“…ப்பா ப்ளீஸ்” தந்தையின் முகத்தை இருகைகளால் பற்றி கண்களை சுருக்கி தலையை ஆட்டி ஆட்டி கெஞ்சினாள் பார்த்திபனின் இரண்டு வயது மகள் பூர்வி.
அழகு பொம்மை. அசைந்தாடும் கூந்தல் காற்றில் பறக்க, மகள் சிரித்தால் அத்தனை அழகாய் கன்னத்து குழி ஒன்று தோன்றி அவனை மொத்தமாய் மூழ்கடித்துவிடும். அப்படியே அவள் அன்னையை போல்.
பார்த்திபனுக்கு மறுக்கவும் கடினமாக இருந்தது, அவளை அனுப்பி வைக்கவும் மனம் வரவில்லை. மகளோ தங்களை விட்டு சற்று தள்ளி நின்று கடல் நீரில் கால்களை நனைத்து குதூகலிக்கும் அன்னையை பார்த்து உதட்டை பிதுங்கி மெல்ல மெல்ல அழுகையை துவங்கியது.
உடனே சுதாரித்த பார்த்திபன், “அங்க பாருங்க டா டாக் வருது. டாக் எப்படி குறைக்கும் அப்பாக்கு சொல்லி குடுங்க”
“பப் பப்” என்றது குழந்தை மழலை மொழியில் அனைத்தையும் மறந்து.
தந்தை பேசியதற்கெல்லாம் குண்டு கன்னங்கள் ஆட ஆமாம் என்றவள் திடீரென நெஞ்சில் கை வைத்து, “ஆஆ” என்றாள் லேசாக கத்தி.
மகளின் விளையாட்டை அறிந்தவன், “என்னாச்சுடா” என்றான் தந்தை உடனே.
“டம்மி” என்றாள் மகள் கண் சிமிட்டி.
“டம்மி வலிக்கிதாடா?”
“ம்…”
நெஞ்சை பிடித்து வயிறு வலிக்கின்றது என கூறும் மகளின் பேச்சில் சிரிப்பை மீசைக்குள் ஒளித்து வைத்தவன், “அச்சச்சோ நாம அம்மாவை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போகலாமாடா?”
மனைவியை நோக்கி இரண்டடி பார்த்திபன் எடுத்து வைக்க தந்தையின் கன்னம் பற்றி தன்னை நோக்கி திருப்பினாள் பூர்வி.
“டம்மி ஓச்சு ப்பா”
“டம்மி ஓடிடுச்சா?” வாய் விட்டு சத்தமாக சிரித்தவன் அடிக்கடி மனைவியையும் பார்க்க தவறவில்லை.
உல்லாசமாக அன்னையை ஒரு கை பிடித்து மற்றொரு கையை அவள் சகோதரனோடு பிணைத்திருந்தாள்.
“அப்போ நாம ஹாஸ்பிடல் போக வேண்டாமாடா குட்டி?”
“வேணா ப்பா”
“அம்மாகிட்ட?”
“நோ நோ ப்பா” மகள் வேகமாக கூறினாள்.
பார்த்திபன் மகளது நெற்றியில் மெல்ல முட்டி அவளுக்கு வேடிக்கை காட்ட துவங்கினான். கடல் மண்ணிலிருந்து தூரத்தில் நிற்கும் படகுகள் வரை அனைத்தும் மகளுக்கு சந்தேகம் தான்.
இது ஏன், அது எப்படி, எதற்கு இங்கு என கேள்வி கேட்டு சலிக்காமல் அடுத்த கேள்விக்கு தயாராகிவிடுவாள். மகளை சமாளிக்கும் பாங்கு அதிகம் தெரியும் பார்த்திபனிடம் பூர்வியை விட்டு சற்று இளைப்பாறுவாள் ஆரபி.
மனைவியின் சுதந்திரத்திற்கு எந்த வித இடையூறும் இல்லாமல் மகளை கடல் நீரிலிருந்து சற்று தள்ளியே நிறுத்தியிருந்த பார்த்திபனை நெருங்கிய ஆரம்பியின் சகோதரன் ஸ்ரீனிவாசன்,
“அத்திம்பேர் அக்கா உங்கள கூப்பிடுறா. பாப்பாவை நான் பாத்துக்குறேன்” பார்வை மாற்றி மனைவியை பார்க்க அவள் சற்று தூரம் தள்ளி நடக்க துவங்கியிருந்தாள்.
