தாலியை ஆசீர்வாதம் வாங்க ஐயர் கொடுக்க அதை வாங்க வந்தாள் சுந்தரி. ஆனால் அவர் பூங்கொடியிடம் கொடுக்க தட்டை வாங்கிச் சென்றவள் அனைவரிடமும் ஆஸி வாங்கி வந்தாள்.
எல்லாருடைய ஆசீர்வாதத்தில் வரதன் சுதா கழுத்தில் தாலியைக் கட்டினான். அதன் பின் அங்கே மணமக்களை அவர் ஏதேதோ சடங்குகள் செய்ய சொல்லிக் கொண்டிருக்க மற்றவர்கள் அனைவரும் கீழே வந்தார்கள்.
தன்னுடைய கணவரை நேராக மகேஸ்வரன் மற்றும் வள்ளி அருகில் அழைத்து வந்தவள் “மாமா இவங்க தான் என்னோட கணவர்”, என்று அறிமுகப் படுத்தினாள். அவனிடமும் “இவங்க தான் சுதா அண்ணியோட அம்மா அப்பா, அப்புறம் இது அவங்க அண்ணா”, என்று அறிமுகப் படுத்தினாள்.
மகேஸ்வரன் அவன் கை பற்றி சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். இளங்கோ ஒரு வணக்கம் சொன்னதோடு சரி. அதனால் மணிமாறனும் அவனிடம் எதுவும் பேச வில்லை.
அதன் பின் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது, போட்டோ எடுப்பது, கிஃப்ட் கொடுப்பது என்று நேரம் கழிந்தது. தங்களின் சார்பில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நகையை எடுத்துக் கொண்டு மணமேடைக்கு கணவனுடன் சென்றாள் பூங்கொடி.
மணிமாறனிடம் தங்க காப்பைக் கொடுத்து வரதனுக்கு போடச் சொன்னவள் சுதாவின் கரத்தில் தங்க வளையலைப் போட்டு விட்டாள். வரதன் அவளையும் மணிமாறனையும் மேலேயே இருக்கச் சொல்ல “வந்திருக்கவங்களைக் கவனிக்கணும் அண்ணா”, என்றாள்.
“நீங்களும் அண்ணனும் தான் எங்க கூட இருக்கணும் அண்ணி”, என்று சுதாவும் சொல்ல சற்று நேரம் இருவரும் மேடையில் நின்றார்கள்.
பின் குடும்ப புகைப்படம் எடுக்கப் பட்டது. அதன் பின் கீழே வந்த பூங்கொடி கதிரவன், தேவகி, ரேவதி மூவரையும் சாப்பிட அழைத்துச் சென்றாள். மாறனும் மனைவியுடனே இருந்தான். அப்போது அவளை யாரோ அழைக்கவும் கணவரைப் பார்த்தாள்.
அவனை விட்டுச் செல்ல வேண்டுமே என்ற தவிப்பும் அவனுடனே இருக்க வேண்டும் என்ற ஆசையும் கண்களில் தெரிய “உனக்கு என் கிட்ட பேச நிறைய விஷயம் இருக்குனு எனக்கு தெரியும் கொடி. ஆனா இப்ப முடியாது. நான் நாளைக்கு சாயங்காலம் தான் போவேன். நாளைக்கு முழுக்க டைம் இருக்கு. இப்ப போ. நான் அப்பா அத்தையை பாத்துக்குறேன்”, என்று சொன்னதும் அவள் அங்கிருந்து சென்றாள். ஆனாலும் நாளை இரவு அவன் சென்று விடுவான் என்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அதன் பின் உறவினர்கள் அனைவரும் கலைந்து செல்ல பெண் வீட்டினர் மணமக்களை அழைத்துகொண்டு மறுவீடு சென்றனர். அவர்களுடன் நியாயமாக பார்த்தால் பூங்கொடியும் மணிமாறனும் தான் செல்ல வேண்டும். அவர்களும் கிளம்பி விட்டார்கள் தான்.
