இன்ஸ்பெக்டருக்கு கோவம், “சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னா தப்பு இல்லனு ஆகிடுமா?”
“தப்பிருக்குறவன் இவ்ளோ முட்டுக் குடுக்குறப்போ, தப்பிலாதவன் இவ்வளவு கூட முட்டு குடுக்கலனா தப்பாகிடாதா சார்?” நக்கலாக பேசியவன் மேல் அந்த மனிதருக்கு கோவம் கனத்தது.
“ஊருக்குள்ள பேர் இருக்குற மனுஷனாச்சேனு பாக்குறேன், அதே திமிரு தானே உங்களுக்கும். இந்த ஒரு கேஸ் போதும், இருந்த இடம் தெரியாம மாத்துறதுக்கு.”
“பணம் பேர், தைரியத்தை குடுக்குது சார் உண்மை தான். ஆனா பொறப்புலையே வந்தது சார் பிடிவாதம். இந்த பணத்தை விட என்னோட பிடிவாதம் தானே, உங்கள இவ்ளோ நேரம் உங்க வேலைய செய்ய விடாம நிறுத்திருக்கு.” பார்த்திபன் மீசையை முறுக்கிவிட்டு சிரித்தான்.
பற்களைக் கடித்தார் அந்த காவலதிகாரி, “இங்க பாருங்க, தப்ப உங்க சைடு வச்சிட்டு, இவ்ளோ தெனாவெட்டு இருக்க கூடாது. என்ன டான்ஸ் அகாடமி வச்சு நடத்துறீங்க, பொம்பள புள்ளைகிட்ட கூட இருக்க பசங்க எப்படி நடந்துக்குறாங்க என்ன எதுனு தெரிஞ்சுக்க மாட்டிங்களா? இப்போ அடிதடி சண்டை வர வந்துடுச்சு. அதுக்கு பதில் வரல?”
” நான் அகாடமி வச்சு நடத்தல சார். இது என்னோட தொழில்ல ஒரு பகுதி அவ்வளவு தான். என் குடோன்ல என்ன நடந்தாலும் எனக்கு தெரியும், என் பசங்க அப்டி நடந்துக்குற ஆள் கிடையாது.”
பார்த்திபன் பின்னிருந்த சில கல்லூரி மாணவர்கள் எகிறிக்கொண்டு நிற்க, “டேய் வெளில வச்சு இதெல்லாம் வேண்டாம், அமைதியா இருங்க.”
“ண்ணா இவர் பேச்சே தப்பாருக்கு. லீகல் ஆக்ஸன் எடுக்க சொல்லுங்க, நம்மள நாம ப்ரூவ் பண்ணிக்கலாம்.” என்றான் ஒருவன் கோவமாக.
“படிக்கிற வயசுல கோர்ட் கேஸ்னு ஏறி இறங்க போறிங்களாடா? இதுக்கு தான் நான் முன்ன நின்னு பேசுறேனா? நான் போறேன், நீங்களே இவர்கிட்ட பேசிக்கோங்க…” தானும் கோவமாக அந்த ஆண்களிடம் எகிறினான்.
“என்ன சார், பசங்கள வச்சு மிரட்டி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிறிங்களா? பொண்ணு விசயமேனு அமைதியா பேச வந்தா ஓவரா துள்ளுறீங்க?” என்ற இன்ஸ்பெக்டர், “யோவ், அந்த பொறுக்கிய வண்டில ஏத்து.” உடன் வந்த கான்ஸ்டபிள் ஒருவரிடம் ஏவினார்.
