“இந்த டிசைன் எனக்கு பெருசா புடிக்கல சார், லைட் எல்லாம் ரொம்ப கம்மியா இருக்கும், நீங்க போட்டோ எடுக்குறப்போ ஷேட் சரியா வராது. நான் வேணா வேற மாதிரி டிசைன் பண்ணி உங்களுக்கு அனுப்புறேன், அது ஓகேனா அது மாதிரியே டிசைன் பண்ணிடலாம்.”
அந்த பக்கம் ஏதோ கூற, “இல்ல சார், நான் பாசிபிலிட்டிஸ் தான் சொல்றேன், ஒன்னு பண்ணலாம் ஆஃபீஸ் வாங்க, ஒரு டெமோ மாதிரி பண்ணி காமிக்க சொல்றேன். அப்றம் நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.”
“ஓகே சார், ரெண்டு நாள்ல ஆஃபீஸ் வாங்க, டெமோ பாத்துடலாம்.” பேசி முடித்து எதிரே அமர்ந்திருந்த நண்பனிடம் தண்ணீர் நீட்டினான்.
“செம்ம கடுப்புல இருக்கேன், தண்ணிய குடுத்தா எல்லாம் சரியாகிடுமா?”
“என்னடா பண்ண சொல்ற? உன்ன மாதிரி சன்யாசியா இருந்தா ஒடனே ரியாக்ட் பண்ணிருக்கலாம். ஆனா கூட குழந்தைங்க, ஆரபினு என் குடும்பமே அந்த நேரம் என்னை நம்பி நின்னுச்சு.”
விஷ்ணு, “சரிடா விடு, அதான் தெரிஞ்சு போச்சுல. இனி அந்த தாமோதரனை என்ன பண்ணலாம்னு மட்டும் யோசி.”
பார்த்திபன், “பயத்தை காட்டணும் விஷ்ணு. என் பொண்ண வச்சு அவன் எனக்கு எப்படி பயத்தை காட்டுனானோ, அதே மாதிரி அவனுக்கு பண்ணணும். ஒரு நிமிஷம் அந்த கண்ணுல பயம் தெரியணும், அதை நான் ரசிச்சு பாக்கணும்.” பழிவெறி கண்களில் தீயாக எரிய, இறைவனே ஆனாலும் எதிர்த்து நிற்க தயாராகிவிட்டான் தந்தையானவன்.
“இத சொல்ல இவ்வளவு நேரமா? சரி பிரச்சனை என்ன வந்தாலும் பாத்துக்கலாம், ஆள தூக்கிடலாமா?” என்றான் விஷ்ணு ஒரேடியாக மேலேறி.
பார்த்திபன், “ஃபுல் டைம் ரவுடி மாதிரி பேச கூடாது.”
ஸ்ரீனி, “அப்போ அவன்கிட்ட சண்டை போடப்போறிங்களா?” எகிறினான் மாமனிடம்.
பார்த்திபன், “இருடா…” ஸ்ரீனியை அடக்கி விஷ்ணு பக்கம் திரும்பினான். “அந்த ஆள் கைல எப்பவும் ஒரு பை இருக்கு, அதுல என்ன இருக்குனு கேட்டு வை. அவன் பெருசா நம்பியிருக்குற விசயம் அதுல கண்டிப்பா இருக்கும்.”
“கைலயே இருக்குற விசயமா… அப்போ ஒரு நாள் கண்டிப்பா தேவை. விசாரிக்க…” யோசனையாக சில நொடிகள் நின்றவன், “சரி, நான் விசாரிச்சிட்டு வர்றேன் நைட்குள்ள.” என்றபடியே வெளியேற, மாமன் முன்பு அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்.
“எப்பா என்னா நடிப்பு! கோட் வேர்ட் எல்லாம் வச்சு பேசி, ஈஸியா ஏமாத்திட்டீங்கல்ல? இருயா… உன்னை என் உடன்பிறப்புகிட்ட மாட்டிவிடல, நான் ஸ்ரீனி கிடையாது.”
