கடைக்கு சென்றதும் “உனக்கு என்ன வேணும்னு எடு டி”, என்று அவன் அவளிடம் சொல்ல “எனக்கு ஒண்ணும் வேண்டாம்”, என்று வீம்பு பிடித்தாள். அவளுக்கும் அவனே தேர்வு செய்தான். அவள் உடைக்கு ஏற்ற மாதிரி அவன் உடையும் இருந்தது. அதை ஓரக் கண்ணால் பார்த்தவளுக்கு திருப்தியே.
கிஃப்ட் வாங்கும் போது அவளாகவே நிறைய பொருள்களை வாங்கினாள். அது அவனுக்கு திருப்தியாக இருந்தது. எல்லா பொருளையும் வாங்கி ஒரே அட்டைப் பெட்டியில் போட்டு பெரிய கிஃப்ட்டாக வாங்கிக் கொண்டு காருக்கு வந்தார்கள். மணிமாறன் காரைக் கிளப்பினான். அவனுடைய வீட்டுக்கு கார் செல்கிறது என்று அவள் எண்ண அவனோ அவளுடைய வீட்டுக்கு வந்து காரை நிறுத்தினான்.
அவள் குழப்பமாக அவனைப் பார்க்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்று விட்டான். இவளும் வேறு வழியில்லாமல் அவன் பின்னே வீட்டுக்குள் சென்றாள்.
எப்போதும் போல வரவேற்பு முடிந்ததும் கேசவன் அவனை இங்கேயே தங்கச் சொல்ல “நானும் அப்பாவும் மதுரைக்கு போக வேண்டியது இருக்கு. அத்தையும் பெரியத்தை வீட்டுக்கு போயிட்டாங்க. அதனால கொடி இங்கயே இருக்கட்டும். நான் நாளைக்கு சாயங்காலம் வந்து கொடியைக் கூட்டிட்டுப் போறேன்”, என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.
வீட்டில் யாரும் சொல்லாமலே இன்று அவனை வழி அனுப்ப வாசல் வரை வந்தாள். அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் ஏதோ கேள்வி இருக்கவும் “என்ன டி?”, என்று கேட்டான்.
“இல்லை அண்ணன் என்னை நம்ம வீட்டுக்கு தான் கூட்டிட்டு போகச் சொல்லுச்சு. ஆனா நீங்க இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க? ஏன்?”, என்று கேட்டாள். அவள் ‘நம்ம வீடு’ என்று சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது.
“என்ன காரணமா இருக்கும்னு உனக்கு தோணுது?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“என்னைப் பார்க்க பிடிக்காம…..”
“போடி லூசு, இந்த நிமிஷம் கூட உன்னை நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு போகணும்னு அவ்வளவு ஆசை இருக்கு. ஆனா நீ அங்க வந்தா நிம்மதியா இருப்பியா? அந்த கேஸைப் போட்டு மண்டைக்குள்ள குழப்பிக்கிட்டு இருப்ப. உன் புருஷன் மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்ச பிறகு நம்ம வீட்டுக்கு வந்தா போதும்”
“ஆனா அந்த பொண்ணு அவ புருஷன் மேல தப்பு இல்லைன்னு பிள்ளைகள் மேல சத்தியம் செஞ்சா. அப்புறம் எப்படி நம்பாம இருக்குறது?”
“அந்த படிக்காத பொண்ணு அவ புருஷனை அப்படி நம்புறா. ஆனா நீ..,. எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க கொடுத்து வைக்கலை போல? ஆனா உண்மை தெரிஞ்ச அப்புறம் நீ கண்டிப்பா பீல் பண்ணவ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவன் கார் சென்ற பிறகு தான் வீட்டுக்குள் சென்றாள். அவள் உள்ளே செல்லும் போது அவன் அவளுக்காக முதன்முதலாக வாங்கிக் கொடுத்திருந்ததை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ரொம்ப நல்லா இருக்கு”, என்று புகழ்ந்து என்ன பங்ஷன் என்று விசாரித்துக் கொண்டிருந்தார்கள். எல்லா விசாரணைக்கும் பதில் சொல்லி விட்டு அறைக்குள் வந்தவள் தவறு செய்து விட்டோமோ என்று மனம் புழுங்கினாள்.