“பொண்ணு வீட்டுல இருந்து லீகலா எதுவும் கம்ப்ளைன்ட் பண்ணிருந்தா தாராளமா நீங்க பையன கூட்டிட்டு போகலாம். இல்லையா, என்னோட அடுத்த ஆக்ஸன் வேற மாதிரி இருக்கும்.” நிதானமாக அழுத்தி பேசியவன் பேச்சு, அந்த இன்ஸ்பெக்டருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
“யோவ் என்ன, நானும் பொறுமையா போகலாம்னு பாத்தா நீ பேசுறது எதுவுமே சரியில்ல. நட நீ ஸ்டேஷன்க்கு, போலீஸ்காரன்கிட்டயே ஆக்ஸன் காட்டுவியாமே?” என்றார் இவனையும்.
“சார் பேச தானே வந்திங்க, நானும் பேசிட்டு தான் இருக்கேன். அந்த பொண்ண வந்து நிறுத்துங்க, நாங்க பேசுறோம். நடுல நீங்க வர வேணாம்.”
“பிரச்சனை என் கைக்கு வந்துருக்கு…”
“அப்போ கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணுங்க, அதை ஏன் செய்ய மாட்டிக்கிறீங்க? நானே பையன வந்து ஸ்டேஷன்ல விடுறேன்.” என்றான் பார்த்திபன்.
நக்கலாக சிரித்த பார்த்திபன், “அப்போ தடயமே இல்லாம உள்ள வச்சு கவனிக்க பிளான் போட்ருக்கீங்க, இல்ல சார்?” என்று விட்டான்.
“நீ எல்லை மீறி போற…” என்றான் போலீஸ் பார்த்திபனை நெருங்கி வந்து.
“உங்க கோவம் எனக்கு பொதுநல கோவமா தெரியல சார், வஞ்சகம் மாதிரி இருக்கு. அது அந்த பையன் மேலயா இல்ல, என் மேலையானு தான் தெரியல.” என்றான் மறைக்காமல்.
ஒரு நொடியே அவர் கண்களில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்த பார்த்திபன் உறுதியானான். உடனே கைப்பேசியில் ஒரு செய்தியை அனுப்பி வைத்து நிதானமாக அவரைப் பார்த்தான், “உள்ள வாங்க சார், பேசலாம்.” என்றான்.
“நான் என்ன விருந்துக்கா வந்துருக்கேன், சாவகாசமா பேச?” இவ்வளவு நேரம் இல்லாமல் இப்பொழுது குரல் ஏறியது அந்த காவலதிகாரிக்கு.
“ண்ணா…” பின்னே குரல் கொடுத்த இளைஞர்களைப் பார்வையால் அடக்கினான்.
மீண்டும் அந்த காவலதிகாரியிடம், “இது உங்கள உள்ள வர வைக்கிறதுக்கு மட்டும் தான், என் பசங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல.” என்றான் அப்பொழுதும் திடமாக இரண்டு தரப்பினருக்கும் பொதுவாக.
பார்த்திபனுக்கு வெளியில் நின்று அனைவருக்கும் விளம்பரம் காட்டுவது பிடிக்கவில்லை.
ஆடிட்டர் அலுவலகம் இங்கே தான் போட போகிறான், விழாக்களுக்கு அலங்காரம் செய்வதிலிருந்து, உணவு, வரவேற்பு, புகைப்படம், சர்ப்ரைஸ் டான்ஸ் என சகலமும் கவனித்து வரும் குடோன் அது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் நடன நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்ப்பது எல்லாமே இங்கே தான்.
ஆக, பார்த்திபனின் தொழில் எல்லாமே அவ்விடம் தான் என ஆகியபிறகு, அவ்விடத்தில் எவர் பார்வையும் தவறாக படிய விரும்பவில்லை. இன்று வந்த பிரச்சனையை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
இந்த தொழிலை துவங்கி இரண்டு வருடங்கள் ஆகியது. அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரின் பின்புலமும் அறிந்து, ஆராய்ந்த பிறகே பார்த்திபன் அவர்களை வேலையில் சேர்ப்பான்.
