“உனக்கு நாத்தனாரா வரப் போற பொண்ணு, பூங்கொடி இருக்கே. அது இப்ப பேசுச்சு. உன் கிட்ட ஏதோ பேசனுமாம்? நான் உன் நம்பர் கொடுத்துருக்கேன். தங்கமான பொண்ணு. மாமா அத்தைன்னு வாய் நிறையக் கூப்பிடுது. உனக்கு இப்ப கால் பண்ணும். எங்களுக்கு பயந்துட்டு பேசாம இருக்காத. இனி அது தான் உன் குடும்பம். தைரியமா பேசு. மாப்பிள்ளை கூப்பிட்டாலும் பேசு சரியா?”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவர் சொன்னது போல அடுத்த பத்து நிமிடத்தில் சுதாவை அழைத்தாள் பூங்கொடி.
அதை சுதா எடுத்ததும் “அண்ணி, நான் பூங்கொடி பேசுறேன்”, என்றாள்.
“சொல்லுங்க. அப்பா இப்ப தான் நீங்க கால் பண்ணுவீங்கன்னு சொன்னாங்க”
“மாமா சொன்னாங்களா? சரி சரி அப்புறம் இது தான் என்னோட நம்பர். சேவ் பண்ணிக்கோங்க. அங்க கூட்டத்துல வச்சு நம்பர் கொடுக்க முடியலை”
“சேவ் பண்ணிக்கிறேன். அப்புறம்…”, என்று சுதா தயங்க “சொல்லுங்க அண்ணி”, என்றாள் பூங்கொடி.
“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தானே? என் பேரைச் சொல்லியே கூப்பிடலாமே?”
“ஒரே வயசுன்னா கூப்பிட வேண்டியது தான். ஆனா எங்க அண்ணனுக்கு நான் மரியாதை கொடுக்கணுமே? அவருக்கு மரியாதை கொடுத்தா அவரில் சரி பாதியா ஆகப் போற உங்களுக்கும் மரியாதை கொடுக்கணும்ல?”, என்று பூங்கொடி கேட்க நெகிழ்ந்து போன சுதா “சரி நான் உங்களை எப்படிக் கூப்பிட?”, என்று கேட்டாள்.
“எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க. வா போன்னு கூட நீங்க கூப்பிடலாம். ஆனா நாம பிரண்ட்ஸ் ஓகே வா? அதை மறக்க கூடாது”
“நான் என் வீட்டுக்கு வந்துட்டேன். என்னையும் தேவகி அம்மாவையும் இறக்கி விட்டுட்டு தான் எல்லாரும் போய்கிட்டு இருக்காங்க. அப்புறம் நான் ஒரு முக்கியமான விசயம் பேசத் தான் கூப்பிட்டேன்”
“என்ன அண்ணி?”
“கல்யாணம் பண்ணிக்க போற எல்லாருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதே மாதிரி உங்க கிட்ட பேச அண்ணனுக்கோ அண்ணன் கிட்ட பேச உங்களுக்கோ ஆசை இருக்கலாம். அதனால தான் மாமா கிட்ட கேட்டு உங்க நம்பர் வாங்கினேன். அதை அண்ணனுக்கு அனுப்பிட்டேன். வீட்டுக்கு போனதும் அண்ணா உங்க கிட்ட பேசினா தயங்காம பேசுங்க. வரதண்ணா ரொம்ப நல்ல டைப். ரொம்ப கேரிங்க் பேர்சன். எல்லார் மேலயும் ரொம்ப அன்பா இருப்பாங்க”
“சரி கால் பண்ணினா பேசுறேன். அவங்க நம்பர்…?”
“என்ன தயக்கம்? உரிமையா கேளுங்க. அவர் இனி உங்களுக்கு தான் முழுசா சொந்தம். அப்புறம் அண்ணன் நாலஞ்சு நம்பர் வச்சிருக்கு. எந்த நம்பர்ல இருந்து கூப்பிடும்னு தெரியலை. அண்ணனே கால் பண்ணுவாங்க. நாணுத்தி எம்பதுன்னு ஒரு நம்பர் முடியும். அதுல இருந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க”
“நம்ம வீடுன்னு சொல்லுங்க அண்ணி. முதல்ல அம்மா கிட்ட இருந்து வரேன். அம்மா ரொம்ப நல்ல டைப். கண்டிப்பா உங்களுக்கு இன்னொரு அம்மாவா இருப்பாங்க. எனக்கு மட்டும் மாமியாரா தான் இருப்பாங்க”, என்று பூங்கொடி சொல்ல சுதா புன்னகைத்தாள்.
