அவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்தவள் இப்போது அவனுடைய அருகாமையில் மயங்க ஆரம்பித்தாள். அவளது கன்னத்தில் அவனது தாடையின் ரோமம் உரசி அவள் உடலில் சிலிர்ப்பை உண்டாக்கியது.
அவனுடைய அணைப்பு கிடைக்காதா என்று ஏங்கியவள் தானே? அதனால் அவனை விட்டு விலகாமல் அவன் முகம் பார்த்தாள்.
அவன் கண்களில் வழிந்த காதலில் பேச்சற்றுப் போனாள். அவன் கண்களில் தெரிந்த தேடலில் இமைகள் படபடத்தது. இதற்கு மேல் அவன் அணைப்பில் இப்போது இருப்பது ஆபத்து என்று புரிய இதயம் படபடக்க அவனிடம் இருந்து விலக முயன்றாள். ஆனால் அவளால் அது முடியவில்லை. அவனது பிடி இரும்பு பிடியாக இருந்தது.
“பிளீஸ்ங்க, அம்மா வருவாங்க”, என்று அவள் முணுமுணுக்க அதற்கு மேல் அவளை சோதிக்காமல் விட்டுவிட்டான். இப்போது அவள் அவனை ஏக்கமாக பார்க்க அவனும் அவளைப் பார்த்துக் கொண்டு தான் நின்றான்.
இது வேலைக்காகாது என்று எண்ணியவள் அறைக் கதவை திறக்கச் சென்றாள். வேகமாக அவளை நெருங்கிய மணிமாறன் கதவில் சாய்த்து அவளை நிற்க வைத்தான்.
அவள் நகராதவாறு இரு பக்கமும் தன்னுடைய கைகளை ஊன்றி சிறை பிடித்தான். அவன் விரல் நுனி கூட அவளைத் தீண்ட வில்லை தான். ஆனால் அவனுடைய மூச்சுக் காற்று அவள் முகத்தில் மோதியது.
இந்த நெருக்கத்தில் திணறிய பூங்கொடி “பிளீஸ் விடுங்க, இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டாள். அவள் குரல் உணர்ச்சியின் பிடியில் குழைந்து வந்தது.
“எனக்கு என்ன? எனக்கு ஒண்ணும் இல்லையே?”, என்று சிறு சிரிப்புடன் சொன்னான் மணிமாறன்.
“ஏன் இப்படி பண்ணுறீங்க?”
“நான் உன்னை ஒண்ணும் செய்யலையே”
“ஒண்ணும் செய்யலையா? நீங்க இப்படி நிக்குறதுக்கு என்ன அர்த்தமாம்?”, என்று அவள் சிணுங்கிய படியே கேட்டாள். இந்த பூங்கொடி அவனுக்கு புதியதாக தெரிந்தாள். அவளது தவிப்பை போக்க முடியாத நிலையில் இருக்கும் தன்னையே அவன் நொந்து கொண்டான்.
“நீ அங்க நிக்குற? நான் இங்க நிக்குறேன். ரெண்டு பேருக்குள்ள இவ்வளவு இடைவெளி இருக்கு. நான் உன்னை என்ன செஞ்சேன்?”
“ஆமா ஆமா ரெண்டு பேருக்கும் இடைல பல கிலோமீட்டர் இடைவெளி இருக்கு”, என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள். அந்த சலிப்பு அந்த இடைவெளி இன்னும் குறையாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.
“இப்ப என்னை விடப் போறீங்களா இல்லையா?”
“முடியாதுன்னு சொன்னா என்ன செய்வ? இடிச்சு தள்ளிட்டு போய்ருவியா?”
“இவனை நான் தள்ளுறதா?”, என்று எண்ணிக் கொண்டு “இப்ப உங்களுக்கு என்ன வேணும்?”, என்று கேட்டாள்.
“என்ன கேட்டாலும் தருவியா டி?”, என்று இப்போது அவன் குரல் குழைந்து வந்தது.
அவன் குரலிலும் அவன் கேட்ட விதத்திலும் அடி வயிற்றில் இதமான இம்சை கிளர்ந்தது. அப்படி என்ன கேட்க போகிறான் என்று அவளின் ஒவ்வொரு செல்லும் சிலிர்த்தது.
