Skip to content
Post Views: 817
“ஏன் கீழ அப்படி சொன்னீங்க?” என்று பிரசன்னா ஆரம்பிக்க,
“என்ன சொன்னேன்?” என்றான்.
Advertisement
“லவ் இஸ் ஓவர்ரேட்டட்னு ஏன் சொன்னீங்க?” என்று அவன் கண்ணைப் பார்த்து குற்றம் சாட்டினாள்.
மகேந்திரன் கண்களில் ஆச்சரியம்.
Advertisement
Advertisement
“அதுக்கா என் காலை மிதிச்ச?” என்றான் சிறு அதிர்ச்சியோடு. தெரியாமல் மிதித்தாள் என்றே நினைத்தான்.
பிரசன்னா பதில் பேசாமல் முறைக்க,
Advertisement
“அம்மா என்னை கிண்டல் பண்ணாங்க. அதுக்கு அவங்களை கலாய்ச்சேன். இதுல நீ ஏன் டென்ஷன் ஆகுற?” என்ற கேள்வியே அவளை இன்னும் டென்ஷன் ஆக்கியது.
இவன் தெரிந்து கேட்கிறானா இல்லையா என்ற தெளிவின்றி அவனைப் பார்த்தாள்.
“உலகத்துல உங்கம்மாப்பா மட்டும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணல, நானும் உங்களை லவ் பண்ணினேன், பண்றேன்” என்று சொல்லி முகம் திருப்ப, அவள் கையைப் பிடித்து ஒரு பக்கமாக அவள் விலகினாலும் பிடிவாதமாக பிடித்து அணைத்தான்.
அவன் போட்டிருந்த யார்ட்லி மல்லிகை மணத்தை மங்கை நாசிக்குள் செலுத்திட, மயங்காமல் அவனை முறைத்தாள்.
“ஸோ வாட்?” என்று மகேந்திரன் கேட்க,
“விடுங்க” என்றாள் எரிச்சலாக.
அவனுக்கும் பொறுமை மெல்ல பறக்க, அவளை விடாது பிடித்தவன்,
“ஏன் அரை மணி நேரத்துக்கு மேல என்னோட ராசியா இருக்கக் கூடாதுனு வேண்டுதலா?” என்றதும்,
“நம்ம ராசியா இருக்கணும்னா முதல்ல நீங்க என்னைப் புரிஞ்சிக்கணும் இல்லை நான் உங்களைப் புரிஞ்சிக்கணும். முதலாவதுக்கு நீங்க முயற்சி பண்ண மாட்டீங்க. ரெண்டாவதுக்கு நான் பண்ணாலும் ப்ரோயோஜனமில்லை” என்றாள் சோர்வாக.
“சரி முதலாவது ட்ரை பண்றேன், சொல்லேன்” என்றவன் சொற்கள் செவிக்குள் சேரும் முன், செவிமடலைத் தீண்டின. பல மாத பிரிவுக்குப் பின் இத்தனை நெருக்கம், இதமாக உணர்ந்தான் ராஜமகேந்திரன்.
பிரசன்னா அமைதியின் பிடியில் நிற்க,
“சொல்லு” என்றவன் சொல் அவள் கழுத்தில் அழுத்த, கூச்சத்தில் பட்டென்று விலகினாள்.
மகேந்திரன் பார்வையில் லேசாய் ஏமாற்றம்.
“சொல்ல சொன்னா சொல்ல மாட்டேங்குற, அப்புறம் முயற்சி எங்க பண்றது?” அவன் குரலில் கோபம் தங்கத்தின் விலையில் ஏறியதைக் கண்டவள்,
“பின்ன? நீங்க அப்படி சொன்னது எனக்கு ஹர்ட் ஆச்சு, அத்தை மாமா என்ன நினைப்பாங்க? நான் உங்களை லவ் பண்றதை ஈசியா அப்படி விமர்சனம் பண்ணலாமா நீங்க? அது பொதுவான பேச்சா இருந்தாலும் எனக்குக் கஷ்டமா இருந்துச்சு” என்றவள் மெத்தையில் பொத்தென்று உட்கார்ந்தாள்.
மகேந்திரனுக்கு உண்மையில் பிரசன்னாவைக் காயப்படுத்த வேண்டும் என்று கடுகளவு எண்ணமில்லை. அவன் வீட்டில் நினைத்ததைப் பேசிடும் சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு.