“அடுத்து மூத்தண்ணன் கேசவன். நம்ம நாட்டாமை படத்துல வர மாதிரி பாசக்காரர். எங்க வீட்டோட தூண். மூத்த அண்ணி மங்களம் எனக்கு இன்னொரு அம்மா. அடுத்து ரெண்டாவது அண்ணன் மணிவாசகம். ரொம்ப அமைதி. பேசுறதுக்கே கூலி கேப்பார். அமைதியா இருந்தாலும் யாருக்கு என்ன வேணும்னு பாத்து வாங்கிக் கொடுக்குறதுல கில்லாடி. அவங்க மனைவி மைதிலி அண்ணி. எனக்கு அக்கா தங்கை இல்லாத குறையை தீத்து வைக்கிறவங்க. அப்புறம் மூணாவது அண்ணன் பேர் தம்பிதுரை. சாருக்கு எப்பவுமே துரைன்னு நினைப்பு. பயங்கர கோபம் வரும். சட்டுன்னு கோபப் பட்டாலும் அவங்க குணம் அப்படியே பலாச் சுளை மாதிரி. அவங்க மனைவி தாரணி, எனக்கு நல்ல ஃபிரண்ட். அவங்களும் நானும் பேசாத டாப்பிக்கே இல்லை. காலேஜ்ல சைட் அடிச்சது வரை பேசிருக்கோம். அப்புறம் உங்க வீட்டுக்காரர். அவரைப் பத்தி நீங்களே தெரிஞ்சிக்கோங்க. அடுத்து நான். உங்களுக்கு செல்லமான நாத்தனார். அடுத்து நம்ம வீட்டுக் குட்டீஸ். ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம். அதுங்களை மேய்க்கிறதுக்கு தனித் திறமையே வேணும்”, என்று முடித்தாள்.
அவள் பேசியதை ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் சுதா. இந்த அளவுக்கு கலகலப்பாக பேசும் பெண்ணை யாருக்கு தான் பிடிக்காது?
“சரிங்கண்ணி ரொம்ப நேரம் பேசி உங்களை போர் அடிக்க விரும்பலை. அண்ணா பேசினா பேசுங்க. நான் வைக்கிறேன். ஏதாவது தேவைன்னா எனக்கு கூப்பிடுங்க”, என்றாள் பூங்கொடி.
“சரிங்கண்ணி”, என்று சுதா சொன்னதும் போனை வைத்தாள் பூங்கொடி.
சிறு சிரிப்புடன் சுதா அமர்ந்திருக்க அவளை முறைத்துப் பார்த்த படி நின்றாள் மேகலா. சுதாவின் கனவு அவளுக்கு உவப்பானதாக இல்லை. சிறு வயதில் இருந்து அப்படி தான். தங்கையின் மீது அவளுக்கு வன்மம் உண்டு.
அன்று இரவு பத்து மணி போல சுதாவின் போன் இசைத்தது. “இந்நேரம் யாரா இருக்கும்?”, என்று எடுத்துப் பார்த்தாள்.
பூங்கொடி சொன்ன நம்பரில் முடிந்திருக்க சுதாவுக்கு படபடப்பாக இருந்தது. “ஒரு வேளை அவனா இருக்குமோ? இல்லை வேற யாருமோ?”, என்று தயக்கத்துடன் எடுத்து “ஹலோ”, என்றாள்.
“ஹலோ நான்…”,. என்று சொன்ன வரதனுக்கும் எப்படி பேச என்று தயக்கம் தான்.
“தெரியும்… சொல்லுங்க”, என்றாள் சுதா.
“எப்படிக் கண்டு பிடிச்ச?”, என்று அவன் ஆர்வமாக கேட்க “அண்ணி சொன்னாங்க, நீங்க கால் பண்ணுவீங்கன்னு. அப்படியே உங்க நம்பரும் சொன்னாங்க”, என்றாள்.
“ஓ”, என்று சொன்னவனுக்கு அடுத்து என்ன பேச என்று தெரியவில்லை. அந்த ஓ வுக்கு என்ன பதில் சொல்ல என்று அவளுக்கும் தெரிய வில்லை.
இருவரும் அமைதியாக இருக்க அதுவே ஒரு மாதிரி தான் இருந்தது. “தூங்கிட்டியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? வச்சிறவா?”, என்று கேட்டான் வரதன்.
“இல்லை இல்லை. சும்மா தான் படுத்துருக்கேன்”
“பேசலாம் தானே? இல்லை, தூக்கம் வருதா?’
“தூக்கம் வரலை”
“அப்ப பேசலாமா?”
“ம்ம்”
“என்னை பிடிச்சிருக்கா சுதா?”
“ம்ம். ஆனா உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தான் தெரியலை”
“பிடிச்சிருக்குனு தான் காலைலயே சொன்னேனே?”
“அது பூங்கொடி அண்ணி சொன்னதுனால கூட இருக்கலாம்”, என்று அவள் சொல்ல அவள் குரலில் இருந்த மனதாங்களை கண்டு கொண்டான் வரதன்.
“எனக்கு பிடிச்சிருக்குன்னு தெரிய போய் தான் என் தங்கை சொன்னா. இல்லைன்னா சொல்லிருக்க மாட்டா. அவளுக்கு என் மனசு புரியும்”
“அண்ணியை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?”, என்று சுதா கேட்டதும் அவன் முகம் மலர்ந்தது. தங்கையைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருப்பானே?
“தேவதையை யாருக்கு தான் பிடிக்காது. அவ எங்க வீட்டோட ஜீவன் சுதா. எங்க எல்லாருக்கும் குலசாமி. எங்க மேல உயிரையே வச்சிருக்கா. அவ ரொம்ப நல்லா கேரக்டர். அவ மேல நீ அன்பு வச்சேன்னு வையேன் அவ உனக்காக உயிரையும் கொடுப்பா. நீ நம்ம வீட்டுக்கு வந்த பிறகு அவளை இன்னும் நல்லா புரிஞ்சிக்குவ. நாங்க எல்லாருமே அவளை நல்லா பாத்துக்குறோம். நீயும் அவளை நல்லா பாத்துக்கணும். இது உன்னோட கடமை புரியுதா? அவ ஏதாவது மனசு கஷ்டப் பட்டா இந்த குடும்பமே இடிஞ்சிரும்”, என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.