பூங்கொடியோ ஆரத்தி கரைக்க அடுப்படிக்கு சென்றாள். இனி அவர்கள் எதிர்பார்த்த தனிமை கிடைக்காது என்று தான் இருவருக்குமே தெரியுமே?
அதன் பின் மணியம்மை வந்ததும் பூங்கொடியையும் மங்களத்தையும் ஒவ்வொரு வேலையாக செய்ய சொல்ல ஒவ்வொன்றாக செய்தார்கள். வீட்டின் பின் பக்கம் சமையல் ஆரம்பமானது. கேசவனுடன் சேர்த்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் மணிமாறன்.
சிறிது நேரத்தில் வேனும் வந்து விட மணமக்களுக்கு ஆரத்தி எடுக்கச் சொன்னார்கள். பூங்கொடி ஆரத்தி எடுக்க அவளுக்கு தன்னுடைய கழுத்தில் போட்டிருந்த புதிய தங்கச் செயினைக் கழட்டிக் கொடுத்தான் வரதன். அதைக் கண்டு வயிறு எறிந்தார்கள் மேகலாவும் சுந்தரியும்.
ஏனென்றால் அவர்கள் வீட்டில் ஆரத்தி எடுக்கும் போது சுந்தரிக்கு நூறு ரூபாய் தாளை மட்டுமே போட்டான் வரதன். அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொல்லி பால் பழம் கொடுக்க ஒரு பக்கம் சீர் வரிசை இறங்கிக் கொண்டிருந்தது.
வரதன் அண்ணன்கள் மற்றும் மணிமாறனுடன் ஐக்கியமாக சுதாவை ஓய்வெடுக்க அழைத்துச் சென்றாள் பூங்கொடி.
“இது தான் அண்ணி இனி உங்க ரூம்”, என்று பூங்கொடி சொல்ல அவளைக் கண்டு நட்பாய் புன்னகைத்தாள் சுதா.
அதன் பின் அவளுக்கு மேக்கப் கலைத்து உடை மாற்றச் சொன்னாள். சுதா “குளிக்க போறேன்”, என்று சொல்ல “கொஞ்ச நேரம் கழிச்சு குளிங்க அண்ணி. இப்ப குளிச்சாலும் கசகசன்னு தான் இருக்கும்”, என்றாள்.
சரி என்று சொன்ன சுதா பூங்கொடியுடன் பேசிக் கொண்டிருக்க மற்ற அண்ணிகளும் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் இணக்கமாக பேசியது சுதாவுக்கு இருந்த படபடப்பை விரட்டியது. தானும் இனி இந்த வீட்டில் ஒருத்தி என்ற உணர்வே அவளை பெருமை அடையச் செய்தது.
சுந்தரியும் மேகலாவும் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து வயிறு எரிந்து கொண்டிருந்தார்கள். அதுவும் ஹாலிலே பூங்கொடியின் முழு உருவப் படத்தை பெரியதாக மாட்டி வைத்திருந்தார்கள். அது மட்டுமில்லாமல் அவளுடைய திருமணப் புகைப்படம் ஆங்காங்கே மாட்டப் பட்டிருந்தது. கூடவே அந்த வீட்டில் இருப்பவர்களின் புகைப்படங்களும் இருந்தது. அதில் எல்லாவற்றிலும் பூங்கொடி இருந்தாள்.
“இந்த சீமாட்டிக்கு வந்த வாழ்வைப் பாத்தியா சுந்தரி?’, என்று கேட்டாள் மேகலா.
“ஆமாங்க அண்ணி. என்னமோ ராஜகுமாரி மாதிரில்ல தாங்குதாங்க. நம்ம வீட்ல அப்படியா? நமக்கும் தான் அண்ணன் தம்பி இருக்காங்க. அவங்க அவங்க பொண்டாட்டி வந்ததும் நம்மளை கண்டுக்குறாங்களா என்ன? ஆனா இந்த வீட்டு மருமகள்களும் அவளை மக மாதிரி தானே தாங்குறாங்க? அவ கிட்ட என்னவோ இருக்கு அண்ணி. நம்ம சுதாவைக் கூட அந்த பூங்கொடி வசியம் பண்ணிட்டா”, என்றாள் சுந்தரி.