ஆற்றாமையில் கோவம் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் தன்னால் தானே என்ற வருத்தம் வார்த்தைகளை வெளியேற்றியது.
“இதுக்கு தான் சொல்லல, உன் அக்கா மேல இருக்க பாசத்துல லூசு மாதிரி ஏதாவது ஒளறிடுவ. அப்புறம் உன் அக்கா அழுதே நம்மள ஊர விட்டே வேற ஊருக்கு இழுத்துட்டு ஓடிடுவா.”
ஸ்ரீனி, “ஏன் விலகி போனாதான் என்ன? இப்ப பாருங்க, கொழந்தை மேல கை வக்கிற அளவு வந்துட்டான்.”
பார்த்திபன், “அவன் டார்கெட்டே நீ தான்டா…” என்றான் ஆவேசமாக.
“அப்போ என்னாலதான் பிரச்சனைனு சொல்றிங்களா? சரி, நானே இத முடிக்கிறேன். அந்த ஆள்கிட்ட மன்னிப்பு கேக்குறேன், பெரியவர் தான… முடிஞ்சா கால்ல கூட விழுகுறேன் போதுமா?” சிறியவனுக்கும் ரோஷம் துளிர்த்தது அதிகம்.
“போ… கொலைகாரன், கொள்ளைக்காரன், ரேபிஸ்ட் இப்டி ஊர்ல இருக்க எல்லா அயோக்கியனுங்க கால்லயும் நீ விழு, அப்பயும் மன்னிக்கலனா உன் அக்காவை அடுத்து விழுக சொல்லு, அதுக்கு அப்புறம் உன் அப்பாவை கூட்டிட்டு போ.
யாரை வேணா கூட்டிட்டு போ, ஆனா எவனுக்கும்… நல்லா கேட்டுக்கோடா, எவனுக்கும் மசிய மாட்டான் அந்த ஆளு. அவ்வளவு பேர் முன்னாடி அவனை அவ்ளோ அசிங்கமா பேசியிருக்க, சும்மா ஒரு கேஸோட விட்டுடுவானா?”
ஸ்ரீனிக்கு பேச்சே வரவில்லை, தன்னுடைய முதலாளியைப் பற்றி தெரியும். ஆனால் பழிவெறி இவ்வளவு இருக்குமென சுத்தமாக எண்ணியும் பார்க்கவில்லை. சமுதாயத்திற்கு ஒரு முகம், வீட்டிற்கு ஒரு முகம், தொழிலாளிகளிடம் ஒரு முகம், தன்னை விட அந்தஸ்த்தில் குறைந்தவர்களிடம் ஒரு முகம், தன்னுடைய அடிமைகளிடம் ஒரு முகம், எதிரிகளிடம் ஒரு முகமென கோடி முகம் வைத்திருக்கும் அந்த மனிதரின், உண்மையான சுபாவத்தை அறிந்துகொள்ளாமல் போனது அவன் மடமைதான். நெற்றியைப் பிடித்து தலை குனிந்தான், தன் அவசர புத்தியை எண்ணி மருகி.
“எதிர்காலத்தோட முடிவெடுக்குறதும் நீதான், நிகழ்காலத்தோட முடிவெடுக்குறதும் நீதான். கடந்த காலத்துல நம்மளோட எண்ணம் எப்படி இருந்துச்சோ, அதை பொறுத்துதான் நிகழ்காலமும் எதிர்காலமும் அமையும். உன் எண்ணம் சரியாதான் இருந்துச்சு.
என் எண்ணமும் சரிதான். இனி இதுல முடிவெடுக்குறது நீதான். போ, உன் குடும்பத்தையே கூட்டிட்டு… ஆனா நான் எப்பவோ முடிவெடுத்துட்டேன். ஆரம்பிச்சதை முடிக்காம ஓயப்போறதில்ல, என் கூட என் விஷ்ணு நிப்பான். எவனையும் நம்பி நான் இல்ல.”
