“ஏன்னா ஸ்ரீனி இன்னும் ஆத்துக்கு வரலயாம், அம்மா போன் பண்ணி ரொம்ப பீல் பண்ணா. நான் அழைச்சாலும் எடுப்பேனான்றான். நீங்க ஒருவாட்டி அவன் ஆஃபீஸ் வர போய் பாத்… ப்பா… ப்பா… சாக்கி வேணும்.” அன்னையின் கையிலிருந்த கைப்பேசியை பிடித்திழுத்து கேட்டது சிறு வண்டு.
“சும்மா இருடா பாப்பா… நீ வேற…” குழந்தையை செல்லமாக அலுத்துக்கொண்டு அலைபேசியை காதில் வைக்க, சங்கீதமாய் கணவனின் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது.
“என்ன சிரிக்கிறேள்? தோப்பனார்கிட்ட சொல்ல பயந்துதான் அம்மா நேக்கு கால் பண்ணி சொன்னா. ஒரு எட்டு போய் பாத்துட்டு வர்றேளா ன்னா?” மனைவியின் கெஞ்சல் வார்த்தைகளோ, கோவ வார்த்தைகளோ எதுவாக இருந்தாலும் கணவனின் மனதை இறகைப் போல வருடியது.
ஏனோ தன்னை விட சிறியவனாய் ஸ்ரீனி பிறந்ததில் இருந்தே அவனை ரசித்து, செப்பு வாய் திறந்து பேசும் நேரம் மகிழ்ந்து, நடை பயில கரம் கொடுத்து, படிக்கும் நேரம் ஆசானாய், மற்ற நேரம் தோழியாய் தாங்கியவளுக்கு, தன்னுடைய மகளை விட சகோதரன் ஒரு படி மேல்தான் இப்பொழுதும். கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான் ஆறு நாற்பத்தி ஐந்து. சிரித்தான் மெலிதாக!
“இப்ப தான ஆராம்மா ஆறே முக்கால். இன்னும் ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணி பாக்கலாம்ல?”
“இல்ல, அவன் இப்டி எல்லாம் லேட்டா வர மாட்டான். கன் மாதிரி வந்து நிப்பான். அவன் செல்போன் வேற எடுக்க மாட்றான் ன்னா. ஏன் நோக்கு என் தம்பிய போய் பாக்குறத விட வேற என்ன வேலை? இடத்தை விட்டு எழுந்திரிங்கோ…”
மனைவியின் கட்டளையை செவி சாய்க்கும்படி சிரித்து வைத்தான் பார்த்திபன்.
“ஏன்டி உன் தம்பிக்கு ஆயா வேலை பாக்குறது தான் என்னோட வேலையா?”
அவளிடம் பேச்சை வளர்க்க வளர்க்க அவன் மூளையின் இறுக்க முடிச்சுகள் ஒவ்வொன்றாக தளர்வது போல் ஆசுவாசம். தன்னைத் தானே நிதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
“உங்க குழந்தைக்கு அவன் சேவை செய்றப்போ மாமன் உரிமை, நீங்க அவனுக்கு செய்றப்போ ஆயா வேலையா?”
“சரிதான்…” இதழ் கடித்து சிரிப்பை அடக்கினான்.
“ஏன்னா…” ஏதோ ஒரே நொடியில் சிந்தித்துவிட்ட ஆரபி, “நீங்க ஒருக்க கூபிடுங்களேன் அவனை…”
“நீ கட் பண்ணா தானே ஆரா ம்மா நான் பேச முடியும்…”
“ம்ம்ஹ்ம்… நான் மாட்டேன். நீங்க ஆஃபிஸ் நம்பர்ல இருந்து கால் பண்ணுங்கோ.” கணவனை விட்டால் பிடிக்க முடியாதென விட மறுத்தாள் மனைவி.
அவனும் போலியாக நடித்தவன் சில நொடிகள் அமைதிக்கு பிறகு, “அட ஆமா ஆரா ம்மா, உன் தம்பி நான் போன் பண்ணியும் எடுக்கல.”
