கமலவல்லிக்கு ஒரு பிளாஸ்க்கில் பால், ஆப்பிள், பிஸ்கட் போன்றவற்றை கொடுத்து, கணவன் சரியாக உண்ணாத காரணத்தினால் அவனுக்கும் பாலை எடுத்து உள்ளே நுழைய, தன்னுடைய டீஷர்ட்டை அவிழ்த்துவிட்டு மகள் புரட்டி போட்டிருந்த அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான்.
“நல்ல வேளை ஹெல்ப் பண்ணீங்க… இவா ஜாமானை எல்லாம் கிளீன் பண்ணணுமேனு மலைப்போடதான் வந்தேன், தேங்க்ஸ் ன்னா…”
கணவன் பின்னோடு சென்று அவனை அணைத்தவள் பிறகு விலகி, “ரவா தோசை உங்களுக்கு புடிக்காதுனு தெரியும், ஆனா வசந்த் தம்பி கேட்டார் அதான் பண்ணேன். நீங்க ஒழுங்காவே சாப்பிடல.” அவன் கையில் பாலை கொடுத்து விலகினாள்.
“நாளைக்கு எந்த கோவிலுக்கு ன்னா போகணும்?”
அலமாரியைத் திறந்து நாளை விஷ்ணுவுக்கு பெண் பார்க்க எந்த புடவையை அணியலாம் என்ற தேடலில் இருக்க, கணவன் தன்னுடையத் தேடலை அவளில் தேட துவங்கினான்.
கணவணின் கை அவள் இடையோடு அணைத்திருக்க, அவன் முகம் அவள் கழுத்து வளைவில் ஆழமாக புதைந்து வாசம் பிடித்தது.
“கோவிலுக்கு எதுக்கு?” என்றான் மையலாக மனைவியிடம்.
குறுகுறுக்கும் மீசை கழுத்தில் சுகமான இம்சையை மூட்ட, வசியமான அவன் இதழ்கள் அவளது வாசத்தை உறிஞ்சி அவளை பருகும் முயற்சியில் ஈடுபட, இடையோடு கோர்த்திருந்த கணவன் கை மேல் கை வைத்து, தன்னை மீட்க முயன்று கொண்டிருந்தாள் ஆரபி.
இதழ்கள் அவளது பால் மேனியில் வழுக்கிக்கொண்டு செல்ல, பிடிமானத்திற்காக பற்களைக் கொண்டு உறுதியாக நிற்க முயன்றான்.
“பல் தடம் தெரிய போகுது ன்னா…” பயத்தோடு அவன் சிகையைப் பிடித்து முற்றுகையிட்டாள் மனைவி.
“ஆத்துகார் உனக்குதான் க்ரீம் வாங்கி குடுத்துருக்கேன்ல மாமி… போதை ஏத்துறடி செல்லக்குட்டி… அதுவும் வசந்த் சரி சொன்னதும், எனக்காக சொல்ல ஓடி வந்த பார்… அப்டியே கட்டிபுடிச்சு கன்னத்தை கடிக்க தோனுச்சு…” மனைவியை ஒரே நொடியில் கைகளில் திருப்பிக்கொண்டான் அதீத காதலோடு.
“நீங்க கில்டியா இருந்தேள், அதான் எதுவும் பேசவும் இல்ல. கவனிச்சிட்டே இருந்துதான் ஓடி வந்தேன்.”
அவள் முடித்த நொடி வன்மையாக அவள் இதழ்களைப் பற்றியவன், வெறியோடு அவளை மொத்தமாக பருக, மனைவி, கணவன் காமத்தில் காதலோடு இசைந்துகொடுத்து உருகி நின்றாள். பார்த்திபன் கைகள் அவளது உடலில் எல்லை மீற, அவன் இதழ்களும் மெல்ல மெல்ல எல்லையைத் தாண்டி அவளை முழுதாக தன்னுள் ஆக்கிரமிக்கும் முயற்சியிலிருந்தது.
