அவர்கள் இடையே எல்லாம் நல்ல படியாக போய்க் கொண்டிருந்தாலும் சில நேரம் சில சங்கடங்கள் நிகழத் தான் செய்யும்.
அப்படி தான் ஒரு நாள் இடையில் கட்டிய ஒற்றைத் துண்டோடு குளித்து முடித்து வந்தான் மணிமாறன். எப்போதும் அவன் குளித்து முடித்து வரும் போது அவள் அறைக்குள் இருக்க மாட்டாள். இன்று துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் போது அப்படி வந்து விட்டான். அவனை அப்படி அரை நிர்வாணக் கோலத்தில் பார்த்து அவளுக்கு மூச்சடைத்தது.
எப்போதும் அவன் உடை மாற்றும் நேரம் அங்கிருந்து சென்று விடுபவள் இன்று அங்கேயே இருக்கவும் “என்ன ஆச்சு இவளுக்கு?”, என்று எண்ணி உடை மாற்றினான். துணியை மடித்து வைக்கும் சாக்கில் ரகசியமாக அவனை பார்வையிட்டாள் பூங்கொடி. அகன்ற தோள்களும், கையின் ஆர்ம்ஸும், தினவெடுத்த புஜங்களும், தேக்கு கட்டை போன்ற அவனது தேகமும், அதில் ஆங்காங்கே இருந்த நீர்த் துளிகளும் அவள் கண்ணில் பட்டது.
“எப்பா என்னா மாதிரி இருக்கான்?”, என்று எண்ணினாள். அவன் யூஸ் செய்த ஆஃப்டர் ஷேவிங்க் லோஷனின் நறுமணம் கூட அவள் மனதை மயக்குவதாக தான் இருந்தது.
அவனுடைய தேகத்தை வெட்கமே இல்லாமல் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றினாலும் அவள் கண்கள் திருட்டுத் தனமாக அவனை ரசித்தது. தன்னுடைய பார்வையை அவன் மேல் இருந்து திருப்ப அதிகம் சிரம பட்டாள்.
“பாத்து முடிச்சாச்சா? பத்து மார்க்காவது வாங்கித் தேருவேனா?”, என்று மணிமாறன் கேட்டதும் பேவென்று விழித்தாள். அந்த பார்வையே அவளைக் காட்டிக் கொடுத்தது.
“இவ்வளவு நேரம் நான் பாத்ததை பாத்துட்டா இருந்தான்?”, என்று எண்ணியவளுக்கு வெட்கமாக வந்தது. அவள் வெட்கத்தை ரசிக்க தூண்டிய மனதை அடக்கியவன் “கொடி, எனக்கு ஒரு முக்கியமான வொர்க் இருக்கு. எப்ப வீட்டுக்கு வருவேன்னு தெரியலை. ஒரு வாரம் கூட ஆகலாம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். அவன் சென்றதும் “அப்பாடி”, என்று மூச்சு விட்டாள். அவன் சொன்ன போது அந்த ஒரு வாரம் அவளுக்கு பெரியதாக தெரிய வில்லை.
கீழே சென்றவன் தந்தை மற்றும் அத்தையிடம் சொல்லி விட்டு ஸ்டேஷன் சென்றான். எப்போதுமே காலையில் வேலைக்கு வந்தால் இரவு வீட்டுக்கு செல்வான் மணிமாறன். (Xanax) சில நேரம் நைட் ஷிப்ட் பார்க்க கூட செய்வான். இன்று மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு சென்றவன் மாலை ஆறரைக்கு ஸ்டேஷன் வந்து நிற்கவும் அனைவருக்கும் ஷாக் தான்.
மணிமாறனின் ஏரியாவில் ஒரு பெரிய ஹோட்டலில் தவறான தொழில்கள் நடைபெறுவதாக அவனுக்கு போனில் தகவல் வந்தது. யார் சொன்னது என்று அவனுக்கு தெரிய வில்லை.
ஆனால் தகவல் சொன்னவரின் குரலில் இருந்த தவிப்பு அது உண்மை என்று அவனை உணர வைத்தது. அதை விசாரிக்க தான் அவன் இப்போது வந்தான்.
