Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ…தண்நிழல் நான்…-29

அத்தியாயம் – 29

“தீவட்டிகள் தீரும் நேரம், மரப்படிகளினூடே மெல்ல கீழிறங்கும் யாமம். மழையின்றியும் மலரும் லீலியாய் மனம்.. மாறிலி நின் முகம்!”



Advertisement

கொடைக்கானலின் அந்த நள்ளிரவு, காலத்தின் பிடியில் இருந்து தப்பித்த ஒரு மாயாஜாலத்தைப் போலிருந்தது. அறையின் ஜன்னல் வழியாக ஊடுருவிய நிலவின் வெளிச்சம், மித்ரன் மற்றும் ஆதிரையின் உருவங்களைச் சுவரில் ஒரு கவிதையாக வரைந்து கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த அந்த ஒற்றை மெழுகுவர்த்தியின் வெளிச்சம் ஆதிரையின் முகத்தில் ஒரு தங்க நிற ஒளியைப் பூசியிருந்தது.

மித்ரன் ஆதிரையைத் தீர்க்கமாகப் பார்த்தான். இத்தனை ஆண்டுகள் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த ஏக்கம், இன்று ஒரு கட்டுக்கடங்காத எரிமலையாக உருவெடுத்திருந்தது. அவனது கண்கள் இப்போது ஆதிரையின் முகத்தில் அலைபாய்ந்தன.

“ஆதிரை… “இப்போ எனக்கு நீ வேணும்…” அவனது குரல் ஒரு தாளம் தப்பிய ராகத்தைப் போலக் கரகரப்பாக ஒலித்தது. அவன் மெல்ல அவளருகே வந்தான். அவனது ஒவ்வொரு அடியும் அவளது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தது.

Advertisement

மித்ரன் அவளைத் தன் கைகளுக்குள் சிறைப்பிடித்தான். அவனது இதழ்கள் அவளது காதோரம் உரசிச் செல்ல, அவனது குரலில் ஒரு வசீகரமான அதிகாரம் இருந்தது.

Advertisement

ஏண்டி… கண்டிஷன் 2 முடிஞ்சது. அப்போ கண்டிஷன் 3… நீ என்ன சொல்லணும்?”  அவனது கரகரப்பான குரல் ஆதிரையின் நரம்புகளில் ஒரு விவரிக்க முடியாத நடுக்கத்தை ஏற்படுத்தியது.

ஆதிரை இப்போது எதையும் சொல்லவோ, கேட்கவோ கூடிய நிலையில் இல்லை. அவளது இதயம் ஒரு ஓட்டப் பந்தயக் குதிரையைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது. மித்ரனின் அந்த நெருக்கமும், அவனது தீண்டல்களும் அவளை மொத்தமாக நிலைகுலையச் செய்திருந்தன.

“இல்லீங்க… நாளைக்கு மார்னிங் சொல்றேன்…” என்று மிக மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.

Advertisement

அவளைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தது அந்த நாணம்.

அவளது கன்னங்கள் தக்காளிப் பழத்தைப் போலச் சிவந்திருக்க, அவள் அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அவனது விரல்கள் அவளது தாடையை மெல்ல உயர்த்தின.  முதலில் அவளது நெற்றியில் தன் இதழ்களை மென்மையாக அழுத்தினான். அது ஒரு வெறும் முத்தம் அல்ல.. இத்தனை காலம் அவளைத் தவிக்கவிட்டதற்கான மன்னிப்பும், இனி அவளைப் பிரியமாட்டேன் என்கிற ஆழமான வாக்குறுதியும் அதில் இருந்தது.

அவனது இதழ்கள் மெல்லக் கீழே இறங்கி, அவளது கண்களை வந்தடைந்தன. படபடத்துக் கொண்டிருந்த அவளது இமைகளின் மீது அவன் மிக மென்மையாக முத்தமிட்டான்.