ஒருவரை ஒருவர் நாடி இன்பத்தின் போதையை, காதலின் கீதத்தை அணு அணுவாக படித்து தேர்ச்சிபெற, இதழ்கள் தந்த வெப்பம் தாளாமல் மூச்சிரைக்க மனைவிக்கு தற்காலிக விடுப்பு கொடுத்தான்.
“பார்… பார்த்தி அழிச்சாட்டியம் செய்யாதேள்…” மூச்சிரைக்க கணவன் மார்பினில் சாய்ந்தவளை ஆரத்தழுவி சிரித்தான்.
“ரெண்டு வருஷம் ரொம்ப தள்ளி நின்னுட்டேன், வேலை வேலைன்னு. உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துருக்கும்? பணத்துக்கு பின்னாடியே ஓடி உன்ன கவனிக்காம விட்டேனோனு ரொம்ப கஷ்டமா இருக்கு.” மனைவியின் தலையை வருடி தன் மனதை அதிகம் அரித்த விடயத்தைப் பகிர்ந்தான்.
“யார் சொன்னா அப்டி? குழந்தை பொறந்த புதுசுல மேக்ஸிமம் டெய்லி எனக்கு காலைல ஊட்டிவிட்டு, குழந்தையை ராப்பகலா தூங்காம பாத்துட்டதுல இருந்து, எவ்வளவோ பண்ணிருக்கீங்க. நான் கஷ்டப்பட்ட நேரத்துல நீங்க தானே ன்னா எனக்கு பக்க பலமா இருந்தேள். அதை விடவா நேக்கு பெரிய உதவிய செஞ்சுட முடியும்?”
“அது என்ன மேக்ஸிமம்…? அஞ்சு மாசம் பண்ணிருப்பேனா? அதெல்லாம் தாண்டி நிறையா…”
“பேசாதேள்…” கணவன் உதட்டில் விரல் வைத்து ஆரபி தடுக்க அமைதியானான்.
“ப்ரெக்னன்சிக்கு அப்றம் ஒடம்பு வலி, தூக்கம் கெட்டு போறது, மெண்டல் பிரஷர், மாமியார், நாத்தனார்னு இப்டி ஏகப்பட்ட பிரச்சனை இருக்கும்னு சொல்லுவா. அம்மா வீட்டுல இருக்க வர நேக்கும் எந்த சங்கடமும் இல்ல. உரிமையா அம்மா கைல இல்லனா ஸ்ரீனி கைல பாப்பாவை குடுத்து தூங்கிடுவேன். உங்கள மனசு ரொம்ப தேடிடுத்து. ஆர்வத்துல வந்துட்டேன், ஆனா இங்க உரிமையா குழந்தையை குடுத்துட்டு தூங்குறேன்னு வீட்டுல இருக்கவாகிட்ட சொல்ல முடியல.
என்னையவும் மீறி கோவம் நாசி வர பொங்கிடுமோனு பயந்துண்டே இருப்பேன். அதுக்கெல்லாம் ஈஸியான சொல்யூஷன் மாதிரி நீங்க இருந்தேள். இந்த ஒரு விசயம் போதாதா உங்களுக்கு எங்க மேல உள்ள அக்கறைய சொல்ல?”
முகத்தை நிமிர்ந்து பார்த்து அவனது கழுத்தோடு கைகள் கோர்த்தவள், சற்று எக்கி பார்த்திபனின் நாடியில் முத்தம் பதிக்க, மனம் தெளிச்சி அடையாமல் இருந்தாலும் முகத்தை பிரகாசமாக்கினான் மனைவியின் செயலில்.
“ம்ம்… அதுக்கு கிஃப்ட் குடுக்க போறியா ஆராமா?” சொல் கோர்த்து எழுத முடியாத ஏகாந்த தருணத்தில் ஜன்னல் வழி வந்த காற்று கவிதை எழுத, வெட்க சிரிப்பில் ஆரபி உடல் சிலிர்க்க, “என்ன வேணும்?” என்றவள் உடல், தன்னாலே அவன் மார்பினில் சாய, மனைவியின் கண்ணைத் தவிர்த்து மோதி நின்ற உடலைப் பார்த்தவன் கண்களில் மோகம் திரையிட்டது.