“பாத்தேளா… இதுக்கு தான் நேக்கு பயம் வந்துடுத்து. இப்போ எனக்கு பயம் அதிகமாகிடுத்து ன்னா. கெளம்பிட்டேளா நீங்க, அவன் ஆஃபீஸ்க்கு?” பயம் அதிகரிக்க புலம்ப துவங்கியிருந்தாள் மனைவி.
“கொஞ்ச நேரம் கழிச்சு வரலைனா பாக்கலாமே மாமி. ஒரு கால் மணி நேரம் வெயிட் பண்ணலாம்.” என்றான் பார்த்திபன் விளையாட்டை கைவிட மனம் வராமல்.
“இவ்ளோ திண்ணக்கமா பேசுறேள், இந்த காலத்துல பிள்ளைகளை இப்படியா அசால்ட்டா வெளிய விட முடியும்?” கணவனிடம் காரமாக பொரிந்தாள்.
“அது குழந்தைங்க ம்மா, உன் தம்பி என்ன பச்சை குழந்தையா, கடத்திட்டு போக?”
“இப்டி நான் யோசிக்கவே இல்லையே?” பதட்டம் மேலும் ஏறியிருந்தது அவள் குரலில்.
“எப்படி?” என்றான் பார்த்திபன் இன்னும் சுவாரஸ்யமாக.
“ஸ்ரீனிய யாரும் கடத்திருப்பாளோ ன்னா?” சகோதரியாய் மனைவி குரல் சற்று அதிகப்படியாக நடுங்கியே வந்தது.
“மாமா… மாமா…” விளையாட்டை விட்டு ஆசையாக கண்கள் மின்ன, குழந்தையும் அன்னை அருகில் வந்து நின்றது ஸ்ரீனிவாசன் பெயரைக் கேட்டதும். அன்னை கையிலிருந்த கைப்பேசியை பிடுங்க, ஆரபிக்கு பயத்தில் கோவமே வந்தது.
“சும்மா இருடி நீ…” மகளை சற்று தள்ளி நிறுத்தினாள், “நான் உன் அப்பாகிட்ட பேசுறேன், மாமாகிட்ட இல்ல.” குழந்தையிடம் அழுத்தி கூறி முறைத்தாள்.
மனைவியின் சீரற்ற மூச்சில் சற்று தடுமாறியவன், “மாமி தண்ணி குடி.” என்றான்.
அவளுக்கும் அது தேவைப்பட உடனே குடித்தவள் மீண்டும், “யாரும் கடத்திருப்பாளோ பார்த்தி?”
“அதெல்லாம் இருக்காது ஆரபி, வந்துடுவான். ஆனா ஒருவேளை கடத்திருந்தா என்னம்மா பண்றது? உன் தோப்பனார எதுக்கும் பணம் கொஞ்சம் புரட்டி வச்சுக்க சொல்லு.”
“அய்யய்யோ! நீங்க வேற ஏன் பயமுறுத்துறேள்? இந்த நேரத்துக்கு மேல பணத்தை எப்படி புரட்ட முடியும்? என் தம்பிய எதுவும் பண்ணிட மாட்டால்ல ன்னா? அவனை எதுவும் அடிக்க மாட்டார்களா கடத்துனவா? நேக்கு பயமா இருக்கே… பெருமானே! என் தம்பி நல்லபடியா வீட்டுக்கு வந்து சேர்ந்…”
“அத்திம்பேர் இந்த விஷ்ணு ண்ணா என்ன என்னமோ பண்றார், என்னனு வந்து பாருங்க, எனக்கு பயமா இருக்கு.”
தவறான நேரத்திற்கு வந்து சரியாக இடையிட்ட ஸ்ரீனியை, சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் பார்த்து சிரித்தான் பார்த்திபன். அந்த பக்கம் சகோதரன் குரலைக் கேட்ட ஆரபிக்கு இதயம் மீண்டும் வேகமாக துடித்தது.
“பார்த்தி…” என்றாள் கோவம் அதிகமாக.
அவள் உண்மையை அறிந்தது புரிந்தவன் இருக்கும் இடம் மறந்து நிற்க மாட்டாமல், ஸ்ரீனியின் தோள் பிடித்து முடிந்த மட்டும் சிரித்து வைத்தான்.
