“நமக்கு முதல் ராத்திரி வச்ச அன்னைக்கே எங்க அப்பா என்னைத் தனியே கூப்பிட்டு பேசினார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடியே பெரிய மச்சான் அவர் கிட்ட ஒரே ஒரு விஷயம் கேட்டுகிட்டாராம்”
“என்னது அண்ணனா?”
“ஆமா, உனக்கு ஆடை வடிவமைக்கிறதுல பெரிய ஆளா வரணும்னு கனவு இருக்குன்னு சொல்லிருக்கார். உன்னோட கனவை நிறைவேத்திக் கொடுக்கணும்னு எங்க அப்பா கிட்ட கேட்டுருக்கார். எங்க அப்பாவுக்கு படிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும். அதனால எங்க அப்பாவும் வாக்கு கொடுத்துருக்கார். நீ உன்னோட கனவை அடையுற வரைக்கும் நான் உன் கனவைக் கலைக்க கூடாதுன்னு சொல்லிருக்கார். அதனால தான் உன் கிட்ட இருந்து விலகி இருக்கேன். நீ கேக்கலாம் இது படிப்பை கலைக்குமான்னு. கண்டிப்பா கலைக்கும். உன்னோட கவனம் படிப்புல இருந்து என் பக்கம் திரும்பும். அது மட்டுமில்லாம….”, என்று இடைவெளி விட்டான்.
அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “என்னால ஸ்னாக்ஸ் மட்டும் சாப்பிட முடியாது. புல் மீல்ஸ் வேணும்னு தோணும். அதான் விலகியே இருந்தேன்”, என்று சொல்ல அவனுடைய உதாரணத்தில் அவனை நே என்று பார்த்தாள். பின் புரிந்ததும் ‘சீ’ என்று முணுமுணுத்தாள்.
அவன் மனது புரிந்து அதன் பின் அவள் வருத்தப் படவே இல்லை. அவனை விட்டு விலகியும் இருக்க வில்லை. வண்டியில் செல்லும் போது எப்போதும் ஒரு பக்கமாக அமர்பவள் இப்போதெல்லாம் இரண்டு பக்கமும் கால் போட்டு அவனுக்கு நெருக்கமாக அமர்ந்தாள்.
அவனுடைய மென்மையான தீண்டலை அவனும் ரசித்தான். இரவில் தன்னுடைய கைக்குள் புகுந்து கொள்ளும் மனைவியை ஒரு நெற்றி முத்தத்தோடு தூங்கச் சொல்வான்.
சில நேரம் அவனது உணர்வுகள் அவளை கேட்கும் தான். ஆனால் அவளுக்காக தன்னை அடக்கி கொள்வான். அதை உணர்ந்த அவளுக்கு அவன் மீது காதல் மேலும் மேலும் பெருகியது என்று சொன்னால் மிகையில்லை.
இந்த உலகில் யார் இப்படி இருப்பார்களாம்? மனைவியின் கனவுக்காக தன்னுடைய உணர்வுகளை அடக்கி பிரம்மச்சரிய விரதம் காக்க யாரால் முடியும்? அவளுக்காக அவன் செய்யும் தியாகங்களுக்காக அவனை உயிராக நேசித்தாள் பூங்கொடி. அதனால் அவனுக்கு சிறு சிறு சந்தோசங்களைக் கொடுக்க தன்னுடைய தயக்கத்தை உதறித் தள்ளுவாள்.
அவன் ஊட்டுவான் என்றெல்லாம் காத்திருக்காமல் எனக்கு ஊட்டுங்க என்று சொல்வது, படிக்கும் போதும் அவன் தனிமையை உணராமல் இருக்க அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுப்பது, அவளாகவே வெட்கம் துறந்து முத்தம் கேட்பது என செய்வாள்.
தன்னை அவள் கணவனாக நினைத்ததால் தான் அவள் இயல்பாக தன்னிடம் இருக்கிறாள் என்பதே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
என்ன தான் இருவரும் உணர்வை அடக்கினாலும் சில நேரம் சில சந்தர்ப்பங்களால் அது பீறிட்டு வெளியே வரும். அப்படித் தான் ஒரு நாள் கதிரவன் உறங்கச் சென்று விட்டார். தேவகி பத்மா வீட்டுக்கு சென்றிருந்தார்.
