அதீத சலசலப்போடு காட்சியளித்த அந்த காவல் நிலையத்தில் அவசரமாக உள்ளே நுழைந்தனர் பார்த்திபனும் விஷ்ணுவும். பார்த்திபனின் அச்சம் எல்லாம் சிறையினுள் ஸ்ரீனிவாசன் இருந்திட கூடாதென்பது மட்டும்தான்.
“எதுவானாலும் பாத்துக்கலாம்.” நம்பிக்கையோடு விஷ்ணு பின்னிருந்து கூற, வேகமாக உள்ளே நுழைந்த பார்த்திபனுக்கு ஆசுவாச மூச்சு வந்தது. ஸ்ரீனிவாசனை அங்கிருந்த ஒரு மேஜையில் அமர்த்தியிருப்பதைப் பார்த்து.
நேராக அவனிடம் சென்றனர் இருவரும். ஸ்ரீனிவாசன் இவர்களைக் கண்டதும் எழுந்து நிற்க, அவன் முகத்தில் தெரிந்த ஆசுவாசம் பார்த்திபனுக்கு கோவத்தை தான் தந்தது.
“போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வர்ற அளவு என்ன பிரச்சனை உனக்கு? ஆஃபீஸ் போகலையா?” என்றான்.
“இல்ல அத்திம்பேர், பிரச்சனை ஆஃபீஸ்ல தான்…”
“எதையாவது திருடிட்டியாடா?” கிண்டலாக விஷ்ணு கேட்க, நண்பனை முறைத்தான் பார்த்திபன்.
“இல்ல ண்ணா… நான் எப்படி அதெல்லாம் பண்ணுவேன்னு நினைக்கிறீங்களா. இங்க பிரச்சனையே வேற…”
“ஆஃபீஸ் ஓனர் கூட எல்லார் முன்னாடியும் சண்டை போட்டுட்டேன்.”
விஷ்ணு, “எதுக்கு?”
ஸ்ரீனி, “கூட ஒர்க் பண்ணுற பொண்ணுகிட்ட மேனேஜர் கொஞ்சம் தப்பா நடந்துக்க பாத்தான். கம்ப்ளைன் பண்ணா ஆக்சன் எடுக்கல. பாத்தா அந்த மேனேஜர் ஓனரோட மருமகன் போல, பிரச்சனையாகிடுச்சு.
நான் கொஞ்சம் ஓவரா எல்லார் முன்னாடியும் அந்த ஓனரை பேசிட்டேன். அதுக்கு தான் கம்பெனி டீடெயில்ஸ் வெளிய ஷேர் பன்னேன்னு போலீஸ் ஸ்டேஷன்ல வந்து ஒக்கார வச்சிட்டாங்க.”
“உன் கம்பெனி பேர் சொல்லு.” ஸ்ரீனிவாசனிடம் தகவல் வாங்கிய விஷ்ணு, கைப்பேசியை எடுத்து வெளியேறியிருந்தான்.
“என்ன லவ்வா?”
“யோவ் அத்திம்பேர், என்னை பாத்தா லவ் பண்ற மாதிரியா இருக்கு. கூட இருக்கவாலுக்கு பிரச்சனை. சும்மா நிக்க மனசு வரல. எல்லாரும் தான் பேசுனா, நான் ரொம்ப ஜாஸ்தியா பேசிட்டேன். என்னோட ஸ்கூல் மேட் அந்த பொண்ணு சோ அக்கறைல…” என்று இழுத்தான்.
“அதுக்குன்னு இப்படியா? இப்ப உனக்கு தான வேலை போச்சு. ப்ளாக் மார்க் பண்ணிருப்பானுங்க. இனி எங்க போய் வேலை தேடுவ? உன் தோப்பனார் கூட சேர்ந்து சாம்பார் சாதமும் நெய்யும் செய்.” பார்த்திபனுக்கு கோவம்தான்.
அவன் செயல் சரியாக இருந்தாலும் செய்யும் முறை அவசரமாக தோன்றியது. அந்த பெண்ணின் எதிர்காலமும் அந்த வேலையில் தான் என இருந்தால், என்ன செய்வது என்ற யோசனை தான்.
“நீங்க எதுக்கு பிஸ்னஸ் பண்றேள். வேலை ரெடியா வைங்கோ, ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.” மாமன் வந்ததில் சிறியவனுக்கு ஏதோ மலையை தூக்கி தோளில் வைக்குமளவு தைரியம்.
