அன்று காலையில் இருந்தே மகிழிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.. என்னவோ உறுத்திக் கொண்டே இருந்தது.. வரும் திங்கள் முதல் பள்ளி செல்லலாம் என சாரதா அப்பத்தா கூறியிருக்க.. அவளும் அம்மா வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பாள்.. ஆனால் இன்று என்னவோ அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
நந்தாவும் அவன் யோசனையில் இருக்க.. அன்று மதியம் வீட்டிற்கு வந்தவனுக்கு.. ஸ்பாட்டிடம் இருந்து நந்தாவிற்கு அழைப்பு வர.. அதை எடுத்துப் பேசியவன் முகமே மாறிவிட்டது.. முகம் இறுக மகிழ் இருப்பதைக் கூட உணராமல் அவன் மொபலை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
நந்தாவிடம் பேசிவிட்டு மொபைலை வைத்த ஸ்பாட்டிற்கு மனதில் கொலைவெறி தாண்டவம் ஆடியது.. காரணம் முத்துக்குமரன் தான்.. காலையில் நடந்த அத்தனையும் எண்ணிப் பார்த்தான்.
சொற்ப சொந்தங்கள் வீட்டில் நடமாடியபடி இருக்க.. அவன் மாமன் மகள் நிர்மலா அவன் அன்னையை ‘காஃபியாவது குடிங்க அத்தை’ என கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் பார்க்க முடியாதவனாகி வெளியே திண்ணையில் வந்து அமர.. அவன் தாய்மாமா அருகே வந்து தோளைத் தட்டிக் கொடுத்து “அப்பாவை நினைச்சு நினைச்சு அம்மாவைக் கோட்டை விட்ராதே மாப்ளை.. நான் இருக்கேன்யா உங்களுக்கு.. எல்லாம் சரியாப் போய்டும்” என்க.. அவரை இறுக அணைத்துக் கொண்டவன்.. சிறுபிள்ளை போல அழத் துவங்கினான்.
அவனைத் தேற்றியவர் மகளிடம் காஃபி எடுத்து வரச் சொல்லி அவனைக் குடிக்கச் செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்தார்.. அப்போது துக்கம் விசாரிக்க ஒருவர் வர.. துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்ட ஸ்பாட் கரம் பற்றி துக்கத்தைப் பகிர்ந்த அந்த மனிதர் “நேத்துக் காலையில பாத்தேனே.. சாயந்திரம் நான் ஒரு சோலியா வெளியூர் போய்ட்டேன்.. வந்த இப்படி சமாச்சாரம் கிடைக்குது.. குடிச்சாலும் யார் வம்புக்கும் போகாத மனுசன்.. இப்படிப் பண்ணிப் போட்டாரே” என பேசியவருக்கு.. தலையாட்டலை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவர் “ஏனப்பா.. அப்பா வேலை பாத்த வீட்ல.. அந்த ஐயா எதாவது கொடுத்தாங்களா” எனக் கேட்க
அவரைக் குழப்பமாகப் பார்த்தவன் “இல்லை அண்ணா.. ரகு அண்ணன் மின் மயானம் வரை வந்தாங்க.. ஏன் கேட்டிங்க” என்கவும்
அவரும் யோசனையாக “அப்புறம் ஏன் உங்கப்பாவை அந்தத் தம்பி கூப்பிட்டு விட்டுச்சு” என தனக்குள் சொல்வது போலச் சொல்ல.. “எந்தத் தம்பி ண்ணா” என்ற ஸ்பாட்டின் கேள்விக்கு.. “எல்லாம் அந்தப் போலீஸ் தம்பி தானப்பா.. என்னவோ பேசனும்னு.. உங்கப்பாவை நேத்து கூட்டிட்டு வரச் சொல்லுச்சு.. இவர் தான் ஃபோனு வச்சுக்கலையே.. அதான் நான் வந்து தகவல் சொன்னேன்.. எதும் முக்கியமான விஷயமா இருக்குமோ” என்றவர் அவன் மனதைக் குழப்பிவிட்டு.. வழக்கப்படி சொல்லாமல் சென்றுவிட.. ஸ்பாட் தான் மொத்தமாய் குழம்பி நின்றான்.