இவர்கள் இருவரும் படம் பார்க்கலாம் என்று அமர்ந்தார்கள். யாரும் இல்லை என்ற தைரியத்தில் அவன் தோளில் சாய்ந்து அமர்ந்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கரங்களும் அவள் கரங்களும் இணைந்தே இருந்தது.
அவ்வபோது பேசியப் படியே படம் பார்த்தவர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் வந்தது அந்த காட்சி. நாயகன் நாயகி இருவரும் மழையில் நனைந்த படி ஆடும் பாடல் தான் அது. அதை பார்த்து பார்வையையும் திருப்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்க்கவும் முடியாமல் அதே நிலையில் அசையாமல் அமர்ந்திருந்தார்கள்.
படத்தில் சாதாரண காட்சி வந்த பிறகு தான் இருவரும் சகஜமானார்கள். ஆனால் அறைக்குள் வந்து படுக்கும் போது இருவருக்குமே அந்த காட்சியின் தாக்கம் இருக்க தான் செய்தது.
சிவந்த முகமும் அலைபாய்ந்த கண்களுமாக கீழுதட்டை பற்களால் கடித்த படி அமர்ந்திருந்தாள் பூங்கொடி. ஏற்கனவே விரகதாகத்தில் இருப்பவனுக்கு அவளது இந்த நிலையும் சோதனையை கொடுக்க அவள் அருகில் சென்று அவள் கரத்தை அழுந்த பற்றினான்.
அவன் கரத்தின் வழியாக அவனின் உடல் சூட்டை உணர்ந்தாள். அது எதனால் என்பதை புரிந்தவளுக்கு ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. தான் அவனுக்கு நல்ல மனைவியாக இருக்க வில்லை என்று மட்டும் அவளுக்கு நன்கு புரிந்தது.
அவன் பார்வைகள் அவளுடைய மேனியில் நழுவி அவளுக்கு படபடப்பைக் கொடுத்தது. அவனது மூச்சுக் காற்று அந்த ஏகாந்த இரவிலும் அவளுக்கு உஷ்ணத்தை தான் தந்தது. உடல் முழுவதும் சிலிர்க்க கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளது செய்கையே என்னமும் செய்து கொள் எண்ணும் விதமாக தான் இருந்தது.
அவளுடைய இடையில் கை வைத்து அனைத்துக் கொண்டான் மணிமாறன். முதல் முறையாக அவளது இரவு உடையைத் தாண்டி அவன் கரம் அவளுடைய வெற்றிடையில் பதிந்தது. அவன் நேரடியான தொடுகையில் அவளுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
கடவுளின் விசித்திரப் படைப்பை எண்ணி வியந்தாள். அவனுக்கோ செய்வது தவறு என்று மூளைக்கு புரிந்தாலும் அவன் உணர்வுகள் அவளைக் கேட்கையில் அவளை விட்டு விலக முடிய வில்லை.
ஜில்லிட்டுப் போயிருந்த அவளது தேகம் சூடான அவன் கரத்தில் நெகிழ்ந்தது. அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வை அடைந்தாள் பூங்கொடி.
முகம் எங்கும் அவன் இதழ்கள் முத்தத்தை விதைக்க அவன் மீட்டும் வீணையாக இருந்தாள் பூங்கொடி. அவன் இதழ்களின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்க அவனது கரங்களும் முதல் முறையாக அவள் மேனியில் அத்துமீறியது. அவளை அப்படியே கட்டிலில் சரித்து அவள் மேல் சரிந்தான் மணிமாறன்.
“கொடி….”, என்று பிதற்றியவனின் உணர்வுகளை முதன்முதலாக உணர்ந்தவளுக்கு தன்னை அவன் எப்படியாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் தோன்றியது.