அவள் அமைதியாக இருக்கவும் “என்ன தர மாட்டியா?”, என்று கேட்டான்.
“என்ன தரணும்?”, என்று முணுமுணுத்தாள்.
“நீ ஒண்ணும் தர வேண்டாம். ஒரு உண்மையைச் சொல்லணும்”
“என்ன உண்மை?”
“என்னை உனக்கு பிடிக்குமா?”
“இது என்ன கேள்வி?”
“சொல்லு டி”
“பிடிக்காம தான் இப்படி…”
“இப்படி…? என்ன டி?”
“பிளீஸ் எனக்கு என்னவோ போல இருக்கு. விடுங்க”
“ஒரு ஒரு நிமிஷம் இப்படியே இரு. விட்டுறேன்”
“சரி”, என்றவள் அப்படியே அசையாமல் நிற்க அவனோ பார்வையால் அவளை மேய்ந்தான்.
“இப்படி பாத்துட்டு இருந்தா எப்படி?”, என்று அவள் உதடுகள் முணுமுணுக்க அவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அவன் செய்கையை உணர்ந்தவள் அவனுக்கு கீழாக குனிந்து விலகி நின்றாள். ஏமாற்றத்தோடு அவளைப் பார்த்தவன் “ஏன் டி?”, என்றான்.
“அம்மா மேல வராங்க. கதவைத் திறங்க”, என்று அவள் சொல்ல அவசரமாக கதவை திறந்தான். அவள் சொன்னது போல அப்போது தான் கடைசி படியில் கால் வைத்தார் தேவகி.
இருவரும் வாசலில் நிற்பதை பார்த்த தேவகி “என்ன ரெண்டு பேரும் இன்னும் டிரஸ் மாத்தாம நிக்குறீங்க? பூவு டிரஸ் மாத்திட்டு டீ குடிக்க வருவா. இன்னைக்கு வரலைன்னதும் நானே எடுத்துட்டு வந்தேன். இந்தாங்க டீயும் வடையும் இருக்கு. சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு அவள் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.
அதன் பிறகு அவளைப் பார்த்து சிரித்து விட்டு டீயை எடுத்துக் குடித்தவன் “வேலை இருக்கு. நைட் வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அவள் குளித்து உடை மாற்றி விட்டு புத்தகத்தை தூக்கிக் கொண்டு அமர்ந்தாள். அவனுடைய முகம் தான் வந்தது. அவளால் படிப்பில் ஒன்ற முடியவில்லை.
அதன் பின் அவன் வந்ததும் அவனுக்கு உணவு பரிமாறினாள். எப்போதும் அவளுக்கு ஊட்டுபவன் இன்று வேண்டும் என்றே அதைச் செய்யாமல் உண்டு கொண்டே இருந்தான். கடைசி வாய் வரைக்குமே அவன் அதை செய்ய வில்லை என்றதும் அவளுக்கு கோபமாக வந்தது.
அவன் கடைசி வாயை கையில் எடுத்து வாயில் வைக்க போக அடுத்த நொடி வேகத்துடன் அவனை நெருகியவள் அந்த உணவை தன்னுடைய வாய்க்குள் வாங்கிக் கொண்டாள்.
அவள் வேகத்தில் அவளுடைய பல் கூட அவனுடைய விரலில் பட்டு விட்டது. அவன் அவளை திகைப்பாக பார்க்க அவனை முறைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
தட்டை எடுத்து கழுவப் போட்டவன் அறைக்குள் வந்தான். ஒரு ஓரமாக படுத்திருந்தாள். விளக்கை அணைத்து விட்டு அவன் அவளுடைய அருகில் படுக்க அவளுக்கு நெஞ்சம் தடதடத்தது. இத்தனை நாளும் அவளை எதுவும் செய்யாமல் படுத்து விடுவான் தான். ஆனால் இன்று அப்படி இல்லையே.
“கொடி தூங்கிட்டியா?”, என்று கேட்டான்.
“ம்ம்”
“நாளைக்கு லீவ் தானே, அதுக்குள்ள என்ன தூக்கம்?”, என்றவன் அவள் கை பற்றி தன் பக்கம் திருப்பினான்.
