Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 16.3

எண்ணியது போலவே வீட்டிற்கு ஏழு மணிக்கெல்லாம் வந்த பார்த்திபன் இரண்டு சகோதரர்கள் இருப்பதை பார்த்து உடையை கூட மாற்ற நினைக்காமல் அனைவரையும் வந்தவுடனே பரபரப்பாக அழைக்க அவன் காலை கட்டிக்கொண்டு வந்து நின்றாள் அவன் அழகு தேவதை பூர்வியும்.

இன்ப அதிர்ச்சியில் மகளை கையில் எடுத்து முத்தமிட்ட பார்த்திபன் மனைவியை தேட, அவளோ சமையலறையிலிருந்து கணவனுக்கு தேநீர் எடுத்து வந்தாள்.

“சொக்க வக்கிரடி மாமி” கிறங்கும் குரலில் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி பார்த்திபன் கூற வெட்கசிரிப்போடு கணவனை முறைத்து உள்ளே சென்றாள் ஆரபி.

அவனிடம் கோவமாக முகத்தை திருப்பினாலும் அவனை விட்டு இருக்க முடியவில்லை. கோவத்தை காட்டிய அந்த பார்த்திபன் அவள் அனுதினமும் காண்பவன் இல்லையே, அவளே சினத்தை குழந்தையிடம் காட்டினாள் கூட மனைவியின் மனநிலையை புரிந்துகொண்ட குழந்தையை தாங்குபவன்.



Advertisement

திருமணத்திற்கு முன்பு உன் கணவன் இவ்வாறு அவ்வாறு என அவனது பல மூர்க்கமான செயல்களை கேள்வியுற்றிருந்தாலும் இன்று வரை அவளிடம் வார்த்தையில் கூட கோவத்தை எல்லை மீற விடாதவன் இன்றைய நிலையை எண்ணி மன்னிக்க தவறினால் அவள் வானம் அல்லவா இருண்டு போகும்?

அது மட்டும் அல்லாது ஏனோ அவனோடு நின்றே ஆக வேண்டும் என தோன்ற மாலையே கிளம்பி வந்துவிட்டாள் அவனிடம்.

வீட்டில் உள்ள அனைவரும் கூடியாயிற்று, அனைவரும் இவன் பேச காத்திருக்க பார்த்திபனுக்கு அதீத தயக்கம்.

Advertisement

ஏற்கனவே ஒரு முறை வந்த நிராகரிப்பிலிருந்து இன்னும் அவன் மனம் மீளாமல் இருக்க மீண்டும் வீட்டினரிடம் வந்து நிற்பதா என்னும் தயக்கம்.ஆனால் வேறு பாதையும் இல்லாமல் போக இறுதியாக பெற்றோரை நாடியே வந்து நின்றான்.

Advertisement

“ஃபயர் ஆக்சிடன்ட் நடந்ததால லாஸ் கொஞ்சம் ஆகிடுச்சு ப்பா உங்களுக்கே தெரியும், பணத்துக்கு வெளிய முயற்சி பண்ணேன் கிடைக்கிற மாதிரி தெரியல”

“இன்சூரன்ஸ் வரும்லடா” கிரிதரன் கேட்க,

“வரும் ண்ணா, ஆனா எதிர் பாக்குற நேரத்துக்கு வருமா தெரியல. எந்த வேலையும் ஆகாம அப்டியே இருக்கு” என நிறுத்தினான்.

Advertisement

“சொல்லு பார்த்திபா” வித்யா மகனை ஊக்கப்படுத்தினார்.

“எல்.ஐ.சி பணம் வருதுல, அதுல இருந்து எனக்கு ஒரு எழுவது லட்சம் வேணும்”

தயக்கமாக தான் பெற்றோர் முகம் பார்த்தான் பார்த்திபன். இருவரும் பேசாதிருக்க, “அவ்ளோ கொடுத்துட்டா மிச்சம் நாப்பது தானே வரும்” வசந்த் இடையில் வந்தான்.