தாடை இறுக உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவன் மெல்ல குனிந்து அவளது மூக்குத்தியை கூரிய பார்வையோடு பார்க்க, அவனது இச்சை புரிந்தவள் ஆசையோடு தன் பக்கம் இழுத்தாள்.
“ரொம்ப ஆசையோட இருக்கேன்டி, என் ஆம்படையாள் கஷ்டப்படுவாளே?” மனைவியின் அனுமதி கேட்டு தன்னை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி நின்றான்.
“நீங்களும் இதேதான் சொல்றேள்… ஆனா வார்த்தைல மட்டும் தான் ஜாலம்…” நொடித்துக்கொண்டவள் மனம் வேகமாக துடித்தது கூறிய பொய்யினால்.
அவளது கண்களில் நொடி நேரம் வந்தோடிய குறும்பைப் பார்த்து மறைக்காமல் சிரித்தவன், “அடிச்சு இழுக்கிற மாமி…”
முதல் முத்தத்தை அவளது மூக்குத்தியிலிருந்து துவங்கியவன் வேகத்தில், எதற்கடா வீண் பேச்சு பேசினோமென ஆகிவிட்டது ஆரபிக்கு. சுழலாய் மனைவியைத் தன்னுள் இழுத்தவன் காதலிலும் மோகத்திலும் திக்குமுக்காடி போனவள் உடையை, அந்த திருடன் திருட, சுகப்பட்டு அத்திருட்டிற்கு உடன்பட்டாள்.
எத்தனை காதல் என்ற கேள்வியைத் தேடி சென்றவன், அத்தனையும் காதல் தான் என்ற விடையோடு வந்தான். அத்துமீறிய அவனது செயல்கள் அடங்காத மனதிற்கு இதமாக சாமரம் வீச, அழகான சங்கமத்தின் மூலம் காதல் மீண்டும் புதுவடிவம் பெற்றது அந்த அறையிலே.
பார்த்தி என்ற நாமம் அவள் நாவிலிருந்து வேதமாக வர, பூஜை செய்த அவள் மேனிக்கு அன்பாலே வன்மத்தை மறைத்து, மென் முத்தங்களோடு பல கோடி நன்றிகளை வைத்தான் ஆரபியின் கணவன். மேகங்கள் முடிச்சோடு நிலவினை மறைத்து மேலும் இருளைக் கொடுக்க, அந்த இரவு மொத்தமும் பத்தாதென மீண்டும் மீண்டும் அவளை பார்த்திபன் நாட, முதல் முறை கொண்ட கூடலை போல் உடலே சிவந்து கணவன் மார்பினில் தஞ்சம் புகுந்தாள் மாமி.
மொத்தமும் முடிந்து முத்தமழையில் மனைவியை நனைத்தவன், நெற்றியில் இருந்து தன்னுடைய இதழ்களை சிரமப்பட்டு தான் நீக்கினான். அதுவும் அவள் சோர்வை கவனித்ததால் மட்டுமே.
“இப்டி பண்றேளே… நாளைக்கு கோவிலுக்கு வேற கெளம்பணும்.” சோர்வாக அவனைப் பார்த்தாள்.
கண்கள் எல்லாம் காதல் பொங்க கணவனைப் பார்த்தவள் எதுவும் பேசாதிருக்க, தலை உயர்த்தி பார்த்த பார்த்திபன் கண்களிலும் காதல் மின்னல் வெட்டுதான்.
அதை விஞ்சி நின்றது கர்வம். தன்னை அளவு கடந்து நேசிக்க இவள் இருக்க, இவளையன்றி வேறு யார் எனக்கு தேவை? என்கிற பெருமிதம்.
“வாரி சுருட்டி வச்சிக்கிட்டடி மாமி. எப்படிதான் இந்த போதைல இருந்து வெளிய வர போறேனோ?”
