யோசிக்காமல் அவன் கால்கள் அவளை நோக்கி நகர, தன்னை துளைக்கும் விஷ்ணுவின் பார்வையின் வீரியத்தில் அவள் உடலே இறுகி போனது.
“இங்க என்ன பண்ற நீ?”
சூடாக வந்த விஷ்ணுவின் வார்த்தையில் திரும்பியவள் உணர்ச்சி துடைத்த முகத்தோடு, “பாத்தா தெரியலையா சார், வேலை பாக்க வந்தேன்.” என்றாள் சளைக்காமல் அவனை போல் திமிராக.
புருவம் உயர்த்தி அவளை அளந்தவன், “ம்ம்… வேலைய மட்டும் பாத்தா நல்லது!” என்று அங்கிருந்த ஒருவரைப் பார்த்து, “ண்ணே… கொஞ்சம் பாத்தே இருங்க.” விஷத்தைக் கக்கி அனாயாவை விஷ்ணு பார்க்க, அவனது குற்றச்சாட்டில் கண்ணே கலங்கிவிட்டது மங்கைக்கு.
கடினமாக அதனை உள் இழுத்து, “என்ன பாத்து இருக்கணும்? நான் என்ன உங்க ஆஃபீஸை தூக்கிட்டா ஓட போறேன்? பாத்து இருக்க சொல்றிங்க, அப்டி வேணும்னா அதோ அந்த கேமராவ எந்நேரமும் பாத்துட்டே இருங்க. நான் எதையாவது தூக்கிட்டு ஓடுனா வந்து இங்க என்ன தூக்குங்க.
அதுக்கு முன்ன எதுவும் பேச கூடாது சார் நீங்க. அதையும் மீறி என்கிட்ட உங்களுக்கு பிரச்சனைனா பார்த்திபன் சார்கிட்ட பேசிக்கோங்க. அவர்தான் எனக்கு வேலை குடுத்தது.” அதற்கு மேல் அங்கு நிற்க தெம்பில்லாமல் அனாயா விறுவிறுவென அந்த குடோனின் பின்புறம் சென்றுவிட்டாள்.
கண்ணீர் வற்றியிருந்தது. அழுவதை விட்டுவிட்டாள், தனக்கு தானே புலம்புவதை விட்டுவிட்டாள். ஆனால் நினைப்பதை மட்டும் நிறுத்த முடியவில்லை. உயிர் மூச்சை போல் நினைவுகள் மட்டும் ஆடிக்கொண்டே உள்ளது.
இன்று வந்து நேரில் நின்று அதன் செயலையும் அதிகப்படுத்தி அதற்கொரு வலியையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான். முடிவுற்ற காதல் முடிவில்லா காவியமாய் ஆழ்மனதில் புதைந்தது.
“பார்த்தி கொஞ்சம் தனியா வா.” கூட்டத்தை விட்டு சற்று நண்பனைத் தள்ளி நிறுத்தினான் விஷ்ணு.
“தாமோதரன் அந்த பேக்ல என்ன வச்சிருக்கான்னு விசாரிச்சேன்டா. நாம எதிர்பாக்குற மாதிரி எதுவும் இல்ல. அவன் சேஃப்டிக்கு ஒரு லைசன்ஸ்ட் கன், அவனோட ஒரு டேப் இருக்கு. இன்னும் சில டாக்குமெண்ட்ஸ் தான். சோ நாம வேற தான் யோசிக்கணும்.”
விஷ்ணு கூறியதை அமைதியாக உள்வாங்கிய பார்த்திபன், “வேற என்ன பண்ணலாம்?” கேட்டான்.
“அவனோட ஒரு வீக்னஸ் தெரிஞ்சா போதும் மாப்பிள்ளை, அதை வச்சே அடிக்கலாம். ஏன்டா இந்த பொண்ணு மேல அவனுக்கு அதிகமான பாசம் இருக்கும்ல?” கேலியாக விஷ்ணு கேட்க, பார்த்திபன் ஏகத்திற்கும் முறைத்தான்.
“உன்ன கொன்னுடுவேன் விஷ்ணு. அவனுக்கும் நமக்கும் வித்தியாசமே இல்லனு காட்ட சொல்றியா? அதுவும் அந்த பொண்ணு என்னை நம்பி வந்துருக்கு. உன்ன எதிர்த்து நின்னாலும் அவளுக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்.”
