அன்றைய சனிக்கிழமை பொழுது எப்போதும் போலவே அழகாக விடிந்தது.. நான்கு நாட்கள் தொடர்ச்சியான இருமல், ஜலதோஷத்திற்குப் பின் மகிழும் அன்று தான் தெளிவாக இருந்தாள்.
அன்று தண்ணீரில் விழுந்த பாதி காய்ந்த ஈர உடையுடன்.. கால் செருப்பு வாய்க்காலோடு சென்றிருக்க.. வெறும் காலோடு.. பின்வாசல் வழியாக வீட்டிற்குள் வந்தவளை முதலில் கண்டது அமிர்து அவ்வா தான்.. பார்த்தவுடன் அதிர்ந்து போனார்.
அவளது கலங்கிய தோற்றத்தைக் கண்டு அவருக்கு குற்ற உணர்ச்சியாகக் கூட இருந்தது.. கட்டாயப்படுத்துகிறோமே என.. ஆனாலும் அவள் உள் மன ஆசையை அறியாதவரா என்ன.. கொடியில் இருந்த துண்டினை எடுத்து அவள் தலையை துவட்டியவாறே “என்ன ஆச்சு.. எங்க கண்ணா போய் விழுந்துட்டு வந்துருக்க” என கேட்க
மென்குரலில் “வாய்க்கால்ல” என்க.. அதற்குள் வெளியே இருந்து மகளின் சத்தம் கேட்கவும் வந்த தனம்.. அவள் இருந்த நிலையை குழப்பத்துடன் பார்த்துவிட்டு “வாய்க்காலுக்கு நீ ஏன் போன.. அதும் இந்த நேரத்தில” என கூர்மையாகக் கேட்டார்.
“இன்னைக்கு அங்க பக்கத்துல இருக்க ஒரு கவர்மென்ட் ஸ்கூலுக்குப் போக வேண்டிய வேலை.. லேட் ஆகிடுச்சுன்னு.. வாய்க்கால் ஏரி மேல வந்தேன்” என வார்த்தைகளை முழுங்கி முழுங்கிச் சொல்வதிலேயே ஏதோ திருகுதாளம் பண்ணியிருக்கிறாள் என புரிந்தது தனத்திற்கு.
“ஏரியில தானே நடந்து வந்த.. அதுக்கு ஏன் இப்படி நனைஞ்சு போய் வந்திருக்க” என அடுத்த கேள்வியைக் கேட்க.. “ம்மா.. ஒரு டிராக்டர் வந்துச்சுன்னு விலகினேன்மா.. மண் சரிஞ்சு தண்ணீல விழுந்துட்டேன்” என சலிப்பாகக் கூறுவது போல கூறினாள்.. பின்ன எவ்வளவு நேரம் தான் சமாளிப்பாள் அவளும்.
[the_ad id=”6605″]
“லேட் ஆனா ஒரு ஃபோன் பண்றதுக்கு என்ன.. தண்ணி வேற நிறைய போகுது.. எதாவதுன்னா என்ன பண்ண முடியும்.. பெருசாக ஆக அறிவு வளரும்.. இதுக்கு தேஞ்சுட்டு போகுது.. என்ன புள்ளையோ” என திட்டியவாறே உள்ளே சென்று மகளுக்கு காஃபி போட்டு வந்து கொடுக்க.. அவளும் வாங்கிக் கொண்டாள்.
தாய் மற்றும் மகளின் பேச்சுக்களை அவ்வளவு நேரம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த அமிர்து அவ்வாவிடம் “பாருங்க அத்தை.. இதோட ரெண்டாவது தடவை.. வாய்க்கால்ல உங்க பேத்தி விழுந்து வாரிட்டு வந்திருக்கா.. போன தடவை விழுந்தப்பவே சொன்னேன்.. ஏரி மினியப்பனுக்கு கிடா வெட்டலாம்னு.. நீங்க யாரும் கவனிக்கலை” என மகழின் முழங்கையில் இருந்த காயத்தைப் பார்த்தபடியே சொல்ல
அவ்வா “இதுக்கு எதுக்கு பயப்படற.. அதான் ஒவ்வொரு தடவை உம்புள்ளை வாய்க்கால்ல போகவும் ஏரி மினியப்பன் வந்து காப்பாத்திப் போடறானே.. ஏங்கண்ணா.. அப்படித்தான” என மருகளுக்கு சமாதானம் சொல்லியவாறே பேத்தியிடம் கேட்டார்.
நந்தாவின் புல்லட் சத்தம் மகிழ் வரும் முன்னே கேட்டிருந்தது.. அது போக ஆறுமணிக்கு அவள் தனியாக வாய்க்கால் பக்கம் போயிருக்க மாட்டாள்.. ரெண்டும் ரெண்டும் நாலு என எளிதாக அவரால் கணக்கிட முடிந்தது.
‘எப்படித்தான் இப்படி மோப்பம் பிடிக்குதோ‘ என மனதில் பாட்டியை வைதாலும்.. அவர் புத்திசாலித்தனத்தை ஒரு மனதாகப் பாராட்டியபடியே.. “எனக்கென்ன தெரியும் வ்வா.. அம்மா சாமி தான் தள்ளிவிட்டுச்சுன்னு சொல்றாங்க.. நீ காப்பாத்துச்சுன்னு சொல்ற.. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என சாமர்த்தியமாக நழுவியவள் காஃபி டம்பளரை கிட்சனில் வைப்பது போல எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
அதன் பிறகு.. புதுத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் போயிருக்க.. அன்று இரவே நல்ல ஜலதோஷம்.. நான்கு நாட்களாக அது அவளைத் தொடர.. முத்துவின் அக்கா குழந்தையைக் கூட சென்று பார்க்க முடியாத நிலை.