“ஏன்டா உன் அக்காவை கொஞ்சம் பதற வைக்க நான் பிளான் போட்டா கெடுத்து விட்டுட்ட…” சிரிப்போடு ஸ்ரீனியை அவ்விடம் விட்டு தள்ளி மீண்டும் உள்ளே அனுப்பி வைத்திருந்தான்.
“எது எதுல விளையாடணும்னு நோக்கு வெவஸ்தையே இல்ல. இதயம் பல மடங்கு வேகத்துல ரன்னிங் ரேஸ் போகுது. நானும் பல வகைல கற்பனை பண்ணிட்டேன். வாங்கோ நீங்க வீட்டுக்கு, இருக்கு உங்களுக்கு. ரெண்டு நாள் போஜனம் கட் தான்…”
பார்த்திபன் சத்தமாக சிரித்தான், “சரிதான் போடி, எனக்கு சாப்பாடு என் மக போடுவா.”
குழந்தையோ, “ப்பா மம் மம்…” என்க, “ம்ம்… தலைய தலையை ஆட்டுற… நானும் பாக்கதான் போறேன்.” ஆரபி கூற ஏதோ மனம் லேசானது பார்த்திபனுக்கு.
இது தானே அன்பானது! என்ன செய்ய என திக்கு தெரியாத தருணங்களில் ஏதாவது செய்து மனதினை திடப்படுத்தி விடுகிறது. அந்த அன்பு செருக்காய் உருமாறி, மன்னனே முன்னே வந்து நின்றாலும் நிமிர்ந்து நிற்க வைத்துவிடும்.
கணவனின் நிலை அறிந்தாலோ என்னவோ? அவனை அழைத்து அவனுக்கான எனர்ஜி பூஸ்டரை கொடுத்து இரண்டு திட்டையும் மறக்காமல் கொடுத்து இணைப்பைத் துண்டித்திருந்தாள்.
பார்த்திபன் உள்ளே நுழைய இருந்த தருணம் வெளியே வந்த விஷ்ணு அவனோடு பேச எத்தனிக்க, காவல் நிலையத்தினுள் ஒரு விலையுயர்ந்த வாகனம் உள்ளே வழுக்கி வந்து நிற்க, அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை விட்டு வெளியே நின்றது காவல் வாகனம் ஒன்று.
வாகனத்தின் பளபளப்பே வந்தது யாரென எடுத்து காட்டியிருக்க, அந்த வாகனத்திலிருந்து எவரும் வெளிவராமல் இருப்பதுதான் இருவரையும் புருவம் சுருங்க வைத்தது.
வெளியில் நின்ற போலீஸ் வாகனத்திலிருந்து வேக வேகமாக வந்திறங்கிய இன்ஸ்பெக்டர், அந்த வாகனத்தின் அருகில் வந்து நிற்க காரின் கண்ணாடி ஒரு பக்கம் இறங்கியது.
இன்ஸ்பெக்டர் கண்ணாடி வெளியே உள்ளே தொங்காத குறையாக ஏதோ பேச, முன்னிருக்கையிலிருந்து ஒரு உருவம் வந்திறங்கியது. இன்ஸ்பெக்டர் முன்னே செல்ல, அந்த மனிதர் இன்ஸ்பெக்டரை அவசரமாக தொடர்ந்து உள்ளே செல்ல, ஒரு கான்ஸ்டபிள் வந்து இருவரையும் உள்ளே அழைத்தார்.
இருவரும் அசையவில்லை, அதைத் தொடர்ந்து ஸ்ரீனியும் அவர்களை உள்ளே அழைக்க இன்னும் நகரவில்லை அவர்கள்.
இரு சக்கர வாகனத்தின் மீது பாந்தமாக அமர்ந்து, சுற்றியிருக்கும் இடங்களைப் பார்வையிட்டு அமர்ந்திருந்தனர்.
“யோவ்! என்னயா இந்த இடத்தை வாங்க போறேளா? உள்ள வந்து பேசிட்டு என்ன அழைச்சுண்டு அப்றம் டிஸ்கஸ் பண்ணுங்கோ.”
இருவரும் அவனை சட்டையே செய்யவில்லை, ஏதோ ஒரு முடிவோடு தான் நிற்கின்றனர் என்பதை புரிந்தவன் மனதில் பயம் அதிகமானது. “தெரியாத்தனமா உங்கள அழைச்சுட்டேன், என்னதான் பிளான் பண்றீங்க?” என்றான் பீதியோடு.