அவன் மாமாவிடம் கலந்தாலோசிக்க “பணம் நமக்கு வரனும்னா அது அவசியமில்லைப்பா.. அவர் ஏதாவது கைமாத்து வாங்கியிருந்தா அந்தத் தம்பிகிட்ட.. அது மட்டும் விசாரிச்சுக்கோ” என்றார்.
அவனுக்கும் அதுவே சரியாகப்பட.. வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் இதை மறந்து விடுவோம் என நினைத்தவன்.. மதியம் யாரும் வராத போது.. அவர்கள் வீட்டிற்குச் செல்லக் கிளம்பினான்.
வழியில் அவர்கள் தோட்டத்தை எட்டிப் பார்க்க.. முத்துக்குமரனின் பைக் நின்றிருந்தது.. ‘டியூட்டிக்குப் போகாம என்ன தான் பண்ணுவான்.. சும்மாவே சுத்திட்டு’ என மனதில் நினைத்தவாறே உள்ளே நுழைய.. அங்கு இன்னொருவரின் பேச்சுக்குரலும் கேட்க ஒரு நிமிடம் தயங்கினான்.
ஒரு அசோக மரத்தின் பின் இவன் நின்றிருக்க.. அதை அறியாதவர்கள் தன் போக்கில் கத்திக் கொண்டிருந்தனர்.. முத்துக்குமரன் “பண்ணிட்டேன்.. பண்ணிட்டேன்னா.. நான் எனக்காகவா பண்ணேன்.. நீங்க சொன்னதை முடிக்கப் போய்.. இப்படி ஆகிப் போச்சு” என்றான் எரிச்சலாக.
“யோவ்.. வெட்டி வாய் பேசாதே.. ஒருத்தனை சமாளிச்சு.. நம்ம பக்கம் இழுக்கத் தெரியலை.. உனக்கெல்லாம் என்ன வாய்” என்றார் அறிவழகன் அவனை விட எரிச்சலாக.
“நான் நல்லாத்தான் மிரட்டினேன் மாமா.. ஆனா அந்தப் புத்தியில்லாதவன் செத்துப் போவான்னு நான் என்ன கனவா கண்டேன்.. இங்க இருந்து போன உடனே தொங்கிட்டான்.. இதுல என் தப்பு என்ன இருக்கு” என குமரன் சொல்ல.. அவர்கள் நிச்சயம் தன் தந்தையைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
அப்போதே சென்று அவனைத் தன் கையாலே கொன்றுவிடத் தான் தோன்றியது.. ஆனாலும் அவர்கள் பேசுவதை வலிய வரவழைத்த பொறுமையுடன் கேட்க ஆரம்பித்தான்.
“உன் தப்பு எதுவுமே இல்லையா.. ஏற்கனவே ஒரு கொலை பண்ணிட்டு அந்தப் பழியைச் சுமக்க ஆளைத் தேடினா.. நீ அவனையே கொன்னுட்டு வெறுங்கையா நிக்கிறியே.. உன்னை நம்பி எப்படிய்யா என் பொண்ணைத் தரது.. அதைவிட இது ஒரு பிரச்சினை ஆச்சுன்னா என்ன செய்யறது.. ஏற்கனவே எனக்குத் தலைக்கு மேல கவலை இருக்கு.. நீ வேற ஏய்யா உன் பங்குக்கு ஏத்தி விட்ருக்க” தான் நினைத்தது நடக்காமல் போன கோவத்தில் அவனிடம் எகிறினார் அறிவழகன்.