பார்த்திபனின் அதீத கோவத்தில் சிரித்தான் விஷ்ணு, “சும்மா சொல்றேன்டா… ம்ம்… இந்த கன் நல்ல மேட்டர் தான். என்ன வேணாலும் பண்ணி அவனை தூக்கி உள்ள வைக்கலாம். ஆனா நாமதான் கொலை செய்ற அளவு போக மாட்டோமே…” வருத்தத்தோடு மொழிந்தான் விஷ்ணு.
“இவ்ளோ நாள் போகலனா என்ன? இனி போவோம்.” பார்த்திபன் கூறியதைக் கேட்டு, நண்பன் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.
“டேய்…” விஷ்ணு தயங்க, தனக்கு தோன்றிய திட்டத்தை நொடியில் நண்பனிடம் விலக்கியிருந்தான் பார்த்திபன்.
“எல்லாம் சரி தான், எப்படி அந்த துப்பாக்கியை தூக்குறது?” விஷ்ணு.
“என்கிட்ட ஒரு பிளான் இருக்கு…” இருவரும் பேசிக்கொண்டிருந்த சுவற்றுக்கு பக்கமிருந்து, ஜன்னல் வழியாக இருவர் பேசுவதைக் கேட்ட ஸ்ரீனி தலையை வெளியே விட,
“ஸ்ரீனி நீ கேட்டதை மறந்துரு, உன் அக்காக்கு தெரிஞ்சா என்னை வீட்டை விட்டு வெளிய விட மாட்டா.” என்றான் பார்த்திபன் சற்று அதட்டலாக.
“அதெல்லாம் சொல்ல மாட்டேன், நான் சொன்னா அப்டியே விட்டுடுவீங்களா என்ன? அதான் உங்களுக்கே ஹெல்ப் பண்ணலாம்னு தோனுச்சு.” என்றான் உண்மையாக ஸ்ரீனி.
“என்னடா உன்னால தான் இந்த பிரச்சனைனு ஃபீல் பண்ணி வர்றியோ?” சந்தேகமாய் பார்த்தான் விஷ்ணு.
“அதெல்லாம் சத்தியமா இல்ல. என் மாமன் எனக்காக ஒரு சண்டைக்கு கூட போகலனா நல்லாவா இருக்கும்?” பார்த்திபனை பார்த்து கண்ணடித்தவன், “என் மருமக மேல கை வச்சவனை கொஞ்சமாவது அடிக்கணும். அதுக்காக தான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். சரி சூர்யவம்சம் பாத்துருக்கீங்களா?”
புருவம் உயர்த்தி ஸ்ரீனி சிரிக்கும் பொழுதே, அவன் கூறவரும் பொருள் புரிய நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அடுத்த பத்து நிமிடத்தில் தீட்ட வேண்டிய திட்டங்கள் அழகாக வகுத்திட, விஷ்ணுவின் முகத்தில் தான் அத்தனை ஆனந்தம்.
“ரொம்ப துள்ளாதடா… உனக்கு பொண்ணு பாக்குற படலம் முடிஞ்ச பிறகு தான் இதெல்லாம்…” என நண்பனை அடக்கி வைத்தான் பார்த்திபன்.
***
“அக்கா நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?” கால்களில் வீக்கம் அதிகமிருக்க, இடத்தை விட்டு எழ முடியாமல் வரவேற்பறையின் முகப்பில் அமர்ந்துகொண்ட கமலவல்லியிடம் கேட்டாள் ஆரபி.
வீட்டில் இருவரைத் தவிர எவரும் இல்லை. வித்யா, பேரப்பிள்ளைகள், கிரி மற்றும் ராஜேந்திரன் என அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.
“எனக்கு அத்தை செய்ற பள்ளிபாளையம் சிக்கன் சாப்பிடணும் போல இருக்கு ஆரபி, செய்யலாமா?”
“அதுக்கென்ன க்கா, செஞ்சிடலாம். நான் தேவையானது எல்லாம் நறுக்கி வைக்கிறேன். வசந்த் தம்பி வரப்போ சிக்கன் மட்டும் வாங்கிட்டு வர சொல்லிடுறேன்.” என்றவள் இரவு வேலைகள் அனைத்தையும் துவங்கும் முன்பு, பார்லி கஞ்சி செய்து கமலவல்லிக்கு கொடுத்து,
தனக்கான சமையலை செய்து குழந்தைகளுக்கும் இரவு உணவைத் தயாரித்து வைக்க, வசந்த் இறைச்சி எடுத்து வந்து நண்பர்களைப் பார்க்க சென்றுவிட்டான்.