பார்த்திபன் மார்பினில் கிள்ளியவள், “என்ன எஸ்கேப் ஆக பாக்றேளா, பிச்சிடுவேன்!”
மூக்கு சிவக்க மிரட்டியவளை மையலாக பார்த்தவன், “போதைனா உன்ன இல்ல ஆராமா, நீ என் உயிர். நான் சொன்ன போதை இப்போ எனக்கு திகட்ட திகட்ட குடுத்தியே அதை சொன்னேன்.”
மீண்டும் இதழ்களில் அவன் பார்வை நிலைக்க கைகளை அவன் மார்பில் வைத்து தடுத்தவள், “பார்த்தி…” அதிர்வோடு விழிக்க, அவளை அதற்கு மேல் அவன் பேசவே விடவில்லை. அழகிய இரவானது அவர்களுக்கு நீண்டுகொண்டே சென்றது.
***
கண்களில் நீர் நிரம்பி நிற்க, அந்த கடையை விட்டு வெளியில் வந்த அனாயா உதடெல்லாம் நடுங்கியது. தேங்கி நின்ற அவள் கண்ணீர் அந்த இடத்தின் மின்விளக்குகளின் பளபளப்பில் மினுமினுத்தது. பொங்கி வந்த அழுகையை அந்த பெரிய வான் கூரையை வெறித்து உள்ளே இழுத்துக்கொண்டாள்.
வேதனையில் அழுதால் அடக்கிவிடலாம். இந்த அழுகை அதீத கோவத்தின் விளைவால் வந்ததாயிற்றே. நிறுத்த முடியவில்லை, அடக்கவும் வழியில்லை. கழுத்தை திருப்பி அந்த கடையைப் பார்த்தாள்.
இடையில் கை வைத்து அந்த கடையின் மேனேஜர் அவள் செல்வதை உறுதி செய்ய நிற்க, ஏதோ அழுத்தம் வந்து அவரை தீயாய் முறைத்து அவள் அங்கேயே நின்றாள், அவரும் நகரவில்லை.
அந்த கடைக்கு நேர் எதிரே இருந்த கைப்பிடியில் சாய்ந்து நின்றவள், கைப்பேசியை எடுத்து தாமோதரனுக்கு அழைத்தாள். பேத்தியின் முதல் அழைப்பிலே எடுத்தவரின் அவசரமும் ஆர்வமும் அவளுக்கு தெரிய, கலங்கிய கண்கள் சிவந்து போயிருந்தது.
“என்ன என் பேத்தி அதிசயமா…?”
“யோவ்…” வாய் வரை வந்த வார்த்தையை கடினப்பட்டு அடக்கியவள், “மனுசனாயா நீ? பெத்த பொண்ணு முன்னாடி உன்ன பேச வேணாம்னு அமைதியா இருந்தேன் இத்தனை நாள். இனி பேச வச்சிடாத. என் வாழ்க்கைல நீ தலையிட்ட, உன்ன கொல்லவும் யோசிக்க மாட்டேன்.” அந்த பக்கம் தாமோதரன் சிரிக்கும் சத்தம் வர எரிச்சல் அதிகமாகியது அனாயாவிற்கு.
“என் பேத்திக்கு இவ்வளவு கூட பேச வருமா? ம்ம்… பரவால்ல, வளந்துட்டம்மா… ஆனா நாளபின்ன கம்பெனி பொறுப்பை ஏத்துக்க வர்ற நேரம் இவ்ளோ கோவம் படக்கூடாது சரியா ம்மா?”
“நல்லா கனவு கண்டுட்டே இரு. உன் வீட்டுல பொறந்த பாவத்தையே நான் எங்க போய் கழுவுறதுனு தெரியல. இதுல அங்க வந்து மொத்த பாவத்தையும் என் தலைல போட பாக்குறீங்களா? அந்த கம்பெனிய கொளுத்தி போடுவேன் தவர, அங்க வந்து உன் திருட்டுத்தனத்துக்கு துணை நிக்க மாட்டேன்.”