ஆனால் அங்கே வந்த மணியம்மை அவர்களை இருக்கச் சொல்லி விட்டு மணிவாசகம், தம்பிதுரை, தாரணி மற்றும் மைதிலியையும் பிள்ளைகளையும் போகச் சொன்னாள்.
அவர்கள் சென்றதும் “ஏன் கிழவி நான் அண்ணி கூட மறுவீட்டுக்கு போகக் கூடாதா?”, என்று கேட்டாள் பூங்கொடி.
“அங்க போய் என்ன பண்ணப் போறடி? ஒழுங்கு மரியாதையா மாப்பிள்ளையை சாப்பிட வச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ. நாங்க இங்க மண்டபத்தை எல்லாம் ஒதுங்க வச்சிட்டு வர வரைக்கும் மாப்பிள்ளை கூட போய் ஓய்வு எடு”, என்றாள்.
தனக்கும் அவனுக்குமான தனிமையை ஏற்படுத்த தான் மணியம்மை அப்படிச் சொல்கிறாள் என்று புரிந்த பூங்கொடி மணியம்மையைக் கட்டிப் பிடித்து “அம்மான்னா அம்மா தான்”, என்ற படி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“போதும் போதும். இதை மாப்பிள்ளைக்கு கொடு”, என்ற மணியம்மை “கேசவா”, என்று அழைத்தார்.
“அம்மா”
“நீயும் உன் பொண்டாட்டி கூட சாப்பிட போ. மாப்பிள்ளையையும் பூவையும் சாப்பிட வை”, என்றார்.
கேசவனும் எல்லாரையும் அழைத்துக் கொண்டு சாப்பிடச் சென்றார்.
சாப்பிட்டு முடித்ததும் மண்டபத்தை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த கேசவனுடன் சேர்ந்து கொண்டான் மணிமாறன். அவன் அருகே வந்த பூங்கொடி “சார் என்ன பண்ணுறீங்க?”, என்று கேட்டாள்.
“மச்சானுக்கு உதவுறேன் டி”
“மச்சானுக்கு உதவ ஆயிரம் பேர் இருக்காங்க. இப்ப மச்சானோட தங்கச்சிக்கு உதவனும்?”
“அது உதவியா டி? உனக்கு செய்றது எனக்கு வரம் தெரியுமா? என்ன செய்யணும் சொல்லு கொடி?”
“கால் வலிக்குது. கொஞ்சம் அமுக்கி விட்டா நல்லா இருக்கும்”
போலீஸ்காரன் என்ற எந்த தெனாவெட்டும் இல்லாமல் “செஞ்சிட்டா போச்சு. ஆனா எப்படி டி?”, என்று சுற்றி இருந்த ஆட்களைப் பார்த்து கண்களைச் சுழல விட்டான்.
“வாங்க சொல்றேன்”, என்று அவனுடைய கை பிடித்து அழைத்து வந்தாள். “எங்க டி கூட்டிட்டு போற? இங்க வேலை கிடக்கு. மச்சான் தனியா வேலை செய்றார்”, என்றான்.
“அதை செய்ய ஆள் இருக்கு. அண்ணனோட பிரண்ட்ஸ் இருக்காங்க. நீங்க வண்டியை எடுங்க”
“நம்ம வீட்டுக்கா போறோம்?”, என்று அவன் கண்கள் மின்னக் கேட்க “இல்லைங்க அம்மா வீட்டுக்கு”, என்றாள்.
அங்கு ஏதோ வேலை போல, அதனால் தான் அழைத்துச் செல்கிறாள் என்று எண்ணி வண்டியைக் கிளப்பினான்.
அங்கு யாரும் இல்லாததால் வீடே வெறிச்சென்று இருந்தது. அவசரம் அவசரமாக வீட்டுக்குள் சென்றவள் அவனை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்று கதவை அடைத்தாள்.
அவன் திகைத்து விழிக்க அடுத்த நொடி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி விட்டாள். அவள் அழுகையில் அவனுக்கும் கண்ணீர் வந்தது.
“அழாத டா”, என்று அவன் எவ்வளவோ சமாதானம் செய்ய அவளால் அது முடியவே இல்லை. அவனது பிரிவு அவளை அந்த அளவுக்கு பாதிதிருந்தது.