தன்னுடைய அறைக்கு வந்தவன் யூனிபார்ம் அணிந்து விட்டு சீட்டில் அமர்ந்தான். தன்னுடைய போனை எடுத்து சில வேலைகளைச் செய்தவன் இரவு ஒன்பது மணி போல் “வாஜித்”, என்று அழைத்தான்.
“சார்”, என்ற படி வந்தான் அவன்.
“எம். கே இண்டெர்நெசனல்க்கு ரவுண்ட்ஸ் போகணும். நம்ம டீமை தயார் பண்ணுங்க”, என்று சொன்னதும் வாஜித் அதிர்ந்து போனான்.
“சார், அங்கயா? ஏன் திடீர்னு?”, என்று தயக்கமாக கேட்டான்.
“நீங்க தயங்குறதைப் பாத்தா உங்களுக்கு ஏதோ உண்மை தெரிஞ்சிருக்கும் போலயே?”, என்று கேட்ட படி மணிமாறன் தன்னுடைய போனைப் பார்க்க “ஒரு உண்மை இல்லை. பல உண்மை தெரியும் சார். ஆனா அது நமக்கு தேவை இல்லாதது. அந்த ஹோட்டல் எக்ஸ் மினிஷ்டர் ரங்கசாமியோடது. பதவி இல்லாததால இப்படி சம்பாதிக்கிறான். அங்க விபசாரம், பணப் பரிமாற்றம், கஞ்சா, போதைப் பொருள் கடத்தல்ன்னு எல்லாமே நடக்குது”, என்றான்.
“தெரியும் சார். ஆனா அவர் மேல கை வைக்க பயப்படுவாங்க”
“அந்த பயம் என் கிட்ட இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா?”
“சார் இருந்தாலும்… உங்களுக்கு குடும்பம் இருக்கு. ரங்கசாமி மோசமானவன் சார்”
“அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. என் குடும்பத்தை அவனால் ஒண்ணும் செய்ய முடியாது. எனக்கு என்னமோ அங்க நிறைய பேர் பாதிக்கப் படுறாங்கன்னு தெரியுது. நாம போகலாம்”
“நாம அங்க போய் செர்ச் பண்ணினா நமக்கு மேல் இடத்துல இருந்து சஸ்பென்சன் ஆர்டர் கூட வரலாம் சார்”, என்று எச்சரித்தான் வாஜித்.
“அந்த சஸ்பென்சன் ஆர்டரை எப்படி பேஸ் பண்ணணும்னு எனக்கு தெரியும். நீங்க டீம் ரெடி பண்ணுங்க”
“ஓகே சார்”, என்று சொல்லி விட்டுச் சென்ற வாஜித் “யோவ் ஏட்டு”, என்று அழைத்தான்.
“ஆமா யா. இன்ஸ்பெக்டர்க்கு இங்க உள்ள நிலவரம் தெரியலை. என்ன நடக்க போகுதோ? நீ எல்லாரையும் ஜீப்ல ஏத்து”, என்றான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹோட்டல் முன்பு நின்றார்கள். திடீரென்று போலீசைக் கண்டதும் ரிசப்ஷனில் இருந்த ஆள் முகத்தில் பதட்டமும் வியர்வையும் தெரிந்தது.
அவன் பக்கத்தில் சென்று நின்று கொண்ட மணிமாறன் மற்றவர்களை அனுப்பி சோதனையிடச் சொன்னான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹோட்டலே அமுளி துமுளியானது. ஹோட்டல் ஊழியர்களால் யாருக்கும் தகவல் சொல்ல முடிய வில்லை.
அனைவரையும் பிடித்து விட்டான். விபச்சார கேஸில் பிடித்த எட்டு பெண்களில் இரண்டு பெண்கள் மட்டும் அழுது கொண்டிருக்க அவர்களை அங்கிருந்து போகுமாறு கண்ணைக் காட்டினான். அவர்களது கண்ணீரே அவர்கள் எதிர்பாராமல் சிக்கியிருக்கிறார்கள் என்று அவனுக்கு புரிய வைத்தது.