இதற்கும் அவரிடம் சிரிப்புதான், “நீ இப்டிதான் ம்மா சொல்லுவ, எனக்கு என் பேத்தியை பத்தி தெரியாதா? அவ எப்டினாலும் என்கிட்டதான் வருவா.”
“யோவ்! உனக்கு புரியவே இல்லையா? ஒரு ரூபாய் சம்பாதிச்சாலும் உண்மையா உழைச்சு சம்பாதிக்கணும்னு என் பாட்டி எனக்கு சொல்லி வளத்துருக்காங்க. மரியாதை, சந்தோசம், சொந்தம்… இது எல்லாத்தையும் இழந்து சம்பாதிக்கிற அந்த பணம், ஒரு நாளும் உங்கள பணக்காரனாக்காது. சொல்ல போனா நீ தான்யா பிச்சைக்காரன்… ராபிச்சைக்காரன்!” தன்னுடைய பரிதவிப்பில் குளிர்காயும் அந்த மனிதன் மேல் எல்லையில்லா ஆவேசம்.
“பணத்தோட வாசத்தையும் பதவியோட சொகுசையும் அனுபவிச்சு பார், அதோட சுகமே தனிதான்!” ஆழ்ந்த அமைதி அவர் குரலில்.
“ஆயிரம் புக் வாசிச்சாலும் அதோட அர்த்தம் தெரியாம படிக்கிறது சுத்த வேஸ்ட். அதே மாதிரிதான் உங்கிட்ட பேசுறது. நீ என்னமோ பண்ணிக்கோ, ஆனா என் வாழ்க்கைல நீ வராத, நான் உன்ன நம்பி நிக்க கூடாது அவ்வளவு தான். இன்னைக்கு பண்ண மாதிரி முன்னாடி வேலைக்கு அனுப்பிவிட்டு, பின்னாடி அதை பறிக்கிற கேவலமான வேலைய பாத்த… அப்றம் மரியாதை இருக்காது.”
தாமோதரன், “இன்னும் இந்த தாத்தா பத்தி தெரியாம இருக்கியே ம்மா… சரி போ, கோயம்புத்தூர்ல உனக்கு யார் வேலை குடுத்தாலும் தாராளமா நீ வேலைக்கு போகலாம். தாத்தா உனக்கு அந்த ஒரு ஆப்ஷன் தர்றேன். அப்றம் டிரைவர் மால் பார்க்கிங்ல தான் நிக்கிறார், அவர்கூட வந்துடு.”
சவால் விட்டு பார்க்கும் அந்த கிழவரை வயது வித்தியாசம் பார்க்காமல், சொந்த தாத்தா என்றும் பாராமல் நேருக்கு நேர் நின்று வார்த்தைகளால் கொல்ல எழுந்த வெறியைத் தீர்க்க, மனம் தவியாக தவித்தது, ஆனால் முடியவில்லை.
அவர் கைகளில் அனாயாவின் மொத்த கல்வி சான்றிதழ்களும் சிக்கிக்கொண்டது. அதோடு அவள் சகோதரன்… தன்னைத் தானே காத்து கொள்ள திக்குமுக்காடி நிற்கும் பொழுது, அவசரத்தில் தனக்காக பார்த்து அவனது எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடாதென்ற பயம் அவளை நிறுத்தியது.
சோர்வோடு அந்த வணிக வளாகத்தின் வெளியில் போட்டிருந்த இருக்கையில் சோர்வோடு அமர்ந்துவிட்டாள். அவளைப் பார்த்து அவள் முன்பு வந்து நின்ற வாகனத்தைப் பார்த்ததும் தீயாய் மாறியது அவள் விழிகள்.
“பாப்பா… ஐயா உங்கள கூட்டிட்டு வர சொன்னார்.”
“ண்ணா ப்ளீஸ்… நான் நிம்மதியா இருக்கணும் போங்க.” என்றாள்.