“தனியா சமாளிக்க முடியாது ஸ்ரீனி உன்னால, சரி நான் பூர்வியையும் கூட்டிட்டு போறேன்”
“யோவ் போயா, அவ்ளோ தான் அக்கா என் தலைல ஒரு நர்த்தனமே ஆடிடுவா. உங்க ரெண்டு பேர்க்கு நடுல நான் படுற பாடு இருக்கே. நீங்க ஒன்னு சொன்னா அவா ஒன்னு சொல்றா. லவ் பண்றவாளுக்கு நடுல இருக்க கூடாதுன்னு சும்மாவா சொல்றா”
மருமகளை கையில் வாங்கி, “இந்தாளு மட்டும் கல்யாணம் பண்ணிட்டு கலர் கலரா பட்டம் விடுவார். நாம கேட்டா மட்டும் தோப்பனார காரணம் காட்டிண்டு ஓடிற்றது. காலம் எல்லாம் மாமா உன்ன மட்டும் தான் தூக்கணும் போல மருமகளே”
சோகத்தின் திரு உருவமாய் பேசிய மைத்துனனின் பேச்சில் பார்த்திபனுக்கு சிரிப்பு தான்.
“மாமா நாம வாட்டர்ல ப்ளே போலாமா?” தலை அசைத்து அபிநயம் காட்டும் குழந்தையிடம் வீழ்ந்திடாமல் இருக்க அவன் பட்ட பாடு…
“அப்டியே உன் அப்பாவை மாதிரி பூரி நீ. பேசியே எம்மாதிடுங்க ரெண்டு பேரும் என்ன”
“ஆ பூரி வாங்கி தா” என்றது குழந்தை அனைத்தையும் மறந்து.
ஸ்ரீனிவாசன், “ம்ம்ம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகமா தான் இருக்கு”
“டேய் பொலம்பாம பிள்ளை கேக்குறத ஒழுங்கா வாங்கி குடு. உன்னோட ஹனிமூன் மால்தீவ்ல தான். அத்திம்பேர் செலவு”
“அதுக்கு முதல விவாஹம் நடத்தி வைக்கணும்” மாமனை தாராளமாக முறைத்து அங்கிருந்து நகர்ந்தான் ஸ்ரீனிவாசன்.
மைத்துனன் பேச்சிலே மனைவியின் கண்டிப்பான உத்தரவு எதுவென்று அறிந்தவன் மகளின் உடமைகளை ஒப்படைத்து தங்கள் அறையின் சாவியையும் கொடுத்து மனைவியை நோக்கி நடந்தான்.
கணவன் வருகின்றானா என அடிக்கடி திரும்பி பார்த்த ஆரபி அருகே பார்த்திபன் நெருங்கவும் வேகத்தை குறைத்து நடந்தாள்.
“நாள பின்ன நீ குடும்பஸ்தனாகி ஊருக்கு போறப்போ உன் பிள்ளையை நான் பாக்கணுமா இல்லையானு கேட்டேன். அவ்ளோ தான். என்ன தோணித்தோ கால்ல சக்கரத்தை கட்டிண்டு ஓடி வந்துட்டான்” அவன் முகம் பார்த்து சிரித்தாள்.
“நீ கேடிடி… ஆனா எப்டியோ தனியா வர இப்போவாவது ஒரு வேலை பாத்தியே” என்றான் சலிப்பாக ஒரு பெருமூச்சோடு.
“ஏன் தெனம் உங்களோட தானே ராத்திரி படுக்குறேன். புதுசா பேசுறேள்”
“எது பிள்ளையை நடுல வச்சு, நீ இன்னொரு மூலைல படுக்குறதா?” முறைத்தான் போலியாக.
“அதால என்ன இப்போ? ராமபிரானே சீதையை பாக்க கடல் கடந்து தான் போயிருக்கா, நீங்க ரெண்டடி வர இத்தனை யோசிக்கிறேள்”
“ஓ அப்போ வராத நான் தான் தப்பா?”
“ஏன் ன்னா உங்கள எப்படி உங்க முன்னாடியே நான் தப்பு சொல்ல முடியும்?” குறும்பு சிரிப்பு பெண்ணிடம்.