“வேகமா தந்துடுவேன்டா” என்றான் பார்த்திபன்.

வசந்த், “இவ்ளோ உறுதியா சொல்ற, வேகமானா எவ்ளோ மாசம் ஆகும்?”

பார்த்திபன், “இருவது லட்சம் கைக்கு இன்சுரன்ஸ் பணம் வந்த ஒடனே கொடுத்துடுவேன். மிச்சம் கொஞ்சம் கொஞ்சமா வேகமா தர்றதுனாலும் சரி” என்றான் நம்பிக்கையாக.

“என்ன தம்பி பணத்தை பிச்சு பிச்சு தர்றேன்னு சொல்றிங்க, பணம் செதறிடுமே.

“அப்போ ஒரு வருசத்துல மொத்தமா குடுத்துடலாம்”

கமலவல்லி, “நாங்க அந்த பணத்துல வேற யோசனை வச்சிருக்கோம் தம்பி அதான் யோசிக்கிறோம்” என்றாள்.

“ப்பா எனக்கு உங்களால எவ்ளோ முடியிதோ குடுங்க ப்பா, எழுவதே வேணும்னும் இல்ல” என்றான் தந்தையிடம்.

“அவங்க ரெண்டு பேர் என்ன சொன்னாலும் எனக்கு பிரச்சனை இல்ல பார்த்திபா” என்றார் ராஜேந்திரன்.

“நல்லா இருக்குப்பா உங்க கதை. அன்னைக்கு என்னோட கல்யாணத்துக்கு நான் பணம் கேட்டப்போ எவ்ளோ கணக்கு பாத்தீங்க இப்போ என்னாச்சு?” தந்தையிடம் நியாயம் கேட்டு நின்றான் வசந்த்.

“டேய் நீ திரும்பி குடுக்குற எண்ணத்துல கேக்கல, அவன் திருப்பி தந்துடுவேன்னு கேக்குறான்” பார்த்திபனுக்கு பரிந்து பேசி வந்தான் கிரிதரன்.

“எந்த நம்பிக்கைல குடுப்பானு சொல்ற?” வசந்த் கேள்வி கிரிதரனிடம் செல்ல வசந்த் பேசுவதை ஆர்ச்சிர்யமாக கேட்டாள் ஆரபி.

என் கணவன் திரும்பி தர மாட்டான் என்பதில் இவனுக்கு எப்படி இத்தனை நம்பிக்கை என்கிற வியப்பு அவளிடம்.

“அவன் கைல சாலிடா ஒரு பிஸ்னஸ் இருக்கு வசந்த்”

வசந்த், “அதான் சொல்றேன், ஒன்னு தான் இருக்கு. இன்னும் ஒன்னு என்ன ஆக போகுதுன்னே தெரியல”

ஆரபி, “வசந்த் தம்பி, அவா மேல நம்பிக்கை இல்லையா?”

கமலவல்லி, “எப்படி ஆரபி நம்புறது. லாஸ் கொஞ்சமா, அதுல இருந்து கொழுந்தன் எந்திரிச்சு வரவே எவ்ளோ நாள் ஆகுதோ தெரியல” என்றாள்.

வசந்த், “எந்திரிச்சு வர்ற மாதிரி லாஸ்னா கூட குடுக்கலாம் அண்ணி. இனி அவன்கிட்ட ப்ராஜெட்ஸ் வருமா என்னனு தெரியல”

வித்யா, “வசந்த் வாய அடக்கி பேசு” இளைய மகனை பார்த்து பற்களை கடித்து நின்றார் வித்யா.

“என்ன இல்லாததை நான் சொல்லிட்டேன், எல்லாம் எரிஞ்சு போச்சு. எரிஞ்சு போன இடத்துல இருந்து யார் வீட்டு விசேஷத்துக்கு அலங்காரம் பண்ண வர சொல்லுவாங்க” நக்கல் சிரிப்போடு மொத்த வீட்டினரையும் பார்த்து கேட்டான்.