அவரோ அங்கேயே நின்றார், “உங்க கஷ்டம் புரியிது பாப்பா, எப்ப போகலாம்னு தோனுதோ அப்போ சொல்லுங்க. நான் வெயிட் பண்றேன்.” அவள் மனநிலை புரிந்தவர் அமைதியாக ஒதுங்கிவிட, மீண்டும் அவள் அருகே நிழலாடியது.
“ப்ச்… இன்னும் என்ன ண்ணா…?”
சலிப்போடு கேட்டும் பதில் வராமல் போக, தலை உயர்த்தி பார்த்தவள் முன்பு நின்றான் பார்த்திபன்.
க்ரீம் கலர் பேன்ட், அடர் நீல நிற சட்டை, இடது கை கால்சட்டை பாக்கெட்டினுள் இருக்க, வலது கையில் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. நெடு நெடு என அவன் நின்ற தோற்றம், அனாயாவின் மனதினை சற்று பயம் கொள்ளதான் வைத்தது.
அந்த முகத்தினில் எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லை. இறுகிய முகம்! மருந்துக்கும் சிரிப்போ, இலகு தன்மையோ இல்லாமல் கடினமாகவே இருந்தது. அவள் அடிக்கடி காணும் அதே பாவம் அவனிடம். என்னதான் மனிதனோ என்ற எண்ணம் பலமுறை வந்ததுண்டு. இன்றும் அதற்கு மாறாமல் பாறையாக நிற்க, அவனிடம் என்ன பேசவென்று தெரியாமல் மௌனம் காத்தாள்.
அவள் அருகே இருந்த இடத்தைப் பார்த்து, “கேன் ஐ?” அவன் கேட்ட கேள்வியில், அந்த இடத்தையும் அவனையும் பார்த்தவள் திருதிருவென விழிக்க, புருவம் உயர்த்தி, “ம்ம்?” மீண்டும் கேட்டான்.
உடனே தள்ளி அமர்ந்தவள் அவன் முகம் பார்த்தாள் என்னவென்று தெரியாமல்.
ஏதேனும் பேசுவான் என அவள் எதிர்பார்க்க, அவனோ தண்ணீர் பாட்டிலை நீட்டினான். அழுகையில் நாவெல்லாம் வறண்டிருக்க, யோசிக்காமல் வாங்கி பாதியை தீர்த்துதான் அவனிடம் நீட்டினாள்.
“மின்ட் ஸ்மெல் வருது, உங்க வீட்டு தண்ணியா?”
‘மாமி என்ன அவசரம்னாலும் இதை மறக்கவே மாட்டியாடி?’ மனதின் மகிழ்வானது அவனையும் மீறி கீற்றாய் இதழ்களில் ஒரு நொடியே புன்னகை படர, அதனை அவன் அடர்ந்த மீசை மறைத்தாலும் அனாயா கண்டுகொண்டாள்.
மனம் அதிகமாகவே ஏங்கியது, அவன் அனுபவிக்கும் அந்த மகிழ்ச்சிக்கு. தனக்கு இது போன்ற நாட்கள் வருமா என நினைக்கும் நேரமெல்லாம், கண் முன்னே வந்து நிற்பது விஷ்ணுவாகவே இருந்தாலும், இனி அதற்கெல்லாம் சாத்தியமில்லை என்ற நினைவே உயிரைத் தின்றது.
“அன்ஃபார்ச்சுனேட்லி நீ பேசுனதை கேட்டேன்.” என்றான் தானாகவே பார்த்திபன்.
அதை அவன் கூறிய பிறகு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு பேசியது தனக்கே அவமானமாக இருந்தது. பெரியவரிடம் இத்தனை மரியாதை இல்லாமல் பேசியது எரிச்சலாகதான் வந்தது.
மார்தட்டி என் பாட்டியின் வளர்ப்பு என கூறியது எல்லாம், அந்த ஒரே அழைப்பில் காற்றில் பறந்தது போல் இருந்தது. மனம் கனத்து கண்ணீர் பெருகி மீண்டும் அவள் அவதியுற, கைக்குட்டை கொடுத்து உதவிக்கரம் நீட்டினான்.
