“இன்னைக்கு அவர் வரவும் நீ நல்லா கேக்குற க்கா. நீ கேக்குற கேள்வில அவர் பயந்தே போகணும்…” சகோதரிக்கு கட்டளையிட்டு, அந்த அறையில் அங்கும் இங்கும் நடந்தே அளந்து கொண்டிருந்தான் ஸ்ரீனிவாசன்.
ஆரபி கட்டிலில் அமர்ந்திருக்க, அவள் மடியில் பூர்வி அமைதியாக அமர்ந்து, மாமனை அவன் செல்லும் பக்கமெல்லாம் கழுத்தை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துக்கொண்டே இருந்தாள். ஆரபியிடம் அதிகமான அமைதி மட்டுமே இருந்தது. குழந்தைக்கு மாமனிடம் செல்ல கைகள் எல்லாம் பரபரத்தது.
“நோடா… நோ… வர கூடாது, வர கூடாது மாமாகிட்ட… இன்னைக்கு அம்மாவும் மாமாவும் உன் அப்பா கூட சண்டை போட்டு முடிகிற வர மாமா பக்கத்துலயே நீ வர கூடாது.”
தன்னுடைய கையை அவளிடம் நீட்டி, “பாருடா… மாமா கை சூடா இருக்குல்ல?” ஸ்ரீனிவாசன் படு சீரியஸாக கேட்க, சிறியவளுக்கோ மாமன் ஏதோ தன்னிடம் கொடுக்கிறான் என்ற ஆசையில், அவன் கையை எட்டி தொட்டு பார்க்க அதில் அவள் குட்டி கைகளுக்கு ஒன்றுமே அகப்படவில்லை.
“காதோ…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
ஆரபி சிரிப்பை அடக்கி சகோதரனைப் பார்த்தாள்.
“என்னது காணமா?” திருதிருத்தவன், அதனை மறந்து மீண்டும் கோவத்தை அருகில் அமர்த்திக்கொண்டான்.
“சூடா இருக்குற கை குளுராகுற வரை மாமா உன்ன தூக்க மாட்டேன்டா. இருக்கு, இன்னைக்கு உன் அப்பாக்கு…”
அவன் பேசுவது எதுவும் புரியாதவள், இறுதியாக அவன் தன்னை தூக்க மாட்டான் என்றதை மட்டும் புரிந்துகொண்டு உடனே சிறு தொண்டையைத் திறந்து வீறிட்டு அழத் துவங்கிவிட்டாள்.
சரியாக அந்த நேரம் அறையினுள் நுழைந்த பார்த்திபன், குழந்தை ஸ்ரீனியை நோக்கி கை நீட்டி அழுவதைப் பார்த்து ஸ்ரீனியைப் பார்க்க, அவனோ கைகள் இரண்டையும் பின்னே கட்டி பிடிவாதமாக நின்றான்.
“பூரி, மாமா உன்ன தூக்குனா கோவத்தை மறந்துடுவேன், சும்மா இருடா…” என்றான் தான் இருந்த பிடியிலிருந்து தளராமல்.
“இவன் என்ன பேசுறான் ஆராம்மா?” மனைவியிடம் கேள்வி கேட்டு அழுகும் குழந்தையை வாங்கி சமாதானம் செய்ய முயன்றான்.
ஆரபியிடமிருந்து பதிலே வரவில்லை. குழந்தையோ தந்தையிடம் வந்து அழுகையை சற்று நிறுத்தினாலும், தாய்மாமனைப் பார்த்து பார்த்து ஏங்கியது.
தந்தையானவனுக்கு பொறுக்க முடியவில்லை, ஸ்ரீனியின் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்தவன், குழந்தையை வம்படியாக அவனிடம் விட்டு, “பிச்சிடுவேன், இது மாதிரி எதுவும் பண்ணதை பாத்தேன்னா…” கோவமாக மிரட்டி விலகினான்.
சிறியவள் மாமனிடம் வந்ததும் அவன் கழுத்தைக் கட்டி, கழுத்தில் முகம் வைத்து படுத்துக்கொண்டாள்.
ஸ்ரீனிக்கே சங்கடமாகிப் போனது. குழந்தையை அழுக வைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு மேலோங்க, “சாரிடா பூரி… சாரி… மாமா இனிமேல் அப்டி பண்ண மாட்டேன். பேபிக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, மாமா வாங்கி தர்றேன்.”
“அவன் ஒன்னும் என் பொண்ணுக்கு வாங்கி தர வேணாம். அழுக வச்சிட்டு சமாதானம் பண்றானாம்… இதுக்காடா இங்க வந்த நீ?”