ஆரபி வேகமாக கணவன் அருகே சென்று நிற்க, அவனோ நிர்மலமான முகத்தோடு தான் இருந்தான்.

ஆனால் அந்த அமைதியான உடலினுள் இருக்கும் இதயம் எவ்வாறு தவிக்குமென தெரிந்து தான் அவன் அருகே வந்தது.

“அதுல இருந்து மீண்டு வர்ற வழிய நான் பாத்துக்குறேன் வசந்த்” என்றான் பார்த்திபன் அமைதியாக.

கிரி, “உன்னால ஹெல்ப் பண்ண முடிஞ்சா ஹெல்ப் பண்ணு. அதை விட்டு எதுக்கு தேவையில்லாம அவனை ஹர்ட் பண்ணிட்டு இருக்க”

வசந்த், “சரி என்னால முடியாது. நீ குடு”

பார்த்திபன், “ண்ணா நீங்க லாஸ்ட் டைம் பார்ட்னர் மாதிரி ஷேர் போடுறேனு சொன்னிங்களே”

ஒரு பிடிப்பு கிடைத்துவிடாதா என்கிற ஆர்வம் அவனிடம்.

கிரியோ அன்று இருந்த ஆர்வத்தை இன்று காட்டவில்லை, ஒரு வித சங்கடம் மனதில் தோன்ற தன் மனதில் தோன்றிய சிறு ஆர்வத்தை காட்ட மனைவியை பார்த்தான்.

“இல்ல தம்பி நாங்க ஒரு இடத்துக்கு அட்வான்ஸ் குடுத்துட்டோம்” பட்டென போட்டு உடைத்தாள் கமலவல்லி.

“கமல்…” கிரி மனைவியை முறைக்க, “இல்ல ண்ணா. இருக்கட்டும். எங்க இடம், சொல்லவே இல்ல” உண்மையான அக்கறையோடு பார்த்திபன் கேட்டது கூட தவறாகி போனது.

“அப்போ நாங்க எல்லாம் உங்கள கேட்டு தான் செய்யணுமா தம்பி” சிரிப்போடு கமலவல்லி கேட்டுவிட பார்த்திபன் முகம் உடனே இருண்டுவிட்டது.

“அவன் அக்கறையோடு கேட்டது கூட தப்பா கமல்? எதுக்கு இப்டி நெருப்பை கொட்டுன மாதிரி பேசுற?” வித்யா மருமகளை விரட்ட அவளோ முகத்தை திருப்பினாள்.

“சரி அத்தை பேசல, கொழுந்தன் கேக்குறதே தப்பு தானே, வசந்த் தம்பிக்கு பணம் தர முடியாதுனு சொன்னோம் அதே தானே பார்த்திபன் தம்பிக்கும் பொருத்தம். அவர் இந்த பேச்சையே எடுத்திருக்க கூடாது”

“இங்க அவனுக்கு மட்டும் எப்பவும் வேற ரூல்ஸ் தான். நம்மளாம் அடிபட்டு நசுங்கி தான் வளரனும்” என்றான் வசந்த் தன் பங்கிற்கு பார்த்திபனை பார்த்து.

“உன்ன அப்டி என்ன அவன் நசுக்குனான்னு நீ இப்டி குதிக்கிற?” மகன் பேசுவது சிறிதும் பிடிக்காமல், “அளவுக்கு மீறி பேசுற வசந்த்…” என ராஜேந்திரன் அதட்ட வர அவருக்கு முன்பு விருட்டென எழுந்து நின்றான் பார்த்திபன்.