யோசிக்காமல் அதை வாங்கியவள், முகத்தை தொங்க வைத்து அந்த கைக்குட்டையால் மூடி, சத்தம் வராதவாறு குலுங்கி அழுதாள். அவள் நிலையைப் பார்த்தும் ஆறுதல் கூற முடியாத நிலை பார்த்திபனுக்கு.
அந்த இயலாமை கோவமாக தாமோதரன் மேல் சென்றது, வீட்டு பெண்ணை கூட மகிழ்ச்சியாய் வைத்திருக்க மாட்டாரா என்ற ஆத்திரம். நிமிடங்கள் சில சென்ற பிறகு தன்னை மீட்டெடுத்து முகத்தை அழுத்தமாக துடைத்தாள்.
“அவர் பண்ற எல்லாமே தப்பு. ஒவ்வொரு விஷயமும் பாவத்தோட உச்சக்கட்டம். எனக்கு புடிக்கல அங்க இருக்கவே. வயசு வித்தியாசம் பாக்காம எல்லா பொண்ணுங்களையும் தப்பா பாக்குற கையாலாகாத அப்பா. தன்னோட தேவை நிறைவேறுனா போதும்னு எப்பவும் அவருக்கு சிங்சாங் அடிச்சிட்டே இருக்குற அம்மா.
பக்கபலமா நிக்க வேண்டியவங்க ரெண்டு பேரும் இப்டி சுயநலமா யோசிக்கிறப்ப, காலேஜ் படிச்சிட்டு இருக்குற தம்பிய வச்சிட்டு நான் என்ன பண்ண முடியும்? சர்டிஃபிகேட் எல்லாம் அவர் கைல சிக்கிடுச்சு. எங்க போனாலும் வேலை இல்லனுதான் பதில் வருது. இதோ நேத்து வேலை இருக்குனு சொன்னவன், இன்னைக்கு கழுத்த புடிச்சு வெளிய தள்ளுறான். முடியல என்னால…
மனசை ஒடைச்சு, பெத்தவங்க மேல இருக்குற நம்பிக்கையை ஒடைச்சு, குடும்பத்தையே ஒடைச்சு, மனசுக்கு சந்தோசம் தந்த அந்த காதலையும் இவரால் இழந்து நிக்கிறேன். இப்போ கடைசியா கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்க நம்பிக்கையும் விட்டு போய்டுமோனு பயமா இருக்கு.”
மனம் விட்டு பேச ஆள் இல்லாமல் அவள் தவிப்பது, நீண்ட விளக்கத்தைக் கொடுக்கும் பொழுதே தெரிய, தன்னால் ஆறுதல் கொடுக்க முடியுமென்று பார்த்திபனுக்கு தோன்றவில்லை. அவளுக்கு இந்த நொடி அன்பு தேவைப்பட்டது.
அது காதல் என்று இல்லாமல் சகோதர பாசமாக கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அவளை அவன் அணுகியதே. ஆனால் அவளது தனிமை, வெறுமை அந்த சிறு அன்பிற்குள் அடங்கி போகுமா என கேட்டால் மௌனம்தான் பதில்.
“கோயம்புத்தூர்ல தான் இருக்க ஆசையா?” கேட்டான் பார்த்திபன்.
“இந்த ஊர்னு இல்ல, எந்த ஊரா இருந்தாலும் பணத்துக்கும் மிரட்டலுக்கும் மரியாதை இருக்க வரை, நான் இப்டிதான் வேலை இல்லாம இருக்கணும்.” என்றவள் தொடர்ந்து,
“அவருக்கு நான் அவர் கம்பெனி பொறுப்பை ஏத்துக்கணும்னு வெறி. அதை செய்யாம விடமாட்டார். ஆனா அவருக்கு தெரியல, அவரை விட அந்த வேலையை என்னைக்கும் செய்ய கூடாதுனு, எனக்கு அதைவிட அதிகமான வெறி இருக்கு. அவர் நிழல்ல கூட நிக்க விரும்பல நான்.” என்றாள் அதீத தீவிரத்தோடு.
