இத்தனை நாள் அவனைச் சூழ்ந்திருந்த தனிமை அவனை விட்டுச் செல்வது போல இருந்தது. அறைக்குள் பாய்ந்து சென்று அவளைக் கட்டிக் கொள்ளவேண்டும் போலவும் “இனி இப்படி விட்டுட்டு போவியா டி?”, என்று அவளது கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போலவும் இருந்தது அவனுக்கு. ஆனாலும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான். அவன் வந்ததும் அவனை ஆர்வமாக பார்த்தாள் பூங்கொடி. அவன் சாதாரணமாக அவளைப் பார்த்து விட்டு தன்னுடைய வேலையைப் பார்க்க அவளுக்கு தான் சப்பென்று போனது.
“இவன் என்னைப் பாக்கலையா?”, என்று எண்ணி எழுந்து நின்றாள். ஆனால் என்ன பேச என்று தெரியவில்லை. அவனும் அவளைக் கண்டு கொள்ளாமல் குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து வந்த பிறகும் அவன் அமைதியாக இருக்க எல்லா தவறும் தன்னுடையது தான் என்று எண்ணிய பூங்கொடி “சாப்பாடு எடுத்து வைக்கவா?”, என்று கேட்டாள்.
“எனக்கு வேண்டாம், பசிக்கலை”, என்று சொன்னான் மணிமாறன்.
“இவன் என்ன இப்படி இருக்கான்? அப்ப இவன் அன்னைக்கு என் கிட்ட பேசினது எனக்கு உடம்பு சரியில்லைன்னு தானா? இவன் என்னை மன்னிக்கவே இல்லையா?”, என்று எண்ணி சோர்ந்து போனாள்.
அப்போது தேவகி சொன்னது நினைவு வந்தது. “இவன் பக்கத்துலயே நான் போனது இல்லை. இதுல எங்க இருந்து இவன் இடுப்பைக் கிள்ள?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவன் உடை மாற்றிக் கொண்டிருக்க அவள் அவனையே பார்த்திருந்தாள். அவள் பார்வையில் அவன் தான் ஒரு நொடி ஜெர்க் ஆகி விட்டான்.
“நான் டிரஸ் மாத்தும் போது இவ உள்ள இருக்க மாட்டாளே?”, என்று எண்ணியவன் கட்டிலில் அமர்ந்தான்.
“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றாள் பூங்கொடி.
“எனக்கு தூக்கம் வருது”, என்றவன் தலையணையை எடுக்க “பிளீஸ் ரெண்டு நிமிஷம் தான்”, என்ற படி அவன் அருகே அமர்ந்தாள்.
“என்னன்னு சொல்லு”
“என்னை மன்னிச்சிருங்க”
“சரி”
“என்ன இப்படிச் சொல்றீங்க?”
“வேற என்ன சொல்லணும்?”
“மன்னிச்சிட்டீங்களா?”
“ஆமா”
“என் மேல கோபம் இல்லையா?”
“இல்லை”
“ப்ச், இப்படி ஒத்தை வார்த்தையில பேசாதீங்க”
“என்னை என்ன பண்ணச் சொல்ற?”
“நான் செஞ்சது பெரிய தப்பு தான். நான் உங்களை நம்பிருக்கணும். ஆனா நான் ஒண்ணும் அந்த பொண்ணு சொன்னதும் உடனே நம்பலை. முதல்ல நான் உங்களுக்காக பேசினேன் தெரியுமா?”, என்று ஆரம்பித்து பகவதியிடம் பேசியதைச் சொன்னாள். அதைக் கேட்டு கொஞ்சம் நிம்மதி வந்தது அவனுக்கு.
மீதிக் கதையையும் சொன்னவள் கதிரவன் கடைசியாக பேசியது வரை அனைத்தையும் சொன்னாள்.
“சரி விடு. முடிஞ்சு போனதை பேசி எந்த பயனும் இல்லை. இனி இப்படி நடக்காம பாத்துக்கோ? இதை விட பெரிய சோதனை கூட நமக்கு வரலாம். நான் ஒரு பொண்ணு கூட இருக்குற மாதிரி போட்டோ வீடியோன்னு வரும். எனக்கு வேண்டாதவங்க கதை கட்டுவாங்க. அதை நம்புவியா? நான் கத்தியை வச்சு எவனையோ குத்துற மாதிரி கூட வரும். என் வேலை அப்படி. எல்லாத்தையும் நீ நம்புவியா? என் வேலைல ரிஸ்க் அதிகம் கொடி. வீட்ல சப்போர்ட் கிடைச்சா தான் என்னால வெளிய நிம்மதியா எல்லாத்தையும் பேஸ் பண்ண முடியும். புரியுதா?”, என்று கேட்டான்.
