை,தான் கணவனை விட்டு பிரிந்து இருப்பதை குத்தி காட்டி, வாய் மூட செய்கிறாள். இனி என்ன பேசினாலும் வேஸ்ட்… இவள் இதை தாண்ட மாட்டாள் என்று புரிய…
“சரி, என்ன வேண்டும்?…” என்றாள் தெளிவாக.
“என் வீடு உனக்கு இடமில்லை. அப்படி இருப்பதாக இருந்தால் அடங்கி தான் இருக்க வேண்டும்…” மாமியாரை மனதில் கொண்டு தான் வார்த்தைகளை அள்ளி எறிந்தாள்.
“உன் வீடா… சரிதான். எனக்கு அடங்கி போகும் எண்ணமில்லை. நான் வெளியேறி கொள்கிறேன்…” முடிவாக சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
ரம்யாவே எதிர்பார்க்க வில்லை. அரண்டு போய் பார்த்து நின்றாள்.
சாதாரண உடைகளை தேர்வு செய்து அடுக்கியவள், மனம் அமைதியடைய மறுத்தது. அவள் முன் அழுது விடாதே மனமே… முகத்தை அழுந்த துடைத்து தன்னை திடப்படுத்தி கொண்டவள், வெளியே வந்தாள்.
கையில் பையோடு வரும் மதுவை அதிர்ந்து பார்த்தாள் ரம்யா. அவள் முன் வந்த மது…
“சீரியல், கதை படிச்சு ரொம்பவும் கெட்டு போய்ட ரம்யா. நீ வில்லியும் இல்லை, நான் கதாநாயகியும் இல்லை. நம்ம ரெண்டு பேரும் சாதாரண மனுசங்க… தன்னை காயப்படுத்தினா, அதே காயத்தை திரும்ப கொடுத்து திருப்தி பட்டு கொள்ளும் சாதாரண மனுச ஜென்மம். அமைதியா போறான்னு நினைக்காத… எல்லாத்தையும் போன்ல எங்கப்பாகிட்ட, அண்ணா கிட்ட சொல்லிட்டு தான் போவேன்…” என்று சொன்னவள். ரம்யா முகத்தில் தெரிந்த பயத்தில் திருப்தி பட்டு கொண்டு கிளம்பிவிட்டாள்.
மணி பத்தரை ஆகியது. தாயும், தந்தையும், அவர்கள் அறையில் இருக்க, பேசாமல் கிளம்பி விட்டாள்.
வழியில் ஆட்டோ பிடித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்றாள். தன்மானத்தோடு வெளியேறிய அவள் தைரியம் கணவன் தான். அந்த நம்பிக்கை அதிகம் இருந்தது.
அதே டிரைவர் அங்கு இருக்க, ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது. கொஞ்சம் நிம்மதியாக உணர, ஏறி அமர்ந்தாள். ஆனால், மனம் மட்டும் வெம்பி கிடந்தது. இதே மாதிரி தான் சில மாதங்களுக்கு முன் கணவன் வீட்டை விட்டு வெளியேறினாள். இன்று, பிறந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அது அவர்கள் வீடாம், இது இவர்கள் வீடாம். அப்போ எனக்கென்று ஒரு வீடு இல்லையா…
கண் மூடி கொண்டாள். பேருந்து மெதுவாக நகர்ந்தது, பேருந்து நிலையம் விட்டு கடந்தது. அவசரமாக கண்களை திறந்தவள், வெளியே தலையை நீட்டி எட்டி பார்த்தாள். நகரின் மையம் கடந்து வெளியே சென்று கொண்டிருந்தது. சற்று தூரத்தில் மீனாட்சி அம்மன் கோபுர விளக்கு தெரிய, கை கூப்பி வணங்கினாள்.
“எனக்கு நீ என்ன கஷ்டம் கொடுத்தாலும், உன் மகள் போராடி வருவாள். அஞ்சி முடங்கி மட்டும் போக மாட்டேன். ஒரு முறை தலை குனிந்தது போதும்… நிமிர்ந்து விட்டேன். கல்லை கொடுத்தாலும் உளி கொண்டு சிற்பம் செய்ய ரெடி தான்… மண்ணை கொடுத்தாலும் நீர் ஊற்றி சிலை பிடிக்க தயார் தான். பின் வாங்க மட்டும் மாட்டேன். துணை நில் தாயே!…”