தனக்கு படிப்பது கனவு தான். ஆனால் அவளுடன் வாழ்வது அவனுக்கு வாழ்க்கை அல்லவா? கனவை விட வாழ்க்கை முக்கியம் என்று அவள் உணர்ந்த தருணம் அது.
“என்னால சத்தியமா முடியலை டி”, என்று பிதற்றியவனின் இதழ்கள் அவளுடைய இதழ்களை ஒரு வித வேகத்துடன் முற்றுகை இட்டது.
அவனை இறுக அணைத்தவள் அவனை அடுத்த கட்டத்துக்கு முன்னேற தூண்டினாள். அவன் தன்னுடைய தடைகளை களைக்க முயல அப்போது பார்த்து அவனது போன் அடித்தது.
அவசரமாக விலகியவன் அதே வேகத்தில் போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று விட்டான். அவளுக்கு அழுகையாக வந்தது. அழுது கொண்டே படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.
மாடிக்குச் சென்றவன் அது தேவையில்லாத அழைப்பு என்று மீண்டும் அந்த எண்ணுக்கு அழைக்க வில்லை. அவனால் உடனேயே கீழே வரவும் தோன்ற வில்லை. சிறிது நேரம் இருந்து விட்டே கீழே வந்தான். அவள் நன்கு உறங்கிக் கொண்டிருக்க அவளை தொந்தரவு செய்யாதவாறு அவள் அருகே படுத்தவன் தூங்கிப் போனான்.
அதற்கு அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போல நகர்ந்தது. அவனைக் கஷ்டப் படுத்தக் கூடாது என்று பூங்கொடியே அவனை விட்டு விலகி இருந்தாள். கல்லூரி முடியும் தருவாயில் இருந்ததால் ஆர்வமாக படிப்பில் கவனம் செலுத்தினாள். ஒரு வழியாக அவளுக்கு பரிட்சையும் ஆரம்பித்தது.
அன்று காலையில் இருந்தே உற்சாகமாக இருந்தாள் பூங்கொடி. ஏனென்றால் அவளுக்கு இன்று தான் கடைசி எக்ஸாம். அவளது படிப்பு முடிவதை விட அவர்களின் சந்தோஷம் தொடங்குவது குறித்து தான் அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
காலையில் அவன் தான் அவளை கல்லூரியில் இறக்கி விட்டான். “மதியம் உன்னை அப்பா கூப்பிட வருவாங்க டி. போன செமஸ்டர் மாதிரி நல்லா எழுதிரு சரியா? ஆல் தி பெஸ்ட்.”, என்றான்.
“தேங்க்ஸ், சாயங்காலம் சீக்கிரம் வந்துருங்க”, என்று சொல்லி அவள் புன்னகைக்க “எதுக்கு?”, என்று விஷமமாக கேட்டான்.
“வேற எதுக்கு? பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கணும்ல? அதுக்கு தான்”, என்று அவள் சிரிப்புடன் சொல்லி விட்டு செல்ல அவன் முகமும் மலர்ந்தது.
அன்று மதியம் கல்லூரி முடிந்து சந்தோஷமாக வந்தாள் பூங்கொடி. காலேஜ் முடிந்ததால் தான் அந்த சந்தோஷம் என கதிரவனும் தேவகியும் எண்ணிக் கொண்டார்கள்.
வீட்டுக்கு வந்ததும் “அம்மா, ஏதாவது ஸ்னாக்ஸ் செய்யலாமா?”, என்று கேட்டாள்.
“செய்யேன்”
“அவருக்கு என்ன பிடிக்கும்?”
“அது இன்னும் உனக்கு தெரியாதா?”
“அவருக்கு இனிப்பு பிடிக்கும்னு தெரியும். ஆனா ஸ்பெஷலா எதுன்னு தெரியாது”
“உனக்கே தெரிஞ்சிருக்கே. அவனுக்கு இனிப்பு பிடிக்கும்னு. அவனுக்கு எல்லா ஸ்வீட்டும் பிடிக்கும். எல்லாமே ருசிச்சு சாப்பிடுவான்”
“அப்ப வாங்க கேசரியும் வடையும் செய்யலாம்”
“வடைக்கு பருப்பு ஊற போடலை டா”
“இப்ப போடுங்க. அவங்க வரதுக்குள்ள போட்டுறலாம்”, என்று அவள் சொல்ல தேவகியும் சரி என்றார்.
