“உன்னோட சமையல் திறமையைப் பத்தி என் மாமியார், அதான் உன் அம்மா புட்டு புட்டு வச்சிட்டாங்க”, என்று சொல்லி சிரித்தான்.
“அந்த கிழவி சொல்றதை நம்பாதீங்க”, என்று அவள் பட்டென்று சொல்ல “அது என்ன டி என் அத்தையை கிழவின்னு சொல்ற? இனி சொன்னா பாத்துக்கோ”, என்று மிரட்டினான்.
“சொன்னா என்ன பண்ணுவீங்களாம்?”
“சொன்னா என்ன பண்ணுவேணா? சொல்ற இந்த வாயை..”, என்ற படி தன்னுடைய விரலால் அவளுடைய இதழை வருட அவளுக்கு அடிவயிற்றில் உணர்வுகள் கிளர்ந்தது.
“பதில் சொன்னா விட்டுறேன்னு சொன்னீங்கல்ல? விடுங்க”, என்று கெஞ்சினாள்.
“ஒடுறதுலே குறியா இருக்க? நான் எதுக்கு கூப்பிட்டேன்னு தெரிய வேண்டாமா?”
“சொல்லுங்க”
“எங்க பெரியத்தை வீட்டுக்கு விருந்துக்கு போகணும். கிளம்பச் சொல்றதுக்கு தான் கூப்பிட்டேன்”, என்ற படி அவன் அவளை இறுக்க “இவ்வளவு தானா? இதுக்கா கூப்பிட்டீங்க?”, என்று ஏமாற்றமாக கேட்டாள்.
“ஆமா அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன். நீ வேற என்ன நினைச்ச?”
“ஒரு மண்ணும் நினைக்கலை”, என்ற படி அவனிடம் இருந்து விலகி நின்றவள் “அதுக்கு இப்படி தான் கூப்பிடணுமா? அங்கயே சொல்ல வேண்டியது தானே?”, என்று கேட்டாள். ஏதோ நிறைவேறாத எரிச்சல் அவள் குரலில் வந்திருந்தது. அதை அவளே உணர வில்லை.
“அங்கயே சொல்லிருந்தா இப்படி உன் கிட்ட நின்னுருக்க முடியுமா? அப்படியே பட்டு மாதிரி இருக்குற உன் உதட்டை தொட்டுருக்க முடியுமா?”, என்று அவன் கண்ணடித்த படி கேட்க அவன் கேள்வியில் சிவந்த முகத்தை மறைத்த படி “நான் போறேன்”, என்றாள்.
“எங்க டி போற? கிளம்பு”
“அப்படின்னா நீங்க வெளிய போங்க”
“ஏன் நான் இருக்க கூடாதா?”, என்று அவன் ஏக்கத்தோடு கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பிளீஸ்”, என்று கண்ணைச் சுருக்கி கெஞ்சினாள். அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து “ரெண்டு நிமிஷம் பொறு. நான் கிளம்பி கீழே போய்றேன். அப்புறம் கிளம்பு”, என்றவன் தன்னுடைய டீசர்ட்டை கழட்டினான்.
அவள் பேவென்று அவனைப் பார்க்க “நான் மட்டும் உன்னைப் பாக்க கூடாது. நீ மட்டும் என்னைப் பாக்கலாமோ? கண்ணை மூடு டி”, என்று அவன் சிரிப்புடன் சொல்ல அவசரமாக தன்னுடைய இரு கைகளால் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டாள்.
அவள் செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டே வேறு உடை மாற்றினான். “போதும் போதும் கண்ணைத் திற”, என்று சொன்ன பிறகு தான் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தாள்.
பார்த்ததும் அவன் அழகில் அசந்து தான் போனாள். “என்ன லுக்? நல்லா இருக்கேனா?”, என்று அவன் கேட்க “ம்ம்”, என்று முணுமுணுத்தாள்.
“தேங்க்ஸ், சரி நீ கிளம்பு”
“வெளிய போங்க”
“நானும் உன்னை மாதிரி கண்ணை கையால் மூடிட்டு இங்கயே நிக்குறேன். பிளீஸ் டி. கையை எடுக்கவே மாட்டேன்”, என்று சிரிப்புடன் சொல்ல அவனது சிரிப்பே அவனது எண்ணத்தைக் காட்டிக் கொடுத்தது.
அவனாவது கண்ணை மூடி நல்ல பிள்ளையாக இருப்பதாவது? “நீங்க எப்படியும் என்னை கிளம்ப விட மாட்டீங்க. நாம எங்கயும் போக வேண்டாம். வீட்லே விஷம் செய்றேன்… சாரி சாரி ரசம் செய்றேன். அது தான் இன்னைக்கு நமக்கு விருந்து”, என்று சொல்லி அவள் கீழே செல்லப் பார்க்க அதற்கு மேல் அவன் ஏன் அங்கே இருக்கப் போகிறான்.
