“சரி அதுக்கென்ன? அவங்க தானே இந்த ரூமை அலங்கரிச்சது?”
“ம்ம், அலங்கரிச்சிட்டு தூங்கிட்டாங்க போல?”
“அதுக்கென்ன டி? பூங்கொடி நல்லா தூங்கி எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? அவ்வளவு வேலை பிள்ளைக்கு. மாப்பிள்ளைக்கும் அங்க பயங்கர கஷ்டம். அதனால தூங்கிருக்கலாம். இதுல என்ன பிரச்சனை?”
“தப்பா… என்ன டி? தப்பா என்ன? ஏதாவது சொல்லிட்டாங்களா?”, என்று படபடப்பாக கேட்டான்.
“ஹிம்… ஆமாங்க…. முதலிரவு கொண்டாடுனீங்களான்னு…. இன்னும் ஆசை அடங்கலையா அது இதுன்னு தப்பு தப்பா… அதுக்கு பூங்கொடி அண்ணி எங்க அண்ணியைத் திட்ட அதைப் பார்த்து எங்க அண்ணன் வந்து பூங்கொடி அண்ணியை திட்டிட்டான். அதனால….”
“அதனால….”, என்று உறுமியவனின் குரலில் சுதாவின் நாக்கு தந்தி அடித்தது. வாயில் இருந்து வார்த்தைகள் வருவேனா என்று சண்டித் தனம் செய்தது.
“சொல்லு… அப்புறம் என்ன ஆச்சு?”, என்று வெறுப்புடன் வந்தது வரதனின் குரல்.
“ஓ”, என்று சொல்லி நிதானமாக அவளைப் பார்த்தான். அவன் பார்வையில் அவளுடைய அடிவயிறு ஜில்லிட்டுப் போனது.
“இவ்வளவு விஷயம் நடக்கும் போது மேடம் எங்க இருந்தீங்க?”, என்று நக்கலாக கேட்டான் வரதன்.
“இங்க தான் இருந்தேன்”, என்று அவள் மென்று முழுங்க “இருந்து என்ன பண்ண?”, என்று கேட்டான்.
“அக்கா பேசாதேன்னு சொன்னேன். ஆனா அவ கேக்கலை”
“ஓஹோ, அப்படின்னா நீ என் தங்கச்சிக்காக சப்போர்ட் பண்ணி பேசலை. உன் குடும்பத்தை பேச விட்டு வேடிக்கை பாத்துருக்க. அப்புறம் என் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் விரட்டி விட்டுட்டு நல்ல பிள்ளை மாதிரி முதலிரவுக்கு தயாராகிட்ட? அப்படித் தானே?”, என்று அவன் கேட்க பயத்திலும் குற்ற உணர்விலும் அவள் முதுகுதண்டு சிலிர்த்தது.
“எனக்கு என்ன செய்யன்னு தெரியலைங்க. ஆனா அதை உங்க கிட்ட இருந்து மறைக்கணும்னு நினைக்கலை. மறைக்கணும்னு நினைச்சிருந்தா நான் சொல்லிருப்பேனா? நடந்தது பெரிய தப்பு தான். எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. ஆனா வெறுத்துறாதீங்க. நிஜமாவே அந்த நேரத்துல எனக்கு என்ன செய்யன்னு தெரியலைங்க”
“ஆமா ஆமா உனக்கு ஒண்ணும் தெரியாதுள்ள? இப்ப டாப்பா போட்ட பிறகு கூட என்ன நடக்கும்னு தெரியாத குழந்தை தானே நீ?”
“ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“நான் பேசவே ஆரம்பிக்கலை டி. சரி இவ்வளவு நடந்த பிறகு மாப்பிள்ளை என்ன சொன்னார்? ஒண்ணுமே சொல்லலையா?”
“என் குடும்பத்தை சாக்கடைன்னு சொல்லிட்டு போய்ட்டார்”
“சரியா தானே சொல்லிருக்கார்? உன் குடும்பமே சாக்கடை தானே?”, என்று அவன் கேட்க அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. ஒரு நாளிலே தன்னுடைய குடும்பத்துக்கு இப்படி ஒரு பெயர் வாங்கிக் கொடுத்து விட்டாளே? தான் அந்த இடத்தில் அவர்களை கண்டித்து அங்கிருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும் என்று காலம் கடந்து புரிந்தது.
“நீழிக் கண்ணீர் வடிக்கிறியா? வாடி வெளிய. உன் குடும்பத்தை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறேன்”, என்று அவள் கை பற்றி இழுத்தான்.
“ஏங்க இந்த பிரச்சனையை இதோட விடுங்க. நான் நாளைக்கு எல்லாரையும் பூங்கொடி அண்ணி, அப்புறம் மணிமாறன் அண்ணா கிட்டயும் மன்னிப்பு கேக்க வைக்கிறேன்”
“மன்னிப்பு கேட்டா? நடந்தது இல்லைன்னு ஆகிருமா? அவ யார் தெரியுமா டி? எங்க வீட்டு ராஜகுமாரி டி. அவளை நாங்க தங்கத் தட்டுல வச்சு தாங்குறோம். எங்க எல்லாருக்கும் உயிர். எங்க மாப்பிள்ளை எப்படி பட்டவர்னு தெரியுமா டி? அவளை கண்ணுக்குள்ள வச்சு அவ குடும்பமே தாங்குது. அவ கிட்ட தரம் கெட்ட வார்த்தையை பேசினவங்களை நான் மன்னிக்கணுமா? என் தங்கச்சி கிட்ட மன்னிப்பு கேக்க கூட உன் ஆளுகளுக்கு தகுதி இல்லை டி”
“புரியுதுங்க. என் தப்பும் எனக்கு புரியுது. எனக்காக இதை மன்னிச்சிருங்க. உங்க தங்கை உங்களுக்கு உயிர்ன்னு தெரிஞ்சும் நான் அமைதியா இருந்துட்டேன். இப்ப எல்லாம் புரியுது. எனக்கும் இனி நீங்க தானே எல்லாமே? பிளீஸ் எனக்காக இந்த பிரச்சனையை அப்படியே விட்டுருங்க”
“விடுறதா? அதுவும் உனக்காக விடணுமா? யார் டி நீ?”