தலையை உருட்டினாள். “என்ன டி உருட்டுற?”
“புரியுதுன்னு மண்டையை ஆட்டினேன். உங்க கோபம் போயிருச்சா?”
“அந்த கோபம் போச்சு. ஆனா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து எதுக்கு உன் வீட்டுக்கு போன? அந்த கோபம் இன்னும் இருக்கு”
“அந்த கோபத்தை சரி செய்ய எனக்கு ஒரு சீக்ரட் தெரியும்”, என்று சொல்லி அவள் புன்னகைக்க “என்னது?”, என்று ஆர்வமாக கேட்டான். முத்தமிடுவாளோ என்று அவன் மூளை சிந்தித்தது.
“இது தான்”, என்றவள் அவன் என்னவென்று உணரும் முன்னரே அவன் இடுப்பை கிள்ளி விட்டாள்.
அவள் அப்படிச் செய்ததும் துள்ளிக் குதித்து எழுந்து நின்றவன் “என்ன டி பண்ணின?”, என்று கேட்டான்.
“ஹா ஹா, உங்க கோபம் போயிருச்சுள்ள? எப்படி என் ஐடியா?”
“அத்தை சொல்லுச்சா?”
“ஹிம், நீங்க துள்ளுறது நல்லா இருக்கு. இன்னொரு தடவை செய்யலாமா?”, என்று கேட்ட படி அவள் அவன் அருகே வர “ஏய் வேண்டாம்”, என்று எழுந்தவன் அவளிடம் இருந்து தப்பிக்கப் பார்த்தான். அவள் அவனை அந்த அறைக்குள்ளே துரத்தினாள்.
“ஏய் விடு டி”
“உங்களை விடணும்னா நீங்க சாப்பிட வாங்க. எனக்கு பசிக்குது”
“நீ இன்னுமா சாப்பிடலை, வா சாப்பிடலாம்”, என்று சொல்லி அவள் கை பிடித்து அழைத்துச் சென்றான்.
அவனுக்கு பரிமாறியவள் அவன் அருகே அமர்ந்து “எனக்கு ஊட்டி விடுறீங்களா?”, என்று ஆர்வமாக கேட்க சந்தோஷமாக அதைச் செய்தான்.
மீண்டும் அறைக்குள் வந்தவன் “இன்னைக்கு கெவி வொர்க். நல்லா தூங்கணும். உனக்கு வேற இன்னும் உடம்பு சரியாகலை. ரெஸ்ட் எடு”, என்றவன் படுத்துக் கொண்டான். அவனது விலகல் அவளை பாதித்தது.
“நீங்க என்னை மன்னிக்கலையா?”, என்று கலக்கமாக கேட்டாள்.
“மன்னிச்சிட்டேன் டி”
“அப்புறம் ஏன்?”
“என்னது ஏன்?”, என்று கேட்டவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிய வில்லை.
“ஒண்ணும் இல்லை”, என்று சொன்ன பூங்கொடி கட்டிலில் அமர்ந்தாள்.
“என்ன டி? என்னன்னு சொல்லு”
“உங்களுக்கு ஒண்ணும் தெரியாதோ?”
“என்னது தெரியாதோ?”
“புருஷன் பொண்டாட்டி வாழ்க்கை பத்தி?”, என்று அவள் பட்டென்று சொல்ல அவன் கண்கள் மின்னியது.
“எனக்கு என்ன தெரியும்னு சொல்லவா?”, என்று கேட்டான் மணிமாறன்.
“செஞ்சி காட்டனும் டா மடையா?”, என்ற பார்வையை அவனை நோக்கி வீசினாள். அவள் பார்வையில் இருந்த அழைப்பில் அவன் தான் ஒரு நொடி திகைத்து விட்டான்.
அவன் அமைதி அவளைத் தூண்ட “என்ன தெரியும்? சொல்லுங்க”, என்றாள்.
“முதல்ல பொண்டாட்டி பக்கத்துல வரணும்”, என்று அவன் தள்ளி இருந்த படியே சொல்ல “இவன் என்ன நம்ம கிட்ட விளையாடுறானா?”, என்று எண்ணினாள்.
“அப்புறம் அவ முகம் முழுக்க முத்தம் கொடுக்கணும்”, என்று அவன் தள்ளி இருந்த படியே சொல்ல அவள் முகம் சிவந்தது.