கோவமாக அவ்வறையை விட்டு பார்த்திபன் வெளியேறியிருக்க, இளையவனுக்கு திக்கும் புரியவில்லை, திசையும் பிடிபடவில்லை.
ஸ்ரீனிவாசன், பார்த்திபன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. பார்த்திபனுக்கு குடோன் செல்லும் வேலை இருக்க, இவனைக் கண்டுகொள்ளாமல் வேலையைப் பார்க்க சென்றுவிட்டான்.
காலையில் சென்ற விஷ்ணு மாலை அலுவலகம் வர, “என்னடா இங்கையே டேரா போட்டுட்டியா?”
“ண்ணா விசாரிக்க தான் போனியா?” என்றான் முகம் வாடி.
விஷ்ணு, “அதைதான சொல்லிட்டு போனேன்.”
ஸ்ரீனி, “இதெல்லாம் தேவை தானா? கொஞ்சம் அத்திம்பேர்கிட்ட சொல்லுங்களேன். அந்த ஆள் புரிஞ்சுக்க மாட்டிக்கிறார். தையா தக்கானு என்கிட்ட குதிக்கிறார்.”
விஷ்ணு, “சரிடா, நான் உனக்காக விட சொல்றேன். உன் குடும்பம் உயிரோட இருக்கும். ஆனா நிம்மதி, சந்தோசம்னு எதுவுமே இருக்காது, பரவால்லையா?”
ஸ்ரீனி, “ஏன், அவரை நீங்க இப்படி வில்லன் ரேன்ஞ்சுக்கு போர்ட்ரே பண்றீங்க. அவர் மனுஷன் தான? குடும்பம் இருக்கு. நான் பண்ண தப்புக்கு என்னை போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்திட்டார்.”
விஷ்ணு, “ஏன்டா கூறு இருக்கா, இல்லையா உனக்கு? மனசாட்சியே இல்லாம குழந்தை மேல கை வச்சிருக்கான், இன்னமும் கூட அவன் மேல நம்பிக்கை இருக்கா உனக்கு?”
ஸ்ரீனி, “ண்ணா ஒரு நம்பிக்கைதான்…”
விஷ்ணு, “இது நம்பிக்கை இல்லடா… கோழைத்தனம். ஒருத்தன் நம்மள என்னைக்கு அடக்கி ஆளணும்னு யோசிக்கிறானோ, அன்னைக்கே எதிர்த்து நின்னு அடிக்கணும். குனிஞ்சனு வை, காலம் எல்லாம் குனிஞ்சே இருக்க வேண்டியதுதான், அவன் அடிச்சிட்டே இருப்பான்.”
ஸ்ரீனி, “அதுக்குனு சண்டை போட்டுட்டே இருப்பிங்களா? உங்கள கூப்பிட்டதுதான் தப்பு, ரெண்டு நாள் ஜெயில்ல வச்சு அமைதியா அனுப்பிருப்பானுங்க என்னை…”
இவனுக்கு என்ன கூறினாலும் புரியாது என்பதை உணர்ந்தவனாய், ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து ஸ்ரீனியின் நாற்காலியை, தன்னை நோக்கி திருப்பி நெருங்கி இழுத்தான் விஷ்ணு.
“நல்லா தெரிஞ்சுக்கோ… நாங்க வந்ததோ, வராததோ அங்க பிரச்சனை இல்லை. நீ மட்டும்தான் பிரச்சனை. ஈகோ புடிச்சவன் அந்த கிழவன். பல அடி வாங்கி பல வருஷம் முன்னாடி விட்ட இடத்தை, கொஞ்சம் கொஞ்சமா புடிச்சிட்டு வந்தவன். முன்னாடி நின்னு அவன் ஈகோவ தட்டி எழுப்பிவிட்ருக்க. சுத்தி இருக்கவன் பயப்படணும்னே உன்னை இப்படி ஜெயில்ல போட்டு அப்படி அடிப்பான்.”