“ஏங்க நான் யாரா? நான் உங்க வாழ்க்கைல பாதி இல்லையா? உங்க தங்கச்சி உங்க உயிர்னா நானும் உங்க உயிர் தானே?”
“நீ…”, என்றவன் தன்னுடைய தலை முடியை காண்பித்து “இதுக்கு சமம். என் தங்கைக்கு ஈடா என் மனசுல யாருமே வர முடியாது. உனக்காக கூட இதை நான் மன்னிக்க மாட்டேன். எங்க வீட்டு குத்துவிளக்கை கலங்க வச்ச உன் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்கிறேன்”, என்றவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.
அவன் பின்னேயே அழுது கொண்டே சென்றாள் சுதா. அவன் பேசியது கஷ்டமாக இருந்தாலும் அவன் மனம் தெரிந்த அவளுக்கு நடந்ததும் பெரிய தவறாகவே பட்டது.
கீழே வந்த வரதன் “டேய் இளங்கோ வெளிய வா டா”, என்று கத்தினான்.
வரதன் சத்தம் கேட்டதும் அங்கே அனைவரும் குழுமி விட்டார்கள். “என்னங்க அமைதியா இருங்க”, என்று அவனை அடக்கப் பார்த்தாள் சுதா.
யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. “டேய் இளங்கோ வெளிய வரப் போறியா? இல்லையா டா? பொம்பளைங்களை பேச விட்டு வேடிக்கை பாத்த பேடிப் பயலே”, என்று அவன் மீண்டும் கத்த “டேய் அவர் உன் பொண்டாட்டிக்கு அண்ணன். இப்படி மட்டு மரியாதை இல்லாம பேசுற?”, என்றார் கேசவன். மற்ற அனைவருக்குமே வரதன் பேச்சில் அதிர்ச்சி தான். அவன் எப்போதும் யாரையும் இப்படி எல்லாம் பேசக் கூடியவன் அல்ல.
“அண்ணா நான் ஒண்ணு செஞ்சா அதுல காரணம் இருக்கும் தானே?”
“இருக்கும் டா…. ஆனா….”
“அப்படின்னா கொஞ்சம் அமைதியா இருங்க. டேய் வா டா வெளியே”, என்று அவன் கத்த கொஞ்சம் பயத்துடன் தான் வெளியே வந்தான் இளங்கோ.
“என்ன இவ்வளவு மெதுவா வர? இங்க உன் தங்கச்சிக்கு முதலிரவா? இல்லை உனக்கா? நீ கொண்டாட்டிட்டு வரியோ?”, என்று ஏளனமாக கேட்டான் வரதன்.
அதில் இளங்கோ தலை குனிய, சுந்தரிக்கும் அவமானமாக இருந்தது.
“டேய் வரதா ஏன் டா இப்படி பண்ணுற? நீயா டா இப்படி பேசுற?”, என்று கேட்டார் மணியம்மை.
“இவனும் இவன் பொண்டாட்டியும் இவன் அக்காவும் பண்ணினதை விட நான் ஒண்ணும் பண்ணலை மா. எங்க அந்த பொம்பளை? எங்க டா உன் அக்கா? ஏய் வாடி, வெளிய”, என்று மேகலா இருந்த அறைக் கதவைத் தட்ட அப்போது அங்கே மேகலாவும் வந்தாள். அனைவரையும் பார்த்து நடுக்கம் வந்தது அவளுக்கு.
“என்ன மகாராணிக்கு நல்ல தூக்கமோ?”, என்று வரதன் மேகலாவைப் பார்த்து நக்கலாக கேட்க அவள் திருதிருவென்று விழித்தாள்.
“என்ன டி முழிகிற? ஆமா எனக்கு ஒரு சந்தேகம். உன் அப்பன் வீட்லயே ரொம்ப நாளா குத்த வச்சிருக்கியே? உன் புருசனும் இப்ப உன் கூட இல்ல. அப்ப ஆசைக்கு எவன் கிட்ட போவ?”, என்று கேட்க சுதா காதை மூடிக் கொண்டாள். மற்ற பெண்கள் அனைவருக்கும் வரதன் பேச்சில் எரிச்சல் வந்தது உண்மை.
“டேய், யார் கிட்ட என்ன பேசுற? வரை முறை இல்லாம பேசுவியா?”, என்று கேட்டு அவன் கன்னத்தை பதம் பார்த்தார் மணியம்மை.
“மாப்பிள்ளை வார்த்தையை அளந்து பேசுங்க. பொண்ணைக் கொடுத்துட்டோம்னு தான் அமைதியா இருக்கோம்”, என்றான் இளங்கோ. என்ன தான் தவறு அவர்கள் மேல் என்றாலும் அவன் பேச்சில் அவனுக்கும் கோபம் வந்தது.
“இல்லைன்னா கிழிச்சிருவியோ?”, என்று கேட்ட வரதனுக்கு மணியம்மை அடித்தது எல்லாம் பெரியதாகவே தெரிய வில்லை.
“டேய் வரதா, என்ன டா இதெல்லாம்? கோபத்தை விட்டுட்டு முதல்ல நிதானமா இரு டா”, என்றார் கேசவன்.