“ஆமா டி, நம்ம பக்கத்து ஊரு தான். பொண்ணு பேர் சுதா. உன்னை மாதிரி காலேஜ் முடிச்சிருக்கா”
“கூட பிறந்தவங்க எத்தனை பேர் மா?”
“ஒரு அக்கா, ஒரு அண்ணனாம். ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு. ஆனா ரெண்டு பேருக்கும் குழந்தைங்க இல்லை போல? அதான் யோசனையா இருக்கு”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா. சரி நீ பொண்ணு போட்டோ பாத்தியா?”
“பாத்தேன். நல்ல அம்ஸமா தான் இருக்கா. ஆனா வரதன் கிட்ட இன்னும் காட்டலை. அண்ணன் தான் அவன் நேர்லே வந்து பாத்துக்கட்டும்னு சொல்லிட்டான். புதன் கிழமை போயிட்டு வந்துருவோமா?”
“நான் எதுக்கு மா? நீ அண்ணிகளை கூட்டிட்டு போயிட்டு வா”
“நீ வரலைன்னா எப்படி டி? ஒழுங்கா வா. நான் தேவகி கிட்ட பேசுறேன். கொடு”, என்று சொன்னதும் தேவகியிடம் பேசினார் மணியம்மை.
“ரொம்ப சந்தோஷம் அக்கா. புதன் கிழமை தானே? நான் மகளை அழைச்சிட்டு வந்துறேன். நேரா நம்ம வீட்டுக்கே வந்துறோம். அப்புறம் அங்க இருந்து போகலாம்”, என்று தேவகி சொல்ல சரி என்று சொல்லி போனை வைத்தார்.
புதன் கிழமையும் வந்தது. கதிரவனையும் அழைத்தார்கள் தான். ஆனால் அவர் தேவகி மற்றும் பூங்கொடியை மட்டும் போகச் சொன்னார். இவர்கள் இருவரும் பூங்கொடியின் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள்.
அங்கே அவர்களும் தயாராக இருக்க அனைவரும் வேனில் ஏறினார்கள். மாப்பிள்ளையான வரதனுக்கு வெட்கமாக வந்தது. அவன் சங்கடமான முகத்துடன் இருந்தான்.
வேன் சுதா வீட்டை நோக்கி கிளம்பிச் சென்றது. கூட்டமாக போவதை ரசித்த பூங்கொடிக்கு அவளது கணவனும் இங்கே இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
அதே நேரம் சுதா வீட்டில் பரபரப்பாக இருந்தது. “எல்லாம் ரெடி பண்ணிட்டியா?”, என்று கேட்டார் சுதாவின் தந்தை மகேஸ்வரன்.
“பண்டம் பலகாரம் எல்லாம் தயாரா இருக்குங்க. எத்தனை பேர் வராங்கன்னு பாத்துட்டு டீ மட்டும் போடணும். அதை அக்கா போடுறேன்னு சொல்லிட்டாங்க”, என்றாள் சுதாவின் அன்னை வள்ளி.
“சுதாவை கிளப்பியாச்சா?”
“மேகலாவும் சுந்தரியும் அழகு படுத்துறாங்க”
“வரப் போறவங்க நல்ல குடும்பம் டி. அங்க நம்ம பொண்ணு வாழக் கொடுத்து வச்சிருக்கணும். இந்த சம்பந்தம் அமையணும்னு ஆசையா இருக்கு”
“கவலைப்படாதீங்க. எல்லாம் நல்ல படியா நடக்கும். ஆமா இளங்கோ எங்க?”
உள்ளூரில் இருந்த சொந்தக்காரர்களை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான் சுதாவின் அண்ணன் இளங்கோ. சொந்தங்கள் அனைவரையும் வரவேற்றார் மகேஸ்வரன்.
ஒரு வழியாக மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி வந்தார்கள். இங்கே அனைவரும் அவர்களை வரவேற்று அமர வைத்தார்கள். பெண்ணைப் பார்க்க இத்தனை பேர் வருவார்கள் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை.
அவர்களின் திகைப்பை பார்த்து விட்டு “மன்னிச்சிருங்க, இவங்க எல்லாருமே என்னோட குடும்பம் தான். யாரையும் தவிர்க்க முடியாது”, என்றார் கேசவன்.
“அதுக்கென்ன? எல்லாரும் ஒத்துமையா இருந்தா தானே அழகு?”, என்று மகேஸ்வரன் சொல்ல அவரை கேசவனுக்கு மிகவும் பிடித்தது.