“நீ செய்ற விஷம் வேண்டாம் தாயே. கிளம்பு, கிளம்பு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
மீண்டும் வந்தாலும் வருவான் என்பதால் கதவை பூட்டி விட்டு சேலையை எடுத்துக் கட்டினாள்.
பெரியவர்களிடம் சொல்லி விட்டு இருவரும் பத்மா வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்கள். பத்மாவுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். இருவருக்குமே திருமணம் முடிந்து குழந்தைகள் இருந்தார்கள்.
இவர்கள் சென்றதும் பத்மாவும் அவளது கணவர் தங்கமும் இவர்களை பாசமாக வரவேற்றார்கள். பத்மாவின் பிள்ளைகள் இருவரும் விருந்துக்காக தாய் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
அவர்களுக்காக வாங்கி வந்திருந்த பழங்களையும் பண்டங்களையும் பூங்கொடி கையில் கொடுத்து கொடுக்கச் சொன்னான் மணிமாறன். அவளும் புன்னகையுடன் பத்மாவிடம் கொடுத்தாள்.
“எதுக்கு மா இதெல்லாம்? நம்ம வீட்டுக்கு வரதுக்கு இதெல்லாம் வாங்கிட்டு வரணுமா?”, என்று கேட்ட பத்மா அவள் கையில் இருந்த கவரை வாங்கி “இந்த பழம் எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க? கமலா ஆரஞ்ச் வாங்கிட்டு வந்துருக்கலாம்ல? இந்த திராட்சை புளிக்கும். எதுக்கு ஸ்வீட் எல்லாம்? எனக்கு இனிப்பு பிடிக்காது”, என்று ஒவ்வொன்றாக குறை சொன்னாள்.
அதில் பூங்கொடி முகம் சுருங்கிப் போனது. ஆனாலும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். பத்மா அப்படி இருந்தாலும் அவளது பிள்ளைகளான ரேகாவும் கலாவும் பூங்கொடியிடம் நன்கு பேசினார்கள்.
“மாறன் உன்னை நல்லா வச்சிருக்கானா? இல்லை வீட்லயும் போலீஸ் மாதிரி நடந்துக்குறானா?”, என்று கேட்டாள் பத்மாவின் மூத்த மகள் ரேகா.
சிறு சிரிப்புடன் பூங்கொடி அவனைப் பார்க்க அவன் கண்கள் ஒளிர்ந்தது. “என்ன இருந்தாலும் வீட்ல பூங்கொடி தானே அவனுக்கு மேலதிகாரி. அதனால அடங்கித் தான் போவான்”, என்றாள் இரண்டாவது பெண் கலா.
அவனைத் திரும்பிப் பார்த்த பூங்கொடி கண்களால் “அப்படியா”, என்று கேட்டாள்.
“பின்ன இல்லையா?”, என்று கண்களால் பதில் சொன்னான் அவன். சிறிது நேரத்தில் ரேகாவும் கலாவும் பத்மாவுடன் விருந்து ரெடி பண்ண செல்ல அவர்களின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.
தங்கத்துடன் பேசிக் கொண்டிருந்த மணிமாறனுக்கு இவள் எப்போது தன்னுடன் இப்படி இயல்பாக பேசுவாள் என்று தோன்றியது. மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி மனைவியை தான் சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
பத்மா பேச்சு ஒரு மார்கமாக இருந்தாலும் விருந்து பிரமாதமாக இருந்தது. மணிமாறன் எப்போதும் போல் ஆட்டுக்கறியை வெளுத்து வாங்கினான். திருமணம் நடந்த நாளில் இருந்து கறியாக சாப்பிட்டு வெறுத்து போய் கஷ்டப் பட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பூங்கொடி.
கிளம்பும் போது அவர்கள் இருவருக்கும் உடை, நகை என வாங்கிக் கொடுத்து அசத்தி இருந்தனர் ரேகாவும் கலாவும். “அடுத்த வருசத்துக்குள்ள பிள்ளையை பேத்து தேவகி சித்தி கையில கொடுத்துறனும் என்ன?”, என்று ரேகா பூங்கொடியிடம் சொல்ல அவள் முகம் சிவந்து போனது.
அவளது சிவந்த முகத்தை ஆசையாக பார்த்தான் மணிமாறன். அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு அவன் பார்வையில் மூச்சடைத்தது. தலை குனிந்து கொண்டாள்.
வீட்டுக்கு போகும் போது “நீ இவ்வளவு பேசுவியா கொடி? நான் இன்னைக்கு தான் பாக்குறேன். அப்படின்னா நம்ம வீட்ல தான் பேச மாட்டுக்கியா?”, என்று கேட்டான்.
