Skip to content
Post Views: 2,009
அன்னை கையை பிடித்து கெஞ்சி கேட்டான், “நான் வேலைக்கு எடுக்கல ம்மா. இந்த பார்த்தி தான் அவ கஷ்டப்படுறானு இங்க வேலைக்கு சேத்தான்” மகனை தாண்டி அவர் உள்ளே நடக்க அவள் இருந்த இடம் அழைத்து சென்றான்.
“தண்ணி மறுபடியும் தெளி” என்றார். பட்டும் படாமல் தெளித்தவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவர் தான் தண்ணீரை வாங்கி அந்த குவளையிலிருந்த பாதி தண்ணீரை தெளிக்க சட்டென உடல் நடுங்கி கண்களை மெல்ல திறந்தாள் அனாயா.
“என் கோவத்தை வேற எப்படி காட்டுறதுனு எனக்கு தெரியல” விரைப்பாக பதில் கொடுத்தார் தன்னை வியந்து பார்த்த மகனிடம்.
“என்ன ஒடம்பு சரியில்லைன்னா வீட்டுல இருக்க வேண்டியது தானே. யார் இங்க வந்து எங்க உயிரை வாங்க சொன்னது, அப்றம் உனக்கு ஒன்னுனா தேவையில்லாம நாங்க ஹாஸ்பிடல்க்கு தெண்டமா அலையனும்”
Advertisement
நாக்கில் நரம்பே இல்லாமல் சாடியவனை உயிரற்ற பார்வை பார்த்தவள் முகத்தை கைக்குட்டையில் துடைத்து வாயில் வரை சென்று மீண்டும் அவனிடம் வந்தாள் கையை பிசைந்து சங்கடமாக நெளிந்து.
இங்கு பார்த்திபனிடம் வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவளது எந்த செலவிற்கும் வீட்டினை அணுகுவதில்லை. உணவிலிருந்து சிறு தேவை வரை எல்லாமே அவள் கையில் முன்பு வைத்திருந்த பணத்தை வைத்து தான் நாட்கள் ஓடியது.
சொற்ப அளவு பணமே கையில் மிஞ்சியிருந்தது. அதை வைத்து எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய முடியுமோ அதை செய்ய முயன்றாள். காலை ஒரு கப் டீ அல்லது காபி.
Advertisement
மதியம் கடந்த மாதத்தில் அதிகபட்சம் மூன்று முறை தான் உணவு உண்டிருப்பாள், மற்ற நேரம் எல்லாம் இரண்டு புரோட்டாவை வாங்கி வயிற்றை நிரப்புவாள். இரவு கண்ணீரை போல தண்ணீரே துணை.
Advertisement
எத்தனை நேரம் தான் இதுவே தாங்கும்? பார்த்திபன் இருந்தால் சில நேரம் அனைவருக்கும் தேநீர் வாங்கி தருவான். அதுவே அவளுக்கு வயிற்றில் ஐஸ் கட்டியை வைத்தது போல் அத்தனை நிம்மதியாக இருக்கும்.
வீட்டில் அவள் கேட்டால் தன்னுடைய மொத்த சொத்தையும் அவள் பெயரில் மாற்றி தரும் பிரியம் அவள் தாத்தாவுக்கு அவள் மேல். ஆனால் அந்த பாவப்பட்ட பணம் யாருக்கு வேண்டும் என மொத்தமாய் அன்னை தந்தை என அனைவரையும் புறக்கணித்தாள்.
உறங்க ஒரு கூரை, அது தாமோதரன் வீடு. அவ்வளவே அவள் பொறுத்தவரை.
Advertisement
இருந்த பணமும் நேற்றே தீர்ந்துவிட்டது. பேருந்துக்கு செல்ல கூட பணம் இல்லை. எண்ணி ஐந்து ரூபாய் தான் இருந்தது. ஒரு டீ கூட கிடைக்காது.
நேற்று இரவிலிருந்து தண்ணீர் தவிர எதுவும் குடலில் இறங்காமல் போக இழுத்து பிடித்த பிடிவாதத்தை வேலையில் காட்டி, தன்னை திடமாக கட்ட முயன்றவள் என்ன செய்யும் அவளையும் மீறி மயக்கம் வர, அவளது மேஜைக்கு சென்றது வரை தான் நினைவில் இருந்தது.