அவனும் கோவமாக எழ, அவன் கையைப் பிடித்து மீண்டும் அமர்த்தினான் விஷ்ணு, “ஆமாதான், எனக்கு எல்லாமே தெரியும். அவனை பத்தி அக்குவேர் ஆணிவேரா தெரிஞ்சவன், என்னைவிட எவன்டா இருப்பான்?
இருபத்து அஞ்சு வருஷம் முன்னாடி, என்னோட தாத்தாவோட சொத்தெல்லாம், அவனை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக, அடிச்சு வாங்குனவன்டா இந்த தாமோதரன். அதுல இருந்து மீண்டு வர எங்களுக்கு இன்ன வரை முடியல.”
ஸ்ரீனி, “ஓ… அப்போ அந்த ஆளை பழிவாங்க உங்களுக்கு நாங்க ஒரு சாக்கு, அப்டிதான?”
கதவை உடைத்துக்கொண்டு உள்ளே ஆவேசமாக வந்த பார்த்திபன் நேராக ஸ்ரீனியின் சட்டையைப் பிடித்து தூக்கினான், “எங்க வந்து யார் மேல பழி போடுற?”
விஷ்ணு உடனே இடையிட்டு நண்பனைத் தடுத்தான், “டேய்… அவன் சின்ன பையன் விடு.”
நண்பனை முறைத்தவன், “நீ வராத…” என்றவன் ஸ்ரீனியிடம், “அவனை பத்தி எனக்கு தெரியும்டா. இத்தனை வருஷம் அவங்க குடும்பம் கஷ்டப்பட்டது பத்தியும் எனக்கு தெரியும். அவனுக்கு அவங்க வீட்டை அழிச்சது இந்த ஆள்தான்னு, ரெண்டு நாள் முன்னாடி வரை தெரியாதுங்கிற விஷயமும் எனக்கு தெரியும். பெரிய இவன் மாதிரி பேசுற, இன்னைக்கு இந்த பிரச்சனை வந்தது காரணமே நீதான்.
உன் மேல இருந்த அந்த ஆள் கவனத்தை திருப்பதான், நாங்க வேணும்னே அந்த பிரச்சனைக்குள்ள வந்தது. எனக்காக அவனும் வந்து நிக்குறான். நன்றி கெட்டவன்! வெளிய போ… இனிமேல் என் கண்ணுல முழிச்சிடாத…”
ஸ்ரீனிவாசன் அருகே வந்த விஷ்ணு, “புரிஞ்சுக்கோடா… பாதிலயே விட்டு ஓடுற விசயமில்ல இது. புலி வாலை புடிச்ச கதைதான். ஒன்னு அந்த புலி சாகணும், இல்ல அதோட பல்ல பிடுங்கினாதான் நிம்மதியா மூச்சு விட முடியும்.”
அந்த அறையில் இருந்த ஒரு கோப்பை தேடி எடுத்தவன், அதை ஸ்ரீனிவாசன் கையில் வைத்தான். “என்னை நம்ப மாட்ட, சரி… இதை பாத்து தெரிஞ்சுக்கோ, என் பிரச்சனைல உன் மாமாவை நான் என்னைக்குமே இழுக்க மாட்டேன்.” அவன் தோளில் தட்டி விடைபெற்றான்.
டீ கடைக்கு வந்த பார்த்திபன் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து உண்டு கொண்டிருந்தான்.
“அவன் அவன் கோவம் வந்தா சரக்கு அடிப்பான், இல்ல தம் அடிப்பான். நீ என்னடா பிஸ்கட் சாப்டுட்டு இருக்க? அட்லீஸ்ட் ஒரு டீயாவது சொல்லேன்டா…”