“நீ சொல்லாம அவளுக்கு உண்மை தெரியாது டா. அந்த வீடியோ காமிச்சு எல்லாம் சொல்லு”
“இப்ப அவளுக்கு முழு உண்மையும் தெரியாது தான். ஆனா அவ மனசு என்னை நல்லவன்னு அவ கிட்ட சொல்லுதான்னு நான் பாக்கணும்”
“என்ன டா இப்படிச் சொல்ற?”
“விடுங்க பா. பாக்கலாம். என்னால ஒவ்வொரு விசயத்துக்கும் அவ கிட்ட போராட முடியாது. நான் ஒரு விஷயம் செஞ்சா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு அவ புரிஞ்சிக்கணும் பா. பின்னாடி வாழ்க்கைல அவ கிட்ட ஒவ்வொன்னையும் நான் எக்ஸ்பிலைன் பண்ணிட்டு இருக்க முடியாது. அவளே வருவா. நீங்களும் எதுவும் சொல்லாதீங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அதற்கு மேல் என்ன செய்ய என்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார். அப்போது தேவகி அவரை போனில் அழைத்தார். அதை எடுத்த கதிரவன் “சொல்லு மா”, என்றார்.
“மாறன் வந்துட்டானா அண்ணா?”
“வந்தான், ஆனா சாப்பிடலை”
“பூங்கொடியை கூப்பிட போறானா இல்லையா?”, என்று தேவகி கேட்டதும் மாறன் பேசியதைச் சொன்னார்.
“நான் சொன்னதுக்கு இப்படி சொல்றான் தேவகி. எனக்கு என்ன செயன்னு தெரியலை”
“அவன் சொல்றது நியாயம் தானுங்க அண்ணா?”
“நீயே இப்படிச் சொன்னா என்ன மா அர்த்தம்?”
“புருஷன் மேல நம்பிக்கை இருக்கணும் அண்ணா. அவன் வேலை அப்படி. உங்களுக்கு தெரியாதது இல்லை. அவளும் அவனுக்கு குடைச்சல் கொடுத்தா வாழ்க்கை நல்லா இருக்காதுண்ணா”
“அதுக்கு இப்படி பிரிஞ்சு இருந்தா நல்லாவா இருக்கும்?”
“நாளைக்கு நான் அவளைப் பாத்துட்டு வரேன் அண்ணா”
“இவனுக்கு தெரிஞ்சா கத்துவான் மா”
“அவன் கத்துனா என்னை அது என்ன செய்யும்? நம்ம பிள்ளைங்க நல்லா இருந்தா தானே நமக்கு சந்தோஷம். இத்தனை நாள்ல அவளை நான் என் மகளா தான் பாத்தேன். என் மக தப்பு பண்ணினா நான் தானே சொல்லித் திருத்தனும்? உண்மையை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன்”
“கையோட கூட்டிட்டு வந்துரு மா. மாமா மாமான்னு என் கிட்ட பேசும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அவ இருக்கும் போது இந்த வீடு உயிர்ப்போட இருந்த மாதிரி இருந்துச்சு. இப்ப நல்லாவே இல்லை”
அடுத்த நாள் கல்லூரி விடுமுறை என்பதால் சோம்பேறியாக அறைக்குள் முடங்கி இருந்தாள் பூங்கொடி.
“அத்தை, வா அத்தை விளையாடலாம்”, என்று பிள்ளைகள் அழைக்க “நீங்க போய் விளையாடுங்க”, என்று அனுப்பி வைத்தாள்.
அவனைப் பற்றிய நினைவுகளுடன் அவள் சோர்ந்து போய் படுத்திருக்க “ஏட்டி என்ன ஆச்சு? ரொம்ப சோர்வா தெரியுற?”, என்று கேட்டாள் மணியம்மை.
“ஒண்ணும் இல்லை மா. சும்மா தான்”
“இல்லையே, நீ எப்பவும் இப்படி இருக்க மாட்டியே? கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடி கல்யாணத்தை நினைச்சு இப்படி இருந்த. அப்ப கூட இவ்வளவு சோர்வா இல்லையே. சரியா சாப்பிட வேற மாட்டிக்க. வாந்தி எதுவும் வருதா?”