நேரம் ஏழு முப்பதைக் கடந்து செல்ல, கோவிலுக்கு சென்ற வீட்டினர் இன்னும் வராமல் இருக்க, வாயிலை வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அந்த மாமிசத்தை மட்டும் தூரமே வைத்துவிட்டாள். வித்தியாவிற்கு அழைத்து பார்க்க, கோவிலில் ஏதோ விசேஷமிருக்க வர தாமதமாகும் என்ற தகவல்தான் வந்தது.
கமலவல்லியிடம் வந்து அவர்களின் தாமதத்தைக் கூறி, “நீங்க கொஞ்சம் செய்றேளா க்கா? நான் வெங்காயம் எல்லாம் கட் பண்ணி தர்றேன்.” என்றாள் கெஞ்சலாக.
“நானா? ஆரபி கண்டிப்பா என்னால முடியாது. குறுக்கு எல்லாம் ரொம்ப வலிக்கிது ம்மா. ப்ளீஸ்… கொஞ்சம் நீயே செய்றியா?”
“அக்கா இன்னைக்கு வெள்ளிக்கிழமை க்கா…” ஆசையாக அவள் கேட்டு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் அமைதியாக்கியது ஆரபியை.
“அடுத்த மாசம் சாப்பிட முடியாதேனு தான் ஆரபி கேட்டேன்.” மகப்பேறு காலங்களில் வாய்க்கு ருசியாக கேட்கும் உணவுகளை ருசி பார்த்திட யாருக்குதான் பிடிக்காது.
அதிலும் இன்று அதனை அதிகம் எதிர்பார்த்திருந்த கமலவல்லிக்கு, அதிகப்படியான ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஆரபி ஏதாவது சில தினங்கள் மட்டும் மாமிசம் சமைப்பாள், இன்று வெள்ளிக்கிழமையாக இருக்க அதிகம் யோசித்தாள்.
“நான் வேணும்னா அவாளை வாங்கி வர சொல்லவா க்கா?”
“இல்ல ஆரபி வேணாம், வீட்டுல செஞ்சு சாப்பிட்ட மாதிரி வாராதுல…” என்றவள் சில நொடி மௌனத்திற்கு பிறகு, “என்ன இருந்தாலும் பார்த்திபன் தம்பி இந்த வீட்டுக்கு ஸ்பெஷல் தான் இல்ல ஆரபி?” ஆரபி விழுக்கென அவளைப் பார்த்தாள்.
“நம்ம வசந்த்துக்கும் தான் சனி பெயர்ச்சி நடந்துச்சு, அப்போ அவரை வச்சு வீட்டுல எவ்ளோ பிரச்சனை நடந்துச்சு. அப்போல்லாம் நம்ம வீட்டுல எந்த மாற்றமும் இல்ல. இப்போ பாரு, அத்தை கோவிலுக்கு போகுறதென்ன, மொத்த வீடே விரதம் இருக்குறதென்ன? குழந்தைகளுக்கு ஒன்னுனா கூட இவ்ளோ பயம் இருக்காது ம்மா…”
சிரிப்போடு கூறியவள் அதே சிரிப்போடு, “எனக்கு தான் இந்த நேரத்துல அதிகமா நான் வெஜ் சாப்பிடணும் போல தேடுது. கடை சாப்பாடு ரொம்ப எடுத்துக்க கூடாது. இதுக்காக ஈரோடுல இருக்க என் அம்மா வீட்டுக்கு தான் போகணும் போல ஆரபி…” தானே சிரித்துக்கொண்டாள்.
“இல்லனாலும் இவர் வாங்கி தந்துடுவார் ஆரபி. பரவால்ல, என் ஒருத்தி ஆசை தானே… அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.” ஒருவித இயலாமை, கோவம் எல்லாவற்றையும் மறைத்து, அவள் சிரிப்பைக் காட்ட ஆரபி உடனே எழுந்து நின்றுவிட்டாள்.
மனம் எதிலோ அடிவாங்கியது போல் இருக்க கண்ணீரைக் கடினப்பட்டு தடை செய்து, “க்கா நானே சிக்கன் செய்றேன்.” விறுவிறுவென நடந்து சமயலறைக்குள் ஒளிந்துவிட்டாள்.