அவரைக் கூர்ந்து பார்த்த முத்துக்குமரன் “செத்தவன் குடிக்கப் பயந்து தான் செத்தான்னு எல்லாரும் நம்பிட்டாங்க.. அவனை புதைக்கக் கூட இல்லை.. எரிச்சுட்டாங்க.. சோ அது கவலை இல்லை.. இப்ப உங்க கவலை எல்லாம் வேற போல இருக்கே மாமா” என பூடகமாகப் பேச
அவனை முறைத்தவர் “என்னய்யா.. பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு” எனக் கேட்க
“இல்லை.. வார்த்தைக்கு வார்த்தை என்மேலேயே குத்தம் சொல்றிங்களே.. ரெண்டு நாள் முன்னாடி கேஸ் குரல்வலையை நெருக்குது எதாவது பண்ணுன்னு எங்கிட்டத் தானே வந்திங்க.. இன்னைக்கு என்னால ஒரு பிரச்சனைன்னு என்னைக் கழட்டிவிட்டு நீங்க ஒரு பக்கா அரசியல்வாதின்னு காட்டிட்டிங்க பாத்திங்களா மாமா.. என்மேல நம்பிக்கை இல்லையா” அவரது எண்ணப் போக்கை உணர்ந்து சரியான இடத்தில் அவரை வளைத்துப் பிடித்தான்.
“அட என்ன மாப்ளை நீ.. பெரிய பேச்சுப் பேச.. உன்னை நம்பாமயா பொண்ணே தரப் போறேன்.. என் அத்தனைக்கும் வாரிசு நீ தான்யா” எனத் தோளைத் தட்டினார்.. தன் அத்தனை ரகசியமும் அவனிடம் இருக்க.. இவனை வெளியில் விட்டு வம்பை விலை கொடுத்து வாங்க அவர் தயாரில்லை.
இருவருமே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச.. இப்போது குமரன் “எனக்கென்னவோ அதெல்லாம் நடக்கும்னு தோணலை மாமா” என்கவும்.. அவரும் “சரிய்யா.. இன்னைக்கே என் பொண்ணை உனக்குக் கட்டித் தந்தா நம்புவியா” என அவன் எதிர்பார்த்த இடத்திற்கு வந்தார்.
உள்ளுக்குள் மகிழ்ந்தவன் “மாமா அனு” எனத் தயங்க.. “அவ கிடக்குறா.. ஓடுகாலிக் கழுதை.. கையைக் காலைக் கட்டி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்யா போதுமா” என்றார்.
அவனுக்கு அவரின் பேச்சில் எங்கே தன் திட்டமெல்லாம் பாழாகிவிடுமோ என்ற பயம்.. அவருக்கு மகளை சீக்கிரமாக தன் இனத்தில் கட்டிக் கொடுத்தால் தன் கௌரவம் மீளும் என்ற எண்ணம்.. இருவருமே அடி நாக்கில் நஞ்சும்.. நுனி நாக்கில் சிரிப்புமாய்.. இன்று இரவு கரட்டில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
அத்தனையையும் முழுமையாகக் கேட்ட ஸ்பாட்.. ஃபோன் எடுக்காமல் வந்த தன் முட்டாள்தனத்தை நொந்தபடி.. குமுறும் நெஞ்சத்துடன் வந்த தடம் தெரியாமல் விலகி நடக்க ஆரம்பித்தான்.. கோவம் மலையளவு மனதில் இருந்தாலும்.. இவர்களிடமிருந்து அந்தப் பெண்ணையாவது காப்பாற்றலாம் என நந்தாவிற்கு அழைத்தான்.
நடந்ததை சுருக்கமாகச் சொல்லி அவனை அழைத்தவன்.. முகிலுடன் வந்த நந்தாவிடம் தான் கேட்டது அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல.. இன்று இரவு அனைத்திற்கும் முடிவு கட்ட மூவரும் திட்டம் போட்டனர்.
முன்னிரவுப் பொழுதில் வீடு வந்த சேர்ந்த நந்தாவிற்கு.. வாயிற்படியிலேயே விழி வைத்துக் காத்திருந்த மனைவியைக் கண்டதும் உருகிப் போயிற்று.. திருமணம் ஆன நாள்கொண்டு அவனுக்கு ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது.