சிறிது நேரம் கழித்து அழுகையை நிறுத்தியவள் அவன் முகமெங்கும் ஆவேசத்துடன் முத்தமழை பொழிய அவளுடைய உதடுகள் அவனால் சிறை பிடிக்க பட்டது.
இத்தனை நாள் தாகத்தையும் சேர்த்து வைத்து அவள் இதழ்களில் கவிதை எழுதியவன் தன்னுடைய விரல்களால் மனைவி என்ற வீணையை மீட்ட ஆரம்பித்தான். அவன் கரத்தில் நெகிழ்ந்து கொண்டிருந்தவள் அவனுடன் ஒன்றி விட உணர்ச்சி விளித்துக் கொள்கையில் உசாராகி அவளிடம் இருந்து விலகிக் கொண்டான்.
அவனுடைய கட்டுபாடு புரிய அவளுக்கு பிரம்மிப்பாக தான் இருந்தது. தடுமாறும் வேளையில் கூட நிலையாக இருக்கும் அவனது நிலை அவளை ஆச்சர்யப் பட வைத்தது.
அவள் அவனையே திகைப்பாக பார்க்க “இப்போதைக்கு இந்த மினி டிபன் போதும்”, என்றவன் அவளை கட்டி அணைத்துக் கொண்டான்.
அதன் பின் அவன் மனம் அறிந்து அவளும் “எப்ப அங்க இருந்து கிளம்புனீங்க? ஏன் என் கிட்ட வறேன்னு சொல்லலை?”, என்று கேட்க ஆரம்பித்தாள்.
அவனும் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் பேச ஆரம்பித்ததில் மூன்று மணி நேரம் கடந்ததே தெரிய வில்லை. அப்போது மணியம்மை பூங்கொடியை போனில் அழைத்தார்.
அவன் பிடியில் இருந்து விலகி அவள் போனை எடுக்க அவளை தன் பிடியில் வைத்து பேசவே அனுமதித்தான்.
“சொல்லு கிழவி”, என்று அவள் சொன்னதும் அவள் தலையில்; வலிக்காமல் கொட்டினான்.
“ஆ”, என்று அவள் போலியாக அலற “மாப்பிள்ளை கிட்ட நல்லா கொட்டு வாங்கினியா டி?”, என்று கேட்டாள் மணியம்மை.
“அதைக் கேட்டு சந்தோஷப் படவாமா கால் பண்ணின?’
“யாரு டி இவ? அதுக்கா கூப்பிடுவாங்க. நானும் பெரியண்ணனும் பெரியண்ணியும் வீட்டுக்கு கிளம்பிட்டோம். பத்து நிமிசத்துல வந்துருவோம். அப்புறம் இப்ப நைட்டுக்கு சமைக்க ஆள் வருவாங்க. கதவை திறந்து வை. பாத்திரம் கேட்டா பாத்திர ரூமைக் காட்டு. ராத்திரி ஊர் விருந்து இருக்கு. அப்புறம் மாப்பிள்ளையை ஓய்வெடுக்கச் சொல்லிட்டு ஆரத்தி கரைச்சு வை. மறுவீட்டுக்கு போன வேன் கிளம்பிருச்சாம். கால் மணி நேரத்துல வந்துரும். சீர் வரிசை இறக்க மேக்கால உள்ள ரூமைத் திறந்து வை”
“சரி மா”, என்று சொல்லி போனை வைத்தவள் அன்னை சொன்னதை செய்ய அவனும் ஓய்வெடுக்காமல் அவள் பின்னேயே அலைந்தான்.
“நீங்க ரெஸ்ட் எடுங்க”
“ரூம்ல ரெஸ்ட் எடுத்தா உன்னோட அருகாமையை மிஸ் பண்ணுவேன் டி”, என்று அவன் வழிய அவள் கண்களிலும் காதல் வழிந்தது.
அவர்கள் கதவை திறந்து வைத்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க சமைக்கும் ஆட்கள் வந்தார்கள். அவர்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தான் மணிமாறன்.