விஷ்ணு வந்ததோ, அவன் எழுப்பியதோ தெரியாத நிலையில் மயக்கத்தில் இருந்துள்ளாள்.
“என்ன?” இன்னும் அடாவடி குரல் தான் விஷ்ணுவிடம்.
“என்னோட சலரில ஒரு ஆயிரம் கிடைக்குமா?”
“இங்க மாசம் கம்ப்ளீட் ஆகாம யாருக்கும் சம்பளத்துல இருந்து முன்பணம் குடுக்குற பழக்கம் இல்ல” முகத்தில் அடித்தார் போல் வெட்டி விட்டவன் பேச்சை தலை அசைத்து ஏற்றாள் அனாயா.
அவள் முகத்தையே உன்னிப்பாக கவனித்திருந்த விஷ்ணுவின் அன்னை, “சாப்டியா ம்மா?” என கேட்க அடைத்த தொண்டையோடு இல்லை என தலை அசைத்தாள்.
அவளது மயக்கத்தின் காரணம் இபோழுத்து புரிந்த விஷ்ணு அவள் கேட்ட பணத்தை கொடுப்பதாக கூறுவதற்குள் தன்னுடைய பணப்பையிலிருந்து ஐம்பது ரூபாய் தாளை அவளிடம் நீட்டியிருந்தார் அவன் அன்னை.
“ஏதாவது சாப்பிட வாங்கிக்கோ” அவரின் இந்த எதிர்பாரா செயலில் விஷ்ணு கூட தவித்துவிட்டான், “ம்மா” அதிர்ந்து அவரை அழைக்க அவரோ தான் செய்யும் செயல் தெரிந்தே சேர்கிறேன் என மகனுக்கு மௌனத்தால் பதில் கொடுத்தார்.
“ம்ம் இந்தா வாங்கிக்கோ ம்மா” என்றார் இன்னும் அவளுக்கு வாகாய் கை நீட்டி.
அந்த பணத்தை பார்த்த அனாயாவின் இதழ்கள் புன்னகைத்தாலும் தன்னை நிமிர்ந்து பார்த்த அவள் விழிகள் அவனை கொன்று கூறுபோட்டு தின்றது. மனதினுள் எந்த அளவில் மடிந்துகொண்டிருக்கிறாள் என்பது குளம் கட்டி நின்ற அவள் விழிகள் அவ்விருவருக்குமே கூறியது.
தான் யாரென அவன் கூறியிருப்பான் என அவர் விழிகளில் தெரிந்த வெறுப்பிலே புரிந்துகொண்டவளுக்கு தெரியாதா இந்த பணத்தை ஒரு பிச்சைக்காரிக்கு போடுவது போல் செய்கிறார் என. கால்கள் தள்ளாட அருகில் இருந்த மேஜையை பிடித்து தன்னை நிதானித்தாள்.
“வேணாம் மேடம்” எங்கு தன்னுடைய குரல் தன்னை காட்டிவிடுமோ என்கிற பயம் அவளுக்கு.
“அதுக்குன்னு சாப்பிடாம இருக்க போறியா?”
“ம்மா விடுங்க” அன்னையின் போலியான அக்கரையில் விஷ்ணுவுக்கு எரிச்சல் ஏறியது.
தன்னை தடுத்த விஷ்ணுவை திரும்பி முறைத்தவர், அனாயாவிடம் வலுக்கட்டாயமாக அந்த பணத்தை திணிக்க பார்க்க அவரை விட பிடிவாதமாக அவரிடமிருந்து கையை உருவினாள்.
“பரவால்ல மேடம், ஒரு நாள் சாப்பிடாம இருந்தா உயிர் ஒன்னும் போயிடாதே” சிரிப்போடு பதில் கொடுத்தவளுக்கு அவ்வாறு நடந்தால் கூட என்ன என்று தான் தோன்றியது.