மீண்டும் உள்ளே சென்றான் அந்த இன்ஸ்பெக்டரைப் பார்க்க.
பார்த்திபனுக்கு ஆத்திரம்தான் வந்தது, “இந்த வயசுலயா சின்ன பொண்ணுகிட்ட சில்மிஷம் பண்றான்?”
“ஆமா, சென்னைல இந்த ஆளோட பொறுப்புல கம்பெனி இருக்கவும் ஆட்டம் அதிகமா இருந்திருக்கு. அதை தெரிஞ்சு இவர் அந்த ஆள தன்னோட கண்ணுக்கு முன்னாடி வச்சிருக்கார். இங்க வந்ததும் உன் மச்சான்கிட்ட மாட்டிக்கிட்டான்.”
“யோவ் என்னயா உங்கள வெத்தல பாக்கு வச்சு ஒருத்தன் உள்ள அழைக்கணுமா? ஒழுங்கு மரியாதையா உள்ள வந்துரு, இல்ல லாக்கர்ல தான் ஒக்காரணும்.” முகம் சிவக்க கோவமாக வந்து நின்றார் இன்சு.
“வர வேண்டிய ஆள் வரவும் நாங்களும் உள்ள வருவோம் சார்.” என்றான் விஷ்ணு.
“அவர்தா உள்ள இருக்காருலடா, கண்ணு அவிஞ்சா போச்சா?”
பார்த்திபன், விஷ்ணுவிடம், “அந்த ப்ரெஸ்க்கு போன் பண்ணுடா, எவ்ளோ நேரம்தான் நிக்க வைப்பானுங்க?” அந்த இன்ஸ்பெக்டர் பேசியதைக் கேட்காதது போல் நண்பனிடம் ஏவினான்.
விஷ்ணு கைப்பேசியை எடுக்க, “தம்பி இது ஒரு சின்ன விசயம், இதுக்கெல்லாம் சார் வர மாட்டார். அதான் அவரோட பி.ஏ நான் வந்துருக்கேன். உங்க பையன் வெளிய வரணும்னா உள்ள வாங்க, பேசி முடிக்கலாம்.”
பார்த்திபன், “நீ யாரு? ஆஹ்! நீ யார், நான் உங்கிட்ட பேச? என் ஆஃபீஸ்ல வேலை பாக்குற பையன உன் ஓனர்ட பேச விட்டா பேசுவாரா? நேருக்கு நேர் பேசுறதா இருந்தா வருவோம், இல்லையா எங்க வீட்டு பையன எப்படி வெளிய கொண்டு வர்றதுனு எனக்கு தெரியும்.”
மீசையை முறுக்கிவிட்டு அந்த வாகனத்தை பார்த்திபன் பார்த்து முறைக்க, அடுத்த சில நொடிகளில் அந்த சொகுசு வாகனத்தை விட்டு இறங்கினார் அந்த பெரிய மனிதர்.
கருப்பு காற்சட்டை, விரைப்பான வெள்ளை சட்டை, நிமிர்வான தோற்றம், கையில் தங்க கடிகாரம், வயதானாலும் சீராக சீவப்பட்டிருந்த சிகை, மின்னும் தோற்றம் என பணத்தின் சாயல் அப்பட்டமாய் தெரிந்தது.
தாமோதரன்! இருபது வருடங்களுக்கு முன்பு கோவையில் கொடிகட்டி பறந்த பெயர் பெற்ற செல்வந்தரின் ஒரே வாரிசு. துணி ஏற்றுமதி, மர வியாபாரம், நூல் ஆலை என ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமே அவர்கள் வசமிருந்தது.
தந்தை, பாட்டன் கைகளில் இருந்த தொழிலானது, என்று தாமோதரன் கைகளுக்கு இடம் மாறியதோ அன்று துவங்கியது, அந்த நிறுவனத்தின் வீழ்ச்சி.