“சும்மா சும்மா எதையாச்சும் கற்பனை பண்ணி, உன் சின்ன மண்டைக்குள்ள வச்சு உருட்டிட்டு, இந்த கண்ணுல தண்ணி வச்ச… அவ்ளோதான்டீ… பார்த்துக்கோ!” என்று அவளது அந்த நீண்ட நாசியைப் பிடித்து அதட்டலாக ஆட்டினான். “என்ன மித்ரன் இது… சின்னப் பிள்ளை மாதிரி?” என்று ஆதிரை அந்த நிலையிலும் மெலிதாகச் சிரித்துவிட்டாள்.

“ஆமாடி.. இந்தச் சின்னப் பையன் இப்போ என்ன பண்ணுவேன் தெரியுமா?” என்று ஒரு மர்மமான புன்னகையோடு கேட்க..

“ஏன்… என்ன பண்ணுவீங்க?” என்று அவள் தவிப்பான குரலில் ஒன்றுமே தெரியாதது போல வினவ, மித்ரன் அவளது இடைவளைவை இன்னும் இறுக்கமாகத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

“என்ன பண்ணுவேனா…?” என்று அவன் கேட்ட அந்தத் தொனியில், அவனது கண்கள் கேட்ட அந்தத் தாகமான கேள்விக்கு,

“மித்ரன்…” என்று அவள் தவிப்போடு அழைக்க, அந்த அழைப்பைத் தன் இதழ்களால் சிறை பிடித்தான் அவன்.

அது ஒரு நீண்ட, ஆழமான, மற்றும் தீராத தாகம் கொண்ட முத்தம். அதில் சான் பிரான்சிஸ்கோவின் மழையும், ஜெர்மனியின் பனியும், நம்மூரு கரிசல் மண்ணின் வெப்பமும், அந்த கடற்கரையோர கிராமத்தின் உப்புக் காற்றும் ஒன்றாகக் கலந்தன. அவர்களின் இதழ்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்ட அந்த மொழியில், உலகத்தின் எந்த அகராதியிலும் இல்லாத காதல் பொதிந்திருந்தது.

அவளது கைகள் அவன் சட்டையை இன்னும் பலமாகப் பற்றிக்கொண்டன. அவனது இதழ்களின் சூடு அவளது ஆன்மா வரை பரவியது.

மித்ரன் மெல்ல அவளை விட்டு நிமிர்ந்தான். அவனது கண்களில் இப்போது ஒரு பழைய ஞாபகம் மின்னலாய் வந்து போனது.

“அன்னைக்கு மண்டபம் கிச்சன்ல எவ்வளவு இருந்தா …என்னைத் தள்ளி விடுவ…?” என அவளது இடையில் ஒரு கிள்ளு வைத்தான்.

“ஆஹ்… மித்ரன்!” என்று ஆதிரை சுணக்கத்தோடு நெளிய, அவனது கை இன்னும் அழுத்தமாக அவளைத் தன்பால் இழுத்தது.

அவள் ஏதாவது பதில் சொல்லத் தொடங்கும் முன்பே, மித்ரன் அவளுக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. மீண்டுமாய் அவளது இதழ்களில் பிரவேசித்தான்.

அந்த முத்தம் முன்னைவிட ஆக்ரோஷமாகவும், உரிமையோடும் இருந்தது. அவனது இதழ்கள் அவளது இதழ்களைச் சுவைத்த விதம், “நீ என் உயிர்… நீ என் உலகம்” என்று சொல்லாமல் சொல்லியது.

ஒரு மழையைப் போலத் தொடங்கிய அந்த முத்தம், இப்போது ஒரு பெருவெள்ளமாக மாறி அவளை அடித்துச் சென்றது.

“நீங்க ரொம்ப மோசம் மித்ரன்…” என்று அவள் அவனது தோளில் தன் பற்களை மெல்லப் பதிக்க, ஒரு சிறு முனகலோடு மித்ரன் அவளைத் தூக்கி மெத்தையில் கிடத்தி, அவளுக்கு மேலே ஒரு கவசத்தைப் போலக் குனிந்தான்.