அத்தனை அவமானம், வலி, பொறுக்க முடியாத துன்பம் மனதினை அடைக்க உடைப்பெடுக்க இருந்த கண்ணீரை கட்டுப்படுத்தி விஷ்ணுவிடம், “இப் யூ டோன்ட் மைண்ட், எனக்கு ஹால்ப் டே லீவ் மட்டும் கிடைக்குமா?”
தலை அசைத்து வேகமாக அவர்களது அலுவலக அறைக்குள் சென்ற விஷ்ணு அவளது தகவல்கள் அடங்கிய படிவத்திலிருந்த வாங்கி கணக்குக்கு அவளது இந்த மாத சம்பளத்தை அனுப்பி வைத்தான்.
தன்னுடைய பொருள் எல்லாம் எடுத்து வாயில் வரை சென்றவள் தனக்கு வந்திருந்த பணத்தை இன்னதென புரிந்துகொண்டு விஷ்ணுவை பார்த்த்தாள்.
விஷ்ணுவின் பார்வையும் அவள் மீதே சாய்ந்திருக்க, அதற்க்கு பிரதியாய் அவள் கொடுத்த அந்த கசந்த புன்னகை அவன் வேரையே ஆட்டி பார்த்துவிட்டது.
கைபேசியில் மீண்டும் அவனுக்கு அந்த பணத்தை அனுப்பி வைத்திருந்தாள். சுர்ரென கோவம் ஏறி உடனே பார்த்திபனுக்கு அழைத்து இங்கு நடந்ததை அவனுக்கு கூறியிருந்தான் விஷ்ணு.
தான் பேசுவதாக பார்த்திபன் அனாயாவுக்கு அழைத்தான், “ஏன் ம்மா சம்பளம் வாங்கிக்கலாமே”
“இல்ல சார், எனக்கு தேவையில்லை. எல்லார் போலவே சம்பள தேதி அப்போ குடுங்க” பிடிவாதமாக வாங்க மறுத்தாள்.
“சரி மொத்த பணமும் வேணாம். ஐயாயிரம் வாங்கிக்கோ. தேவைக்கு என்ன பண்ணுவ?”
“எனக்கு என்ன சார் தேவை இருக்க போகுது”
“விஷ்ணு பேசுவதை பெருசா எடுக்காத அனாயா, ஒரு அண்ணனா நான் குடுக்குறேன் வாங்கிக்கோ” என்றான் அவள் நிலை உணர்ந்து பொறுமையாக.
“போதும் சார். ஏற்கனவே இந்த வேலை நீங்க கொடுத்ததே எனக்கு பெரிய உதவி தான். இதுக்கு மேலயும் எனக்கு எந்த சலுகையும் வேணாம்”
“சாப்பாடு வாங்க கூட பணம் இல்லனு சொன்னானே ம்மா விஷ்ணு. இந்த நிலைமைல ஏன் இவ்ளோ பிடிவாதம்?”
“நிலைமை இறங்கி தான் சார் போச்சு. கஞ்சத்தனமா இருந்து பிச்சைக்காரிங்கிற நிலைமைக்கு இறங்கிட்டேன் தான். ஆனா உயிர் போகல சார். வாழ வேண்டிய கட்டாயம்”
அவன் ஏதோ ஓர் அர்த்தத்தில் கூற அவள் புரிந்ததோ வேறொரு அர்த்தத்தில். பசி ஒரு பக்கம், அதன் விளைவாக தூண்டப்பட்ட வலி ஓர் பக்கம் என நடக்கவே சிரமப்பட்டு அல்லாடியவள் பேச்சு கூட வித்யாசமாக தான் இருந்தது.
அவளுக்கோ சோர்ந்து போனது மனம். போலியாக நடிக்க முடியவில்லை அதிக காலம். அன்பான கைகளை தேடியது. அவளது பாட்டியின் மடியினில் படுத்து ரேடியோவில் பாடல்கள் கேட்ட நாளுக்கு பின்னோக்கி செல்ல கதறியது.
பார்த்திபனால் அவளது வேதனையை வார்த்தைகள் கொண்டு சரி செய்ய முடியவில்லை.