“கிடைக்காதுனு தெரிஞ்சும் கேக்க வந்தது என் தப்பு தான் ப்பா”

“பார்த்திபா நில்லு நான் அவங்ககிட்ட பேசி வாங்கி தர்றேன்” வித்யா தடுக்க வர,

“வேணாம் அத்தம்மா நோக்கு கொடுக்கணும்னு தோணிருந்தா, என்னோட பணம் என்னோட புள்ளைக்கு குடுப்பேன்னு இவாகிட்ட ஆரம்பத்துலயே சொல்லிருப்பேள்”

வசந்த் கிரிதரனை மனதில் வைத்து வித்யாவை ஆரபி கேட்டுவிட்டாள். அவள் எண்ணமும் சரி தான், இந்த பணம் அதிகமாக வித்யாவின் சம்பளத்திலிருந்து உருவானது தான்.

அவர் நினைத்தால் மொத்தமாக கூட பார்த்திபனுக்கு கொடுக்கலாம். ஆனால் எடுத்த உடனே மகன்களை கை காட்டிவிட்டார்.

“ஆரபி மேல வா” பார்த்திபனை மனைவியை அழைக்க அவள் நகரவில்லை.

வீட்டினர் எவரின் செயலும் பிடிக்கவில்லை அவளுக்கு. இத்தனை நாட்கள் இருந்த அமைதி குழைந்தால் கூட பரவாயில்லை கணவனுக்காக குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற வெறி அவளுக்கு.

“நீ நில்லுடா” பார்த்திபனை அதட்டிய வசந்த் ஆரபியிடம், “உங்க வீட்டுக்காரன் கைல மொத்த காசையும் குடுத்துட்டா நாங்க என்ன அண்ணி பண்றது?”

“அவா ஒன்னும் மொத்தமா கேக்கலையே தம்பி. ஏன் இத்தனை நாள் ஒரு பைசா கூட வேணாம்னு சொல்லிண்டு இருந்தப்போ அமைதியா இருந்தேள். அப்போ பணம் வாங்குனு ஏன் சண்டை போடல?

அன்னைக்கு வேணாம்னு சொன்னவா இன்னைக்கு வேணுன்னு கேக்குறானா, அவாளோட பண கஷ்டம் என்னனு கூடவா புரிஞ்சுக்க முடியல நோக்கு?”

“மொத அவனுக்கு என்ன உரிமை இருக்கு இதுல?”

“வசந்த்…” மகனின் வார்த்தை எங்கு அழைத்து விடுமென ஓரளவிற்கு யூகித்திருந்த பெற்றோர் அவனை தடுத்திட பார்த்தனர்.

அவனோ அவர்கள் இருவரையும் திரும்பி கூட பார்க்கவில்லை. “அவனை விடுங்க, உங்களுக்கு என்ன கேள்வி கேக்க என்ன உரிமை இருக்குன்னு இப்டி நடு ஹால்ல நிக்க வச்சு…”

“யார்கிட்ட பேசுறனு பாத்து பேசு வசந்த், இல்லனா வாய உடைச்சிடுவேன்” வசந்த் ஆரபியை பார்த்து கேட்ட கேள்வியிலே மனம் உடைந்து கண்ணீர் பெறுக நின்ற மனைவியை காக்கும் பொருட்டு அவளை தனக்கு பின்னே நிற்க வைத்த பார்த்திபன் சகோதரனை எதிர்கொண்டு நின்றான்.

“என்ன வாய உடைப்பியா?” நக்கலாக கேட்ட வசந்த் பார்த்திபன் அருகே வர கிரி உடனே வசந்தத்தை நெருங்கினான், “எங்க உடடா பாக்கலாம்” என்று.

பார்த்திபன் கையை மடக்கி முன்னேற போக அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு அவனது வேகத்தை தடுத்தாள் ஆரபி.