“யார் சொன்னா நான் பேசலைன்னு? மாமா கிட்டயும் அம்மா கிட்டயும் கேளுங்க. நாங்க நீங்க வெளிய போன பிறகு பேசிட்டே தான் இருப்போம்”, என்று உளறினாள்.
“ம்ம், நாங்க கேரம் போர்ட் கூட விளையாடுவோம். மாமா பாக்க தான் பயமா இருக்குற மாதிரி இருக்காங்க. ஆனா ரொம்ப ஸ்வீட். நல்லா ஜோக் அடிப்பாங்க. நானும் அம்மாவும் சிரிச்சிட்டே இருப்போம்”
“அப்படின்னா என் கிட்ட மட்டும் தான் பேச மாட்டிக்க. அப்படித் தானே?”, என்று கேட்டதும் “அது வந்து…”, என்று திணறினாள்.
“உண்மையிலே உனக்கு என்னை பிடிக்கலையா கொடி?”, என்று கேட்டவன் வண்டியில் கவனம் செலுத்த அவள் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் அவனது கேள்வி அவளுடைய அடி மனதை தொட்டது. “இவனை எனக்கு பிடிக்காதா? ரொம்ப ரொம்ப பிடிக்குமே? பிறகு ஏன் இவனிடம் இருந்து விலகி இருக்கிறேன்?”, என்று சுய அலசலில் இறங்கினாள்.
அதன் பின் ஒரு வாரம் எப்போதும் போல நகர்ந்தது. அப்போது ஒரு நாள் “மாறா, இங்க வா”, என்று அழைத்தார் கதிரவன்.
“என்னப்பா?”, என்று கேட்ட படி அவர் எதிரே அமர்ந்தான்.
“மருமக, படிப்பை முடிக்கணும். கிட்டத்தட்ட ரெண்டு வாரம் லீவ் ஆகிருச்சு. மறுபடியும் அவளை காலேஜ்ல பேசி விட்டுட்டு வா”
“இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு பா”
“இதை முடிச்சிட்டு அதைப் போய் பாரு. அவளைப் பாக்குறதை தவிர வேற வேலை பெருசு இல்லை”, என்று சொல்ல “சரி பா”, என்று சொல்லி விட்டு அறைக்கு வந்தவன் “கிளம்பு கொடி”, என்றான்.
“ஏதோ விருந்துக்கு தான் அழைக்கிறான் போல?”, என்று எண்ணிய பூங்கொடி எந்த சேலையைக் கட்டலாம் என்று எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் என்ன டி பண்ணுற?”
“எந்த சேலையைக் கட்டலாம்னு யோசிக்கிறேன்”
“காலேஜ்க்கு சேலையா கட்டுவாங்க? சுடிதார் போடு”
“நாம காலேஜக்கா போறோம்?”, என்று கண்களை அகல விரித்து அவள் கேட்க அவள் கண்களுக்குள்ளே தொலைந்து போக வேண்டும் என்று இருந்த ஆசையை அடக்கி “ஆமா”, என்றான்.
“நிஜமாவா?”, என்று இன்னும் கண்கள் விரியக் கேட்டாள். அவளுடைய விரிந்த கண்களில் விழத் தூண்டிய உணர்வை அடக்கினான்.
“நிஜமா தான் சொல்றேன். கிளம்பு. நீ காலேஜ் முடிக்கணும். அதுக்கப்புறம் கூட மேல படி”, என்று சொல்ல அவசரமாக அவன் அருகே ஓடி வந்தவள் பாய்ந்து வந்து அவனை இறுக கட்டிக் கொண்டாள்.
அவளாக தரும் முதல் அணைப்பு அல்லவா? அதிர்ச்சியும் சந்தோசமும் ஒன்றாக வந்தால் எப்படி இருக்கும் என்பதை முதல் முறையாக உணர்ந்தான் மணிமாறன். “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நான் நீங்க என்னைப் படிக்க வைப்பீங்கன்னு நம்பவே இல்லை. அன்னைக்கு சொல்றப்ப கூட ஏமாத்துறீங்கன்னு தான் இத்தனை நாள் நினைச்சேன்”, என்ற படி அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டே சொல்ல அவளது இறுக்கமான அணைப்பு அவனுக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக மோகத் தீயை பற்ற வைத்தது. இப்போது அவன் கரங்களும் அவளை இறுக அணைத்துக் கொண்டது.
அவனது அணைப்பின் வேகம் கூட ஆரம்பித்ததும் தான் இருக்கும் நிலை பூங்கொடிக்கு புரிந்தது. ஆனால் அவனை விட்டு விலக வில்லை. தளிர் கொடி போல அவன் மீது சாய்ந்திருந்தாள்.