கொஞ்சமா மாவு பிசைஞ்சுக்கோம்மா உங்க மாமனாருக்கு சப்பாத்தி எல்லாம் மெல்ல முடியாது என்றார்.
நீங்களே அளவா எடுத்து வைங்க என்றாள்.
அத்தை பெரிய மாமா பெங்களுரிலே செட்டில் ஆகிட்டாரா?
இல்லம்மா சென்னையில் தான் இருந்தாங்க. நல்ல சம்பளத்தில் பெங்களுருவில் வேலை கிடைக்கவே போயிட்டாங்க. போய் ரெண்டு வருஷம் தான் ஆச்சு.
அத்தை தீபாக்கா உங்களுக்கு சொந்தமா?
ம்ம்ம்ம்ம்… உன் மாமனாரோட ஒன்னு விட்ட தங்கச்சி பொண்ணு என்றார்.
அப்படியா என்று கேட்டுக் கொண்டே மாவை அடித்து பிசைந்தாள்.
தீபா தங்கச்சி நித்யாவை மன்னருக்கு பார்த்தோம். ஒத்துவரல விட்டுட்டோம் என்றார்.
ஏன் என்று கேட்க துடித்த நாவை அடக்கிக் கொண்டு ம்ம்ம்ம்ம் என்று கேட்டு கொண்டாள்.
மாமியார் குருமா வைக்கும் போது பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அம்மா சமைக்கும் போது ஆயிரம் முறையாவது கூப்பிடிருப்பார். பக்கத்தில் வந்து பாரு… கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோன்னு கெஞ்சி அழைப்பார்.
போம்மா சமையல் என்ன கம்ப சூத்திரமா யூட்டியுப் பார்த்து செய்துட்டு போறேன் என்பாள்.
இன்று மாமியார் சமையலை கண்ணும் கருத்துமாய் கவனிக்கிறாள். திருமணம் என்ற ஒற்றை நிகழ்வு எவ்வளவு பெண்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது!
அம்மாடி நான் சாப்பிட எட்டு எட்டரை ஆகும். நீ சாப்பிடு!
அவர் வரட்டும்த்த என்றாள்.
அவனை எதிர் பார்க்கிற பழக்கம் வச்சுக்காதம்மா அப்புறம் தேவையில்லாம மனசு சங்கடப்படும். சொன்ன நேரத்துக்கு வர வேலையா பார்க்குறான்? போக போக பழகிப்ப…
சன் டிவியில ராமாயணம் போட்டுடுவான். நான் போய் பார்க்கிறேன் அவர் போய்விட்டார்.
பூமாலையும் தவறாமல் ராமாயணம் பார்ப்பார். கணவன் மனைவி இருவருமாய் ராமாயணம் பார்க்க அமர்ந்துவிட்டனர்.
ஏழு மணி கூட ஆகாம என்னத்த சாப்பிட என்று யோசித்தவள் தங்கள் அறைக்கு போய்விட்டாள்.
போரடிக்குது…. எவ்வளவு நேரம் மொபைலை நோண்டுறது… சலிப்புடன் அறையை சுற்றி வந்தாள்.
ஜன்னலை திறந்து வைத்து தோட்டத்தை பார்க்க ஆரம்பித்தாள்.
அன்னம்…. அன்னம் என்று அடுத்த சீரியலுக்கான பாடல் ஒலித்தது.
நவமணியும் சீரியல் பைத்தியம் தான். இந்த அம்மாங்க எப்படி தான் அலுக்காம சீரியல் பார்க்கிறாங்களோ…. எல்லா சீரியலும் ஒன்னு போல தானே இருக்கு. நாலு அண்ணன் தம்பி, இல்லைனா நாலு அக்கா தங்கச்சி. வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்ட வில்லி, பழி போடறது, பழி வாங்குறது ஜெயிலுக்கு போறது, ஹீரோயின் கோயில் பக்தினு செண்டியை பிழியறது. ஹீரோ கல்யாணத்தை ஒரு வருஷமா காட்டுறது. ஹீரோயினை பிள்ளைதாய்ச்சியா ரெண்டு வருஷம் காட்டுறது. அட போங்கடா நீங்களும் உங்க சீரியலும்…. அமைதியாக உட்கார்ந்து கொண்டவள் மன்னர் எப்போ வருவான் என்று சுவர் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிங்கப்பெண்ணே போய் கொண்டிருந்தது. இன்னும் காணோமே…சரி நாம போய் சாப்பிடுவோம் என்று அவள் கிச்சனுக்குள் நுழைந்தாள்.
சப்பாத்தியை அவள் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே மன்னர் வந்துவிட்டான்.
கிச்சனுக்குள் உருட்டும் சத்தம் கேட்கவே நேரே அங்கு நுழைந்துவிட்டான்.
சந்தன வண்ண சுடிதார் அணிந்திருந்தாள். தோளில் மலர்ந்து இதழ் விரித்த ஜாதி மல்லி மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மைசூர் சாண்டல் சோப்பின் நறுமணம் இன்னும் நாசியை நிரப்பியது.
“அப்புறம் இன்னைக்கு நாள் எப்படி போச்சு? ” மனைவியின் தோள் சாய்ந்து சுவாரஸ்யமாய் கேட்டான்.
அத்தை பின்னாடியே வால் பிடிச்சு சுத்திட்டு இருந்தேன். கொஞ்சம் தூங்கினேன், தோட்டத்துல ரொம்ப நேரம் இருந்தேன்.அரும்பு பறிச்சு கட்டினேன், அக்கா போன் பண்ணாங்க.அப்படியே நேரம் போயிடுச்சு என்றாள்.
புக்ஸ் படிக்க பிடிக்கும்னா நம்ம தெருவில் லைப்ரரி இருக்கு அங்கே மெம்பரா சேர்த்து விடவா? என்றான்.
ம்ம்ம்ம்ம் தேங்க் யூ என்றாள்.
அப்புறம் என்ன ஸ்பெஷல்? என்றான் அவள் கன்னத்தில் கோடிழுத்தபடியே….