அவள் ஆசையாக அவன் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்க அவளது சந்தோஷம் பெரியவர்களையும் தொற்றியது.
வேலை முடிந்ததால் வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தான் மணிமாறன். அப்போது அவனது போனில் ஏதோ நோட்டிபிகேசன் வர அதை எடுத்துப் பார்த்தான்.
அவனுக்கு ஐ.பி.எஸ் ட்ரைனிங் வரச் சொல்லி அழைப்பு வந்திருந்தது. அதைப் பார்த்து ஒரு பக்கம் மனதில் சந்தோஷம் வந்தாலும் மற்றொரு பக்கம் “இது இப்ப தான் வந்து தொலைக்கணுமா?”, என்று தோன்றியது. தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
விதியை நினைத்து எரிச்சலாக வந்தது. அவனுக்கு நன்கு தெரியும், ட்ரைனிங் முடியவே ஏழு எட்டு மாதம் ஆகி விடும். அதன் பிறகும் போஸ்டிங் வட நாட்டுப் பக்கம் தான் போடுவார்கள்.
“சார் ஒரு சந்தேகம் கேக்கணும்”, என்று உள்ளே வந்த வாஜித் அவன் அமர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்து “சரி சார் நாளைக்கு கேக்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அப்போதே மேலதிகாரிக்கு ரிசைன் லட்டரை அனுப்பி வைத்து விட்டு வாஜித் மற்றும் மற்ற போலீசிடமும் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தான். “வந்துட்டீங்களா? ஏன் இவ்வளவு நேரம்?”, என்று சிணுங்களாக கேட்டாள் அவனது மனைவி. அவளது புன்னகை முகம் அவனை மிகவும் வாட்டியது. அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அறைக்குச் சென்றான்.
அவன் பின்னேயே சென்றாள். அவனோ சோர்வாக கட்டிலில் அமர்ந்தான். அவனது சோர்வை பார்த்தவள் “ரொம்ப வேலையா? சோர்வா தெரியுறீங்க?”, என்று கேட்டாள்.
“ம்ம்”
“சரி முகம் கழுவிட்டு வாங்க. நான் டீ தரேன்”
துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குக் சென்றவன் குளித்து விட்டே வந்தான். நார்மல் உடைக்கு மாறி அவன் கீழே செல்ல ஒரு தட்டில் கேசரி, வடை, டீ என எடுத்துக் கொடுத்தாள் பூங்கொடி. தேவகி மற்றும் கதிரவனும் அவனுடன் அமர்ந்து உண்டார்கள்.
அவன் ஒரு மாதிரி இருப்பதைப் பார்த்த பூங்கொடி “அத்தை உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இன்னையோட எனக்கு காலேஜ் முடிஞ்சிருச்சே?”, என்றாள்.
அவள் சொல்வது தனக்கு தான் என்பது புரியாத அளவுக்கு அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே. அமைதியாக அமர்ந்திருந்தான். அவனிடம் இருந்து ஏதாவது எக்ஸ்ப்பிரசன் வரும் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் தான்.
“என்ன ஆச்சு இவனுக்கு?”, என்று குழம்பினாள்.
அன்று இரவு உணவு வரைக்கும் அவன் வீட்டில் ட்ரைனிங் பற்றி மூச்சு விட வில்லை. படுக்க வந்ததும் “என்னங்க?”, என்று அழைத்தாள்.
“என்ன?”
“எதுக்கு ஒரு மாதிரி இருக்கீங்க?”
“ஒண்ணும் இல்லை”, என்று எரிந்து விழுந்தான்.
”எனக்கு காலேஜ் முடிஞ்சிருச்சு”
“தெரியும். அடுத்து பி.ஜிக்கு அதே காலேஜ்ல அப்ளை பண்ணு”, என்றான்.