பேசிவிட்டு காயப்பட்டால் அப்போதே சண்டையிட்டு சமாதானமாகிவிடுவார்கள். அதனால் விளையாட்டுப் பேச்சாகவே அதனை நினைத்தான்.
அம்மாவுக்கும் அவனுக்கும் இப்படி முட்டிக்கொள்வது வாடிக்கையே, இதில் பிரசன்னா வந்து சிக்கியது வேடிக்கையாகிப் போனது.
“உங்கம்மாப்பா உன்னை ரொம்ப செல்லமா வளர்த்துட்டாங்கடி” என்றபடி உட்கார்ந்திருந்தவளின் அருகே நின்று, அவள் முகம் நிமிர்த்தினான்.
காலையில் ஒளிர்ந்த முகம் இப்போது வாடி இருந்தது.
“சாரி” என்றான் மகேந்திரன். மின்னலாய் ஒரு ஆச்சரியம் தோன்ற, கணவனை நிமிர்ந்து நோக்கினாள்.
“அது ஒரு சாதாரண பேச்சு. உன்னை ஹர்ட் பண்ண சொல்லல. என்னோட ஒபினியன் சொன்னேன் அவ்வளவுதான். இப்போ சிரிச்சிட்டே கிளம்பினா நல்லாயிருக்கும். உனக்காகத்தான் நான் அப்பாய்ண்ட்மெண்ட்ஸ் எல்லாம் தள்ளி வைக்க சொல்லியிருக்கேன்” என்று மகேந்திரன் தணிந்து பேச, பிரசன்னா குளிர்ந்தாள்.
ரசிக்க வேண்டுமானால் அடாவடியும் அதிரடியும் நன்றாக இருக்கும். கல்லூரியில் அப்படித்தானே இருந்தான். ஆனால் நிறைய பொறுமையும், புரிதலும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை ரசித்து சுவைத்திட முடியும்.
திருமண வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் போல, ஒவ்வொரு விதமாக இருந்தது. எல்லா அத்தியாயங்களையும் ஒன்று போல அணுகினால் மட்டுமே கதையினை ரசிக்க முடியும் என்ற பிரசன்னாவும் மகேந்திரனும் உணர காலமெடுக்கும். அதனை காதல் கொடுக்கும்!
அந்த கனிவே பிரசன்னாவை கனிய வைக்க போதுமானதாக இருந்தது. அவளின் காதல் எதிர்ப்பார்த்து எட்டிய ஒன்று. ராஜமகேந்திரனுக்கு அப்படியான காத்திருப்பில்லை. மனைவியான பின்னே அவள் மீதான நேசம் கூடியது, உரிமை மீகியது.
அப்போதும் கூட சண்டை போடாமல், ஈகோ விலகி நிறக் சொல்லி வெறுப்பேற்றியது.
ஈகோ பிடித்தவர்களில் இரண்டே ரகம். ஒன்று ஆமா, ஈகோ என்று ஒத்துக்கொண்டாலும் விட்டுக்கொடுக்காதவர்கள். இன்னொரு ரகம் ஈகோவையும் சுயமரியாதையும் குழப்பிக்கொள்வார்கள். எனக்கு ஈகோவே இல்லை என்ற பிடிவாதம் கொண்டவர்கள்.
இதில் பிரசன்னாவின் கணவன் முதல் ரகம் என்றால் அவள் இரண்டாம் ரகம்.
இப்படித்தான் என்பதிலும் ஒரு ஈகோ இருக்கத்தானே செய்கிறது. அதைப்போல காதலில் எதிர்ப்பார்ப்புகளை மட்டுமே எப்போதும் கொண்டிருக்க முடியாதே. பெற நினைப்பவர்கள் கொஞ்சம் கொடுக்கவும் வேண்டும்.
என்ன செய்வது?? ராஜமகேந்திரன் சலித்துக்கொள்வது போல காதல் மிகைப்படுத்தப்பட்ட உணர்வே! அதிலும் ஆண்கள் காதலிப்பது, பெண்கள் காதலிக்கப்படுவதும் என்ற முறையே காலம் காலமாக காதலின் இலக்கணமாக உள்ளது.
