அவள் கல்லூரி முடிந்து வெளியே வரும் போது அவன் காருடன் அங்கே நின்றான். “பூவு அங்க பாரு டி, யாருன்னு”, என்று கை காட்டினாள் ரேவதி.
ஸ்டைலாக காரில் சாய்ந்து நின்றிருந்தான் மணிமாறன். அவனைக் கண்டதும் ஒரு வித சந்தோஷம் அவளுக்குள் பரவியது. அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னமோ சண்டை அது இதுன்னு சொன்ன? ஆனா அண்ணா உன்னைப் பாக்க வந்துட்டாங்க பார். நீ தான் திமிர் பிடிச்சு போய் அவர் கிட்ட பேசலை. சரி வா”, என்று சொன்ன ரேவதி அவளை அவன் அருகே அழைத்துச் சென்றாள். பின் அவனிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு தோழியிடமும் சொல்லி விட்டு ரேவதி கிளம்பி விட்டாள்.
அவள் சென்றதும் அவளையே பார்த்தான் மணிமாறன். அவளோ சுற்றி பார்வையை திருப்பினாள். சில பெண்கள் ஆங்காங்கே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு எரிச்சலாக வந்தது.
அவனைப் பார்த்த சந்தோசத்தையும் தாண்டி “இவனை யார் இப்படி ஸ்டைலா இங்க வரச் சொன்னது?”, என்று எண்ணினாள்.
“கொடி, கார்ல ஏறு”, என்றான்.
“நான் வர மாட்டேன். இப்ப எதுக்கு இங்க வந்தீங்க?”, என்று அவள் எரிந்து விழ “ஏன் டி”, என்று பாவமாக கேட்டான்.
“எதுக்கு என் உயிரை வாங்குறீங்க? உங்களை இங்க வாங்கன்னு நான் கூப்பிட்டேனா?”
“நான் உன்னைப் பாக்க வரக் கூடாதா?”
“என்னைப் பாக்கணும்னா அதுக்கு காலேஜ்க்கு தான் வரணுமா? உங்களுக்கு மத்தவங்க எல்லாம் உங்களைப் பாக்கணும். அது தானே உங்க எண்ணம்?”, என்று அவள் கோபப் பட அவள் கோபம் அவனுக்கு புரியவே இல்லை.
“சி வாயை மூடு. யாரும் என்னைப் பாக்கணும்னு நான் ஒண்ணும் அலையலை. என் மனசு போனது உன் பின்னாடி மட்டும் தான். முதல் பார்வையிலே உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னவன் டி நான். உன்னை மட்டும் தான் பிடிக்கணும்னு நினைச்சிட்டு தான் பொண்ணு பாக்கவே வந்தேன். கோபத்துல அறிவில்லாம பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று கோபமாக கத்தி விட்டான்.
அவனுடைய பேச்சில் அவளுக்கு பெருமையாக தான் இருந்தது. அவனை இமைக்காமல் பார்த்தாள். அவனது உயரமும், அழகும் அவளை வசீகரித்தது. போலீஸ் கட்டிங் தான் செய்திருந்தான். அது கூட அவனுக்கு அழகாக இருந்தது. அகன்ற நெற்றி, கூர்மையான பார்வை, நேராக அமைந்த பல் வரிசை, டிரிம் செய்த வழுவழு கன்னம் என அழகாக இருந்தவனை ரசித்தாள்.
இது வரை எந்த ஆணிடமும் தோன்றாத ஈர்ப்பும் காதலும் அவன் மீது உருவான விந்தை அவளுக்கு தெரியவில்லை. அது திருமணம் ஆனதாலா கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் பார்வையில் அவன் முற்றிலுமாக குழம்பியது மட்டும் உண்மை. அவள் பேச்சில் இருந்த கோபம் அவள் பார்வையில் இல்லாததைக் கண்டு கொண்டான். அவனையே விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த மனைவியை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“என்ன டி, என்னையே முழுங்குற மாதிரி பாக்குற?”, என்று ஆர்வத்துடன் கேட்டான்.
அவன் கேள்வியில் தன் பார்வையை மாற்றிக் கொண்டு “ரொம்ப கேவலமா இருக்கீங்க. அதான் பாத்தேன்”, என்று நக்கலாக பதில் கொடுத்தாள்.
“அப்படியா? கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடியே என்னை வேண்டாம்னு சொல்லியிருந்தா உனக்கு வேற அழகனா கிடைச்சிருப்பான்ல?”, என்று அவன் சீரியஸான குரலில் சொன்னான் மணிமாறன். அவள் மனதை தான் கவரவில்லை என்று அவனுக்கு கவலையாக இருந்தது.
கம்பீரமான அவனை வியப்பாக பார்த்தாள் பூங்கொடி. தன்னுடைய வார்த்தை அவனை இவ்வளவு பாதிக்குமா என்று எண்ணியவள் “சும்மா உளறாதீங்க. எனக்கு எந்த அழகனும் வேண்டாம். நீங்களே போதும்”, என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியலை டி. என்னை திட்டுற. ஆனா உன் கண்ணுல ஏதோ இருக்கு. சரி சொல்லு எதுக்கு என்னைத் திட்டின? அன்னைக்கு ஒரு நாளும் இப்படி தான் பேசின. எனக்கு காரணம் தெரியணும்”
“நீங்க இங்க வந்தா என் பிரண்ட்ஸ் உங்களைப் பாப்பாங்க. அதான் வர வேண்டாம்னு சொன்னேன்”, என்றாள்.