ஒரு வழியாக அறிமுகப் படலம் முடிந்து பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. “மேகலா, தங்கச்சியை அழைச்சிட்டு வா”, என்றார் மகேஸ்வரன்.
“எனக்கு பயமாக இருக்குக்கா”, என்று சொன்ன சுதா அழகாக இருந்தாள்.
“இப்பவே பயமா இருக்குனு சொல்ற? வந்துருக்க கூட்டத்தை பார்த்தா என்ன சொல்லுவியோ? பொண்ணு பாக்க வேன் பிடிச்சு வந்தது இவங்களா தான் இருக்கும்”, என்று மேகலா சொல்ல சுதா கண்களில் மேலும் பயம் வந்தக்து.
ஒரு வழியாக அவளைக் கட்டாயப் படுத்தி அழைத்து வந்தார்கள். வரதன் சங்கடமாக அமர்ந்திருக்க “நிமிந்து பொண்ணைப் பாரு டா”, என்றான் தம்பிதுரை.
பூங்கொடிக்கு சுதாவை பார்த்தவுடன் பிடித்து விட்டது. அவள் தன்னுடைய அண்ணனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று எண்ணி அண்ணன் மனதை அறிய வரதனைப் பார்த்தாள்.
அவனும் சுதாவை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் இருந்தே அவனுக்கு சுதாவை பிடித்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள் பூங்கொடி.
“எங்க பொண்ணை பிடிச்சிருக்கா மாப்பிள்ளை?”, என்று சுதாவின் உறவினர் ஒருவர் கேட்டார்.
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இவங்க தான் எனக்கு சின்ன அண்ணி”, என்றாள் பூங்கொடி.
“பொண்ணு பிடிச்சிருக்குன்னு உங்க அண்ணன் தான் சொல்லணும். நீ சொன்னா என்ன அர்த்தம் மா?”, என்று ஒரு மாதிரி குரலில் கேட்டாள் மேகலா. அந்த பேச்சு யாரை பாதித்ததோ இல்லையோ வரதனை பாதித்தது.
தன்னுடைய தங்கையை ஒருத்தி இளிவாக பேசுவதா என்று கோபம் கொண்டான். அதனால் தன்னுடைய தயக்கம் உதறி “என் தங்கச்சி சொல்லுக்கு மறுபேச்சு இல்லைன்னு அர்த்தம். அவளுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும்னு அர்த்தம். எனக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு. உங்க பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்”, என்று வரதனே சொல்ல மேகலா பூங்கொடியை முறைத்து பார்த்தாள்.
“நீ என்ன சொல்ற மா? உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?”, என்று சுதாவிடம் கேட்க “ம்ம்”, என்று தலையாட்டினாள். அவளுடைய தலையாட்டலை ரசித்தான் வரதன்.
அதன் பின் காபி, பலகாரம் என்று நேரம் சென்றது. முகூர்த்தத்தைக் குறித்து விட்டே அங்கிருந்து கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றதும் மகேஸ்வரன் சந்தோஷமாக இருந்தார். “அப்பா உங்களுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா?”, என்று கேட்டாள் மேகலா.
எரிச்சலுடன் அவளைப் பார்த்தவர் “ஏன் இவருக்கு என்ன குறைச்சல்?”, என்று அடக்கப் பட்ட கோபத்துடன் கேட்டார்.
“அப்படி எல்லாம் இல்லை பா. இப்பவே அந்த மாப்பிள்ளை, அவரோட தங்கச்சி பேச்சைத் தான் கேக்குறார். நாளைக்கு அவ ஏதாவது சொல்லிக் கொடுத்து என் தங்கச்சி கண் கலங்கவா?”
“அப்படி என் பிள்ளை கண் கலங்குச்சுன்னா அதை நானும் உன் அம்மாவும் பாத்துக்குறோம். நீ உன் வேலையை மட்டும் பாரு. ஒழுங்கா உன் புருஷன் வீட்டுக்கு கிளம்புற வேலையைப் பாரு”
“அங்க போனா குழந்தை இல்லைன்னு ஏதாவது சொல்றாங்க பா”
“அப்படிச் சொன்னா மாப்பிள்ளையை அழைச்சிட்டு டாக்டர் கிட்ட போ. டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கேட்டு அது படி நடங்க. இங்க வந்து உக்காந்தா ஆச்சா?”
“சுதா கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல இருக்குல்ல பா? அதை முடிச்சிட்டே போறேன்”
“அப்படினான அடக்கம் ஒடுக்கமா இருக்கணும். தேவையில்லாம ஏதாவது பேசிட்டு திரிஞ்ச, நான் மனுசனா இருக்க மாட்டேன். உங்களுக்கும் சேத்து தான் சொல்றேன்”, என்று மகன் மற்றும் மருமகளையும் எச்சரித்து விட்டே சென்றார்.