சொகுசாக மீண்டும் அதே இரும்பு பலகையில் அமர்ந்து மாமனை கண்ணாலே அருகே அழைத்து, சட்டையை உயர்த்தி முதுகை காட்டினான். லத்தியால் அடித்த தடயம் ஓரிரண்டு சிவந்து காணப்பட்டது.
“எவன்டா அடிச்சது?”
பற்களைக் கடித்து பார்த்திபன் கேட்க, அவர்கள் பேச்சை வேலை செய்துகொண்டே கேட்டுக்கொண்டிருந்த கான்ஸ்டபிள், “என்னது எவனா?” குரலை உயர்த்தி வேகமாக எழுந்து நின்றார்.
இருக்கையிலிருந்து எழுந்தார் அந்த காவலதிகாரி, “உன்னை இவ்ளோ தூரம் பேச விட்டதே பாவம் பாத்து தான், இதுல நீ அவன் இவன்னு எங்க முன்னாடியே எங்களை பேசுற…?”
“எனக்கு பாவம் பாக்க நான் சொன்னேனா?” திமிராக கேட்ட பார்த்திபனை சீண்டும் எண்ணம் அந்த மனிதருக்கு அதிகம் வந்தது.
“போறவ, வர்றவளுகளுக்கெல்லாம் சண்டை போடுறவனுங்களுக்கு பாவம் பாத்தது என் தப்புதான்.” என்றவர் மற்றொரு காவலதிகாரியிடம், “பேசாம இவன் டீடெயில்ஸ் வாங்கி எல்லா ஸ்டேஷன்லயும் விசாரிக்க சொல்லுயா. எத்தனை ஸ்டேஷன்ல இது மாதிரி ஏழரையை கூட்டிருக்கானுங்கனு பாத்துடலாம். இவனுங்க மேல குறைஞ்சது பத்து கேஸ் போடலாம்.”
“சார் இன்ஸ்பெக்டர் வரட்டுமே…” என்றார் அந்த மனிதர் தயக்கத்தோடு.
“போட மாட்டேன்னு தைரியமா? போலீஸ் ஸ்டேஷன் வந்து அக்யூஸ்ட்ட செல்ல இருந்து இழுத்துட்டு போனனு ஒரே நிமிசத்துல கேஸ் போலியா போட்டா விசாரிக்காம கேஸ் வேலை தானா நடக்கும்”
பார்த்திபன், “இப்ப உன்னை யார் தடுத்தா? நீயும் போடு, நீ செம்பு தூக்குறவன் மேல நானும் போடுறேன்.”
ஒரு நொடி இருண்ட அந்த மனிதரின் முகம் அடுத்த நொடியே மீண்டும் தெளிவானது, “அவர் என்ன உன்னை மாதிரி சில்லறையா? கோடீஸ்வரன்…”
“ஆமா என்னை மாதிரி இல்ல, உன்னை மாதிரி தொடை நடுங்கிதான். அதான் உன்னை இங்க நிக்க வச்சிட்டு எங்கையோ ஒளிஞ்சு நிக்கிறான்.”
“யாருடா சில்லறை? உன்னை மாதிரி ஆளுங்கள சமாளிக்க எதுக்கு அவர் இங்க வரணும், நானே போதும்.”
பார்த்திபன், “இந்தா போலீசு… நீ வடை சுடுற கதை, உன் கோடீஸ்வரன் விட்டை போட்ட கதையெல்லாம் எனக்கு தேவையில்லை. இவன் மேல போட்ட பொய்யான கேஸ வாபஸ் வாங்க சொல்லு அவனை. முடியாதுனா நான் போடுறேன்டா அவன் மேல கேஸ்.”
அதிகாரமாக அவ்விடத்தையே நிசப்தமாக்கியவன் மச்சானிடம் திரும்பி, “டேய் உனக்கு செக்ஸ்சுவல் டார்ச்சர் குடுதான்னு கம்ப்ளைன் போடு. ஒடனே பிரஸ்ஸ வர சொல்றேன், பேர் நாறும்ல… அப்போ உன்னை இங்க இருந்து அனுப்புவானுங்கள்ல…” மச்சினனிடம் ஏவினான் மாமன்.