“நான் நல்லா இல்லாததுனால தானே உன் பிரண்ட்ஸ் என்னைப் பாக்க கூடாதுன்னு நினைக்கிற?”, என்று குழப்பமாக கேட்டான்.
“உங்க தலை. அவளுங்க உங்களைப் பாத்தா வச்ச கண் எடுக்காம பாப்பாங்க. அவங்க பார்வைல உங்களுக்கு திஷ்டி பட்டு உடம்பு சரியில்லாம போகும். அப்படி இருக்கும் அவங்க பார்வை. அதான் சொன்னேன். இப்பவே எத்தனை பேர் பாக்குறாளுங்கன்னு தெரியலை”, என்று அவள் உளற அவன் கண்கள் மின்னியது.
சந்தோசத்துடன் அவளைப் பார்த்தவன் “சரி வா, கார்ல ஏறு. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான்.
“முடியாது, நீங்க போங்க”
“நான் ஒரு விஷயம் சொல்லணும் டி”
“சொல்லுங்க”
“காருக்குள்ள வா சொல்றேன்”
“இங்கயே சொல்லுங்க”
“சரி இங்கயே சொல்றேன். உன் பிரண்ட்ஸ் என்னைப் பாக்கட்டும். எனக்கு உடம்பு சரியில்லாம போகட்டும். ஆனா என்னைப் பாக்க தான் நீ இருக்க மாட்ட”, என்று அவன் சொல்ல “நான் கார்லே உக்காருறேன்”, என்றவள் காரில் ஏறி அமர்ந்தாள். சிறு சிரிப்புடன் அவனும் உள்ளே ஏறி அமர்ந்தான்.
“என்னன்னு சொல்லுங்க. நான் போகணும்”, என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.
“நாளைக்கு நாம ஒரு பங்ஷன் போகணும்”
“நான் வரலை. எனக்கு காலேஜ் இருக்கு”
“அவசரக் குடுக்கை. பங்ஷன் நாளைக்கு நைட்டு தான்”
“அப்பவும் வர மாட்டேன்”
“நீ நாளைக்கு வந்து தான் ஆகணும். அது மட்டுமில்லாம நாளைக்கு போட உனக்கு டிரஸ் எடுக்க இப்ப போறோம். அதுக்கு தான் வந்தேன். அப்புறம் கிஃப்டும் வாங்கணும். போகலாமா?”, என்று கேட்டான்.
“நான் எங்கயும் வரலை”
“நீ வந்து தான் ஆகணும். ரேகா அண்ணியோட பையனுக்கு பிறந்தநாள் கொண்டாடுறாங்க. நான் மட்டும் தனியா போனா என் கௌரவம் என்ன ஆகுறது?”
“நான் உங்க கூட வந்தா என் கோபம் என்ன ஆகுறது?”, என்று மூக்கை விடைத்துக் கொண்டு அவள் கேட்க அவள் மூக்கை திருகும் ஆசை வந்தது. அதை அடக்கிக் கொண்டவன் “அப்ப நீ வர மாட்ட. அப்படித் தானே?”, என்று கேட்டான்.
“ஆமா”
“உன்னை எப்படி வர வைக்கன்னு எனக்கு தெரியும்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய போனை எடுத்தான்.
“மாமா சொன்னாலும் கேக்க மாட்டேன். தேவகி அம்மா சொன்னாலும் கேக்க மாட்டேன். ஏன் எங்க அம்மா சொன்னா கூட கேக்க மாட்டேன்”, என்றாள் பூங்கொடி.
“சொல்ற ஆள் சொன்னா நீ கண்டிப்பா கேப்ப டி”, என்றவன் “மச்சான் நான் மணிமாறன் பேசுறேன்”, என்றான்.
“மச்சானா இவன் யார் கிட்ட பேசுறான்னு தெரியலையே? ஒரு வேளை அண்ணனா இருக்குமோ?”, என்று அவள் எண்ண ஸ்ப்பீக்கரில் போட்டான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை”, என்றார் கேசவன்.
“நான் இப்ப கொடியோட காலேஜ்ல தான் இருக்கேன். நாளைக்கு ஒரு பங்ஷன் இருக்கு. அதனால டிரஸ் வாங்கணும். கொடியைக் கூப்பிட்டா வர மாட்டிக்கா. நீங்க கொஞ்சம் சொல்றீங்களா?”
“அதுக்கென்ன மாப்பிள்ளை, அவ கிட்ட கொடுங்க. நான் பேசுறேன்”, என்று அவர் சொல்ல “பேசு டி”, என்றான்.
அவனை முறைத்த படி ”சொல்லுங்கண்ணா”, என்றாள்.
“என்ன பழக்கம் இது பூங்கொடி? அவர் உன் வீட்டுக்காரர். எங்களை விட அவருக்கு தான் உன் மேல உரிமை ஜாஸ்தி. கிளம்பும் போது அண்ணா அவர் கூப்பிட வந்துருக்கார். போயிட்டு வறேன்னு எங்க கிட்ட சொல்லிட்டு நீ போய்ட்டே இருக்கணும். இப்படி அங்க வர மாட்டேன், இங்க வர மாட்டேன்னு எல்லாம் சொல்லக் கூடாது. அப்புறம் டிரஸ் எடுத்துட்டு அவர் கூட உன் வீட்டுக்கே போயிரு. மாப்பிள்ளை ஊருக்கு போன பிறகு நம்ம வீட்டுக்கு வா”, என்று சொல்லி வைத்து விட்டார்.
“வந்து தொலையுறேன். வண்டியைக் கிளப்புங்க”, என்று சொல்ல சிறு சிரிப்புடன் காரைக் கிளப்பினான்.