கோவமாக வந்தது. அதே கோவத்தோடு விஷ்ணுவிக்கு அழைத்திருந்தான், “எதுவும் வேணாம் சொல்றா. அன்னைக்கே சொன்னேன் உன் கோவத்தை அவ மேல காட்ட வேணாம்னு. புடிக்கலைனா விலகி தான் போங்களேன்டா ஏன் தேடி தேடி வந்து சம்மந்தமே இல்லாம அந்த பொண்ண உயிரோட கொல்லுறிங்க”
அவள் உண்ணாமல் சென்றதை கேள்விப்பட்ட பார்த்திபனுக்கு உணவு இறங்க மறுத்தது. நண்பனை மனம் பொறுக்காமல் திட்டிவிட்டு கோவமாக பேசுவதையும் நிறுத்தினான்.
பார்த்திபன் பேசி முடிக்க விஷ்ணுவின் அன்னை மகனுக்கு அந்த மேஜையில் உணவினை மணக்க மணக்க அடுக்க நிதானமாக அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை.
“ஒருத்தரோட வயித்த காயப்போட்டு நான் நிம்மதியா சாப்பிட்டா அந்த பாவம் எனக்கு தானே ம்மா?” மகன் கேட்ட கேள்வியில் வெடுக்கென அவனை பார்த்தவர் அதிர்ந்தார்.
ஆம் அவளை பிடிக்காது தான். அவள் நிழல் கூட தன் குடும்பத்தின் மீது எக்காரணம் கொண்டும் பட கூடாது அவனுக்கு, எண்ணம் வேறாக இருந்தாலும் அவள் தாத்தாவின் ரத்தம் இவளிலும் ஓட தானே செய்யும் என்றேனும் ஒரு நாள் இவளும் விஷத்தை தானே கக்குவாள் என்கிற அபாரமான நம்பிக்கை அவனிடம்.
ஆனால்… இப்பொழுது ஏதோ அவ்விடத்தை விட்டு சிந்தனையானது அகல சொல்ல, மனம் அவளை பார்க்க தூண்டியது.
“விஷ்ணு…”
“ஆமா, அவ தாத்தா நமக்கு ஆகாதவர் தான். அந்த குடும்பமே எனக்கு எதிரி தான். ஆனா இத்தனை நாளா இப்டி எல்லாம் இருக்க கூடாதுனு எங்களுக்கு சொல்லி சொல்லி வளர்த்துட்டு இன்னைக்கு பசின்னு காசு கேட்ட பொண்ணுகிட்ட பிச்சை போடுற மாதிரி பணத்தை நீட்டி அவருக்கும் உங்களுக்கும் வித்யாசமே இல்லனு நிரூபிச்சிட்டீங்களே ம்மா”
தனக்கு முன்பு அவர் விரித்து வைத்திருந்த விருந்தை காட்டினான், “இது மொத்தமும் எனக்கு இல்லாம அவளுக்கு குடுத்திருந்தா கூட பெருமை தான் எனக்கு. ஆனா இப்போ என்னால சாப்பிட முடியல, ப்ளீஸ் எடுத்துட்டு போங்க”
விறுவிறுவென வெளியே சென்ற மகனை பார்த்திருந்தவருக்கு அப்பொழுது தான் தன்னுடைய செயலின் வீரியம் புரிந்து தலையில் கை வைத்து நின்றுவிட்டார்.
தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்த விஷ்ணுவை அதிகம் சோதிக்க விடாமல், சிந்தனையை எங்கோ கடன் கொடுத்து மெல்ல நடந்துகொண்டிருந்தாள் அனாயா.
அவளை மறித்து அவன் வாகனத்தை நிறுத்த, அவனை பார்க்காமல் வளைந்து நடந்தவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை வேகமோ, இல்லாத வேகம் நடையில் தெரிய, உடலில் தெம்பில்லாமல் கால்கள் சிறிது அல்லாட துவங்கியது.
‘இவளை’ முனகியவன் மீண்டும் அவளை நோக்கி சென்று அவள் கைப்பையை பிடித்து நிறுத்தினான்.
அவனை பார்க்கவே முடியவில்லை, இன்னும் பேச என்ன பாக்கி உள்ளது என வீம்பாக அவனை திரும்பி கூட பார்க்கவில்லை.