“வர்றேன்டி இன்னைக்கு, அப்டியே உன் அம்மா கைல பிள்ளையை குடுத்துட்டு நடுல இருந்த ரெண்டடி கேப்பையும் கழிச்சு ரெண்டு இன்ச் கூட இல்லாம பண்றேன் பார்”
“வந்துட்டு அப்றம் பேசுங்கோ”
மனைவிக்கும் மனதில் ஆசை தான், ஆனால் மகள் தான் எந்நேரமும் அப்பா அப்பா என அவன் பின்னே சுற்றுகிறாளே. உறங்கும் பொழுது அன்னை மேல் முகத்தை வைத்து தந்தை மேல் காலை வைத்து தான் உறங்குவதே.
“சந்தோசமா?” என்றான் அவள் விரல்களோடு விளையாடியபடி.
கூட்டத்தை விட்டு நன்றாகவே தள்ளி வந்துவிட்டனர். இவர்களை போல சில ஜோடிகள் தான் ஆங்காங்கு ஒன்று இரண்டாக நின்றனர்.
“ரொம்ப சந்தோசம் ன்னா. அம்மா இது மாதிரி எல்லாம் வந்ததே இல்ல. தோப்பனார் அம்மாவை கண்ண விட்டு அகல விடமாட்டார். ஏதாவது ஒரு ஒர்க் பண்ண சொல்லிண்டே இருப்பார். இப்போ அம்மாவை பாத்தேளா அவ்ளோ மகிழ்ச்சி முகத்துல. நாளைக்கு மால்க்கு கூட்டிட்டு போறேளா?” கண்கள் மின்ன கேட்கும் மனைவியிடம் மறுக்க அவனிடம் தெம்பு இருந்திடுமா?
“போகலாம் மாமி. என் ஆத்துகாரி கேட்டு நான் மாட்டேன் சொல்லுவேனா?” மகிழ்ச்சி ஆரபிக்கு பற்றிக்கொண்டது, சிரிப்போடு தலை அசைத்தாள்.
“ஆனா பாரேன், எனக்கு லஞ்சம் வாங்குற பழக்கம் அதிகமிருக்கு. எல்லாத்தையும் ஓசிலையே செஞ்சிட முடியாது பாரு. அப்றம் முதலுக்கே மோசமாகிடும்” அவளை நிறுத்திவிட்டான்.
இதழ்களை உள்ளிழுத்து சிரிப்பை அடக்கியவள் தலை தாழ்ந்தது பேச முடியாமல்.
“என்னனு கேக்க மாட்டியா மாமி?”
தலை சாய்த்து அவள் முகம் பார்க்க முனைந்தான். அவளோ முகம் திருப்பி சூடான கன்னத்தை துடைத்து, “நாம வெளிய இருக்கோம் பார்த்தி”
அவன் பெயர், அவள் நாவிலிருந்து. சூடானது பார்த்திபன் ரத்தம். எத்தனை மாதங்களாகியது மனைவியை நெருங்கி, அவளுக்கும் நேரமில்லை, அவனுக்கும் நேரமில்லை.
“நான் இன்னும் எதுவும் பண்ணலடி” அவன் குரல் மாற்றம் ஆரபியை நடுங்க வைத்தது.
“ப்ளீஸ் ன்னா” என்றாள் வேகமாக இருவருக்கும் இடையே இடைவெளியை உருவாக்கி.
பார்த்திபன் அழுத்தமான பார்வையில் மீண்டும் அவனோடு நெருங்கி வந்து நின்றவள், “அடிக்கடி அந்நியனா மாறிடுறேள். நேக்கு பயமா இருக்கு ன்னா” என்றாள் கொஞ்சியபடியே.
“ஆமா இவளும் அப்டியே என் பார்வைக்கு பயந்துடுறா தான். வேணும்கிறத இன்னைக்கு நைட் எப்படி வாங்கிக்கிறேன்னு மாட்டும் பாரு”
“என்ன நீங்க..” பெண் சிணுங்கினாள்.
“கொஞ்சம் ஒடம்பு வச்ச மாதிரி இருக்க, அப்டியா?” அவன் கண்கள் மேய்ந்த இடத்தை உணர்ந்தவள் அவன் கையில் கிள்ளி வைத்தாள்.