அவர்களது உடல்கள் பின்னிப் பிணைந்த அந்த நொடியில், பல வருடத் தவம் கைகூடியது. இரு ஆன்மாக்களும் ஒருமித்துத் துடிக்க, கொடைக்கானலின் அந்த இரவு அவர்களின் காதலுக்கு மகுடம் சூட்டியது.

அந்த அழகான இரவிற்குப் பின், பல வருட ஏக்கங்கள் தீர்ந்த நிம்மதியில் இருவரும் மெல்லக் கண்ணயர்ந்தனர். விடியலில் இன்னும் ஒரு சுவாரஸ்யம் பாக்கியிருந்தது.

கொடைக்கானலின் அந்த இளங்காலை பொழுது, பனிமூட்டத்திற்கு இடையே ஒரு புதிய நம்பிக்கையோடு விடிந்தது. “டுடூயிங்… டுடூயிங்…” என்று அந்த மெல்லியத் திரைச்சீலைகள் காற்றில் அசைந்து, ஜன்னல் கம்பிகளோடு விளையாடி ஒரு தாளத்தை உருவாக்கின. அந்தத் திரைச்சீலைகளின் அசைவு, ஜன்னலுக்கு வெளியே காத்துக் கிடந்த இளங்காற்றை மெல்ல எட்டிப்பார்க்கச் செய்தது. ஆதிரை தான் முதலில் எழுந்தாள்.

ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தப் பனிமூட்டம் அவளுக்கு ஒரு புது உற்சாகத்தைத் தந்தது.

ஆதிரை மெல்ல மித்ரனின் அருகே வந்து, “குட் மார்னிங்…” என மெல்லிய குரலில் இதமாக வாழ்த்தினாள். உறக்கத்தின் விளிம்பிலிருந்த மித்ரன், மெல்லக் கண்விழித்து அவளது முகம் பார்த்துக் கைகளை நீட்டி “வா…” என அழைக்க, அவள் வந்து ஒண்டிக்கொண்டாள். “நல்லாத் தூங்குனீங்களா?” என்ற அவளது கேள்விக்கு, அவளை இன்னும் இறுக்கி அணைத்தபடி, “ம்ம்ம்… ரொம்ப நாளைக்கப்புறம்…..!” என்றான் மித்ரன்.

அப்போது ஆதிரை தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினாள். “மித்ரன், இதை புரொபசர் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க. சந்தியாவுக்கும் உங்களுக்குமான அந்தப் பழைய நினைவுகள் இதுல பத்திரமா இருக்குன்னு சொன்னார்.”

மித்ரன் அந்தப் பெட்டியை வாங்கியபோது, அவனது கைவிரல்களில் ஒரு நடுக்கம் பரவியது. மெல்ல அதைத் திறந்தான். உள்ளே காலத்தின் புழுதி படியாத சில பொக்கிஷங்கள்! பி.ஜி வகுப்பின் முதல் டூரின் போது இருவருக்காகவும் மித்ரன் பார்த்துப் பார்த்து வாங்கிய அந்த வட்டத் தொப்பிகள்… அவன் அவளுக்குக் கொடுத்த அந்தப் பழைய பேனா… இருவரும் இணைந்து முதன்முதலில் எழுதிய அந்த ஆய்வுக் கட்டுரை நகல்,  அன்ட் இருட்டு ஆய்வகத்தில் (Dark Labல்) அவர்கள் செய்த சோதனையின்போது எடுக்கப்பட்ட அந்த முதல் புகைப்படம்…!