“அதான… நீ போடு ஸ்ரீனி, எந்த கொம்பன் வர்றான்னு பாக்கலாம்.” விஷ்ணுவும் உள்ளே வந்து நண்பனின் எண்ணத்தை சரியென மறைமுக வார்த்தையால் உறுதி கொடுத்தான்.
“உங்கள கூப்டதுக்கு உங்களால என்ன பண்ண முடியுமோ அதை கச்சிதமா பண்ணிட்டேள்.” விஷ்ணுவுக்கு சிரிப்பு எட்டிப்பார்க்க, அவன் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது எளிதாக தெரிந்தது.
“சிரிப்ப அடக்க ரொம்ப ட்ரை பண்ணாதேள். ஒரு பொண்ண சொல்லிருந்தா கூட பரவால்ல, ஒரு ஆம்பளையோட… ச்சை… போங்கோ, உங்க ஃப்ரண்டுக்கு துடுப்பு போட ஹெல்ப் பண்ணுங்கோ.” என்றான் மேலும் கேலியாக சலித்துக்கொண்டு.
ஸ்ரீனிவாசனை ஓரம் நிறுத்தி சண்டையிட்டு நிற்கும் நண்பன் அருகில் சென்றான். அந்த கான்ஸ்டபிளும் விடுவதாக இல்லை.
“அவரை வர வைக்க இவ்ளோ ஆர்வமாயா உனக்கு? வந்தா உனக்குதான் பிரச்சனை பாத்துக்கோ?”
“மதம் புடிச்ச யானையே வந்தாலும் நின்னு சமாளிக்கிற திறமை எங்களுக்கு இருக்கு. நீ அந்த வெண்ணையை வர சொல்லுய்யா, இல்ல கமிஷ்னர், ப்ரஸ்னு போய்கிட்டே இருப்போம்.”
விருந்துக்கு வீட்டிற்கு வந்தது போல் ஸ்ரீனிவாசன் அருகே அமர்ந்த விஷ்ணு, ஸ்ரீனி கையில் ஒரு குளிர்பானத்தை கொடுத்து தனக்கும் நண்பனுக்கும் பூமர் ஒன்றை வாங்கி வந்திருந்தான். மூவரும் சாவகாசமாக அதனை உண்ண, பூமரின் கவரினை விஷ்ணு, பார்த்திபன் கையில் ஒப்படைத்தான்.
“ஏன்டா குப்பையை என் கைல தான் குடுப்பியா?”
நண்பனை முறைத்த பார்த்திபன், அருகில் தங்களை என்ன செய்வதென தெரியாமல் விழித்த அந்த காவலதிகாரியின் மேஜையில் வைத்தான், “சார் குப்பைல போட்டுடுங்க.” என்று இயல்பாக கூறினான்.
“அத்திம்பேர் இதையும் வச்சிடுங்கோ.”
தன் பங்கிற்கு ஸ்ரீனியும் கொடுக்க, “சார் இதையும்…” என அங்கேயே மீண்டும் வைத்தவர்களைப் பார்த்து பற்களைக் கடித்தார் அந்த மனிதர்.
நகர்புறத்தை விட்டு சற்று தொலைவில் இருந்த அந்த காவல்நிலையத்தில், கூட்டம் இருந்தாலும் பார்த்திபன் கொடுத்த சத்தத்தில் அவ்விடத்தையே தற்காலிகமாக சுத்தம் செய்திருந்தனர்.
இருந்த அனைவரையும் ஏதோ காரணம் கூறி அனுப்பி வைத்தவர்கள், அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். தற்பொழுது பார்த்திபனின் திமிரான செயலும் விஷ்ணுவின் அஞ்சாத பார்வையும், அவர்கள் செயலின் அலட்சியமும் தான் பிடிபடவில்லை.
ஏதோ தைரியத்தில் வந்துவிட்டார்கள் என விடமுடியவில்லை, சாவதானமாக அல்லவா இவர்கள் இருக்கிறார்கள். கூறியதை செய்திடுவார்களோ என்ற சந்தேகத்தில், தன்னை ஏவியவனை அழைக்க சென்றார்.
அந்த மனிதர் அவ்விடம் விட்டு அகலவும், “இவன் கம்பெனி சென்னைல ஒன்னு, இங்க ஒன்னும் இருக்கு. கம்பெனி ஸ்டார்ட் பண்ணி மூணு வருஷம் தான் ஆகுது. அந்த ஓனர் மருமகன்தான் ஏதோ கேரக்டர் சரியில்ல போல.