சமையலை தான் செய்கிறேன் என கூறி வந்துவிட்டாள். சமையலறை வந்தும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் கவனம் செய்ய போகும் சமையலில் இல்லை, அவள் வார்த்தை வெவ்வேறு திசையிலிருந்து தாக்கியது போல் நின்றுவிட்டாள்.
நறுக்க வேண்டிய உணவு பொருட்களை நறுக்கி முடித்தும், இன்னும் கழுவப்படாத அந்த இறைச்சியின் மேல் பார்வை குத்தி நின்றது. பிறந்ததில் இருந்து அசைவத்திற்கு சிறிதும் பழக்கப்படாதவள், கணவனுக்காக அவன் குடும்பத்தை அனுசரித்து வாழ்ந்து பழக வேண்டும் என்ற, ஒரு பிடிவாதத்தால் சில அசைவ உணவுகளை சமைப்பதுண்டு.
அதற்கும் அவள் பட்ட பாடு அந்த வீட்டினர் அனைவருக்குமே தெரியும். அந்த இறைச்சியை சுத்தம் செய்கிறேன் என வந்தாலே குமட்டிக்கொண்டு வரும். உதவிக்கு வித்யா வந்தாலும், கணவன் ஆசையாக உண்டு மகிழும் உணவை தான் தன் கையால் சமைக்க வேண்டும் என்கிற ஆசையில் செய்ய துவங்கியது.
அவனும் எவ்வளவோ கூறி பார்த்துவிட்டான், மனைவி கேட்டால் தானே. பிடிவாதம்! அதே கணவனே வெள்ளிக்கிழமை நாட்களில் அசைவம் கேட்டால் கூட அடமாக முடியாது என்றிடுவாள்.
கூடுதலாக கணவனுக்கு ஜாதகம் சரியில்லை என தந்தை வாய்மொழி கேட்டு, இறைவனை மட்டும் நாடியிருந்தவள் மனம் கமலவல்லியின் வார்த்தைகளை விட அதிகமே பாதித்தது. பார்த்திபன் வந்ததும் கோவிலுக்கு வேறு சென்று வர வேண்டும்.
“ஆராமா…” காதருகினில் கேட்ட கணவன் குரலில் அதிர்ந்து திரும்பியவள் முகம் பார்த்து ஆராய்ந்தவன், அவள் முகத்தைப் பார்த்து, “ஹே! ஆராமா என்ன இப்டி முழிக்கிற?” பரிதவிப்போடு இருந்தவள் முகம் பார்த்திபனை ஆட்டியது.
மனதினை மறைத்து அந்த கோழிக் கறியை காட்டினாள். “வெள்ளிக்கிழமை ன்னா…” கண்ணே கலங்கிவிட்டது.
“தூக்கி ஃப்ரிட்ஜ்ல வை ஆரா, நாளைக்கு அம்மா செய்யட்டும்.” என்றான்.
யோசனையோடு சட்டையின் கையை மடித்துவிட்டவன் டக் இன் செய்திருந்ததை எடுத்துவிட்டு, மனைவியின் இடையைப் பிடித்து தூக்கி சமையல் மேடையில் அமர்த்திவிட்டான்.
“பார்த்தி…” பதறி ஆரபி கீழே இறங்க பார்க்க, அவளை இரண்டு பக்கமும் கை வைத்து முற்றுகையிட்டு சிலையாக்கினான்.
“வீட்டுல யார் யார் இருக்கா?” ஆழமான அழுத்தத்தோடு வந்த பார்த்திபன் கேள்வியில் உறைந்தவளின், “அக்கா…” என்ற வார்த்தை கூட காற்றை விட மெலிதாக தான் வந்தது.
அவளுக்கோ பயம், இவன் சேட்டைகளை செய்வதற்கு வேறு இடம், நேரம் இல்லையா என்று.
“அப்போ அண்ணி மட்டும் தான் இருக்காங்க…” தானே வீட்டின் அமைதியை வைத்து உறுதி செய்தவன் மனைவியின் நெற்றி முட்டி, “இந்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட நகர கூடாது. ஆர்டர் மட்டும் தான் பண்ணணும்.”
கணவனின் நெருக்கமும் வார்த்தைகளின் அழுத்தமும் அவன் கூறியதை அப்படியே செய்ய வைத்தாலும், வாய்க்கு தான் அவன் பூட்டு போடவில்லையே.
