“எத்தனை தடவை இதையே கேப்பீங்க?”, என்று சிணுங்கினாள் பெண்.
அவள் சிணுங்களில் கிறங்கியவன் “சாகும் போது கூட கேப்பேன்”, என்றான்.
“ப்ச் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க? இன்னும் வாழவே ஆரம்பிக்கலை”
“நீ தான் ஆரம்பிக்கலை. ஆனா நான் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்ன உடனே ஆரம்பிச்சிட்டேனே?”
“எதை?”
“நம்ம வாழ்க்கையை தான்”
“புரியலை”
“உன் கூட வாழ்ந்து ரெண்டு பிள்ளைகள் பெக்குற வரைக்கும் வாழ்ந்தாச்சு”
“என்னது?”, என்று அவள் அதிர “கனவுல டி. நிஜத்துல தான் நீ இன்னும் என் பக்கத்துல கூட வரலையே?”, என்று அவன் உரிமையாக பேச அவளுக்கும் உணர்வுகள் கிளர்ந்தது.
“டின்னு சொல்லலாமா?”, என்று அவன் சரசமாக கேட்க “ம்ம்”, என்று முணுமுணுத்தாள்.
அதன் பின் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனது வேலையைப் பற்றி, வீட்டைப் பற்றி எல்லாம் பேசினான். அவளிடம் அவளைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டான். சில வரம்பு மீறிய பேச்சும் நடந்தது. இருவரும் உறங்க ஆரம்பிக்கும் போது அதிகாலை நான்கு மணி.
அவன் ஒரு மணி நேரம் தூங்கி விட்டு கடையைப் பாக்க கிளம்பினான். சுதாவோ இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
எப்போதும் ஆறு மணிக்கு எழுந்து கொள்ளும் மகள் இன்று தூங்கவும் வள்ளிக்கு கவலையாக இருந்தது.
அன்னை எழுப்பியதும் சிவந்த கண்களுடன் எழுந்து அமர்ந்தாள். “என்ன டி கண்ணு இப்படி சிவந்திருக்கு”
“நைட் சரியா தூங்கலை மா”
“ஏன் ஏதாவது கனவு கண்டியா?”
“இல்லை”
“அப்புறம் என்ன டி?”
“அவர் பேசிட்டு இருந்தார் மா”, என்று வெட்கத்துடன் சொல்ல மகளின் வெட்கத்தை ரசித்தவள் “இப்படியே நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் டா. மாப்பிள்ளை உன் கிட்ட நல்லா பேசுறாரா?”, என்று கேட்டாள்.
“நல்லது டா. அப்பா சொன்னாங்க. அவங்க குடும்பத்துக்கு நிறைய பெருமை இருக்காம். நீ எப்பவும் அதைக் குறைக்கிற மாதிரி நடந்துக்க கூடாது சரியா?”
“சரி மா”
“சரி நீ கொஞ்சம் நேரம் தூங்கு. அம்மா அப்புறமா எழுப்புறேன்”, என்று சொல்லி விட்டு வள்ளி செல்ல ஆனந்தமாக தூக்கத்தை தொடர்ந்தாள்.
வரதனின் திருமண வேலைகள் சூடு பிடித்தது. மண்டபம் சாப்பாடு எல்லாம் கேசவனும் மற்ற சகோதரர்களும் கவனித்துக் கொள்ள பெண்ணுக்கு தேவையான அனைத்தையும் ஒரு நாத்தனாராக பூங்கொடி தான் செய்தாள். பெண்ணுக்கு தேவையான பொருள்கள் வாங்குவது, அலங்காரத்துக்கு சொல்வது என அவ்வளவு ஈடுபாட்டுடன் செய்தாள்.
தினமும் காலையில் கதிரவனுடன் பிறந்த வீட்டுக்கு வருபவள் மாலையில் ஏதாவது ஒரு அண்ணனுடன் புகுந்த வீட்டுக்குச் சென்று விடுவாள்.
“கல்யாணம் முடியுற வரை இங்கேயே இரேன் டி. எதுக்கு அங்கயும் இங்கயும் அலையுற?”, என்று அவளுடைய வீட்டில் அனைவரும் சொன்னார்கள். ஆனால் தான் சென்றால் தான் கதிரவன் மற்றும் தேவகி முகத்தில் உயிர்ப்பைக் காண முடியும் என்பதால் தான் அங்கே சென்று விடுவாள். அது மட்டுமல்லாமல் அவளுக்கு இரவில் கட்டி அணைத்து தூங்க கணவனின் தலையணை வேண்டும். அவனது வாசனை தான் அவளைப் பொறுத்த வரை ஸிலீப்பிங்க் பில்ஸ்
அந்த வாரம் மணிமாறன் அழைத்த போது வரதனின் திருமண விவரம் சொல்லியவள் “நீங்க கண்டிப்பா வரணும். வருவீங்க தானே?”, என்று கேட்டாள்.
“மனசளவுல நான் உன் கூடவே தான் கொடி இருக்கேன். இருந்தாலும் வரப் பாக்குறேன். சரி காலேஜ் என்னைக்கு போகணும்?”
“அடுத்த வாரம் போகணும்”
“சரி கல்யாணத்துக்கு என்ன கலர் சேலை கட்டப் போற?”
“தெரியலை, இனி தான் எடுப்பாங்க. என் சேலை கலர்லே உங்களுக்கும் சட்டை எடுக்கவா?”
“சரி வாங்கி வை. சட்டை வாங்கி நம்ம வீட்ல வச்சிரு. இங்க இருந்தா கல்யாணத்துக்கு இல்லைன்னா கூட வேற என்னைக்காவது போட்டுக்குவேன்ல?”