அதை வாஜித்தும் மற்ற போலீசும் பார்த்தாலும் அதைக் கண்டு கொள்ள வில்லை. அவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறதே.
“சார் இது யார் ஹோட்டல் தெரியுமா? எங்க போனை முதல்ல கொடுங்க. நான் பெரிய இடத்துக்கு தகவல் சொல்லணும்”, என்று குதித்தான் மேனேஜர்.
“நீ தகவல் சொல்ல அவசியம் இல்லை. ஆனா அந்த பெரிய இடத்துக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல தகவல் போயிரும்”, என்று சொன்னான் மணிமாறன்.
எல்லாரும் அவனைக் குழப்பத்துடன் பார்க்க அடுத்த செகண்டில் பிரஸ்ஸில் இருந்து ஆட்கள் கேமராவுடன் வந்து விட்டார்கள்.
“நம்ம கூட தானே இருந்தான்? இவங்க கிட்ட எப்ப சொன்னான்?”, என்று தான் வாஜித்க்கே தோன்றியது.
பிரஸ் வந்ததும் மேனேஜரால் எதுவும் பேச முடியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹோட்டலில் நடக்கும் அனைத்தும் மீடியா, டிவி, இணையதளத்தில் வெளியே வந்தது. அனைவரையும் ஜீப்பில் அள்ளி போட்டுக் கொண்டு ஸ்டேஷன் சென்றான்.
டிவியைப் பார்த்து தான் அந்த ரங்கசாமியே தெரிந்து கொண்டார். கோபத்துடன் அவர் மணிமாறனின் மேலதிகாரியிடம் புகார் கொடுக்க மேலதிகாரியிடம் இருந்து மணிமாறனுக்கு அழைப்பு வந்தது.
“மணிமாறன் நீங்க என்ன பண்ணிருக்கீங்கன்னு தெரியுதா? உன்னை யாரு யா அங்க போகச் சொன்னது? ஏதாவது செஞ்சு இப்ப நடந்தது எல்லாம் பொய், டிராம்மான்னு நீங்களே மீடியா கிட்ட சொல்லுங்க”, என்றார் ஐ.ஜி.
“ஓகே சார்”, என்று சொன்ன மணிமாறன் அடுத்த நொடி ஒரு எண்ணுக்கு அழைத்தான். அது வேறு யாரும் அல்ல. இப்போது அந்த தொகுதியில் பதவியிலிருக்கும் மினிஸ்டர் சடகோபனின் பெர்சனல் எண்ணுக்கு.
அவர் எடுத்ததும் நடந்ததைச் சொன்னவன் “இப்ப நீங்க தான் சார் மினிஸ்டர். நீங்க சொல்லுங்க. இந்த கேசை ஒண்ணும் இல்லாம பண்ணனுமா? இல்லை, பெரிய அளவுல தமிழ்நாடே பேசுற மாதிரி செய்யணுமா? நீங்களே யோசிங்க”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
அவர் இந்த வாய்ப்பை நழுவ விடுவாரா என்ன? அடுத்த தேர்தலிலும் அவர் தான் மினிஸ்டர் ஆக வேண்டும் என்ற வெறி அவரது ரத்தத்தில் ஊறி இருக்க இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தினார்.
அடுத்த நொடி ஐ. ஜியை அழைத்தவர் “என்ன ஐ.ஜி சார் ஹோட்டல் கேசை ஒண்ணும் இல்லாம பண்ணணும்னு சொன்னீங்களாம்? அது எப்படி பிடிச்ச கேசை ஒண்ணும் இல்லாம பண்ண முடியும்? இதை அப்படியே புரசீட் பண்ணுங்க. அந்த ஹோட்டல் யாரோடது என்னன்னு எல்லாம் விசாரிச்சு குற்றவாளிங்களை உள்ள தள்ளுங்க. இதுல ஏதாவது கோல்மால் பண்ணுனீங்கன்னா நடக்குறதே வேற….”, என்றார்.