மனைவி, மக்களோடு பார்த்திபன் கேரளா சென்ற நேரத்தில் ஒரு பெண்ணின் அசாத்திய திறமையில், கவர்ந்த இளையவர்கள் தங்களது நடனக்குழுவில் அந்த பெண்ணை சேர்த்துக்கொண்டனர். அங்கு துவங்கியது பிரச்சனை.
இன்று காலை சபிதா என்னும் அந்த புது பெண் பயிற்சிக்கு வந்திருக்க, அங்கு தனியாக இருந்த சயத் தவறாக நடந்து கொண்டதாக அவள் பெற்றோரோடு வந்து சண்டையிட, இதோ இப்பொழுது காவல்துறை வரை வந்து நிற்கிறது.
“சார்க்கு டீ வாங்கிட்டு வாடா.” ஒருவனிடம் பணம் கொடுத்து கண் காட்டினான் பார்த்திபன்.
அதை புரிந்தவன் அவ்விடம் விட்டு அகல, “சார்க்கு விசயம் எப்படி தெரிஞ்சதுனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றான் அமைதியாக.
“பக்கத்துல இருந்தேன், பிரச்சனை வரவும் அந்த பொண்ணு வீட்ல இருக்கவங்களை அனுப்பி நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டேன்.” என்றார்.
“ஓ…” என்று நொடி யோசித்தவன், “அந்த பொண்ண கூட்டிட்டு வர சொல்லுங்க சார். ரெண்டு பேரையும் வச்சு பேசுனா தான் சரியா வரும்.” அவரும் சில நொடிகள் யோசித்து அந்த பெண்ணை வர கூறினார்.
சரியாக டீ வர, அவருக்கு டீ கொடுத்து உடன் வேலை செய்பவர் ஒருவரை அமர வைத்த வேளையில், சரியாக உள்ளே நுழைந்தான் விஷ்ணு. பார்த்திபனின் நெருங்கிய நண்பன் மற்றும் தொழில் கூட்டாளி.
“என்னடா?” என்றான் வந்த எடுப்பிலே கோவமாக.
“பெருசா ஒன்னுமே இல்ல, பசங்கள தப்பா பேசுறானுங்க. அந்த பொண்ணு மேல தான் எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு.” என்றான் பார்த்திபன் தலையைக் கோதி சாதாரணமாக.
“எப்படி சொல்ற?”
“பொண்ணு மிடில் கிளாஸ் தான், ஆனா இதுவரை போலீஸ் ஸ்டேஷன் ரெண்டு தடவை ஏறி இறங்கிருக்கு. ரெண்டுமே கேஸ் ஃபைல் ஆனதில்லை. ஃபங்க்ஷன் எதுவும் இல்லாத நேரம் சயத் என்னை பாக்க வந்துருக்கான். அந்த பொண்ணுக்கு இங்க என்ன வேலை? இந்த போலீஸ்காரன் எதேச்சையா வந்த மாதிரி காட்டிக்கிறான்…”
“ப்ளான் பண்ணதுனு சொல்றியா பார்த்தா?”
“பக்கா ப்ளான்!” என்றான் பார்த்திபன் ஆணித்தரமாக.
“அப்போ கண்டிப்பா நமக்கு போட்ட ப்ளான் தான். அந்த பொண்ணோட அட்ரஸ் குடு, நான் பாத்துக்குறேன்.”
விஷ்ணுக்கு எதற்கு தான் அப்படி கோவம் வருமோ? எதற்கெடுத்தாலும் கோவத்தைத் தூக்கி நிற்பான். பார்த்திபன் தான் அவனை அடக்கி கட்டுப்படுத்தி வைக்க போராடவேண்டி வரும்.
“இதுக்கு தான் அவனுங்க இந்த குதி குதிக்கிறானுங்க. ஒரு வார்த்தை விட்டாலும் தலைல ஏறி ஆடிடுவானுங்க. என்ன பண்ண போற நீயே யோசிச்சுக்கோ.”
