“என்ன டா, அவன் வராதது கஷ்டமா இருக்கா?”, என்று கேட்டார் தேவகி.
“ஆமா மா, கஷ்டம்னா லேசான கஷ்டம் இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு”, என்று சொல்லும் போதே பூங்கொடியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
“அசடு, என்ன இது? சின்னக் குழந்தை மாதிரி. கொஞ்ச நாள் தானே? அப்புறம் அவனை உன் சேலை முந்தானைல முடிஞ்சு வச்சிக்கோ. அவனுக்கு எங்க வேலை கிடைச்சாலும் அவன் பின்னாடியே ஓடிரு”, என்று சொன்ன தேவகி அவளை திசை மாற்ற “சரி போ, நீ கல்யாணப் பொண்ணைப் பாரு”, என்று அனுப்பி வைத்தார்.
“சரிங்கம்மா, வரேன் மாமா”, என்று சுரத்தில்லாமல் சொல்லி விட்டுச் சென்றாள். அவள் சென்றதும் “மாறன் வந்துட்டான், நம்ம வீட்ல கிளம்பிட்டு இருக்கான்னு சொல்லிருக்கலாம்ல தேவகி? பார் பிள்ளை முகமே சரி இல்லை”, என்றார் கதிரவன்.
“நம்ம சொன்னா அவ கவலை போயிரும் தான். அவ முகத்துல சந்தோசமும் வந்துரும். ஆனா அந்த சந்தோஷத்தை அவ அவளோட புருசனுக்கு காட்ட வேண்டாமாண்ணா? அவனே வந்து அவளோட தேடலைப் பாக்கட்டும்”, என்று சொல்ல அவருக்கும் அது சரி என்று பட்டது.
காலையில் தான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கினான் மணிமாறன். அவனுக்கு இரண்டு நாட்கள் தான் லீவ் கிடைத்திருந்தது. அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தான். அவனை கிளம்பி நிதானமாக வரச் சொல்லி விட்டு பெரியவர்கள் வந்தார்கள். அவளைக் காணப் போகிறோம் என்று ஆசையாக கிளம்ப ஆரம்பித்தான்.
என்ன தான் நிதானமாக அவர்கள் வரச் சொல்லி விட்டாலும் பூங்கொடியை காணும் வரை அவனிடம் நிதானம் ஏது? குளித்து முடித்து உடை மாற்ற பீரோவைத் திறந்தான்.
அவன் வர மாட்டான் என்று தெரிந்தாலும் அவனுக்காக உடை வாங்கி வைத்திருந்தாள் அவனது ஆசை மனைவி. ஆர்வமாக அதை எடுத்துப் பார்த்தான். அழகாக இருந்தது. நிச்சயம் இதே கலரில் தான் அவளது சேலையும் இருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரமாக வீட்டைப் பூட்டி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
தன்னைக் கண்டதும் அவள் முகம் எப்படி மாறும் என்று காண ஆசையாக இருந்தது. அப்பாவும் அத்தையும் அவளிடம் தான் வந்ததைப் பற்றிச் சொல்லியிருப்பார்களோ? ஐயோ சொல்லாதீங்கன்னு நான் சொல்லிருக்கணும் என்று எண்ணிக் கொண்டே சென்றான்.
அதே நேரம் சுதாவுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள் பூங்கொடி. இந்த காட்சியைக் கண்ட வள்ளிக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கி விட்டது.
“நீ உன் புருஷன் பிள்ளைகளோட நல்லா இருக்கணும் மா பூங்கொடி”, என்று மனதார வேண்டிக் கொண்டாள் வள்ளி.
வரதன் பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளையாக அமர வைக்கப் பட்டான். “பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ”, என்று ஐயர் குரல் கொடுக்க சுதாவை ஒரு புறம் பூங்கொடி அழைத்து வர மற்றொரு புறம் மேகலா வந்தாள்.
வரதன் அருகில் அமர வைக்கப் பட்டாள் சுதா. அவளைக் காண ஆசையாக இருந்தது வரதனுக்கு.
ஏதேதோ மந்திரம் சொல்லச் சொன்னார் ஐயர். அப்போது கதிரவன் போனை எடுத்து மகனை அழைத்து “மாறா எங்க இருக்க? தாலி கட்டப் போறாங்க”, என்றார்.
“வெளிய தான் பா இருக்கேன். வந்துட்டேன்”, என்று சொல்லி அதை கட் செய்தான்.
திருமண கூட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரை அழைத்த கதிரவன் “அதோ மேடைல நிக்குற அரக்கு கலர் சேலை கட்டிருக்குற பொண்ணை ஒரு ரெண்டு நிமிசத்துக்கு போகஸ் பண்ணுங்க”, என்றார்.
அவனும் சரி என்று சொல்லி பூங்கொடியை போகஸ் செய்தான். கதிரவனின் தோற்றம் அவனை செய்ய வைத்தது. மனைவியைக் காண ஆர்வமும் தவிப்புமாக உள்ளே வந்தான் மணிமாறன். அவன் வந்த போது ரிசப்ஷனில் மணிவாசகம் கூட இல்லை. அவனை யாருமே கவனிக்க வில்லை. ஆனால் அவன் வாசனை பூங்கொடியைத் தொட்டதோ என்னவோ? வாசலை நோக்கித் திரும்பினாள்.
அங்கு நின்றவனைக் கண்டு அவள் காலடியில் பூமி சுழன்றது. அவள் தடுமாறி தன்னருகே நின்ற அவளது தோழி ரேவதியைப் பிடித்துக் கொண்டாள்.