“வசந்த் நீ தேவையில்லாம பிரச்சனையா பெருசாக்குற” கமலவல்லிக்கு வசந்தின் இந்த நடவடிக்கை சுத்தமாக பிடிக்காமல் போக அரண்டு நின்ற இரண்டு குழந்தைகளையும் தன்னோடு ஒட்டி நிறுத்திக்கொண்டாள்.

“என்ன நான் பெருசாக்குறேனா, இவன் என் வாய உடைக்கிறேன், கொல்லுவேன்னு சொல்லுவான் நான் பாத்துட்டு சும்மா நிக்கணுமா? பெரிய இவன் மாதிரி பேசுனான் எங்க வர சொல்லுங்க. டேய் வாடா”

தங்களுக்கு நடுவே நின்ற கிரிதரனை மார்பினில் கை வைத்து எளிதாக தள்ளி நிறுத்திய பார்த்திபன், மூண்ட சின்னத்தில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற எத்தனிக்க, இவனுக்கு முன்பு வசந்தத்தின் கன்னத்தை பதம் பார்த்து நிறுத்தியிருந்தது வேறொரு கரம்.

பார்த்திபன் உட்பட மொத்த குடும்பமும் அதிர்ந்து திரும்பி பார்க்க முகம் மொத்தமும் ஜுவாலையாய் நின்றான் விஷ்ணு.

“என்ன வாய் ரொம்ப நீளுது, இப்ப பேசுடா பாப்போம்” என மேலும் அவனை அடிக்க கை ஓங்க, நண்பனை வேகமாக தடுத்திருந்தான் பார்த்திபன்.

“விஷ்ணு நான் பாத்துக்குறேன், நீ போ” என்றான்.

“உன் குடும்ப விசயத்துல நான் தலையிடல. நம்ம பிஸ்னஸ் விஷயமா இந்த நாய அடிச்சு கொல்ல வந்தேன்” என கூறி மீண்டும் அவனை தாக்க செல்ல வசந்தின் முகம் கருத்து போனது.

விஷ்ணுவை அழுத்தமாக பற்றிய பார்த்திபன், “என்ன விஷயம்?” என கேட்டான்.

விஷ்ணு இந்த அளவிற்கு கோபம்கொள்வதன் காரணம் சாதாரணமாக இருக்காது என்பது பார்த்திபனின் கணிப்பு.

அது சரி என நண்பனின் வார்த்தைகள் காரணத்தை கூறியது, “ரெண்டு மாசம் முன்னாடி நம்ம குடவுன்ல ஒரு ட்ராமா நடந்து போலீஸ் எல்லாம் வந்தானுங்கல, அதுக்கு காரணமே இந்த நாய் தான்” விஷ்ணு கூறியதை ஜீரணிக்கவே வீட்டினருக்கு பல நொடிகள் தேவைப்பட்டன.

“அது மட்டும் இல்லடா. ஃபயர் ஆக்சிடென்ட் தானா நடந்தது இல்ல, நாமளே பணத்துக்காக பண்ணோம்னு சொல்ல சொல்லி பணத்தை கிடைக்க விடாம பண்ண, அந்த இன்சூரன்ஸ் கம்பெனி பீல்ட் ஆபிசர்க்கு அஞ்சு லட்சம் பணத்தை அள்ளி குடுத்துட்டு வந்துருக்கான்”

விஷ்ணு அடுக்கி வைக்கும் ஒவ்வொரு குற்றசாட்டிற்கும் தவறிழைத்த வசந்த் முகம் ஒரு பக்கம் மாண்டாலும், அதை விட அதிகம் துடித்தது பார்த்திபனின் இதயம் தான்.

நொறுங்கிய போனான் மனதளவில். கோவம் துளியும் வரவில்லை, வேதனை நெஞ்சை அடைத்து பேச வார்த்தைகள் தோன்றவில்லை, ஏமாற்றத்தின் உச்சியில் நிலையில்லாமல் தவித்தவன் அப்படியே சிலையாகி நின்றுவிட்டான்.

 

Comment Please….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!