மேகலாவுக்கு தான் எரிச்சலாக இருந்தது. அவளை அவளுடைய கணவன் வீட்டில் மதிக்கவே மாட்டார்கள். ஆனால் இங்கோ ஆள் ஆளுக்கு சுதாவிடம் பாசமாக பேச அவளுக்கு கடுப்பாக இருந்தது. அதுவும் பூங்கொடி அண்ணி அண்ணி என்று சுதாவிடம் உருக மேகலா காதில் புகை வராதது மட்டும் தான் குறை.
அது போக தங்கைக்காக பேசி தன்னுடைய மூக்கை உடைத்த வரதனையும் அவளுக்கு பிடிக்க வில்லை. அதனால் தான் மகேஸ்வரனிடம் அப்படி பேசி வாங்கிக் கட்டிக் கொண்டாள். அடுத்த முயற்சியாக தாயைத் தேடிச் சென்றாள்.
“அம்மா சுதாவுக்கு வேற மாப்பிள்ளை பாருங்க மா”, என்று சொல்ல மகளை அடிக்க கை ஓங்கி விட்டாள் வள்ளி.
“உன் வாயில நல்ல வார்த்தையே வராதா டி? இனி இப்படி பேசிட்டு திரிஞ்ச சோத்துல விஷம் வச்சிருவேன். என் பிள்ளைக்கு இப்ப தான் நல்லது நடக்க போகுதுன்னு இருக்கேன்”
“அப்ப நான் யாரு மா?”
“நீ விஷம் டி”
“அம்மா”
“என்ன அம்மா? நியாயமா பாத்தா நீ செஞ்ச வேலைக்கு உன்னை வெட்டிப் போட்டுருக்கணும். உன்னை இன்னும் வீட்ல வச்சிருக்கேன் பாத்தியா? ஸ்கூல்க்கு போனப்பவே ரெண்டு பயலுங்க கூட சுத்தின. காலேஜ் படிக்கிறப்ப இன்னொருத்தன். கடைசியா எவனையோ லவ் பண்ணி மாசமாகி கருவைப் போய் கலைச்ச. என்னோட பிரண்டு ஒருத்தி உன்னை ஆஸ்பத்திரில பாத்து சொன்ன பிறகு தானே அந்த விஷயமே தெரிஞ்சது? அப்புறம் அது எவன்னு விசாரிக்கிறது குள்ள அவனையே இழுத்துட்டு போய்க் கல்யாணம் பண்ணிட்டு வந்த. இப்ப அவனுக்கு எவ கூடவோ தொடர்பு இருக்குனு சண்டை போட்டுட்டு இங்க வந்து உக்காந்துருக்க. நீ அங்க இருந்தா அவன் எதுக்கு டி இன்னொருத்தியை தேடிப் போறான்? அப்பா உன்னை வீட்லயே சேக்க கூடாதுன்னு சொன்னார். உன்னை பெத்த பாவத்துக்கு இங்க இருக்க வச்சிருக்கேன். சின்னவளுக்கு நடக்க வேண்டியதை கெடுக்க நினைச்ச நான் உனக்கு எமனா மாறிருவேன் பாத்துக்கோ”, என்று எச்சரித்து விட்டுச் சென்றாள்.
கடைசியாக தங்கையைக் காணச் சென்றாள். அவள் கனவுலகில் அமர்ந்திருக்க “என்ன டி கனவா?”, என்று நக்கலாக கேட்டாள்.
“அப்படி எல்லாம் இல்லைக்கா”, என்று சொன்னாள் சுதா.
“ரொம்ப கனவு காணாத சுதா. எனக்கு உன்னை நினைச்சா பயமா இருக்கு. கூட்டுக் குடும்பத்துல போய் குப்பை அள்ளிப் போட போற?”
“அதுக்கு என்ன? ஒரே வீட்ல அத்தனை பேர் இருந்தா திருவிழா மாதிரி நல்லா தானே இருக்கும்?”, என்று அவள் மூக்கை உடைத்தாள் சுதா. அப்போது அங்கே வந்த மகேஸ்வரன் மூத்த மகளை முறைத்து விட்டு “பாப்பா, இங்க வா டா”, என்று சுதாவை அழைத்தார்.
“இதோ வரேன் பா”, என்று சொன்ன சுதா அவர் அருகில் வந்து நின்றாள்.