“இப்டியே நடந்து போறதா உத்தேசம்?” உனக்கு எதற்கு நான் பதில் கொடுக்கவென பிடிவாத அமைதி அவளிடம்.
‘போ’ என வீம்பாக சென்றிடுவான் தான். ஆனால் அவளை கடந்து செல்ல தான் முடியவில்லை.
“உன் வீடு ரொம்ப தூரம், நடந்து போகவே ரெண்டு மணி நேரமாகும்”
அவனிடம் எப்படி சொல்ல முடியும், வீட்டிற்கு போக மனமில்லாமல் ஏதாவது கோவிலை தேடி தான் நடந்துகொண்டிருப்பதை.
இவனிடமோ பார்த்திபனிடமோ மனம் விட்டு பேச கூட பயம், பேசினால் எங்கே அதற்கும் விஷ்ணுவை மயக்க பொய்யுரைக்கிறேனோ என எண்ணிவிடுவார்கள் என்கிற அச்சம் தூரம் நிறுத்தியது.
“இல்ல போய்டுவேன்” என்றாள் அவனை கடந்து செல்ல.
“வண்டில ஏறு”
“எதுக்கு?” புரியாமல் கேட்டாள்.
“சாப்பிட போகலாம்”
“ஓ இப்போல்லாம் பிச்சைக்காரர்களுக்கு வண்டில கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி தர ஆரமிச்சிச்சாச்சா?”
வேதனையை உள்ளடக்கிய அவள் கேலி தெரியாமல் இல்லை, ஆனால் அன்னையை விட்டு கொடுக்க முடியாதே யாரோ ஒரு பெண்ணிடம்.
“கொஞ்சம் இடம் குடுத்தா ஓவரா தான் பேசாத. உன் தாத்தா பண்ண வேலை அப்டி, அதுல இருந்து மீண்டு வர எங்களுக்கு எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா?”
“ஓ…” என இழுத்தாள் வேதனை பெறுக, “தப்பு பண்ணாம தண்டனை அனுபவிச்சு பாத்தா தான் அதோட வலி தெரியும்”
“சிம்பதி கிரியேட் பண்ணாத” படக்கென அவன் கூறவும் விழுக்கென கண்ணீர் கன்னம் தொட்டது.
அவனுக்கென்ன தெரியும் அவள் காதலின் வலி. தோட்டத்தில் ஒரு மூலையில் இருந்த அந்த பெரிய மரத்தின் ஒரு இடுக்கில் கூடு கட்டியிருந்த அந்த குட்டி குருவியின் குடும்பத்தை பார்த்து ஆண் குருவி அவனாகவும், பெண் குருவி அவளாகவும் பாவித்து, அதன் அலகுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று அன்பு சண்டையிடும் பொழுது சிவக்கும் அவள் கன்னங்களின் பாஷை தான் அறிவானா இவன்?
அவள் வலி அவளோடு. இதில் அனுதாபத்தை எங்கிருந்து எடுத்து அவனுக்கு காட்டிவிட்டாள்?
“சிம்பதி?” கசந்த புன்னகையோடு கண்ணீரை துடைத்தவள், “வேகமா போய்டுவேன் சார்” விஷ்ணுவை விட்டு விலகி நடந்தவள் கைப்பையை பிடித்து நிறுத்தினான்.
“எங்க போவ?” புருவம் நெரித்து அவளை பார்த்தான்.
“எங்கையோ போறேன். உங்க முன்னாடி வர மாட்டேன்”
“நல்ல டெசிஷன். எங்க போறன்னு மட்டும் சொல்லிடு என் கல்யாணத்துக்கு இன்விடேஷன் அனுப்புறேன்” என்றானே பார்க்கலாம்,
அவன் பற்றியிருந்த தன்னுடைய கைப்பையை கூட அவனிடம் தூக்கி எறிந்துவிட்டு அகல வேகம் வந்தது. தற்காலிக மரணத்தை பணமில்லாத பசி கொடுத்தது என்றால், அவன் வார்த்தை நிரந்தர மரணத்தை கொடுத்தது.