இந்த பேச்சைக் காதில் கேட்ட மணிமாறன் உண்மையிலே தன்னுடைய மனைவி அனைவரையும் வசியம் செய்யும் வசியக் காரி தான் என்று எண்ணிக் கொண்டு அவளைத் தேடினான். அவன் தேடலைக் கண்ட மணியம்மை “ஏட்டி பூங்கொடி இங்க வா”, என்று அழைத்தாள்.
“என்ன மா?”
“மாப்பிள்ளையை அழைச்சிட்டு போய் மேல உள்ள ரூமை அலங்கரி போ”
“எதுக்கு மா?”
“முதராத்திரிக்கு டி. கீழ எல்லாம் ஆளா இருக்காங்க. மேலன்னா தொந்தரவு இருக்காது. பூவை எல்லாம் மேல இறக்கிட்டாங்க டி”
“அதை நான் எப்படி செய்ய மா?”, என்று தயங்கியவளுக்கு வெட்கம் வந்தது.
“நீயும் மாப்பிள்ளையும் தான் டி செய்யணும். அது தான் முறை. மாப்பிள்ளையும் உன்னை தேடினார். என்னன்னு கேட்டுட்டு போய் தயார் செய்யுங்க”, என்று மணியம்மை சொல்லும் போது அங்கே வந்த கேசவன் “பிள்ளையை எங்க மா போகச் சொல்லிட்டு இருக்க?”, என்று கேட்டார்.
“சுதாவை பாக்க ஊர்க்காரங்க எல்லாம் வருவாங்க., போய் உன் அண்ணி கிட்ட சொல்லி ரெடி பண்ணச் சொல்லிட்டு நீ மாப்பிள்ளை கூட வந்து நில்லு”
“சரிங்கண்ணா”, என்று சொல்லி விட்டு மூத்த அண்ணியிடம் வந்து சொன்னவள் கணவனைத் தேடி வந்தாள்.
“தேடுனீங்களா?”
“ஆமா உனக்கு எப்படி தெரியும்? நான் யார் கிட்டயும் சொல்லலையே?”
“அம்மா சொல்லுச்சு”
“எனக்கு சூப்பர் மாமியார் டி? என் பார்வையை வச்சே கண்டு பிடிச்சிட்டாங்க பாத்தியா?
“சரி சரி மாமியாரை புகழ்ந்தது போதும். எதுக்கு தேடுனீங்க?”
“என்னோட வசியக்காரி நீ தான்னு தோணுச்சு. அதான் தேடினேன்”, என்று புன்னகைத்தான்.
“நான் உங்களை வசியம் செய்றேனா? நீங்க தான் என்னை அப்படி மயக்கி வச்சிருக்கீங்க?”, என்று அவள் மயக்கத்துடன் சொல்ல “கொல்ற டி. அவ்வளவு அழகா இருக்க? அதுவும் இந்த சேலைல சான்ஸே இல்லை”, என்று சொன்னவனின் கண்கள் அவளை மேய்ந்து கொண்டிருந்தது.
“உங்களுக்கு பொருத்தமா இருக்கணும்ல? அதான் கடவுள் அவ்வளவு அழகையும் எனக்கு கொடுத்துட்டார் போல?”, என்று அவள் கொஞ்ச அவன் இன்னும் கிறங்கினான்.
அதற்குள் பந்தி ஆரம்பிக்க அதன் பின் யாருக்கும் நிற்க நேரம் இல்லை. ஒன்பது மணி ஆனதும் சத்தம் கொஞ்சம் அடங்கியது. சிறுவர்கள், உறவினர்கள் அனைவரும் உறங்கச் சென்றார்கள்.
ஆண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் மணிமாறனும் இருந்தான். தங்கைக்கு துணையாக வந்த இளங்கோ மட்டும் தனியே இருக்க “டேய் வரதா, உன் மச்சானையும் கூப்பிடு டா. அவர் மட்டும் தனியா இருக்கார்”, என்றார் கேசவன்.