“வாந்தியா? இல்லையே மா”
“தலை சுத்து ஏதாவது இருக்கா?”
“அப்படி எல்லாம் இல்லை”
“உண்மையை சொல்லு டி”
“இல்லைன்னு சொல்றேன்ல? ஏன் இப்படி கேள்வியா கேட்டுட்டு இருக்க?”, என்று சுள்ளென்று கேட்டாள்.
“பாத்தியா, சம்பந்தமே இல்லாம கோப படுற? ஏட்டி ஒரு வேளை மாசமா இருக்கியோ?”, என்று மணியம்மை கேட்க அதிர்ந்து போய் தாயைப் பார்த்தாள்.
“என்ன டி பாக்குற? உண்மையைச் சொல்லு”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை மா”
“இந்த மாசம் என்னைக்கு டி தலைக்கு குளிச்ச?”
“அதெல்லாம் சரியா குளிச்சாச்சு”, என்று முணுமுணுத்தாள்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இதைச் சொல்லப் போற? குழந்தை எதுக்கு தங்க மாட்டிக்கு? ஆஸ்பத்திரிக்கு போவோமா?”
“அது தங்குறப்ப தங்கும் மா”, என்று சொன்ன பூங்கொடிக்கு “இந்த அம்மா இங்கிருந்து போனா தேவலை”, என்று தோன்றி வைத்தது.
“என்னது தங்குறப்ப தங்கும்னு அசால்ட்டா சொல்ற? புருஷன் கூட இருக்க வேண்டிய நேரத்துல அம்மா வீட்ல வந்து உக்காந்திருந்தா எப்படி கருத்தரிக்கும்? ஆமா நீ ஏன் இங்க வந்து உக்காந்துருக்க? அதுவும் இத்தனை நாளா? மாப்பிள்ளை ஊர்ல தானே இருக்கார்? நீ ஏன் அவர் கூட போகலை?”
“ஐயோ இந்த அம்மாவுக்கு டவுட் வந்துருச்சே. சமாளி டி”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு “நான் நம்ம வீட்டுக்கு வரக் கூடாதா?”, என்று கோபமாக கேட்டாள்.
“வரலாம் டி. உன்னை யாரு இங்க வர வேண்டாம்னு சொல்லுவா? ஆனா புருஷனை அங்க விட்டுட்டு இங்க இத்தனை நாள் தங்கலாமா? மாப்பிள்ளை கிட்ட சொல்லி வந்து கூட்டிட்டு போகச் சொல்லு சரியா?”
“என்னை விரட்டி விடுற பாத்தியா?”
“உன்னை நாள் முழுக்க பாத்துட்டே இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் டா கண்ணு. ஆனா நீ உன் புருஷன் வீட்ல வாழ்ந்தேன்னு வை எனக்கு சந்தோசத்தோட நிம்மதியும் கிடைக்கும்”
“சரி மா, வரச் சொல்றேன்”
“சரி கொஞ்ச நேரம் தூங்கு”, என்று சொல்லி விட்டு அன்னை சென்றதும் “நான் எப்படி மா அவரைக் கூப்பிடுவேன்? ஏதாவது சொல்லிருவாரோன்னு பயமா இருக்கு மா? உன் பொண்ணு எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கான்னு தெரிஞ்சா நீயே எனக்கு சூடு போட்டுருவ. அவர் கிட்ட பேசவே எனக்கு குற்ற உணர்வா இருக்கு மா”, என்று மனதில் எண்ணிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.
மணியம்மை வாசல் பக்கம் வர அப்போது தான் தேவகி அங்கே வந்தார்.
“தேவகி வா வா, எப்படி இருக்க?”, என்று கேட்ட மணியம்மை அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.
“நல்லா இருக்கேன் அக்கா. நீங்க எப்படி இருக்கீங்க?”
“எனக்கு என்ன? நல்லா இருக்கேன்”
“பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“எல்லாவனும் கடைகளைப் பாக்க போய்டாணுங்க. மருமக பேரப் பிள்ளைகள் எல்லாம் உள்ள தான் இருக்காங்க. வா”, என்று சொல்லி அவர்களிடம் அழைத்துச் சென்றார்.