ஓங்கி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் குத்தியவன் தோளில், ஒரு பக்கம் மாட்டியிருந்த தோள் பையை நண்பன் கையில் போட்டு, கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து ஓரிடத்தில் நிற்காமல் அங்கலாய்த்தான். அந்த பையில் பல கட்டு பணம்.
“எரிச்சல்ல இருக்கேன், ஒழுங்கா காசை வை. காச வாங்க மாட்டேன்னு சொன்னா நீயும் வேணாம் உன் பிஸ்னஸ் பார்ட்னர்ஷிப் ஒன்னும் வேணாம்னு, உன் மூஞ்சில முழிக்காம எங்கையாவது போய்டுவேன்.”
விஷ்ணுக்கு கனன்று கொண்டிருந்த தீ இன்னும் அணையவில்லை. எரிந்தது, கொழுந்துவிட்டு எரிந்தது. அவனுக்கு மட்டும் தான் தெரியும், பார்த்திபனும் அவனும் அனுபவித்த கஷ்டங்கள் என்னென்ன என்று.
ஒவ்வொரு நாளும் அவமானங்கள், கஷ்டங்கள், ஏச்சு பேச்சுகள் என பட்டது அதிகம். அதையும் மீறி இவ்விடத்தில் இருவரும் வந்து நிற்பது, அவர்கள் உழைப்பும் தன்னம்பிக்கை என்ற இரண்டு மட்டுமே.
இன்று அந்த உழைப்பிற்கு யாரோ ஒருவன் களங்கம் விளைவிக்க துடிப்பது, ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பார்த்திபனைப் போல் அமைதியாகவும் இருக்க முடியவில்லை. யார் காரணமென்று அறிந்து அவன் முகத்தை அடித்து உடைக்க வெறியே தோன்றியது.
“அந்த போலீஸ் உள்ள தான் இருக்கானா?” பார்த்திபன் ஆமாம் என்றான் பணத்தை முழுதாய் ஏற்றுக்கொண்டு.
அவன் விஷ்ணுவிடம் பணம் வாங்க மறுத்ததன் காரணமே, சில மாதங்களுக்கு முன்பு தான் பெரிய தொகை பணம் போட்டு ஒரு இல்லம் கட்டினான்.
அவனிடம் பணம் எதிர்பார்க்காமல் தானே தயார் செய்யும் நிலையில் இருக்க, உறவுகள், ஏன் மனைவியிடம் கூட மறுத்தவன் தைரியம், நண்பனிடம் காணாமல் போனது.
“கோத்தா இன்னைக்கு செத்தான் அவன்…” கையிலிருந்த காப்பை முறுக்கிவிட்டு உள்ளே போக போனவனை, பாய்ந்து பிடித்து நிறுத்தினான் பார்த்திபன்.
“டேய் அம்பது லட்சம் குடுத்து அஞ்சு கோடி பிஸ்னஸ இழுத்து மூட வச்சிடாதடா…” திமிறி அடம் பிடித்தவனை பிடிக்கவே மிகவும் சிரமமாக இருந்தது பார்த்திபனுக்கு.
“என்ன நினைச்சிட்டு இருக்கானுங்க? இன்னைக்கு இந்த விஷ்ணு யாருனு காட்டுறேன் பாரு…”
“கதிரண்ணே, இவனை கொஞ்சம் பிடிக்க ஹெல்ப் பண்ணுங்க.” சற்று தூரத்தில் நின்று இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவரை அவசரமாக அழைக்க, அவர் வந்தபிறகு தான் விஷ்ணுவை நிதானமாக்க முடிந்தது.
“ரொம்ப அவசரம் காட்டுற விஷ்ணு. அவனுங்க எதுக்கு இதெல்லாம் பண்ணுறானுங்கனு தெரியல. பேசி பாப்போம், பின்னாடி யார் இருக்காங்கனு தெரிஞ்சு, அதுக்கு தகுந்த மாதிரி அடுத்த மூவ் வைக்கலாம்.”