அதைப் பார்த்ததும் மித்ரனின் கண்களில் ஒரு மெல்லிய நீர்த்திரை திரண்டது. ஆதிரை அவன் தோளில் மென்மையாகச் சாய்ந்து கொண்டாள். “சந்தியா உங்களைச் சாகாவரம் பெற்ற ஒரு நட்பால கட்டிப் போட்டுருக்காங்க மித்ரன். அந்த நட்புதான் இன்னைக்கு நம்ம காதலை இவ்வளவு பலமா மாத்திருக்கு!” என்று அவள் ஆறுதலாய் மொழிய, மித்ரனின் மனதிலிருந்த கடைசிப் பாரமும் ஒரு பனித்துளியைப் போலக் கரைந்து மறைந்தது.

 மனதின் பாரம் குறைந்த நிம்மதியில் இருவரும் ஒரு புதிய உற்சாகத்தைப் பெற்றனர். இருவரும்  கிளம்பினார்கள்.

தலை குளித்த ஈரம் இன்னும் கூந்தலில் சொட்டியதில் தன் நீண்ட கூந்தலைத் தளரதளரக் குளிப்பின்னல் இட்டிருந்தாள். கண்கள் இரண்டிலும் அடர்த்தியாக மை தீட்டினாள்.  அந்த விழிகள் மித்ரனை மீண்டும் சிறை பிடிக்கத் தயாராக இருந்தன. இதழ்களில் அந்த மக்(Mac) ‘ப்ளீஸ் மீ’ மியூட்டட் ரோஸி பிங்க் லிப்ஸ்டிக் மின்னியது.

அவள் அணிந்திருந்த லெமன் எல்லோ ஷிஃபான் புடவையும், அதற்குப் பொருத்தமாக ‘ச்சிக்’ என்று தைக்கப்பட்டிருந்த பிளவுஸும் அவளை ஒரு தேவதையாகக் காட்டியது.

குளித்து வெளியே வந்த மித்ரன் அவளைப் பார்த்தான்.

“வாவ் …!” – அவன் அறியாமலேயே அவன் இதழ்கள் முணுமுணுத்தன. “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க ஆதிரை. இந்த எலுமிச்சை வண்ணம் சும்மா உனக்கு அள்ளுது,” என, ஆதிரையின் கன்னங்கள் புடவையின் நிறத்தையும் தாண்டிச் சிவந்தன. “சரி சரி… கிளம்புங்க. நாம இப்போ எங்க போறோம்?” என்று அவள் கேட்க, மித்ரன் அவளது கைகளைப் பற்றிக்கொண்டான்.

“எங்க போலாம்னு சொல்லு?”

மித்ரனும் ஆதிரையும் அந்தக் காலை வேளையில் கோக்கர்ஸ் வாக் வந்தடைந்தனர். கொடைக்கானலின் இதயம் என்று அழைக்கப்படும் கோக்கர்ஸ் வாக் இயற்கையன்னை மனிதர்களுக்காக விரித்து வைத்திருக்கும் ஒரு நீளமான வான்வெளிப் பாதை. பாதையின் ஒருபுறம் விண்ணைத் தொடும் மலைச்சிகரங்கள், மறுபுறம் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பரவிக்கிடக்கும் ஆழமான பள்ளத்தாக்கு. கோக்கர்ஸ் வாக்கில் வீசும் காற்றுக்கு ஒரு தனி ராகம் உண்டு. அது மரங்களை உரசும்போது ஏற்படும் சத்தம், தூரத்தில் கேட்கும் பறவைகளின் கீதங்கள், மற்றும் அந்த அதிகாலை நேரத்தின் அமைதி … இவை அனைத்தும் சேர்ந்து ஒரு மெல்லிய காதல் பி.ஜி.எம் இசைப்பது போல இருக்கும்.

மேகங்கள் அவர்கள் இருவரையும் உரசிக்கொண்டு நகர்ந்தன.