ஏற்கனவே பிரச்சனை வந்துருக்கு, ஆனாலும் மருமகன்னு கூடயே வச்சு அந்த ஆள் பாத்துருக்கார். ரொம்ப பெரிய கை எல்லாம் இல்ல, எக்ஸ் எம்.எல்.ஏ காண்டாக்ட் இருக்கு. மத்தபடி தூசிதான், தட்டிவிட்டுடலாம் தடயமே இல்லாம…”
பார்த்திபன், “வர வர பூமர் டேஸ்ட் கம்மியாகிடுச்சுல விஷ்ணு?”
இருவரையும் ஆச்சரியமாக வாயைப் பிளந்து பார்த்த ஸ்ரீனிவாசன், “யாருயா நீங்க? தூசி தட்டிடுவீங்களா?” உண்மையிலே அசந்துதான் போனான் அவர்களின் நிதானத்தில்.
ஒரே நொடி போதும், அந்த காவலதிகாரியை அவமதித்ததாக சிறையில் அடைக்க. ஸ்ரீனிவாசன் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி, எத்தனை பெரிய மனிதன். அவரை தூசி என்கிறார்களே என்ற வியப்பு.
“உன்னை சொல்லணும்டா…” என்ற விஷ்ணுவைப் புரியாமல் பார்த்தான் ஸ்ரீனி.
‘இந்த ஆள் எப்ப பூமர் கேட்டார், நம்மகூட தானே ரெண்டு பேரும் இருந்தானுங்க.’ குழப்பமாய் இருந்தது அவனுக்கு.
“அவன் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா?” இருவரையும் பயமுறுத்தும் நோக்கோடு மாறி மாறி பார்த்து கேள்வி எழுப்பினான் சிறியவன்.
“என்ன ஒரு ஆறு அடி இருப்பானா?” என்ற பார்த்திபனிடம்,
“அஞ்சு பத்து தான்டா…” அந்த மனிதனைப் பற்றிய மொத்த தகவல்களையும் கையில் வைத்திருந்த விஷ்ணு நண்பனிடம் கூறினான்.
ஸ்ரீனிக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது. அவனுக்கு எங்கு தெரியும், எதிர்காலத்தினை பற்பல கோணங்களில் இரண்டு தொழிலதிபர்களும் யோசிப்பது.
விஷ்ணுவின் அதிகப்படியான அலட்சியமும் அதனைத் தொடர்ந்து அமைதியாக அவன் வந்தமர்ந்து, அதோடு முக்கியமாக அந்த பூமர். அந்த ஒன்று போதும், பிரச்சனையின் தீவிரத்தை குறிக்க.
பல வருடங்களாக கல்லூரியில் சண்டை என வரும் பொழுது, நிதானமாக யோசிக்க இருவரும் பயன்படுத்தும் ஒரு போதிமரம் அந்த பூமர்.
‘யோசி, நிலைமை சற்று தீவிரம் தான்’ என்ற மறைமுக செயலை சிறியவனுக்கு காட்டாமல், நண்பனிடம் செய்தியாய் பகிர்ந்திருந்தான்.
அந்த மனிதனின் சக்தியைப் புரிந்த விஷ்ணு உடனே உள்ளே வந்து பேச வர, அதற்குள் எதற்கும் பொறுமை இழக்காத பார்த்திபன் பொறுமை இழந்து அவனையே அங்கே வரவைத்திருந்தான்.
இனி என்ன செய்வது, நண்பன் இழுத்து வைத்த பிரச்சனையை அவனோடு நின்று தானே சமாளிக்க வேண்டும் என்ற உண்மையில், உடன் நின்றுவிட்டான் பார்த்திபனின் நண்பன். நேரம் சென்றது, இருவரிடமும் அதிகப்படியான அமைதி.
ஏதேனும் பேச ஸ்ரீனி வாயைத் திறந்தால் அவனை சட்டையே செய்யவில்லை. அவன் கைப்பேசி வேறு ஒரு மூலையில் அடித்துக்கொண்டே இருந்தது. தனக்கும் மனைவியிடமிருந்து விடாது அழைப்பு வர, வெளியே சென்றான் சத்தம் அவளுக்கு கேட்கக்கூடாதென.