பேசுறவங்க பேசிக்கட்டும், நீ என்ன நினைக்கிறங்கிறது தான் முக்கியம்.
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
அவங்கவங்க கண்ணால தான் உலகத்தை பார்க்கணும்! அடுத்தவங்க பார்வையில் பார்த்தால் நாம கண்ணிருந்தும் குருடுன்னு அர்த்தம்.
Advertisement
பொட்டில் அறைந்தார் போல் அவன் கொடுத்த பதிலில் அவள் முகம் வாடி விட்டது.
சுப்பு… ஏய்… கோச்சுகிட்டியா?
நான் எப்படின்னு நீ என்னோட குடும்பம் பண்ணி பார்த்து தெரிஞ்சுக்கோ… அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு கேட்காதே சரியா… கடுமை அதிகம் இல்லை என்றாலும் அந்த குரல் கடுமை தான் அவளுக்கு.
இல்லை பைக்ல போயிட்டு வந்துடறோம் அது தான் ஈஸியா இருக்கும் என்றான்.
போயிட்டு வரோம் அத்தை என்ற மருமகளிடம் பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாங்க என்று பூ வைத்து அனுப்பி விட்டார் பாப்பாத்தி.
ம்க்கும்…. “புது தொடப்பம் நல்லா தான் பெருக்கும்”கொணட்டினாள் அஞ்சலி.
கார் எடுத்துட்டு வந்திருக்கலாமில்ல என்றாள்.
ஏன் பைக்ல வரமாட்டியா?
அய்யோ அப்படிலாம் இல்லை… உடனடியாக மறுத்தாள்.
அவங்க கார் நமக்கெதுக்கு? காரில் போக வேண்டிய தேவை இப்போ என்ன இருக்கு?
தெரியாத்தனமா கேட்டுட்டேனே… நொந்து கொண்டாள்.
நமக்கு அவசியம் ஏற்படும்போது கண்டிப்பா கார் வாங்கலாம் என்றான் தன்மையான குரலில்.
மன்னர் டிரைவிங் பழகிக் கொண்டிருந்த போது கல்பாக்கத்தில் இருந்து சரவணன் வந்திருந்தான். அண்ணனிடம் கேட்டு கார் சாவி வாங்கிக் கொண்டு நண்பர்கள் சசி,கதிரை ஏற்றிக் கொண்டு ஊரை ரவுண்ட்ஸ் வந்தான்.
எல்லாரும் பார்த்துக்கோங்க எனக்கு கார் ஓட்டத் தெரியும் என்பதான இளம் பிராந்தியத்துக்கே உரிய பெருமை அது.
எங்காவது கொண்டு போய் மோதி டேமேஜ் பண்ணிட்டான்னா யார் தெண்டம் அழறது? அஞ்சலி பிலு பிலுவென பிடித்துக் கொண்டாள்.
அவன் நல்லா சேஃபா தான் டிரைவ் பண்றான். சரவணன் நியாயம் பேசினான்.
தம்பி பாசம் பொங்குதோ? கார் வாங்க பணம் குறையுதுன்னு கையை பிசைஞ்சுட்டு நின்னப்போ எங்கப்பா மூனு லட்சம் கொடுத்தாரு உங்க வீட்டுலயா கொடுத்தாங்க? அவ்வளவு ஆவேசம் அவளுக்கு.
அண்ணனும் அண்ணியும் அறைக்குள் பேசியது எல்லாருக்கும் தான் கேட்டது. அவள் ரகசியமா பேசினாள்? எல்லாரும் கேட்க தானே தண்டோரா போட்டாள்..
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
கணவனுடன் பைக் பயணம்…. ஆசையாய் அவன் தோளில் கைப்போட்டு நெருங்கி அமர்ந்தாள் சுப்ரஜா.
அவள் கையை மெல்ல விலக்கி விட்டான்.
சுரீர் என்ற உணர்வுடன் கையை விலக்கியவள் பின்னுக்கு நகர்ந்து கொண்டாள். அவமானத்தில் கூசிப் போனாள். தனக்கு ஏதோ லஜ்ஜை இல்லாதது போலும் இவனுக்கு தான் மான அவமானம் இருக்கிறது என்பது போலும். அவளுக்கு விம்மி வெடித்தது அழுகை.