“அக்காக்கு சமைக்கணும் ன்னா… சேட்டை செய்யாதேள்…” பட்டும் படாமல் மனைவியின் இதழில் அழுத்தமாக ஒரு நொடி முத்தம் கொடுத்தவன், “நான் செய்றேன் மாமி, நீ ரெஸ்ட் எடு.” அதன்பிறகு பார்த்திபன், மனைவியின் சொற்படியே நடந்தான்.
கணவன், மனைவிக்கு தனிமை கொடுத்து கமலவல்லியும் அவர்களை நெருங்கவே இல்லை. அது பார்த்திபனுக்கு வசதியாகி போக, ஆரபி சொல்படி ஒவ்வொரு செயலாக பொறுமையாக செய்தான்.
அடுத்த பதினைந்தே நிமிடத்தில் பார்த்திபன் கையினால், மணக்க மணக்க உணவை செய்து முடித்திருந்தான். தான் செய்ததை ருசி பார்த்து தன்னையே மெச்சிக்கொண்டு சிரித்தான். ஆரபி இட்லியை ஊற்றி வைக்க, மீண்டும் மனைவியை சமையல் மேடையில் அமர்த்தி நிமிர போக, அவனை விடாமல் சட்டையை பிடித்து கழுத்தோடு அணைத்து மனபாரம் நீங்க அழுதாள்.
அமைதியாக கணவனுக்கு பலவற்றை கூறிக்கொண்டே இருந்தாலும், பல எண்ணங்கள் மனதை அரித்துக் கொன்றது. எத்தனை செய்திருப்பான் இந்த வீட்டிற்கு, ஒரு நாளும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இன்றும் அப்படி ஒன்றும் ஆத்திரம் வரவில்லை, ஆனாலும் ஆதங்கம் அதிகமிருந்தது.
ஒரு மாதம் தானே, அதுவும் தானாய் விரதம் இருக்க வேண்டுமென்று எவரையும் கட்டாயப்படுத்தவில்லை பார்த்திபன். அவர்களாகவே முடிவெடுத்தார்கள். அப்படியே ஆனாலும் குழந்தைகளுக்காகவே கணவன் வீட்டினருக்கும் சேர்த்து வெளியில் வாங்கி வந்துவிடுவான்.
அவனை பற்றி அதிகம் தெரிந்தும் இந்த மறைமுக தாக்குதல் வலித்தது. அனைத்தையும் மனம் திறக்கும் கணவனிடம் கூட இதை பற்றி பகிர வேண்டாம் என்ற சிந்தனையோடு இருந்தவளுக்கு, மூச்சே முட்டியது போல் தவிப்பு. தொண்டை அடைத்து பேச்சுக்கே பஞ்சமாகியது.
இப்பொழுது கூட அவர்களுக்காக நான் ஏன் செய்ய வேண்டும் என கேட்காமல் செய்பவனிடமா, பார்க்காத கணக்கெல்லாம் பார்ப்பார்கள்?
“என்னடி மாமி?” பதறியது கணவன் மனம், மனைவியின் அழுகையில்.
“நான் சொல்றத கேப்பேளா?” பார்த்திபனிடமிருந்து விலகி அவன் முகம் பார்த்தாள்.
“நீ சொல்லி கேக்காம போவேனா, அதுக்கு ஏன் ஆராமா அழகுற?” கன்னம் துடைத்தான்.
“உங்களுக்காக நீங்க, நான் மட்டும் விரதம் இருக்கலாமே. வீட்டுல இருக்கவாள ஏன் சங்கடப்படுத்தணும்?” பார்த்திபன் கண்கள் மனைவியை ஆராய்ந்தது.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தான் வீட்டில் சிக்கன் செய்வதாக பேசிய பொழுது கூட குரலில் வாட்டம் இல்லையே. ஒரு மணி நேரத்தில் ஏதேனும் நடந்திருந்தால் நிச்சயம் கமலவல்லியின் வார்த்தை வீரியமாக தான் இருக்கும் என்பதை புரிந்தவன், “இப்ப பேச வேணாம் மாமி, நான் பாத்துக்குறேன்.” என்றான் முடிவோடு.
“ஏன்னா யாரையும் எதுவும் கேக்காதேள் ப்ளீஸ்…”
மன்றாடிய மனைவியிடம், “கண்டிப்பா யார் மனசையும் கஷ்டப்படுத்த மாட்டேன்.” வாக்கு கொடுத்தான் பார்த்திபன்.