“சரிங்க”
“அப்புறம் கொடி, கல்யாணத்துக்கு மச்சானுக்கும் தங்கச்சிக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கிரு. பணம் என் அக்கவுண்ட்ல இருந்து எடுத்துக்கோ. என்ன வாங்கணும்னு அப்பா, அத்தை கிட்ட கேட்டுக்கோ”
“சரிங்க”, என்றவள் வேறு ஏதோ கேட்க அவன் பதில் சொன்னான். மேலும் சில நேரம் பேசி விட்டு போனை வைத்தார்கள்.
அடுத்து வந்த நாட்களில் சுதாவுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தாள். இடையில் கல்லூரிக்கும் சென்று வந்தாள். கல்யாண நாள் நெருங்க நெருங்க பூங்கொடியின் தவிப்பு அதிகமானது. எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் இருக்க மணிமாறனை அதிகம் தேடியது அவளுக்கு.
இத்தனைக்கும் மணிமாறன் தன்னால் திருமணத்திற்கு வர முடியாது என்றும் லீவ் கிடைக்க வில்லை என்றும் சொல்லி விட்டான். ஆனாலும் மனதுக்குள் எதிர்பார்ப்பு என்ற அணுகுண்டு வெடித்து பரவுகையில் அவள் என்ன செய்வாளாம்?
அவன் நினைப்பிலே சுற்றிக் கொண்டிருந்தாள். அன்று காலையில் குளித்து கிளம்பியதும் கதிரவன் அவளை பிறந்த வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். அதன் பின் மைதிலி மற்றும் தாரணியை அழைத்துக் கொண்டு சுதாவுக்கான அளவு பிளவுசை வாங்கச் சென்றாள். மேலும் சில பொருள்களும் வாங்க வேண்டி இருந்தது. அதனால் மூவரும் சென்றார்கள்.
சுதாவின் கல்யாண ஜாக்கெட்டை வாங்கிக் கொண்டாள். அதில் இன்னும் கொஞ்சம் அலங்காரம் செய்யலாம் என்று அவளுக்கு தோன்ற அதற்கு தேவையான பாசி மற்றும் மணிகளை வாங்கியவள் அண்ணிகளை அழைத்துக் கொண்டு நேராக சுதா வீட்டுக்கு தான் சென்றாள்.
“இதோ அழைச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு வள்ளி உள்ளே சென்றதும் அப்போது அங்கே வந்த மேகலா, தாரணி மற்றும் மைதிலியை “வாங்க”, என்று வரவேற்றாளே தவிர பூங்கொடியை ‘வா’ என்று கூட சொல்ல வில்லை. தாரணியும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அப்போது சுதா வந்து விட பூங்கொடியும் அவளை மறந்து போனாள். “அண்ணி, இது தான் உங்க கல்யாண சட்டை. அளவு சரியா இருக்கான்னு பாருங்க”, என்று கொடுத்தாள்.
“சரியா தான் இருக்கும்”, என்று சுதா சொல்ல அவள் கையில் இருந்து அதைப் பிடுங்கிய மேகலா “என்ன சட்டை தச்சிருக்கீங்க? இதெல்லாம் ஒரு டிசைனா? கல்யாண சட்டை இப்படியா இருக்குறது? கேவலமா இருக்கு”, என்று பேச வள்ளிக்கு என்ன சொல்ல என்று கூட தெரியவில்லை.
“வாயை மூடு டி”, என்று மகளை அரட்டினாள். சுதாவும் கையை பிசைந்த படி தான் நின்றாள். தாரணியும் மைதிலியும் “இது உனக்கு தேவையா?”, என்ற பார்வையைத் தான் பூங்கொடியைப் நோக்கி வீசினார்கள். தாரணிக்கும் மைதிலிக்கும் மேகலா மீது வெறுப்பு வந்தது. ஆனால் சுதாவுக்காக அமைதியாக இருந்தார்கள். பூங்கொடி முகம் வாடிப் போய் நிற்க அதைக் கண்ட தாரணிக்கு தாளவில்லை.
அவள் சுருக்கென்று ஏதோ மேகலாவைச் சொல்ல வர அப்போது இளங்கோவும் மகேஸ்வரனும் வீட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் வந்ததும் இந்த பேச்சு அடி பட்டு போனது.
“வாங்க மா, நல்லா இருக்கீங்களா?”, என்று விசாரித்தார். இளங்கோவும் வரவேற்பாக புன்னகைத்தான்.
அவர்களுக்கு டீ எடுத்து வந்த சுந்தரியும் “இதெல்லாம் ஒரு மாடலா?”, என்று கேட்க அதற்கு மேல் பூங்கொடி அங்கே அமர வில்லை.
தாரணி மற்றும் மைதிலியைப் பார்த்தவள் “அண்ணி நாம போகலாம்”, என்று எழுந்து கொண்டாள்.
அவர்களும் எழுந்ததும் நேராக சுதா அருகில் சென்றவள் “அண்ணி, உங்களுக்கு இந்த டிசைன் பிடிச்சிருக்கா? இல்லைன்னா நான் வேற ரெடி பண்ணவா?”, என்று கேட்டாள்.
“எனக்கு அந்த சட்டையோட டிஸைனை விட அதை ஆசையா கொண்டு வந்த உங்களோட அன்பு தான் தெரியுது. அது அப்படியே இருக்கட்டும். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அளவும் சரியா இருக்கு”, என்றாள்.