இறுக்கமாய் அமர்ந்திருந்த அவள் உடல் மொழியில் புரிந்து கொண்டவன்,சுப்பு இந்த ஏரியாவில் எல்லாரும் எனக்கு பழக்கமானவங்க… காலை நேரம் ரோட்டுல எவ்வளவு ஜன நடமாட்டம் பாரு! ஒரு மாதிரி பார்ப்பாங்க….அவன் இலகுவாய் சொல்லிக் கொண்டிருக்க அவள் துளிர்த்த கண்ணீரை கவனமாய் உள்ளிழுத்துக் கொண்டாள்.
அந்த ஏரியா பற்றி, சுற்றியுள்ள வயல்வெளி பற்றி,கடைகள் பற்றி அவன் பேசிக் கொண்டே வந்தான். அவள் வாயை திறக்கவே இல்லை.
சேலம் மெயின் ரோட்டில் உள்ள New KVM ஜுவல்லரிக்கு அழைத்து வந்தான்.
அவள் எதுவும் பேசவில்லை. கண்கள் சிவந்திருந்தது. முகம் சற்று வீங்கியது போல் இருந்தது.
மாடியில் ரெஸ்ட் ரூம் இருக்கு போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா! என்றான்.
அவள் முகத்தை கழுவி துடைத்துக் கொண்டு வர இந்த டிசைன் நல்லா இருக்கா பாரு என்று தாமரையில் லட்சுமி வீற்றிருப்பது போன்ற டாலர் எடுத்து காட்டினான்.
அவள் எதுவும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்தாள். ரெண்டு காபி என்றான் சேல்ஸ் மேனிடம்.
தன் கழுத்தில் போட்டிருந்த செயினை கழட்டி இந்த செயினுக்கு அந்த டாலர் செட்டாகுமா பாரு என்றான்.
அந்த செயின் சுப்ரஜா வீட்டில் மாப்பிள்ளைக்கு போட்ட செயின்.
எனக்கு பசி எல்லாம் பிரச்சனை இல்லை. கிடைக்கும் போது கிடைக்கிற இடத்துல சாப்பிட்டுக்குவேன்.
டூரிஸ்ட் பேமிலி படம் நல்லா இருக்காம். கதிர் சொன்னான்.
உங்களுக்கு படம் பார்க்க பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம் என்றான்.
ஃபைட்,ஹாரர் இந்த மாதிரியா?
இல்லை ஃபேமிலி சப்ஜெக்ட், ரொமாண்டிக் காமெடி இந்த மாதிரி என்றான்.
அவள் நம்பாத பார்வை பார்த்து வைக்க… பக்கென்று சிரித்து விட்டான்.
அவன் பார்வை திரையில் இருக்க…. அவள் பார்வை அவன் மீதே…
என்ன சுப்பு உன் ஹீரோவையே பார்க்கிற அவ்வளவு லவ்வா?அவள் தோளில் கை போட்டு தன்னோடு இழுத்துக் கொண்டான்.
கையை எடுங்க!நீங்க போலீஸகாரர் உங்களுக்கு தெரிந்தவங்க யாராவது இருக்க போறாங்க பட்டென்று தட்டிவிட்டாள்.
ஓ… பதிலுக்கு பதிலா? இருட்டில் எவன் என்னை பார்க்க போறான்? அவள் இடையை வருடினான்.
ம்ம்ம்ம்ச் அவள் சலித்துக் கொண்டாள்.
இங்கே எனக்கு தெரிஞ்சவங்க யாரும் வரமாட்டாங்கடி கிசு கிசுத்து சிரித்தான்.
அவன் இடுப்பை பிடித்து வலிக்கும் அளவிற்கு கிள்ளி விட்டாள்.
ஏன்டி இந்த கொலை வெறி? எறும்பு கடித்தது போல் சுறுசுறுவென்று வலி அவனுக்கு. மெல்ல தேய்த்துக் கொண்டான்.
நீங்க வேற வேலையில் இருந்திருக்கலாம்.
சலுகையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
வேறென்ன வேலை கிடைக்கும் இந்த படிப்புக்கு? அவள் கரத்தை தன் கரத்தோடு பிணைத்துக் கொண்டான்.
அவள் பட்டென்று நிமிர்ந்து பார்க்க…. இயல்பாய் சிரித்தான்.