பிரசன்னாவிற்கு காதலின் எதிர்ப்பார்ப்புகள் பனிப்படர்ந்த புல்வெளியாக இருக்கலாம். ஆனால், தன் மீது இத்தனை எதிர்ப்பார்ப்புகளை அவள் ஏக்கமாக வைத்திருக்கிறாள் என்று தெரியாத மகேந்திரனுக்கோ அவை முள்வேலிகள்!
இருவருமே ஒருவரை ஒருவர் நெருங்கிட முள்வேலியைத் தொட்டுத்தான் ஆக வேண்டும். அது யார் என்பதுதான் கேள்வியே, அவருக்கே காயம் அதிகம்.
இம்முறை மகேந்திரன் இறங்கி வந்து பேச, பிரசன்னா இரங்கினாள்.
“போலாமா?” என்று பிரசன்னா பளிச்சென்ற புன்னகையோடு கேட்டாள். தன் சமாதானங்களுக்கு இத்தனை பலமா என்று வியந்தான் மகேந்திரன்.
அவன் மனத்தில் சில விஷயங்கள் ஓடினாலும், அப்போதே சொல்லி இருக்கின்ற இனிமை கெட விரும்பவில்லை. அவனும் ஆசை, பாசம், கோபம் எல்லாம் உள்ள மனிதன்தானே?
திருமணம் முடிந்த இரண்டு மாதங்கள் வேகமாக ஓடிட, அடுத்து வந்த ஐந்து மாதங்களில் தேர்தல் வேலை, திலக்கின் விபத்து, தேர்தல் காலம் என்று அவர்களுக்குள் இணக்கமும் நெருக்கமும் பெருக வேண்டிய காலத்தில் பிரிந்திருந்தனர்.
மகேந்திரன் தேர்தல் வேலையில் இருந்ததால் பிரசன்னாவின் பிரிவு பெரிதாக அவனைத் தாக்கவில்லை. அவள் வீட்டிலிருந்தது கூட நல்லதே, இல்லை இங்கே தனிமையில் வெந்திருப்பாள்.
இருவரும் சேர்ந்து கீழே வர, அவர்களைப் பார்த்த பெரியவர்கள் கண்களில் மகிழ்ச்சி. வைதேகிக்கு அவ்வளவு சந்தோஷம்.
மருமகளை அழைத்தவர்,
“பத்திரமா போயிட்டு லேட்டா வாங்க” என்று சொல்ல,
“ஏன்மா நீங்களும் அப்பாவும் எங்காச்சும் போறீங்களா?” என்று கேட்டு வைதேகியிடமிருந்து இரண்டு அடிகள் வாங்கினான் மகேந்திரன்.
அவன் சிரிப்போடு நகர, பிரசன்னாவிற்குத் தன் வீட்டு ஞாபகங்கள். அம்மாவிடம் நேற்று காலைப் பேசியது. திருமணம் ஆகும்வரை அவர்கள் வீடும் கலகலப்பாகவே இருந்தது.
திலக் அமைதியானவன் என்றால், ரஞ்சன் வந்தால் கலாட்டாவாக இருக்கும். சீக்கிரம் தன் அண்ணன் சரியாகி வர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாள் பிரசன்னா.
இருவரும் ராஜமகேந்திரனின் ஜீப்பில் காஞ்சிபுரம் புறப்பட்டனர். அங்கே இரத்னவேல் தாத்தா வீட்டில் இவர்களுக்குப் பயங்கர கவனிப்பு.
“ஏண்டா மாப்ள, எம்.பியானதும் எங்களை எல்லாம் எட்டிப்பார்க்க மாட்டேங்குற?” என்று இரத்னவேலின் பெரிய மகன் கிருபாகரன் மகேந்திரனிடம் கேட்க,
அவனோ, “ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எட்டிப்பார்த்தா காஞ்சிபுரம் தெரியறதில்ல மாமா” என்றான்.
“டேய்ய்ய்” என்று அவர் சிரிக்க,
“அய்யோ, ராஜா மாமா. போதும்” என்று அறையிலிருந்து வந்த ஊர்மிளா சொல்ல,
“பெரியப்பா” என்று ராஜாவிடம் ஓடினாள் ஊர்மிளாவின் மகள் சுஜாதா.