பெரியவர்கள் ஒழுக்கத்தோடு செய்திருந்த தொழிலில் லாபம் அதிகமிருந்தாலும், பன்மடங்கு லாபமீட்ட அவர் துவங்கிய அதிரடியான செயல்கள், துவக்கத்தில் அதீத லாபத்தைக் கொடுத்தாலும், பொருளின் தரம் வீணாகி பெயர் கெட்டு, பணமும் பறிபோனது.
அதிலிருந்து மீண்டு வரவே அவருக்கு பல வருடங்களாகியிருக்க, கடந்த ஏழு வருடங்களாக தான் சற்று எழுந்து வந்திருக்கின்றனர். வேலைக்கு சென்று பிறரிடம் கை நீட்டி பணம் வாங்க துளியும் விருப்பமில்லாமல், கைகளில் இருந்த அத்தனை சொத்தையும் விற்று ஒரு சிறிய துணி ஆலையை உருவாக்கினார்.
அது சற்று விரிந்து இன்று சென்னை மற்றும் கோவையில் பெயர் சொல்லும் அளவிற்கு விரிந்திருக்கிறது. அதிலும் அவரது குணம் முழுதாய் மறையாமல் இருக்க, இடையிடையே பல இடையூறுகளை சந்திக்க வேண்டிதான் உள்ளது இன்றுவரை. இதில் அவரது மருமகன் அவரை விட ஒரு படி மேலே சென்று ஒழுக்கத்திலும் தவறியிருந்தான்.
அதன் விளைவு, மகளுக்காக இந்த வயதிலும் காவல் நிலையத்தின் படியேற வைத்திருந்தது.
“சேகரன், கேஸ் வாபஸ் வாங்கிட்டு வா.”
தவறிழைத்ததன் சிறு சாயல் கூட அந்த முகத்தில் இல்லை. மாறாக ஒரு செருக்கு இருந்தது. பார்த்திபனுக்கு எதிர்பார்த்த செய்தியே ஆனாலும் உவப்பானதாக இல்லை.
“டேய், இப்ப நீ கேஸ் போடுடா.” என்றான் ஸ்ரீனியிடம், அந்த பெரிய மனிதரைப் பார்த்து.
“எங்க போடுடா பாக்கலாம்…” தாமோதரனைத் தவிர மற்ற அனைவர் முகத்திலும் அதிர்ச்சி மற்றும் கோவத்தின் சாயல்.
“நீங்க எதுக்கு சார் துள்ளுறீங்க? இவருக்கு முதுகு எலும்பு இருக்குல்ல, அவரே பேசட்டும்.” சற்றும் கோவத்தைக் காட்டாமல் பேசிய பார்த்திபனின் நிதான பார்வை, அந்த பெரியவரை ஏதோ அவமதித்தது.
“என்ன தம்பி எதிர்பாக்குறீங்க?”
விஷ்ணு, “ரெண்டு இண்டஸ்ட்ரி இருந்தா எல்லாத்தையும் காசு குடுத்து சமாளிச்சிடுவியா? உன் பேத்திய தூக்குறேன், அப்போ இதே மாதிரி வந்து பேரம் பேசுவியா?”
அங்கிருந்த தாமோதரனின் கூட்டம் விஷ்ணுவை நோக்கி எகிறிவர, அனைவரையும் தள்ளி நிறுத்தி நண்பனை அடிக்கண்ணில் முறைத்து அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், “அசிங்கமா இல்ல?” பார்த்திபன் கேட்க, விஷ்ணு பற்களைக் கடித்து வேறு பக்கம் பார்த்தான்.
அவனுக்கும் அப்படி பேச மனம் வரவில்லை தான், ஆனாலும் எத்தனை பெண்களை இந்த நிலையில் நிறுத்தியிருப்பான்? அந்த வலியை தாமோதரனும் அனுபவிக்க வேண்டி ஆத்திரத்தில் பேசியிருந்தான்.
நண்பனின் தோளில் அழுத்தமாக கையை வைத்து அழுத்தி தாமோதரனைப் பார்த்தான், கண்கள் சிவந்து கோவத்தை அவர் கட்டுப்படுத்துவது தெரிந்தது.