இன்றைய பிரச்சனையும்.. பள்ளி திறப்புவிழாவும் முடிந்த பின்னர் தன் மனையாளோடு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி திகட்டத் திகட்ட வாழ வேண்டும் என்ற ஆசை.
அவன் பின்னாலேயே அறைக்குள் மகிழும் வர.. குளித்து வந்தவன்.. தன் மயிலின் கண்களில் தனக்கான ஏக்கத்தைக் கண்டு கொண்டான்.. லேசாய்ப் புன்னகைத்தபடி அவள் அருகில் அமர.. அவன் நெஞ்சில் புதைந்தவள் “மதியத்தில இருந்து எங்க போன மாமா” எனக் கேட்க..
அவள் தலையை வருடியவன் “கொஞ்சம் வேலை மயிலு” என்க முகம் சுருக்கியவள் “சாப்பிடாம கூட என்ன வேலை” என எதிர்கேள்வி கேட்டாள்.. அவனிடமிருந்து அதற்கு பதில் இல்லாமல் போக.. அவன் ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டு கொண்டாள்.. கை மட்டும் தன் போக்கில் அவள் தலையை வருட.. மனம் அமைதியுற.. அவன் கரங்களுக்குள்ளேயே உறங்கிப் போனாள்.
தன் உள்ளத்துக்கு நேர்மாறாய் அமைதியான முகத்துடன் உறங்குபவளைக் கண்டவன்.. மெதுவாக அவளைத் தன் கரத்தில் இருந்து தலையணைக்கு இடம்மாற்றி.. சற்று நேரம் அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடுக்கென விழித்தாள் மகிழ்.. ஏதோ ஒரு கெட்ட கனவு.. தன் அருகே கணவனைக் காணாமல் ஒரு நிமிடம் குழம்ப.. அவன் அலைபேசிக்கு அழைக்க.. தன் மொபைலை எடுக்கச் செல்ல.. அங்கு சார்ஜில் இருந்தபடி அவனது ஃபோன் ஸ்பாட்டின் எண்களுடன் ஒளிர்ந்தது.
அவள் எடுத்துக் காதில் வைக்கவும் “எங்கடா இருக்க.. நான் வேற உள்ளே போக முடியாதே.. சீக்கிரம்டா.. கார் எல்லாம் வந்திடுச்சு.. அந்தக் கொலைகாரனுங்க எதையாவது பண்றதுக்குள்ள வாடா” என படபடவெனக் கொட்டிவிட்டு அவன் வைத்துவிட்டான்.
செய்தி முழுதாய்ப் புரியவில்லை எனினும்.. என்னவோ இப்போதே அவனைக் கண்டுவிடும் வேகம் அவளுள்.. அவன் ஃபோனைக் கையில் எடுத்தவள் மணியைப் பார்க்க.. பத்து என்றது.. எதையும் யோசிக்காமல் அவள் தன் அறையில் இருந்து வெளியே வர.. ஹாலில் டிவி பார்த்தபடி இருந்தார் அப்பத்தா.. எனவே பின்வாசல் வழியாகச் வெளியே சென்றாள்.
செய்தி முழுதாய்ப் புரியவில்லை எனினும்.. என்னவோ இப்போதே அவனைக் கண்டுவிடும் வேகம் அவளுள்.. அவன் ஃபோனைக் கையில் எடுத்தவள் மணியைப் பார்க்க.. பத்து என்றது.. எதையும் யோசிக்காமல் அவள் தன் அறையில் இருந்து வெளியே வர.. ஹாலில் டிவி பார்த்தபடி இருந்தார் அப்பத்தா.. எனவே பின்வாசல் வழியாகச் வெளியே சென்றாள்.
எங்கு சென்று கணவனைத் தேடுவது எனப் புரியவில்லை .. ஆனால் அவனை நோக்கிச் செல்ல மனம் உந்த.. இருளைக் கிழித்தபடி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.