அந்தக் கொடைக்கானல் குளிரில், எலுமிச்சை வண்ண ஷிஃபான் புடவைக்கு அரணாக ஆதிரை ஒரு மென்மையான சாம்பல் நிறப் பஷ்மினா ஷாலை தன் தோள்களில் போர்த்தியிருந்தாள். அது அவளது தேவதை போன்ற தோற்றத்திற்கு ஒரு கம்பீரமான அழகைச் சேர்த்தது. மித்ரன் பெய்ஜ் நிறச் சட்டையும், கருப்பு நிறப் பேண்ட்டும் அணிந்திருந்தான். அலை அலையான கூந்தலைத் தன் விரல்களால் கோதிப் பின்னுக்குத் தள்ளி  அவளுக்குப் தோளோடு தோள் நின்றபடி செல்ஃபி எடுத்தான். ஜோடிப் பொருத்தம் அசத்தியது!

அங்கே அந்தப் பாதை முழுவதும் ஒருபுறம் ஆழமான பள்ளத்தாக்கும், மறுபுறம் பசுமையான மலைகளும் சூழ்ந்திருக்க, மேகங்கள் அவர்கள் இருவரையும் உரசிக்கொண்டு நகர்ந்தன.

“மித்ரன், எனக்கு ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்.”. ஆதிரை மித்ரனின் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னாள்

 “சொல்லும்மா… கண்டிஷன் நம்பர் 3 தான..?”

“yes..நீங்க உங்க மனசுக்குள்ள ஒரு தராசு (Balance) வச்சிருக்கீங்க. அதுல ஒரு தட்டுல சாண்டி…லீ , இன்னொரு தட்டுல நானும் கண்மணியும்…” அவள் சற்று இடைவெளி விட்டு, தொடர்ந்தாள். “

“இல்லீங்க… ஒன்று ஒன்று இணை ஆகாது தான். சந்தியா லீ-யோட இடமும், எங்க இடமும் வேற வேறதான். ஆனா நீங்க எங்களை எல்லாரையும் ஒண்ணா ஒரே தட்டுல வச்சிடுங்க. இதோ, கீழ தெரியுற இந்த உலகத்தின் கவலைகள் எல்லாத்தையும் அடுத்த தட்டுல வைங்க…”

மித்ரன் வியப்புடன் அவளைப் பார்க்க, “ அப்போ எப்பவும் நம்ம தட்டு தான் கீழ இருக்கும்… சரியா? ஏன்னா நம்ம காதல் அவ்வளவு வெயிட்டானது.”

“இந்த உலகத்தின் கவலைகள் எல்லாம் லேசாகி மேல பறக்கட்டும். நம்ம காதல் மட்டும் இங்க உச்சியில இருக்கும்… இங்க… இங்க…” என்று சொல்லி, அந்த உயர்ந்த மலைச்சிகரத்தின் உச்சியை நோக்கிக் கைகாட்டினாள் ஆதிரை.

மித்ரன் அவள் கூறியதன் ஆழத்தை உணர்ந்து, நெகிழ்ச்சியோடு ஒரு சிரிப்பை உதிர்த்தான். அவளது முதிர்ச்சியும், தராசு போன்ற அந்தத் தத்துவமும் அவனை மொத்தமாக அவளிடம் சரணடையச் செய்திருந்தது.

அவளை இன்னும் ஆழமாகத் தன் அணைப்பிற்குள் இழுத்துக்கொண்டவன்,

“ஆதிரை… உன் தராசு தத்துவம் ரொம்பப் பிரமாதம். இப்போ இதுக்கு ஒரு  ‘என்ட் பஞ்ச்’ நான் வைக்கட்டுமா?” என்று அவன் கேட்க, ஆதிரை புன்னகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மித்ரன் அந்த மலை முகட்டின் பரந்து விரிந்த அழகையும், தங்களுக்குக்கென சூடி வைக்கப்பட்ட மேகக் கூட்டங்களையும் ஒருமுறை பார்த்துவிட்டு கூறினான்..

“மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அல்ல… அதையும் தாண்டிப் புனிதமானது!… அதையும் தாண்டிப் புனிதமானது!”

லா லா ல.. லா ல லா லா ….லல் லா ல… லா ல லா லா….லல் லா லா…. லல் லா லாலல் லாலா…

சுபம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!