அதே நேரம் ஸ்டேஷன் சென்றவன் ராமரிடம் “உன் கேஸ் இன்னும் நாலு நாள்ல கோர்ட் விசாரணைக்கு வருது. அதுக்கப்புறம் பெரிய ஜெயில் தான். உன் பொண்டாட்டி உன்னை அங்க வந்து தான் பாப்பா”, என்று சொல்லி பயமுறுத்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் பங்ஷன் என்பதால் அவளை அழைக்க காலேஜ்க்கே வந்து விட்டான் மணிமாறன். அவன் காரைக் கண்டதும் அவள் கண்கள் மின்னின. அவசரமாக அதன் அருகில் சென்றாள். அவன் உள்ளேயே அமர்ந்திருந்தான். உரிமையாக அவன் அருகே ஏறி அமர்ந்தவள் “என்ன இன்னைக்கு உள்ளயே உக்காந்துட்டீங்க?”, என்று கேட்டாள்.
“வெளிய வந்தா என்னை நிறைய பேர் சைட் அடிப்பாங்கன்னு நீ தான சொன்ன? என்னை என் பொண்டாட்டி மட்டும் தான் ரசிக்கணும். போகலாமா?”, என்று சொல்லி அவன் காரைக் கிளப்ப அவன் பதில் அவளுக்கு ஒரு கிளுகிளுப்பைத் தந்தது.
அவளுடைய வீட்டுக்கு வந்ததும் அவள் உடை மாற்றச் செல்ல இவன் மற்றவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். “நேரம் ஆச்சுல்ல? நீங்களும் போய்க் கிளம்புங்க மாப்பிள்ளை”, என்றார் கேசவன்.
அவன் கண்கள் அவளைத் தேட “பூவு ரூம்ல தான் இருக்கா மாப்பிள்ளை. நீங்க போங்க”, என்று சொன்னார் மணியம்மை. சந்தோஷமாக அவளுடைய அறைக்குச் சென்றான்.
அங்கே சேலை கட்டி கிளம்பி இருந்த பூங்கொடி ஜாக்கெட்டில் பின்னால் கயிரைக் கட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள். “ஹாய் பொண்டாட்டி, உள்ள வரலாமா?”, என்ற அவனின் சத்தம் கேட்டு அவசரமாக திரும்பியவள் “நீங்க எங்க இங்க?”, என்று கேட்டாள்.
“என் மாமியார் தான் உங்க பொண்டாட்டி துணி மாத்திட்டு இருக்கா ஏதாவது உதவி இருந்தா பாக்கச் சொன்னாங்க. இங்க வந்து பாத்தா அம்முணி எல்லாம் போட்டுட்டீங்க”, என்று கவலையாகச் சொன்னான்.
“இந்த அம்மாவுக்கு வெவஸ்தையே இல்லை”, என்று முணுமுணுத்தவள் “சரி கிளம்பலாமா?”, என்று கேட்டாள்.
“போகலாமே, சரி வா”
“இல்லை நீங்க போங்க, நான் வரேன்”, என்று தயங்கினாள். அவளுடைய தயக்கம் எதற்காக என்று புரிந்தவன் “நேரம் ஆச்சு டி, பங்ஷன் போய்ட்டு நான் திருப்பி உன்னைக் கொண்டு வந்து இங்க விட்டுட்டு ஸ்டேஷன் வேற போகணும்”, என்றான். மனதுக்குள்ளோ “அந்த கயிறைக் கட்டாம எப்படி நீ வறேன்னு பாக்குறேன்”, என்று எண்ணிக் கொண்டான்.
அப்போதும் அவள் தயங்க “என்ன டி? என்ன தான் ஆச்சு?”, என்று கேட்டான்.