“யோவ்… நான் உன்கிட்ட பேசல. என் மருமககிட்ட தான் பேசுறேன். பூரி உனக்கு என்னடா வேணும்?” தந்தை பேச்சை சிறிதும் மீறாமல் எதுவும் வேண்டாமென தலையை ஆட்டியது குழந்தை.
“ஸ்ரீனி இது என்ன அத்திம்பேர்கிட்ட இப்டி பேசுற?” இதுவரை மாமனிடம் தனியாக இருக்கும் பொழுது மட்டுமே பேசும் அதீத உரிமை பேச்சு முதல் முறை சகோதரி முன்பு பேச, ஆரபிக்கு பயம் வந்தது, எங்கே கணவனுக்கு கோவம் வந்துவிடுமோ என்று.
“விடு ஆராமா…” மிக சாதாரணமாக கூறி படுக்கையில் அமர்ந்தவன் சாக்ஸை அவிழ்க்க, ஆரபி வந்து கணவன் முன்னே நின்று அவன் நெற்றியில் திருநீறை வைத்துவிட்டு சகோதரனுக்கும் வைத்தாள்.
அவனுக்கோ கோவம், “ம்ம்… நீ இப்டியே இரு, அவர் உன்ன நல்லா ஏமாத்திட்டே போகட்டும்…”
சகோதரி கையைத் தட்டிவிட அவள் அவனை முறைத்து மீண்டும் திருநீறை வைத்துவிட்டு தான் அடங்கினாள். பார்த்திபன் என்ன நடக்கின்றது என பார்க்க, மனைவி சலனமே இல்லாமல் ஒரு லட்டை எடுத்து கணவனுக்கு ஊட்டிவிட தலையில் அடித்துக்கொண்டான் ஸ்ரீனி.
“போதும்டி, நீ சாப்பிட்டியா? உன் தம்பிக்கு குடுத்தியா?” மனைவிக்கு ஊட்டிவிட்டு, மீதம் இருந்த பதார்த்தத்தை வாங்கி உண்டான் பார்த்திபன்.
“நோக்கு அந்த பெருமாள் கோவில்ல இருக்க பிரசாதம் புடிக்கும்ல, அதான் ரெண்டு வாங்கிண்டு வந்தேன்.” இருவரின் பாசத்தைப் பார்த்து அகம் பூரித்தாலும் வெளியில் இரும்பாக காட்டிக்கொண்டான் ஸ்ரீனி.
அவன் முகத்தை வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்த பார்த்திபன், “இவனுக்கு என்னவாம்?” மனைவியைப் பார்த்து கேட்டான்.
ஆரபி தோள் குலுக்கி சகோதரன் தோளில் உறங்கிக் கொண்டிருக்கும் மகளை வாங்கி படுக்கையில் படுக்க வைக்க, ஆரபி எதுவும் பேசப் போவதில்லை என்பதை உணர்ந்து, சட்டையை அவிழ்த்துக் கொண்டிருந்த பார்த்திபனிடம், அவன் காலையில் அனாயாவோடு நின்ற புகைப்படத்தைக் காட்டினான் ஸ்ரீனி.
அதனைப் பார்த்ததும் பார்த்திபன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, முதலில் திரும்பி மனைவியை தான் பார்த்தான். தன்னை பார்த்திபன் பார்வை துளைப்பதை உணர்ந்து கணவன் பக்கம் திரும்பியவள்,
‘என்ன?’ என சாதாரண பார்வையோடு கேட்க, ஒன்றும் இல்லை என தலையை ஆட்டியவன் எதுவும் பார்க்காதது போல், வேறு உடையை எடுத்து குளியலறைக்கு செல்லவிருந்தவன், ஒரு நொடி நின்று ஸ்ரீனியைப் பார்த்து, “நாளைக்கு குடோன் வந்து சேரு, வேலை இருக்கு.”
“வர முடியாது போங்க…” முகத்தைத் தூக்கி வைத்து அவன் பேசியதை பொருட்படுத்தவே இல்லை பார்த்திபன்.
அவன் உள்ளே சென்றதும் சகோதரியிடம், “என்ன ஏதுனு கேக்க மாட்டியா நீ? அவரும் நல்லதா போச்சுனு எஸ்கேப் ஆகிட்டார். ஊட்டிவிடு, இன்னும் லட்டு, கேசரினு…”
சரமாரியாக பேசிக்கொண்டிருந்த சகோதரனைப் பார்த்து மார்புக்கு குறுக்காக கை கட்டி, “சரி என்ன விடு… நீ அனுப்புன இருக்க போட்டோ பாத்து உன் தோப்பனார் எண்ணங்கள் நோக்கு தப்பா தோணுத்தா?” ஆரபி கேட்ட அந்த கேள்வியில் ஸ்ரீனி முகத்தில் இருந்த கோவம் எல்லாம் காற்றோடு பறந்து போயிருந்தது.