“அப்படி சொல்லு ஊர்மி, கடிக்குறார்” என்று பிரசன்னா உதட்டை வளைக்க,
“அப்புறம் எங்க உன் ஹீரோ?” என்று ராஜா ஊர்மியை விசாரிக்க,
“அவர் ஊர்ல இருக்கார் மாமா. வீகெண்ட் முடியவும் இங்க வருவார்” என்று அவள் கணவன் ஜெய்ச்சந்திரன் குறித்து சொல்ல,
“அவன் இருந்திருந்தா கொஞ்சம் வெறுப்பேத்தியிருப்பேன். ஐ மிஸ் ஹிம்” என்று ராஜா ஊர்மியை வம்பு செய்ய,
“ஏண்டா ராஜா, எப்போ வந்த? அம்மாடி பிரசன்னா எப்படி இருக்க?” என்று இருவரையும் வரவேற்றார் இரத்னவேல்.
பேத்தியைப் பார்த்தவர், “ஊர்மி, போய் அவங்களுக்கு சாப்பிட கொண்டு வா டா” என்று சொன்னவர் பெரிய மகனிடம்,
“பிரபாவும் ஜமுனாவும் எங்கடா?” என்று விசாரிக்க,
“அவங்க காலையில கல்யாணத்துக்குப் போயிருக்காங்க பா. வர லேட்டாகும்” என்றார் கிருபாகரன். பின் திலக், மற்ற குடும்பத்தாரை விசாரித்து நேரம் சென்றது.
அங்கே மதிய உணவு உண்ண சொல்லி ஊர்மிளாவும், கிருபாகரன், அவர் மனைவியும் சொல்ல,
“இல்லை மாமா, கோவிலுக்குப் போயிட்டு நான் ஆபீஸ் போகணும். தாத்தாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு, ஊர்மியும் இருக்கான்னு தாத்தா சொல்லவும் வந்தோம். ரோடெல்லாம் நல்லாதான் போட்டிருக்கு, நீங்களும் சிவன்தாங்கல் வரலாம். அத்தை மாமாவோட வாங்க”
“ஓய், ஊர்மி! உன் தேவிகுளத்துக்காரரை அழைச்சிட்டு வீட்டுக்கு வா. எப்போ வந்தாலும் உடனே ஓடிடுற, அயனும் வியனும் கூட உன்னைப் பார்க்கணும் சொல்லிட்டு இருந்தாங்க.” என்றான் மகேந்திரன்.
“மாமா, நீங்க ஃபர்ஸ்ட் அக்காவை அழைச்சிட்டு தேவிகுளம் வாங்க, அக்கா மாமா பிசினு சொல்லிட்டு வரமாட்டாங்க. நீங்க கண்டிப்பா வரணும் கா. கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும், நம்ம வீடு அங்க சூப்பரா இருக்கும். நானும் உங்க கல்யாணமானதில இருந்து கூப்பிடுறேன், நீங்க ரெண்டு பேரும் வர மாட்டேங்கிறாங்க” என்று ஊர்மி குறைப்பட்டாள்.
“இவருக்கு எலெக்ஷன் வர்க் இருந்துச்சுல ஊர்மி, திலக் அண்ணாவுக்கு சரியாகட்டும். நாங்க கண்டிப்பா வரோம்” என்றாள் பிரசன்னா.
அங்கிருந்து உலகளந்த பெருமாள் கோவில் சென்றனர். பிரசன்னாவிற்கு அந்த கோவில் மிகவும் பிடித்தவொன்று. மகேந்திரன் அவளை அவசரப்படுத்தவில்லை. அவளாக சொல்லும்வரை கோவிலில் இருந்தனர்.
பின்னர் இருவரும் சேர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவன் அலுவலகம் செல்ல,
“ரெண்டு நாளா அண்ணாவைப் பார்க்கல மகேந்திரன். நாளைக்குப் போயிட்டு வரவா? நீங்களும் வரீங்களா?” என்று கேட்டாள்.
“ஸ்ரீகிட்ட அப்பாயிண்ட்மெண்ட் என்னனு கேட்டு சொல்றேன்மா. கண்டிப்பா போகலாம், ஆனா டைம் ஃபிக்ஸ் பண்ணிக்காத” என்றான்.
அடுத்த நாள் பிரசன்னாவோடு திலக்கைப் பார்க்க சென்றான் ராஜமகேந்திரன். திலக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக சொல்ல, பிரசன்னாவிற்கு அத்தனை மகிழ்ச்சி.
இங்கே திலக்கின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற, வங்காளத்தில் அவனின் பிரிய மனுஷி தப்பிக்க வழியின்றி தவித்திருந்தாள்.
error: Content is protected !!