“ஆத்தாடி இவன் வேற ஏதோ பிளான் பண்ணிட்டான். நம்மளையே முத்தம் கொடுடான்னு கெஞ்ச வச்சிருவான் போல?”, என்று எண்ணி கொண்டு “எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். சாமி. கிளாஸ் எடுக்குற லட்சணத்தைப் பாரு. குட் நைட்”, என்று சொல்லி விட்டு படுத்து விட்டாள். அவனும் சிரிப்புடன் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான். ஆனால் அவளுக்கு தான் உறக்கம் வரவில்லை. தன்னை விட்டு அவன் விலகி இருப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அடுத்த நாள் எப்போதும் போல விடிய அவள் கல்லூரிக்கு கிளம்பினாள். அவன் தான் அவளை அழைத்துச் சென்றான். காலேஜ் செல்லும் போது அவள் அமைதியாக வர “என்ன டி அமைதியா வர?”, என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்லை”, என்று சொன்னவளின் குரலில் ஆதங்கம் தெறித்தது. அதை உணர்ந்தவன் எதுவும் சொல்ல வில்லை. “என் மனசுல இருக்குற ஆசை உனக்கு தெரியாது டி”, என்று மானசீகமாக அவளிடம் சொல்லிக் கொண்டான்.
காலேஜில் ஜீப்பை நிறுத்த “வரேன்”, என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னவள் சென்று விட்டாள். அவன் புன்னகையுடன் ஸ்டேஷன் சென்றான்.
உடை மாற்றி விட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவன் தன்னுடைய மற்றொரு போனை எடுத்தான். ராமர் அவன் வண்டியில் பணம் வைத்ததையும் அவன் அதை மாற்றி வைத்ததையும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையும் ரெக்கார்ட் ஆகி இருந்த அந்த வீடியோவை இணையதளத்தில் போட்டு விட்டான். வீடியோவுக்கு கீழே “நியாயம் தவறாத போலீஸ் மீது லஞ்சம் வாங்கியதாக பழி போட முயன்ற ரங்கசாமி. புத்திசாலித்தனமாக தப்பித்த போலீஸ். ஒரு போலீஸ் உண்மையாக இருந்தால் இந்த நாட்டில் இது தான் கிடைக்குமா? சிறைக்குள் இருந்தாலும் ரங்கசாமியால் எல்லா வேலையும் செய்ய முடிகிறது என்றால் அதிகாரிகளும் அவருக்கு உடந்தையா?”, என்று டைப் செய்து போட்டு விட்டான்.
அடுத்த கால் மணி நேரத்தில் அந்த வீடியோ வைரல் ஆனது. அதில் காட்சி தெளிவாக இருந்தாலும் யாருடைய முகமும் சரியாக தெரியவில்லை. ஆனாலும் இணையதளத்தில் அவன் பக்கம் ஆதரவு குவிந்தது.
அவரவசரமாக ஐ.ஜி அவனை அழைத்தார். “சொல்லுங்க சார்”, என்றான் மணிமாறன்.
“என்ன மணி இப்படி பண்ணிட்டீங்க? எதுக்கு அந்த வீடியோவை இப்ப போல வெளிய விட்டீங்க? இதுல ரங்கசாமியை வேற தொடர்பு படுத்திருக்கீங்க?
“என்ன சார் சொல்றீங்க? நான் எதுவும் பண்ணலையே?”
“அந்த வீடியோ ஆன்லைன்ல போஸ்ட் ஆகிருக்கு. வைரல் ஆகிட்டு வருது. இது உங்க வேலை தானா?”
“நிஜமா இல்லை சார். நான் எங்கயும் அனுப்பலை”
“வீடியோ சோர்ஸ் டெலிட் பண்ணிட்டீங்களா?”
“இல்லை சார், அந்த அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி அதை செய்ய மாட்டேனு சொல்லிட்டார். நானும் ஒரு காப்பி எடுத்துட்டு வந்துட்டேன். அதை அவர் டெலீட் பண்ணலைன்னு நினைக்கிறேன்”
“அப்படினா அவன் தான் போட்டுருக்கணும். பூந்தமிழன் ன்னு ஒரு அக்கவுண்ட்ல இருந்து அந்த வீடியோ போட்டுருக்காங்க. மக்கள் எல்லாரும் ரங்கசாமியை பயங்கரமா திட்டுறாங்க. இஸ்ஸு வேற மாதிரி போகாம இருக்கணும்”, என்று சொல்லி விட்டு வைத்தார்.