“என் ஃப்ரண்ட் எனக்கு இதை அனுப்பி என்ன மச்சான்னு கேக்குறான். இவர் எதுக்கு அப்டி பப்ளிக்கா ஹக் பண்ணிட்டு நிக்கிறார்?”
“அது உன் பிரச்சனை ஸ்ரீனி. நேக்கு தெரியும், என்னோட ஆத்துகார் பத்தி. அவர் என்ன பண்ணாலும் அது என்னை பாதிக்காத மாதிரி தான் பாத்துப்பார், அது நேக்கும் தெரியும். இது போல ஏதாவது ஒன்ன என்கிட்ட எடுத்துட்டு வர கூடாது.
வந்தனா இனி ஜென்மத்துக்கும் உன்கிட்ட நான் பேச மாட்டேன் சொல்லிண்டேன். இந்த போட்டோ இல்ல, இது போல எத்தனை போட்டோ வந்தாலும், எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு, எங்க காதல் மேல நம்பிக்கை இருக்கு.”
“நாளைக்கு இருக்குயா உனக்கு…” பார்த்திபனிடம் கூறிய ஸ்ரீனி சகோதரியிடம் கிளம்புவதாக கூற, “கீழ வெயிட் பண்ணு ஸ்ரீனி, நான் பாப்பாவை எழுப்பிண்டு வர்றேன்.”
சகோதரியை முறைத்து குழந்தையைத் தூக்கி அவன் நகர்ந்துவிட குளியலறை கதவின் அருகே சென்றவள், “ஏன்னா பூண்டு சட்னி வைக்கவா?” கணவனிடம் கேட்க, எந்த பதிலும் இல்லாமல் போக கதவை தட்டி மீண்டும் கேட்டாள்.
கதவு திறக்கவும் சற்று விலகி நின்றவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தவன், அதே கதவின் மேல் மனைவியை மடக்கி நிறுத்தினான்.
“பார்த்தி…” ஆரபி வியப்போடு அவனை நோக்க, அழுத்தமாய் மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தவன், “என்னோட அழகிடி நீ…!” அத்தனை காதலைக் கண்களில் தேக்கி கூறினான் பார்த்திபன்.
அவன் அழகி இன்னும் அழகாக சிரித்தாள், “என்ன ஆச்சு?” என்று. பார்த்திபன் மீண்டும் அவளது கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து விலகி வெளியே செல்ல வழிவிட்டு நின்றான்.
அவன் அன்பில் சொக்கி நின்றவள் கணவன் மனதினை சரியாக புரிந்துகொண்டு சிரிப்போடு எக்கி, பட்டும் படாமல் கணவன் இதழில் முத்தம் ஒன்றை கொடுத்து ஓடியிருந்தாள்.
***
“இப்ப உன்னால எதுவும் பண்ண முடியுமா, முடியாதா?” ஆவேசமாக கேட்டான் அவன்.
“யார் சார் முடியாதுனு சொன்னது, கண்டிப்பா முடிக்கலாம். ஆனா நீதான் கவனிக்கவே மாட்டிக்கிற…” குற்றம் சாட்டியது கைப்பேசியிலிருந்து வந்த மற்றொரு குரல்.
“என்ன கவனிக்கணும்? இல்ல என்ன கவனிக்கணும்ங்கிறேன்? வேலைய ஒழுங்கா செய்ய துப்பில்லை, இதுல கவனிக்கணுமாமே… முடிக்கணும்… அந்த பார்த்திபனை அடக்கிடணும். மொத்தமா அடக்கிடணும். அதுக்கு அவன் உசுர மட்டும் விட்டு என்ன வேணாலும் பண்ணிக்கோ. பண்ணிட்டு சொல்லு, நீ நினைக்கிறத விட அதிகமாவே செய்றேன்.” என்றான் இவன் அத்தனை வன்மத்தை வைத்து.
“பாத்தியா சார் இதான் என் பிரச்சனையே… ஆள தூக்கணும்னா ஒரே நிமிசத்துல தடயமே தெரியாம அலேக்கா தூக்கிடலாம். நீ சும்மா தட்டி விடதான் சொல்ற சார். இது நிதானமா…? அடி வாங்குறவன் அசருற நேரம் பாத்து அடிக்கணும். நீ டீடையில்ஸ் இன்னும் நல்லா சொல்லு. நான் ஸ்கெட்ச் போட்டு சொல்றேன். கொஞ்சம் தப்பிச்சாலும் நானும் மாட்டுவேன், நீயும் சிக்குவ.”