“என்ன டி செய்யுது?”, என்று கேட்டாள் ரேவதி.
“எனக்கு அவங்க நினைவாவே இருக்கு டி. அதோ பாரு, அவங்க இங்க வர மாதிரியே இருக்கு”, என்று கையை காட்ட “ஏய் நிஜமாவே அண்ணன் வராங்க டி”, என்று ஆர்ப்பரித்தாள் ரேவதி.
“என்ன?”, என்று கேட்டவள் அடுத்த நொடி அங்கே யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் மேடையிலிருந்து வேகமாக அவனை நோக்கி ஓடினாள். அனைவருமே இவளுக்கு என்ன ஆச்சு? இப்படி ஓடுறா? என்று பதறி அவளைப் பார்க்க அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த மணிமாறனைக் கண்டார்கள். அடுத்த நொடி ஆங்காங்கு நின்றிருந்த மூன்று அண்ணன்களும் அவனை நோக்கி ஓட மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த வரதனும் அவனை வரவேற்க மணமேடையில் இருந்து எழுந்து ஓடினான்.
கேமரா மேன் பூங்கொடியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததால் நடந்த அனைத்தும் படமாக பதியத் துவங்கியது. வரதன் எழுந்து ஓடியதும் பெண் வீட்டினர் அனைவரும் திகைப்பில் இருக்க சுதாவின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த ரேவதி “அவங்க தான் மணிமாறன் அண்ணன். பூங்கொடி வீட்டுக்காரர்”, என்றாள்.
“ஓ”, என்று சொன்ன சுதாவுக்கு பூங்கொடியின் மனதை புரிந்து கொள்ள முடிந்தது.
“இது என்ன டி கூத்தா இருக்கு? இவனை வரவேற்க குடும்பமே இப்படி ஓடுது?”, என்று மேகலா கேட்க “அதானே அண்ணி, மாப்பிள்ளையே இவளை அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாரே? வாழ்க்கையிலும் இவளை இப்படி விட்டுட்டு போகாம இருந்தா சரி”,. (Alprazolam) என்று வாய் வைத்தாள் சுந்தரி.
அன்றே அவள் சொன்னது பழிக்கும் என்று சுதா கனவா கண்டாள்? கண்களில் நீர் வழிய நின்றிருந்த பூங்கொடியோ அவனை கண்ணில் நிரப்பி இதயத்தில் பத்திரப் படுத்திக் கொண்டாள். அவளது கண்ணீர் சொன்னது அவன் மீதான காதலை. அவனும் சுற்றுப் புறம் மறந்து தன்னுடைய கையை விரிக்க ஆசையுடன் அவன் கைக்குள் சரணடைந்தாள். அவன் கைகளும் ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டது.
கண்களில் நீர் வழிய இருவரும் மற்றவர் அணைப்பில் இருக்க அங்கிருந்த யாருக்குமே அது தவறாக தெரிய வில்லை. நெகிழ்ச்சியான தருணமாக தான் இருந்தது.
“வாங்க மாப்பிள்ளை”, என்று மணியம்மை சொன்னதும் அதையே மாற்றி மாற்றி பூங்கொடியின் அண்ணன்கள் சொன்னார்கள். அதன் பிறகு தான் நடப்புக்கு வந்தான் மணிமாறன். அங்கே மாப்பிள்ளைக் கோலத்தில் வரதனும் நிற்பது தெரிய “கொடி எல்லாம் அப்புறம் பேசலாம். முதல்ல கல்யாணம் நடக்கட்டும். வரதன் மச்சானும் நிக்குறார் பார்”, என்று அவன் காதில் முணுமுணுக்க அவசரமாக அவனிடம் இருந்து விலகினாள்.
அழுது கொண்டே சிரிக்கும் அந்த நிலையில் கூட அவள் அவ்வளவு அழகாக இருந்ததை அனைவரும் பார்த்தார்கள்.
“ஊர் கண்ணு முழுக்க என் பிள்ளை மேல தான். ராத்திரி மாப்பிள்ளைக்கும் இவளுக்கும் சுத்திப் போடணும்”, என்று எண்ணிக் கொண்ட மணியம்மை “பூவு மாப்பிள்ளையை அழைச்சிட்டு மேடைக்கு போ. பெரியவனே, தம்பிகளை அழைச்சிட்டு நீயும் மேடைக்கு போ”, என்று சொல்ல அடுத்த நொடி அனைவரும் மேடையை நோக்கி நடந்தார்கள்.
தன்னுடைய கணவருக்காக மற்ற அண்ணன்களும் வரதனும் ஓடி வந்தது பூங்கொடியை நெகிழ்த்தி இருந்தது. வரதன் மணமேடையில் இருந்து வந்ததை எண்ணி சுதா முகத்தில் மனத்தாங்கல் இருக்கிறதா என்று பார்த்தாள். அவள் முகம் புன்னகையுடன் சாதாரணமாக இருக்க “அண்ணி, இவங்க தான் என்னோட வீட்டுக்காரர்”, என்று சுதாவுக்கு அறிமுகம் படுத்தி வைத்தாள்.
அந்த வீட்டுக்கு வரப் போகும் மருமகளாக “வணக்கம் அண்ணா’, என்று கரம் குவித்தாள் சுதா. அவளின் அண்ணா என்ற அழைப்பில் மணிமாறனின் முகமும் மலர்ந்தது. அதன் பின் ஐயர் அனைவரின் நேரத்தையும் எடுத்துக் கொண்டார்.