“அம்மா அங்கயா போகப் போறோம்?”, என்று முகம் மலரக் கேட்டாள் பூங்கொடி.
“ஆமா, எத்தனை நாள் இங்க உக்காந்து இந்த வீட்டைத் தேய்க்க போற? போ போ, உன் புருஷன் மடி மேல போய் உக்காரு போ”
“அம்மா”, என்று சிணுங்கினாள். அவள் கண்களில் இருந்த உயிர்ப்பைப் பார்த்த மணியம்மைக்கு நிம்மதியாக இருந்தது.
“ஏட்டி அங்க போறதுக்கு அவ்வளவு சந்தோஷம்னா ஆஸ்பத்திரில இருந்து எதுக்கு இங்க வந்த? நேரா அவங்க கூட போயிருக்க வேண்டியது தானே?”
“அண்ணா தான் உடம்பைத் தேத்தி அனுப்புறேன்னு சொல்லுச்சு”
“அடி கழுதை, கேசவன் கிட்ட சொல்ல வேண்டியது தானே டி?”
“அண்ணனை எப்படி மா எதுத்து பேச?”
“உன் அண்ணன் பாசம் என்னை புல்லரிக்க வைக்குது டி. ஆனா நீ புருசனையும் பாக்கணும் பூங்கொடி. அவர் தான் இனி உனக்கு உலகம். புரியுதா?”
“புரியுது மா”, என்றாள் பூங்கொடி.
“என்ன புரிஞ்சதோ? சரி இரு. நான் பூ எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றார் மணியம்மை.
“எதுக்கு பூவாம்? நான் என்ன உன் மருமகன் கூட முதலிரவா கொண்டாடப் போறேன்? மனுஷன் நான் எப்ப தூங்குவேன்னு பாத்துட்டு தான் ரூமுக்குள்ளயே வரார்”, என்று மனதுக்குள் ஏங்க “தானா இப்படி நினைத்தோம்?”, என்று அதிர்ந்து போனாள். கூடவே அவன் மீதான அவளின் நேசமும் புரிந்தது. அவனை எந்த அளவுக்கு பிடித்திருந்தால் அவனுடன் வாழ ஏங்கியிருப்போம் என்ற உண்மை புரிய சந்தோசமாகவே கிளம்பினாள்.
ஆனாலும் அவர்களுக்கு இடையேயான பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது என்று அவளுக்கு தெரியும். அவன் தன்னை மன்னிக்க வில்லை என்றாலும் அவனுடனாவது இருக்க வேண்டும் என்ற ஆசை தான் அவளை சந்தோஷமாக கிளம்ப வைத்தது.
அவளது சந்தோஷம் மற்றவர்களையும் தொற்றியது. உற்சாகமாக கிளம்பி வந்தவளைக் கண்டு வீடே அதிசயித்தது. ”கழுதை, அங்க போக தான் ஆசைன்னு சொல்லிருக்க வேண்டியது தானே?”, என்று கேட்டு அவளது கன்னம் கிள்ளினார் கேசவன்.
“என்னோட ஒரு சொல் கூட உங்களை கஷ்டப் படுத்திறக் கூடாதுண்ணா. நீங்க சொன்ன பிறகு அந்த இடத்துல நான் உங்களை விட்டுக் கொடுக்க கூடாதுல்ல?”
“நீ உங்க அண்ணனை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு அங்க என் தம்பியை விட்டுக் கொடுத்துட்டல்ல? உங்க அண்ணன் கூப்பிட்டதும் அவர் கிட்ட நீ கேட்டுருக்கணும் தானே? இன்னும் அண்ணன் அண்ணன்னு இருக்காத. உன் அண்ணா கிட்ட மரியாதையும் பாசமும் இருக்க வேண்டியது தான். ஆனா புருசன்னு வரும் போது அண்ணனை விட அவர் தான் உனக்கு முக்கியம். சரியா? உன் புருசனுக்காக நீ உன் அண்ணன் கிட்ட எதுத்து பேசுனா கண்டிப்பா உன் அண்ணன் உன்னை தப்பா நினைக்க மாட்டார். சந்தோஷம் தான் படுவார்”, என்று மங்களம் அன்னையாக மாறி அவளுக்கு தைரியம் கூறினார்.
“ஆமா டா, உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். நீ சொல்லிருந்தா நான் அன்னைக்கு உன்னை மாப்பிள்ளை கூடவே அனுப்பிருப்பேன்”, என்றார் கேசவன்.