அனைவரிடமும் சிறிது நேரம் பேசிய தேவகி “என் மக எங்கக்கா? அவளைப் பாக்க தான் வந்தேன்”, என்றாள்.
“உன் மக உள்ள தான் இருக்கா. இரு கூப்பிடுறேன். ஏடி பூங்கொடி”
“நானே உள்ள போய் பாக்குறேன் அக்கா”
“சரி போய்ப் பாரு”, என்று மணியம்மை சொன்னதும் பூங்கொடியின் அறைக்குள் சென்றார் தேவகி.
தேவகியைக் கண்டதும் எழுந்த பூங்கொடி “அம்மா”, என்று கதறிய படி ஓடி வந்து அவரை அனைத்துக் கொண்டாள். அவள் உடல் அழுகையில் குலுங்க அவளது முதுகை வருடிக் கொடுத்த தேவகிக்கு எதற்காக இந்த அழுகை என்று புரியவில்லை.
சிறிது நேரம் அவளை அழ விட்ட தேவகி அவளை விலக்கி தன்னுடைய முந்தானைச் சேலையால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டாள். பின் அவளைக் கட்டிலில் அமர்த்தி அவள் அருகே அமர்ந்து கொண்டு “என்ன மா இது? சின்னப் பிள்ளை மாதிரி இப்படியா அழுவாங்க?”, என்று கேட்டார்.
“உங்களைப் பாத்ததும் அழுகை வந்துருச்சு”
“இன்னைக்கு இவ்வளவு பாசம் இருக்குறவளா அன்னைக்கு என்னமோ சொல்ல சொல்ல கேக்காம வந்த?”, என்று அவளைக் குத்தவும் மறக்க வில்லை.
“என்னை மன்னிச்சிருங்க மா”, என்று சொல்லி தலை குனிந்தாள்.
“அசடு, யாராவது அம்மா கிட்ட மன்னிப்பு கேப்பாங்களா? சரி இந்த மன்னிப்பு என் கிட்ட மட்டும் தானா? இல்லை உன் புருஷன் கிட்டயும் கேக்க போறியா? இல்ல அவன் மேல தான் இன்னும் தப்பு இருக்குனு நினைச்சிட்டு இருக்கியா?”, என்று கேட்டவர் அவளையே கூர்மையாக பார்த்தார்.
“அவர் மேல தப்பே இல்லை மா. நான் தான் அவசரப் பட்டுட்டேன்”, என்று பூங்கொடி சொல்ல அவருக்கு அப்பாடி என்று இருந்தது.
“அதை தானே அன்னைக்கு எல்லாரும் சொன்னோம்? கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா மாறனே எல்லாம் உன் கிட்ட சொல்லிருப்பான்”
“அது அப்ப புரியலை மா”
“சரி இப்ப அவனை புரிஞ்சிக்கிட்டல்ல? அதுவே போதும். சரி கிளம்பு டா. போகலாம்”
“எங்க?”
“நம்ம வீட்டுக்கு தான்”
“நான் வரலை”, என்று அவள் சொல்ல அதிர்ந்து போன தேவகி “ஏன்?”, என்று கேட்டார்.
“நான் தப்பு பண்ணிட்டேன் மா”
“அதான் உன் தப்பை உணர்ந்துட்டியே?”
“இப்ப உணர்ந்தாலும் அன்னைக்கு அவரை அப்படி பேசினது தப்பு தானே?”
“அதுக்கு?”
“அவரை நான் நம்பிருக்கணும். இப்ப எந்த முகத்தை வச்சிட்டு அவரைப் பாப்பேன்”
“புருஷன் பொண்டாட்டிக் குள்ள சண்டை வரது சகஜம் தான் டா. மன்னிச்சிருங்கன்னு ஒரு வார்த்தை சொன்னா பிரச்சனை முடிஞ்சிரும். மாறன் உன் கிட்ட அதைக் கூட எதிர் பார்க்க மாட்டான்”, என்றார்.