“ஜாக்கெட்ல நாட் கட்ட வரலை. யாரையாவது வரச் சொல்லணும்”
“இதுக்கு எதுக்கு வேற யாரும்? நான் தான் இருக்கேன்ல?”, என்று கேட்டவன் அவளை நெருங்கினான்.
“நீங்க வேண்டாம், அண்ணியை வரச் சொல்லுங்க”
“அபத்தமா உளறாத. நான் இருக்கும் போது இன்னொருத்தங்களை உதவிக்கு கூப்பிட்டா நமக்குள்ள இருக்குறது எல்லாம் வெளிய தெரிஞ்சிரும். திரும்பு”, என்று சொன்னதும் தயக்கத்துடன் திரும்பி நின்றாள்.
அவளுடைய பின்னலை எடுத்து முன்னால் போட்டவன் அந்த நாட்டை எடுத்து கட்ட ஆரம்பித்தான். அவனுடைய விரல்கள் அவளுடைய முதுகில் விளையாடிக் கொண்டிருந்தது. அவனுடைய தொடுகையில் நெழிந்தாள்.
“அசையாம இரு டி”
“பிளீஸ், சீக்கிரம் கட்டுங்க. கூசுது”, என்று அவள் முனங்க அவன் உதடுகள் அவள் முதுகில் அழுத்தமாக பதிந்தது. அவன் முத்தத்தில் அவளுடைய ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டது.
அந்த கயிரை சரியாக கட்டியவன் அவளை தன் பக்கம் திருப்பினான். அவன் ஏற்படுத்திய உணர்வலைகளில் சிக்கி இருந்தவள் கண் மூடிக் கிறங்கி நின்றாள். அவள் கிறக்க முகம் அவனது உணர்வுகளை மேலும் தூண்ட அவள் முகம் நோக்கி குனிந்தான்.
“பூவு நேரம் ஆச்சு மா. மாப்பிள்ளை வேலைக்கு வேற போகணும். சீக்கிரம் கிளம்பு”, என்று மங்களம் வெளியே இருந்து குரல் கொடுக்க அவசரமாக அவனிடம் இருந்து தள்ளி நின்றவள் “போகலாமா?”, என்று கேட்டாள்.
“இரு நான் கிளம்பிட்டு வரேன்”, என்றவன் கிளம்ப ஆரம்பித்தான்.
“அடப்பாவி, அப்ப ஏன் நேரம் ஆச்சுன்னு இவ்வளவு நேரம் வம்பு பண்ணினான்?”, என்று குழம்பிய படி அவனைப் பார்த்தான்.
ஷெர்வானி உடைக்கு மாறியவன் அழுக்கு உடையை கையில் வைத்திருந்தான். அதை என்ன செய்ய என்று தெரியாமல் அவன் விழிக்க “அதைக் கொடுங்க”, என்றாள்.
“உனக்கு எதுக்கு சிரமம்? ஒரு கவர் தா. வீட்டுக்கு கொண்டு போறேன்”
“இப்ப நீங்க தான் உளறிட்டு இருக்கீங்க? கல்யாணம் முடிஞ்ச நாள்ல இருந்து உங்க ஜட்டி வரைக்கும் நான் தானே துவைக்கிறேன்? அப்புறம் என்ன?”
“அப்ப நீ என் பொண்டாட்டியா இருந்த. ஆனா இப்ப…”
“எப்பவும் உங்க பொண்டாட்டி தான். கொடுங்க”, என்று சொல்லி அதை வாங்கியவள் அவளுடைய உடையுடன் சேர்த்து வைத்து விட்டு வந்தாள்.
ஒரு வழியாக பத்மா வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கே அனைவருடன் சந்தோஷமாக பேசி சுற்றிக் கொண்டிருந்தாள் பூங்கொடி. அதை கண்டவனின் கண்கள் காந்தமாக அவளைக் கொள்ளையிடத் துடித்தது.