“பைய விட போறிங்களா இல்லையா?”
“மாட்டேன், வா வண்டில ஏறு” என்றான் ஒன்றுமே நடவாதது போல்.
“விடல ஏதாவது வண்டி குறுக்க போய் விழுந்துடுவேன்” உறுதியாய் பேசியவள் வார்த்தையில் சினம் மேலோங்க அவள் பையை விட்டு கையை பற்றினான் அழுத்தமாக.
“என்னடி ரொம்ப தான் ஓவரா பண்ற. அம்மா பண்ணது தப்பு தான். அதுக்கு தான் நான் வந்து நிக்கிறேனே”
“ஓ நீங்க பீல் பண்ணி வந்து நிக்கிறிங்களா? உண்மைல நீங்க சந்தோசமப்பட தானே செய்யணும். இது தானே சார் நீங்க எதிர்பாக்குறதும். நான் எப்பவும் அசிங்கப்பட்டு நிக்கணும். நிக்கிறேன்.
திருப்தி ஆகலனா கேமரால பாருங்க அங்க நடந்ததை. உங்க அம்மா அவ்ளோ பெருந்தன்மையா அவ்ளோ பெரிய தொகையை எடுத்து குடுக்குறதையும், அதுல காரணமே இல்லாம நான் அடிபட்டு நின்னதும் தெளிவா இருக்கும்”
கண்கள் தன் போல் வேலையை செய்துகொண்டே இருந்தது. அவள் அந்த பாழாய்ப்போன கண்ணீரை துடைத்து துடைத்து அலுத்து தான் போனாள்.
“பசி கூட இவ்ளோ வலிய குடுக்கல சார். இல்ல தெரியாம கேக்குறேன், அப்டி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? அந்த குடும்பத்துல பொறந்தது தானே, அதுக்கு தான் மனசுல இருந்த ஆசை, கனவு எல்லாத்தையும் மொத்தமா இழந்துட்டேனே. மிச்சம் இருக்குறது இந்த மானம் ஒன்னு தான். அதையாவது விட்டுவைங்க. ப்ளீஸ்”
தங்களை கடந்து செல்வோர் எவரையும் பார்க்கவில்லை அவள். கண்ணில் நீர் நிறைய தன்னை பார்த்து கும்பிட்டு கேட்கும் பெண்ணின் வார்த்தைகள் எங்கோ உயிரின் ஒரு மூலையில் அவனை வதைத்தது.
சிரித்த முகத்தோடு அவளை பார்த்தே பல வாரங்கள் ஆகியது. இறுதியாக தன்னை ஆடிட்டர் அலுவலகத்தில் பார்த்து அவள் சிரித்தது.
அந்த சிரிப்பு மறைந்ததன் மொத்த காரணமும் தான் தான் என்பது உரைத்த நொடி, அதனை பறித்த காரணம் சொல்லவே கூசியது. அந்த குடும்பத்தில் பிறந்தாள் என்பதற்காகவா இத்தனை இழப்பு.
காதல் இழந்து, சிரிப்பை இழந்து, பசியை இழந்து இப்பொழுது மாணத்தையாவது விட்டு வையென் என கேட்பவள் தோற்கவில்லை. அவளை இந்நிலைக்கு அவள் குடும்பத்தின் பெயரை காட்டி தள்ளி நிறுத்திய தான் தான் தோற்றுப்போனதாய் முதல் முறை உணர்ந்தான்.
எப்பொழுது அவள் சென்றால் என்பது தெரியவில்லை. இப்பொழுதும் பசியோடு, தடுமாற்றத்தோடு தான் நடக்கிறாள். அந்த குடும்பத்தில் பிறந்ததை விட அவள் எந்த பிழையும் செய்திடவில்லை.
குணத்தில், அழகில், நிதானத்தில், நேர்மையில் என எதிலும் குறை கூற முடியாத பெண், அனைத்திற்கும் தானே பொறுப்பாகி போகிறேன் என அவள் வாழ்க்கையை வெறுத்து போவது விஷ்ணுவை வெகுவாய் சாய்த்தது.
error: Content is protected !!