“இப்போ என்ன பண்ண போற?” பார்த்திபன்.
“போகணும்… தெரு தெருவா வேலை தேடி போகணும்…” என்றவள் இதழ்களில் கசந்த முறுவல்.
தன்னுடைய நிலையை மனம் அறியாமல் வெளியே கூறிவிட்டாள். ஆனால் அதுவே தன்னை மற்றவர் கண்ணில் பலவீனப்படுத்துவதை விரும்பவில்லை.
இதயம் இருக்கும் வேதனையில் ஏதேதோ பேசி விடுவோமோ என்கிற பயம் வர, “சாரி அண்ட் தாங்க்ஸ்!” புன்முறுவலோடு எழுந்து நின்றவள், அவனிடம் ஸ்நேகமான ஒரு புன்னகை கொடுக்க,
அவள் முகத்தை அத்தனை ஆழமாய் ஆராய்ந்தது பார்த்திபன் விழிகள். தான் கொடுத்த புன்னகைக்கு பதில் புன்னகை வராமல் போக, நின்று பார்த்தவளுக்கு அது கிடைக்குமென்று தெரியவில்லை. ஏதோ பரிதாபப்பட்டு அருகில் அமர்ந்துவிட்டான் என எண்ணியவள், அவ்விடத்தை விட்டு அகல பார்க்க, “ஒரு நிமிஷம்!” என்ற பார்த்திபன் குரல் அவளை நிறுத்தியது.
தலை திருப்பி பார்க்கும் பொழுது எழுந்து நின்றவன், தன்னுடைய பணப்பையிலிருந்து விசிட்டிங் கார்டு ஒன்றை நீட்ட, தன்னுடைய கற்பனை குதிரைகளுக்கு கடிவாளமிட்டு நிறுத்தினாள்.
கேவல் ஒன்று வெடிக்க தயாராக மனதினைக் கல்லாக்கி, “உங்க ஃப்ரன்ட் இருப்பார்.” என்றாள்.
“எங்க வெட்டிங் பிளானர் கம்பெனிக்குதான் மேனேஜர் தேவை. ஆடிட்டிங் ஆஃபிஸ்க்கு இல்ல, அவன் அங்க வரமாட்டான்.” என்றான்.
தலை அசைத்தவள் எச்சிலை கூட்டி விழுங்கி, “எதுக்கு இதெல்லாம்? என் தாத்தாக்கு நீங்க பயப்படலனு காமிக்கவா?” என்றாளே பார்க்கலாம், பார்த்திபன் விழிகளில் மறைக்காமல் எட்டி பார்த்தது சிரிப்பு.
“ஒரு தங்கச்சிக்கு அண்ணனா உன் வாழ்க்கைல முன்னேற ஒரு பாதை காட்டுறேன்.”
அவ்வளவுதான்! தாயைப் பல நாள் காணாது தேடும் பிள்ளையின் தவிப்போடு, பார்த்திபனை இடம், பொருள் பாராமல் அவனை அணைத்து வீட்டினரிடமிருந்து கிடைக்காத ஆறுதலைத் தேடி அவன் மார்பிலே அழுதாள்.
சில நொடிகள் அமைதியாக இருந்த பார்த்திபன், அவள் மனம் புரிந்து அவள் தலையை ஆறுதலாய் வருடினான் மௌனமாக.
அடுத்த ஐந்தாவது நிமிடம் பார்த்திபன் அனாயாவினை அணைத்திருந்த புகைப்படம், ஆரபியின் கைகளில் கைப்பேசியின் மூலம் நின்றது.
உடன் சகோதரனின், “க்கா பாத்தியா, இந்த அத்திம்பேர் பண்ணிருக்க வேலைய?” என்ற சீற்றமான அழைப்பும் வந்திருந்தது.