அவன் பக்கம் திரும்பியவள் “எந்த நாளா இருந்தா என்ன? இந்த நேரத்துக்கு படுத்ததும் தூங்கத் தானே செய்யணும்?”, என்றாள்.
“வேற ஒண்ணும் செய்யலாம்”, என்று அவன் சொன்னதும் அவள் கண்ணைச் சுருக்கி அவனைப் பார்க்கும் போது அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான்.
அவன் செய்கையில் முதலில் திகைத்துப் போனவள் கண்களை விரித்து அவன் கண்களை காண முயன்றாள். கண்களை மூடி அவன் ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டிருக்க இவளும் அவன் முத்தத்தில் கரைந்தாள்.
அவளிடம் மறுப்பில்லை என்றதும் அவனுடைய கைகள் உயர்ந்து அவளது இடையை வளைத்தது. அவளது கரமும் அவன் கழுத்தை வளைத்தது.
அவனுடைய விலகலை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு இந்த நெருக்கம் மிகவும் தேவையாக இருந்தது. அவன் மனதில் தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கை அவள் மனதில் எழுந்தது. ஏதோ இதழ்களுக்குள் தித்திப்பாய் இறங்கும் உணர்வை அனுபவித்தார்கள் இருவரும்.
அவனை விட்டு விலகத் தோன்றாமல் கழுத்தில் இருந்த அவளது கையை அவன் முதுகில் வைத்து அவனை இறுக்கிக் கொண்டாள். ஒரு ஆணுடன் இப்படி ஒரு அருகாமையில் இருப்போம் என்றும், அதுவும் அதற்காக இவ்வளவு சந்தோஷப் படுவோம் என்றும் அவள் இது வரை எண்ணியதே இல்லை.
அவளுடைய ஒத்துழைப்பில் அவனுக்குள் காதல் வேகம் எடுத்தது. அவளைத் தன்னை நோக்கி இழுக்க அவளும் அவனுக்குள் இன்னும் புதையவே விரும்பினாள்.
இருவரும் இதழ் அணைப்பில் ஆனந்தமாக சிக்கி இருந்தனர். அவளுடைய இடையில் இருந்த கரம் அவளுடைய இரவு உடையை தாண்ட எண்ணும் போது “அவளோட கனவு முக்கியம் டா”, என்ற கதிரவனின் குரலை நினைவுய் படுத்தியது அவன் மூளை.
படக்கென்று அவள் இதழ்களில் இருந்து விலகினான். அவள் திகைத்த படி அவனைப் பார்க்க “ஒண்ணும் இல்லை டா, நீ தூங்கு கொடி”, என்றான்.
தடை பட்ட உணர்வில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய அவள் மனதை உணர்ந்தவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான். இப்போது அவனுடைய உணர்வுகள் வற்றி இருந்தது.
அவளும் அவனை விட்டு விலக வில்லை. அவன் மார்பில் தலை வைத்து படுத்திருந்தாள்.
“ஏன் இப்படி?”, என்று அவனிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அதைச் செய்ய முடிய வில்லை.
“கொடி”
“ம்ம்”
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி. ரொம்ப ரொம்ப பிடிக்கும் டி”, என்று அவன் சொன்னதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“எதுக்கு எந்திக்கிற? அப்படியே படுத்து நான் சொல்றதை மட்டும் கேளு. உன் மேல நான் எவ்வளவு அன்பை வச்சிருக்கேன்னு என்னால சொல்ல முடியாது டி. ஐ லவ் யுன்னு ஒரு வார்த்தைல அதை என்னால சொல்ல முடியாது. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கட்டுபாடில்லாம உன் கூட இருந்தேன் பாரு அது தான் நான். இப்ப அமைதியா படுத்துருக்குறது உண்மையான நான் இல்லை டி. உனக்காக என்னையே கட்டுப் படுத்திக்கிறேன்”, என்று அவன் சொல்ல அவள் ஏன் என்று கேட்க வில்லை. அவனை விட்டு விலகவும் இல்லை. அவன் சொல்ல வருவது கொஞ்சம் புரிவது போல இருந்தது. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.