“என்னமோ சொல்ற, ஆனா ஒரு மாசம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள வேலைய முடிச்சிட்டு வர்ற…” இணைப்பைத் துண்டித்தவன் மனம் குழப்பத்தில் அதிகமாய் உழன்றது.
***
“எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றிங்களா?” முகத்தை அப்பாவியாக வைத்து அனாயா, ஸ்ரீனியிடம் கேட்க, அவளது அப்பாவித்தனத்தைப் பார்த்து தன்னுடைய மாமன் எதற்கு இவளைத் தன்னிடம் நெருங்க விட்டான் என புரிந்தது.
சிறிதும் தவறான பார்வையோ, அர்த்தமற்ற அதிகப்படியான பேச்சுகளோ அவளிடம் இந்த இரண்டு நாட்களில் இல்லை. வேலை செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும், கொடுத்த நேரத்தில் வேலையை முடிக்கும் வேகமும் அதிகமாகவே இருந்தது.
இந்த பெண்ணையும் அல்லவா தவறாக யோசித்துவிட்டோம் என்கிற வருத்தம், சிறிதேனும் முளைக்கதான் செய்தது ஸ்ரீனிக்கு. இரண்டு நாட்கள் ஆகியது அனாயா மற்றும் ஸ்ரீனி, பார்த்திபன் மற்றும் விஷ்ணு குடோனில் வேலை பார்க்க துவங்கி. இருவரையும் அங்கு சூப்பர்வைசர் பணியில் அமர்த்தி மொத்த பொறுப்பையும் நீங்கள் தான் பார்க்க வேண்டும் என்ற கட்டளையோடு விட்டு சென்றான்.
அந்த மாதத்தின் கடைசி முகூர்த்தம் நாளை மறுநாள் இருக்க, நாளையே ஒரு பெரிய வீட்டின் திருமணத்திற்கு சென்று சேர வேண்டிய பொருட்களை எல்லாம் சரி பார்த்துவிட்டு, போன பொருட்களை எல்லாம் இன்றே எடுத்து வைத்தால் தான் நாளை அதிக வேலை இருக்காது.
“என்ன பண்ணணும்?” பொருட்கள் எடுத்து வைத்திருந்த இடத்திற்கு கையிலிருந்த நோட்டோடு நடந்தான் ஸ்ரீனி.
“கஸ்டமர் திடீர்னு நேம் போர்டு மாடல் அனுப்பி அது மாதிரி வேணும்னு சொல்றாங்க. அதோட நைட் பதினொரு மணிக்கு மேல அந்த பார்ட்டி ஹால் பின்னாடி இருக்க, எம்ப்ட்டி ஸ்பேஸ்ல டிஸ்கோ செட் பண்ணி தர சொல்றாங்க.”
“லூசா அவனுங்க? சரி, மியூசிக் சிஸ்டம் ஏதாவது இருக்கா?” ஸ்ரீனி.
“இல்ல, எல்லாமே வேற வேற இடத்துக்கு புக் ஆகிடுச்சு.” என்றாள் அனாயா.
ஸ்ரீனி, “சரி இரு, அத்திம்பேருக்கு போன் பண்றேன்.” உடனே தகவல் சென்றிருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பார்த்திபன் அங்கு நின்றான்.
“என்ன இது, இப்டிதான் நினைச்சு நினைச்சு பேசுவாங்களா? போன் பண்ணி என்னனு நாலு வார்த்தை கேளுங்க.” என்றான் ஸ்ரீனி கோவமாக.
“இருடா… ஏன் ம்மா, இப்பதான் சொல்றாங்களா?” அனாயாவிடம் திரும்பியது பார்த்திபன் பார்வை.
“நேம் போர்டு வைக்கிறது பிரச்சனை இல்ல ம்மா, எல்இடி லைட் வச்சு பண்ணிடலாம். மியூசிக் சிஸ்டம் கூட வேற இடத்துல இருந்து எடுத்துக்கலாம், இப்ப பிரச்சனையே டிஜே தான். எப்படி அரேன்ஞ் பண்றதுனு தெரியல.” கைப்பேசியைப் பார்த்துக்கொண்டு யோசித்தான் பார்த்திபன்.
“கூல் டவுன் ஸ்ரீனி. இக்கட்டான நிலமைல தான் நிதானமா யோசிச்சு பண்ணணும். பெரிய இடத்து ஃபங்ஷன் இது, லாஸ்ட் மினிட்ல ஒரு தரமான டிஸ்கோ செட்டப் குடுத்தா, இத விட பெரிய விளம்பரம் நமக்கு கிடைக்கவே செய்யாது.