அவன் தொனி அவளுக்கு விசித்திரமாய் இருந்தது.
இடைவேளையின் போது ஐஸ்க்ரீம், பாப்கான் வாங்கி வந்து கொடுத்தான்.
ஆமா இது என்ன படம்? அவன் விளையாட்டாய் கேட்க…. அவள் கண்விழி பிதுங்கி பார்த்து நின்றாள்.
ஹா ஹா… “டூரிஸ்ட் பேமிலி ” சொல்லி சிரித்தான்.
நீங்க படம் பார்க்க விட்டாதானே? அவன் கையில் கிள்ளி வைத்தாள்.
புதுசா கல்யாணம் ஆனவங்க படம் பார்க்கவா தியேட்டருக்கு வருவாங்க? அவளிடம் ரகசியமாய் கேட்க… நாணத்தில் சிவந்தவள் மேற்கொண்டு அவன் பேசாத வண்ணம் அவன் வாயை பொத்தினாள்.
நகை வாங்கின விஷயம் பத்தி வீட்டில் சொல்லிக்க வேணாம். நான் பொறுமையா அம்மாக்கு சொல்லிக்கிறேன் என்றான்.
அண்ணி ஏதாவது கேட்டாலும் கவனமா பேசு! மூனு பேரிலும் அஞ்சலி அண்ணி கொஞ்சம் துடுக்கு என்றான்.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.
அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு போகலாம் ஓகே வா? என்றான்.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள் தெம்பாய்.
அம்மா ரொம்ப நல்ல டைப்.
தெரியும் என்றாள்.
அடேங்கப்பா…. சிரித்துவிட்டான்.
நீ சன் டிவி பார்ப்பியா?
ஏன்?
அம்மாக்கு பிரண்ட் ஆகிடலாம்.
நான் அதிகம் விஜய் டிவி தான் பார்ப்பேன்.
அப்போ கஷ்டம்… மீண்டும் சிரித்தான்.
அவள் சிரிப்புடன் முறைக்க…
ஹே எங்கம்மா சீரியல் பார்க்க மட்டும் தான் செய்வாங்க சீரியல் வில்லி மாதிரி நடந்துக்க மாட்டாங்க..!
வாய்… வாய்… எவ்வளவு வாய்…!
ஒரே வாய் தான். நைட் கூட உனக்கும் எனக்கும் சேர்த்து ஒரே….
அவன் முதுகில் பொத் பொத்தென்று ரெண்டு அடி போட்டவள் ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க என்றாள்.
“———————–“
இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பீங்க? பாப்பாத்தி வருத்தத்துடன் மீன் குழம்பை ஊத்தினார்.
அவ சாப்பிட்டாம்மா நான் தான் சாப்பிடல என்றான்.
அத்தை பொய் பொய்… எனக்குன்னு சொல்லி எக் ரைஸ் வாங்கி டேஸ்ட் பார்க்கிறேன் பார்க்கிறேன்னு சொல்லி சொல்லியே பாதி பிளேட் இவர் தான் காலி பண்ணினார்.
ஏன்டா பிள்ளைக்கு பிடிச்சதா பார்த்து வாங்கி கொடுத்திருக்கலாமே…. மகனை கடிந்து கொண்டார் பாப்பாத்தி.
அத்தை உங்க மீன் குழம்பு அல்டிமேட். எங்க வீட்டுல மீன்குழம்புல மாங்காய் போட மாட்டாங்க. நீங்க மாங்காய் போட்டு வச்சிருக்கிறது ருசி அள்ளுது… இது என்ன பச்சை மிளகாய் முழுசா போட்டிருக்கீங்க?அட இந்த மிளகாயோட டேஸ்ட் வேற லெவல் போங்க! பாராட்டிக் கொண்டே வெளுத்து கட்டினாள்.
தன் தட்டில் இருந்த மீன் துண்டை அவளுக்கு எடுத்து வைத்தான்.
பாப்பாத்திக்கு மனம் நிறைந்தவிட்டது.
என்ன படம் பார்த்தீங்க சுப்ரஜா என்று அருகில் அமர்ந்தாள் அஞ்சலி.
சட்டென்று அவளுக்கு சொல்ல வராமல் போக… வந்த சிரிப்பை சோற்றை வைத்து அடைத்துக் கொண்டான் மன்னர் மன்னன்.