“நமக்கு வந்தா தான் தெரியும், வார்த்தையோட வலியோ, செயலோட வலியோ. அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.” கை எடுத்து மன்னிப்பு வேண்டி நின்றவனை விஷ்ணு பார்வையாலே எரித்தான்,
“கண்டவன்கிட்ட நீ எதுக்குடா மன்னிப்பு கேக்குற?” பார்த்திபனின் பார்வையில் மீண்டும் அமைதியாகிவிட்டான் விஷ்ணு.
“மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா?” இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் கேட்க, அவன் அவரை மதிக்கவே இல்லை.
“நீங்க ஸ்ரீனிவாசன்கிட்ட மன்னிப்பு கேட்டா, இந்த பிரச்சனை இதோட முடியும், இல்லையா…”
பார்த்திபனை முடிக்க விடாமல், “இல்லனா என்னடா பண்ணுவ? மிரட்டுறியா? யார் யார்கிட்ட மன்னிப்பு கேக்கணும்? கேவலம் அன்னக்காவடி பசங்க, உங்ககிட்ட அந்த மனுஷன் மன்னிப்பு கேட்கணுமா? மவனே ஒரு நாள் ராத்திரி இவன் இங்க இருக்கட்டும், அப்ப தெரியவைக்கிறேன் போலீஸ் அடினா என்னனு…”
குறுக்கே வந்து ஸ்ரீனிவாசன் சட்டையைப் பிடித்து உள்ளே தள்ளினான் அந்த கான்ஸ்டபிள், “உன்னை தேவையில்லாம துடுப்பு போட வேணாம்னு சொன்னேன். அவனை தூக்கி உள்ள வச்சதுக்கே இவ்ளோ தூரம் இழுத்துட்டு வந்துருக்கோம். மேல கை வச்சா என்ன ஆகும்னு சொல்ல விரும்பல நான்.”
பற்களைக் கடித்து எச்சரிக்கை செய்த பார்த்திபன், தாமோதரனின் வார்த்தையை எதிர்பார்த்து அவரைப் பார்த்தான்.
அந்த மனிதருக்கு அந்த இரண்டு இளைஞர்களின் நிமிர்வும், திமிரும் அதிகம் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது, எதற்கும் அசரவில்லை.
விஷ்ணுவின் பேச்சிலே தன்னைப் பற்றிய விபரம் சேமித்திருப்பார்கள் என தெரிந்தது. அத்தனை தெரிந்தும் பிடிவாதமாய் அவர்கள் நிற்கும் தோரணை, எதற்கும் அவர்கள் தயாரென கூற, அவர்களின் இந்த தன்மானம் அவரை அதிகம் கவர்ந்தது.
உள்ளுக்குள் அதிகமான கோவம் கனன்று கொண்டிருந்தது. அதைவிட சுற்றி இத்தனை மனிதர்களை வைத்து தன்னை ஒரு சிறியவனிடம், தன்னிடம் வேலை பார்க்கும் சாதாரண ஒரு தொழிலாளியிடம் மன்னிப்பு கேட்பதா என்ற அகங்காரம்.
பெரிதாக தோற்று நிற்கும் தன்னைப் பார்த்து, பலர் சுற்றி நின்று கேலியாக சிரிப்பது போல் அவமானமாக இருந்தது.
அடக்கினார், கோவம், எரிச்சல், பிடிவாதம் அத்தனையையும். எரிமலையாய் பொங்கிய உணர்வுகளை புன்முறுவல் என்னும் கற்பாறையைக் கொண்டு மொத்தமாய் அடக்கினார்.
அவர் பார்வை மிக மிக அழுத்தமாக விஷ்ணு, பார்த்திபன் மீது பல நொடிகள் படிந்து பிறகு ஸ்ரீனியிடம் சென்றது.
“சாரி தம்பி!” என்றவர் மெதுவான நடையோடு வாகனத்தின் கதவைத் திறக்க வர, அவரது பி.ஏ அதனைத் திறக்க, பார்த்திபன் மற்றும் விஷ்ணுவிடம், “சந்தோசமா இருங்க ப்பா…”
இருவருக்குமே தெரிந்தது, அந்த இளமுறுவலின் பின்பு ஒளிந்திருந்த இருளின் சாயல். வாகனம் அவர்கள் பார்வையை விட்டு அகலும் வரை, இரண்டு பக்கமும் பார்வையானது திருப்பப்படவில்லை.