எல்லா ஆபர்ச்சூனிடியையும் நல்லா யூஸ் பண்ணிக்கணும். நீ கிளாஸ் வாங்கிட்டு வர சொல்லு. அந்த வேலைய பாக்கலாம். நான் ஸ்பீக்கர்க்கு பாக்குறேன்.” அடுத்தடுத்த வேலைகள் மும்முரமாக நடக்க, பார்த்திபன் எதிர்பார்த்தது போல் ஸ்பீக்கர் அவன் கேட்ட வரை கிடைக்கவில்லை.
“நீ இங்க பாரு ம்மா, நான் புதுசாவே கடைல எதுவும் கெடைக்கிதானு பாத்துட்டு வர்றேன்.”
அனாயாவிடம் கூறி திரும்ப விஷ்ணுவின் புல்லட், அவ்விடத்தையே அதிர வைத்து உள்ளே நுழைந்தது.
‘இவன் எதுக்கு இங்க வந்தான்?’ யோசனையோடு பார்த்திபன், விஷ்ணுவைப் பார்க்க, கண்களில் கூலர்ஸ் அணிந்திருந்த விஷ்ணுவுக்கு, தூரத்தில் இருந்து பார்த்த பொழுதே அனாயாவின் இருப்பு தெரிந்துவிட்டது.
அவளையும் பார்த்திபனையும் பார்த்துக்கொண்டே கண்ணாடியை அவிழ்த்து சட்டையினுள் மாட்டி மெல்ல நடந்து வந்தான். முகத்தில் எந்தவிதமான பாவனையும் இல்லாமல் வந்தவன் பார்வை, தன் மேல் விழுந்த நொடியே தன்னுடைய மனதின் வேதனைகளை எல்லாம் தோண்டி புதைத்தவள், அவ்விடத்தை விட்டு வேலையைத் தொடர சென்றுவிட்டாள்.
“இவ இங்க என்ன பண்றா?” தனக்கு முதுகு காட்டி செல்பவளை விட்டு பிரியாமல் வந்தது விஷ்ணுவின் கேள்வி.
“வேலை பாக்குறா விஷ்ணு. நீ என்ன திடீர்னு இங்க?” அவளை பற்றி நீ கேட்க கூடாது என்ற பார்த்திபனின் உத்தரவில், மீண்டும் விஷ்ணு அவளைப் பற்றி கேட்கவில்லை.
“அவசரமா ஏதோ வந்தனு ஆஃபீஸ்ல சொன்னாங்க. அதான் வந்தேன், என்ன எதுவும் பிரச்சனையா?” பார்த்திபன் நடந்ததைக் கூற,
“ஏன்டா என்கிட்ட சொல்லிருக்கலாம்ல, ஒரே நாள்ல நல்ல ஆடியோ செட் கிடைக்காதே. பேசாம என் வீட்டுக்கு வாங்கியிருக்க செட்டை எடுத்து மாட்டி விடலாமா?” கேட்டான் விஷ்ணு.
விஷ்ணு, “அது இம்போர்ட்டட் சவுண்ட் சிஸ்டம் பார்த்தி. ஃபுல் சவுண்ட்ல வச்சா தீயா கேக்கும். யோசிக்காத, காலைல மாட்டிவிட்டு செக் பண்ணிக்கலாம், பத்தலனா எக்ஸ்ட்ரா ரெண்டு ஆட் பண்ணிடலாம். ஆனா அதுவே போதும்னு தான் நினைக்கிறேன். நீ டிஜேக்கு மட்டும் பாரு.” விஷ்ணு மொத்த வேலையும் முடித்திருந்தான் ஒரே நிமிடத்தில்.
“ண்ணா டிஜே கூட ரெடி பண்ணியாச்சு. என்னோட சீனியர் ஒருத்தர் இருக்கார். அவர் ஃப்ரீ தானாம் அன்னைக்கு. பேமன்ட் பத்தி மட்டும் பேசிடுறிங்களா?” கைப்பேசியை நீட்டி ஸ்ரீனி கேட்க, பார்த்திபன் அவனோடு பேச துவங்கினான்.
தான் வாங்கி வந்த கண்ணாடியை விஷ்ணு கையில் கொடுத்த ஸ்ரீனியும் மாமனோடு செல்ல, அந்த கண்ணாடியை எடுத்து உள்ளே நுழைந்தவன் கண்ணில் மீண்டும் சிக்கினாள் அனாயா.