“நான் எப்பவும் போல தான் இருக்கேன், நீங்க தான் என் பக்கமே திரும்ப மாற்றேல் பின்ன எப்படி என்னை கவனிக்க நேரமிருக்க போகுது”
“ரொம்ப ஏங்குறா போல என் மாமி. இன்னைக்கு நைட் உன் ஆத்துகார் கவனிக்கிற கவனிப்புல மாமி உடம்பு மொத்தமும் சிவந்து தடிக்க போகுது பாரு” ஆரபியின் உடல் அவன் பேச்சுக்கே சிவந்து போனது, இதில் அவனது மீசை உரசி இதழ்கள் தீண்டினால் அவ்வளவு தான் அவள்.
“நான் மட்டுமாடி பேட் பாய்? இதோ தண்ணில நனைஞ்சு அழகான இடுப்பை காட்டி மாமனை வளைச்சு போட்ருக்க நீ தானே பேட் கேர்ள். போதாததுக்கு சாரீல கும்முனு இருக்க”
“ஐயோ பேசாதேள் இப்டி” கணவனை அடித்து தன்னையே வெட்கத்திலிருந்து மீட்டுக்கொண்டிருந்தாள் மனைவி.
“வெக்கத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல. ஆனா வாய கேளு எட்டு ஊருக்கு நீண்டுடும்”
சலித்தபடியே அவள் உடையை சரி செய்ய கூறி, பிறகு மெல்ல அவ்விடத்தையே சுற்றி வந்தனர் இருவரும்.
திருமணம் ஆன புதிதில் இருவரும் தனித்து வந்தது, அதன் பிறகு கோவையை விட்டு உறவுகளின் விசேஷத்துக்கு செல்வது மட்டும் தான்.
ஆரபியின் மகப்பேறு காலம், அதன் பிறகு குழந்தை என வெளியே அதிகம் சென்றதே இல்லை. மூன்று வருடங்கள் பிறகு இன்று தான் அமைதியான தனிமை கிடைத்தது. அதனை அனுபவிக்க வேண்டிய விதங்களில் எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவளும் தான்.
பல நாட்கள் கணவனோடு தனியே வெளியே சென்று வரலாம் என்ற ஆசையை சொல்ல முடியவில்லை. அவன் வேலை அது போல்.
கோவையின் புகழ்பெற்ற ஆடிட்டர் அலுவலகம் ஒன்றின் முதலாளி. அதனோடு விசேஷங்களை வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடத்திக்கொடுக்கும் ஈவென்ட் பிளானர் என்னும் தொழிலையும் நடத்தி வருகிறான்.
நிற்க நேரமே இல்லாமல் பம்பரமாய் சுழல வேண்டி இருக்கும். இதோடு இன்னும் ஆறு மாதத்தில் புதிதாக ஒரு தொழிலை துவங்கும் எண்ணமும் இருக்க அதற்காக அலைந்துகொண்டிருக்கிறான்.
என்ன தோன்றியதோ அனைத்து வேலைகளையும் புறம் வைத்து மனைவி, மனைவி வீட்டினரை அழைத்து ஆலப்புழா அழைத்து வந்து ஒரு நாள் முழுதும் படகு சவாரியின் அழகை காட்டி அடுத்த நாள் குருவாயூர் அழைத்து வந்துவிட்டான்.
ஆரபியின் அன்னைக்கு அத்தனை மகிழ்ச்சி, கோவிலை பார்த்து. பல நன்றி பார்த்திபனுக்கு கூறி ஆனந்தமாக சுற்றினார். கையேடு அருகில் இருந்த கடற்கரைக்கு அனைவரையும் அழைத்து வந்துவிட்டான்.
“உனக்கு ஏதாவது வேணுமா பாரு”
கடற்கரையோரம் இருந்த கடைகளை காட்டி கேட்டான். ஒவ்வொரு கடையாக ஏறி வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையானதை வாங்கி இறுதியாக ஒரு உணவகத்தை கை காட்டினாள்.
“வேணாம் வா பூர்வி தேடுவா”
“அதெல்லாம் இல்ல. நீங்க வாங்கோ” வம்படியாக கணவனை அழைத்து வந்து அவனுக்கு பிடித்த அசைவ உணவுகளை அவளே கூறி மூக்கை மூடிவிட்டாள்.
சிரித்தான், “அப்டி நான் சாப்பிட்டு தான் ஆகணுமா?” என்று.