அனைவரிடமும் சொல்லி விட்டு காரில் ஏறினாள். அவள் அருகே மங்களம் ஏறி அமர்ந்தாள். டிரைவர் சீட்டில் வரதனும் அவன் அருகே கேசவனும் அமர்ந்தார்கள். கார் கிளம்பியது.
சிறிது தூரம் சென்றதும் “பூங்கொடி”, என்று மெதுவாக அழைத்தாள் மங்களம்.
“என்னங்க அண்ணி?”
“என் தம்பியை பட்டினி போட்டுட்டு வந்ததுக்கு அவர் உன் கிட்ட கோபப் பட்டா என்ன பண்ணுவ?”, என்று அவள் காதை கடித்தாள்.
“நீங்க என்ன பண்ணுவீங்களோ அதை தான் பண்ணுவேன் அண்ணி”, என்று பூங்கொடி சொல்ல “சீ”, என்று வெட்கப் பட்டாள் மங்களம்.
“அண்ணி, என்ன வெக்கமெல்லாம் படுறீங்க? நான் காலுல விழுறதை தான் சொன்னேன். அப்ப நீங்க அண்ணன் கோபப் பட்டா அவங்க கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டீங்களா? வெட்கப் படுற மாதிரி என்ன செய்வீங்க?”, என்று கேட்டு அண்ணியைக் கிண்டல் செய்தாள்.
“வாயை மூடு டி”, என்று சொல்லி சிரித்தாள் மங்களம்.
பூங்கொடியைப் பார்த்த வரதன் மற்றும் கேசவனுக்கு பூங்கொடி முகத்தில் இருந்த சந்தோஷம் நிம்மதியைக் கொடுத்தது. அன்னையின் சொல்லில் இருந்த உண்மை இப்போது புரிந்தது கேசவனுக்கு. தங்களுக்கும் தங்கையை புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணிக் கொண்டார்கள்.
அப்போது மணி மாலை ஐந்தரை என்பதால் வீட்டு முற்றத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த தேவகி வாசலில் கார் வந்து நிற்கவும் குழம்பி திகைத்து சந்தோசமாக வாசலுக்கு ஓடினார். கதிரவனும் வெளியே வந்து விட்டார். பூங்கொடி காரில் இருந்து இறங்கியதும் அவளை அணைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
மற்ற எல்லாரையும் கதிரவன் உள்ளே அழைத்துச் சென்றார். தேவகி அனைவரையும் உபசரித்தாள். அவளுக்கு உதவியாக பூங்கொடியும் எல்லாம் செய்தாள். அதன் பிறகு சிறிது நேரம் இருந்து விட்டு பூங்கொடி வீட்டினர் கிளம்பிச் சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் சோபாவில் கதிரவன் அமர்ந்திருந்தார். அவர் முன் மண்டியிட்டு அமர்ந்த பூங்கொடி அவருடைய கையைப் பற்றிக் கொண்டு “என்னை மன்னிச்சிருங்க மாமா. நான் இங்க இருந்து போயிருக்க கூடாது”, என்றாள்.
“விடுடா”, என்று சொன்னவரின் கை அவளது தலையை வாஞ்சையாக தடவியது.
அதன் பின் அவள் மனம் விட்டு பேசி நடந்ததைச் சொல்ல அனைத்தையும் அமைதியாக கேட்டார்கள் தேவகியும் கதிரவனும்.
“மணிமாறன் நிஜமாவே நல்லவன் மா. இன்னொரு தடவை அவனைக் கஷ்டப் படுத்திறாத”, என்று மட்டும் கேட்டுக் கொண்டார் கதிரவன்.
“சரி நைட் டிபன் நான் பாக்குறேன். நீ போய் ரெஸ்ட் எடு. உடம்பு இன்னும் வீக்கா தான் இருக்கு”, என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார் தேவகி.
அவள் உள்ளே போன போது அவள் கண்ணில் பட்டது அவள் எழுதி வைத்திருந்த நோட்டும், அவளது புகைப்படமும் தான்.