“அப்பவே கூப்பிட்டேன் அண்ணே. அவர் வரலைன்னு சொல்லிட்டார். அதான் போன் கையில இருக்கே. அவருக்கு நேரம் போகுமாம்”, என்றதும் அதன் பின் யாரும் அவனைக் கவனிக்க வில்லை.
பதினொரு மணி முதல் பன்னிரெண்டு மணி வரை நல்ல நேரம் குறித்துக் கொடுத்ததால் சுதாவுக்கு பொறுமையாக அலங்காரம் நடந்தது.
பெண்கள் அனைவரும் அங்கே கூடியிருந்ததால் பேச்சு களை கட்டியது. முதலிரவு பற்றி, படங்களில் வரும் காதல் காட்சிகளை பற்றி பேசிக் கொண்டிருந்ததால் பூங்கொடிக்கு என்னவோ போல இருந்தது. சுதாவுக்கும் தான்.
கொஞ்ச நேரத்துக்கு மேல் அவர்கள் பேச்சை சகிக்க முடியாமல் “நான் ரூமை அலங்கரிக்கப் போறேன் பா”, என்று சொல்லி விட்டு வெளியே வந்து மணிமாறனைத் தேடினாள்.
“மாப்பிள்ளை ரூமை டெக்கரேட் பண்ண போனார் மா”, என்று தம்பிதுரை சொல்ல அங்கு விரைந்தாள்.
அவன் தனியாகவே எல்லா அலங்காரத்தையும் முடித்திருந்தான். அவளைக் கண்டதும் அவன் கண்கள் மின்ன அவளை அணைத்துக் கொண்டான்.
“ஐயோ என்ன இது? கதவு திறந்து கிடக்கு”, என்று அவள் சொல்ல “அடைச்சிட்டா போச்சு”, என்றவன் கதவை அடைத்து விட்டான்.
“ஏங்க என்ன பண்ணுறீங்க? யாராவது வரப் போறாங்க?”
“அதுக்கு இன்னும் நேரம் இருக்கு டி. பிளீஸ் என் கைக்குள்ளயே இரு. எத்தனை நாள் ஆச்சு? உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன் டி. தினமும் உன்னை நினைச்சிட்டே தான் தூங்குவேன் தெரியுமா?”, என்று அவன் கொஞ்ச அவன் கைக்குள் பாந்தமாக அடங்கினாள். கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். சாய்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே சாய்ந்த படியே தூங்கிப் போனார்கள்.
வெகு நாட்கள் கழித்து தன்னுடைய இணையை சந்தித்த நிம்மதியா? இல்லை முந்தைய நாட்களில் இருவரும் சரியாக தூங்காததாலா? எதுவென்று தெரிய வில்லை. அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம் இருவருக்கும்.
சரியாக பதினொரு மணிக்கு சுதாவை அலங்கரித்து விட்டு பெண்கள் அனைவரும் அவரவர் அறைக்குச் செல்ல, சுதாவை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றார்கள் சுந்தரியும் மேகலாவும்.
அங்கே கதவு உள் பக்கம் பூட்டியிருக்க கதவைத் தட்டினார்கள். அவர்கள் திறக்க வில்லை என்றதும் மீண்டும் மீண்டும் தட்டப் பட முதலில் கண் விழித்தது மணிமாறன் தான்.
“கொடி எந்திரி டி, கதவைத் தட்டுறாங்க. அடக்கடவுளே இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே?”, என்று தலையில் தட்டிக் கொண்டான்.
“ஐயையோ ஏதாவது நினைப்பாங்களா?”, என்று அவள் பதற “கொஞ்சம் சங்கடமான சூழ்நிலை தான். ஆனா நாம புருஷன் பொண்டாட்டி தானே? அது மட்டுமில்லாம இங்க இருக்குறவங்க நம்ம குடும்பம். எதுவும் கிண்டல் பண்ணினாலும் தப்பா எடுக்க மாட்டாங்க வா”, என்று அழைத்துச் சென்றவன் கதவை திறந்தான்.