அதைப் பார்த்தாலே தெரிந்தது தினமும் அவன் அதனுடன் தான் உறங்கி இருக்கிறான் என்பது. ஆசையாக அதன் அருகே சென்றாள். “எப்ப டி என் கிட்ட வருவ? நீ இல்லாம அவஸ்தையா இருக்கு டி. உனக்கு என்னைத் தேடலையா?”, என்று எழுதி வைத்திருந்தான். அதைப் பார்த்து அடிவயிற்றில் ஜில்லென்ற ஒரு உணர்வு பிறந்தது.
இதற்கு மேல் வேறு என்ன வேண்டுமாம் அவனது அன்பிற்கு சாட்சியாக. ஆசையாக அவன் கையெழுத்தை ரசித்தாள்.
தேவகி இரவு உணவுக்கு அழைக்க “அம்மா, இன்னைக்கு ஒரு நாள் அவங்க கூட சாப்பிடவா?”, என்று ஆசையாக கேட்டாள்.
“உன்னை என்னைக்கு நான் அவன் கூட சாப்பிட வேண்டாம்னு சொன்னேன்? ஆனா எங்க கூடவும் நீ சாப்பிட்டு தான் ஆகணும். சப்பாத்தி தான் செஞ்சிருக்கேன். இப்ப ரெண்டு சாப்பிடு. அவன் கூட ரெண்டு சாப்பிடு. அவ்வளவு நேரம் உன்னை பட்டினியா என்னால வைக்க முடியாது”, என்று சொல்ல போலியான முறைப்புடன் அமர்ந்து அவர்களுடன் கதை பேசிய படியே சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்து கை கழுவியதும் “அம்மாடி பூங்கொடி”, என்று அழைத்தார் கதிரவன்.
“மாமா”
“உன்னைக் கஷ்டப் படுத்தணும்னு நான் இதைக் கேக்கலை மா. உனக்கு புரிய வைக்கணும்னு கேக்குறேன்”
“என்ன மாமா?”
“நீ கால் பண்ணினதுனால தான் அந்த ராமர் உனக்கு எல்லா உண்மையும் சொன்னான். ஒரு வேளை அவன் சொல்லலைன்னா நீ என் மகனை தப்பா தானே மா நினைச்சிருப்ப?”
“மாமா”, என்று திகைத்துப் போய் அழைத்தாள்.
“புருஷன் பொண்டாட்டிக்கு இடைல யாருமே வரக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்படி இருக்க அவனுக்கு சாட்சியா நீ இன்னொருத்தனை நிறுத்துவியா மா?”, என்று அவர் கேட்டதும் அவள் முகம் கருத்துப் போனது.
தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று புரிந்தது. அவரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
“சரி பழசை எல்லாம் மறந்துரு. காதலோட முதல் படியே நம்பிக்கை தான் மா. அதுல இருந்து எல்லாத்தையும் புதுசா ஆரம்பி. இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க”, என்று சொன்னார்
அவர் பேசியதில் அறிவுரையும் இருந்தது, கண்டிப்பும் இருந்தது. கூடவே அவள் தவறை சுட்டிக் காட்டவும் அவர் மறக்க வில்லை.
அவளுடைய தவறை தெளிவாக அவளுக்கு எடுத்துரைத்து விட்டார். “சரி மாமா”, என்று அவள் சொன்னதும் அவர் அவருடைய அறைக்குச் சென்று விட்டார்.
“அண்ணன் பேசினதுல இருந்தே உன் தப்பை நீ உணர்ந்திருப்பேன்னு எனக்கு தெரியும் டா. நீ மாறன் கிட்ட மன்னிப்பு கேளு. மன்னிக்கலைன்னாலும் மறுபடியும் கேளு. அப்படியும் மன்னிக்கலைன்னு வச்சிக்கோ, அவன் இடுப்பைப் பிடிச்சு கிள்ளு. தன்னாலே சிரிச்சிருவான்”, என்று தேவகி சொல்ல “அம்மா என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள்.
“அவன் வீக் பாயிண்ட் அதான். நான் தான் சொன்னேன்னு சொல்லாத”, என்று சொல்ல சிரிப்புடன் அறைக்குச் சென்று அவன் வரவுக்காக காத்திருந்தாள்.
அன்று வேலை முடிந்து வந்த மணிமாறன் எப்போதும் போல் மாற்றுச் சாவியை எடுத்து கதவைத் திறந்தான். அப்போதே அவளது செருப்பையும் பார்த்து விட்டான். “வந்துட்டாளா?”, என்று அவன் உள்ளம் உவகை கொண்டது.