இன்று தான் கொஞ்சம் தெளிந்தது போல் இருக்க.. குளித்து முடித்துவிட்டு ஹாலிற்கு வந்தாள் மகிழ்.. முகிலும் ராகவனும் தோட்டத்திற்குச் சென்றிருக்க.. தாத்தா அன்றைய தினசரியில் ஆழ்ந்து இருந்தார்.
இவள் தலைக் குளித்து வருவதைக் கண்ட அவ்வா “இப்பத்தானே மேல் சரியாச்சு.. அதுக்குள்ள தலைக்கு குளிக்கோனுமா” என அவளை வெயிலில் நிறுத்தி தலையை உலர்த்த “நீ மட்டும் காலையிலேயே சனிக்கிழமை பிடிச்சுட்ட.. நான் பிடிக்க வேண்டாமா” என அவர் இடுப்பைக் கட்டிக் கொண்டபடி வினவ “நல்லாப் புடுச்ச போ” என திட்டியவாறே அவளை நன்றாக வெயிலில் நிற்கச் சொல்லிவிட்டு சென்றவர்.. சற்று நேரத்தில் தூபக் கரண்டியுடன் வந்து அவள் கூந்தலுக்கு சாம்பிராணி போட்டுவிட்டார்.
முடியை உலர்த்திவிட்டு நுனியில் முடிச்சிட்ட அவ்வா தூபக் கரண்டியை வைக்கச் சென்றுவிட தாத்தாவின் அருகில் அமர்ந்தவள் “இன்னைக்கு அப்புச்சிக்கு சாமி கும்படறாங்க” என எங்கோ பார்த்தபடி சொல்ல
அவரும் பேப்பரில் இருந்து தலையை உயர்த்தாமல் “ஆடி அம்மாவாசை.. ஊரே சாமி கும்பிடுது.. நீ எந்த அப்புச்சியை சொல்ற” என்க.. காண்டானவள் “யார்னு உனக்குத் தெரியாது.. பொய் பேசுனாலும் பொருந்தப் பேசனும்” என உதட்டை சுழித்தாள்.
தாத்தா தன் சிரிப்பை மறைத்தவாறே “உனக்கு அழைப்பு வந்தா நீ போக வேண்டியது தானே.. இங்க ஏன் வந்து ஆழம் பாக்கற” என அப்போதும் விட்டுக் கொடுக்காமல் பேச.. இருவர் பேச்சையும் கேட்டவாறு வந்த அவ்வா “அதானே உன்னைக் கூப்பிட்டா போக வேண்டியது தானே.. ஆமா யார் கூப்பிட்டாங்க“
“அடங்கப்பா.. ஜாடிக்கேத்த மூடி தான் ரெண்டு பேரும் யார் கூப்பிடாங்கன்னு உனக்குத் தெரியாது.. இப்ப ரெண்டு பேரும் எங்கூட வருவிங்களா மாட்டிங்களா” என கோவத்தில் கத்த
அவ்வா “உங்கப்பன்ட்ட கேளு.. எங்ககிட்ட கத்தாதே” என்கவும்.. “ஏன் எல்லாரும் ஒரே கட்சி தானே.. இதுல அவர் மட்டும் என்ன புதுசா சொல்லப் போறார்” என அவள் நொடித்துக் கொள்ள.. அவ்வா “எல்லாரும் ஒரு கட்சி தான்.. ஆனா உங்கப்பன் மட்டும் உன் கட்சி.. மக என்ன நினைக்கறாளோ அதான் செய்வான்” என்றார்.
அதன்படியே வீட்டிற்கு வந்தவரிடம் அமிர்து அவ்வா விஷயத்தைச் சொல்ல.. மகளின் முகத்தைப் பார்த்த ராகவன் மறுபேச்சின்றி சம்மதித்தார்..
நந்தாவின் தாத்தா நினைவிடத்தில் அவன் குடும்பம் மொத்தமும் அவருக்கு சாமி கும்பிடுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தது.. கிட்டத்தட்ட அனைத்தும் முடியும் தருவாயில் இருக்க.. நந்தா தான் குழப்பத்தில் இருந்தான்.
என்னதான் நந்தா அவளிடம் வரச்சொல்லி சொல்லியிருந்தாலும் அவள் பிடிவாதம் அவன் அறிந்த ஒன்றே.. இரட்டை மனதாகத்தான் இருந்தது.. அவள் வருவாளா இல்லையா என.. வழக்கம் போல அவன் எண்ணத்தைப் பொய்யாக்கிய மகிழ் தன் அவ்வா தாத்தாவுடன் வர.. அவனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
தாத்தா தன் கையில் இருந்த ரோஜாப்பூ மாலையை சுமக்க முடியாமல் சுமந்து அவர் நினைவிடத்தின் மேல் வைத்துவிட்டு அமைதியாக துண்டை எடுத்து இடுப்பில் கட்டியவாறே நின்று கொண்டார்.
[the_ad id=”6605″]
அவர்களுக்காகவே காத்திருந்தாற் போல அடுத்த நொடியே மகனாக தன் தந்தைக்கு சரவணப் பெருமாள் பூஜை செய்ய.. படபட பட்டாசாய் இருக்கும் சாரதா அப்பத்தா கூட அன்று அமைதியாக இருந்தார்.. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒன்றாகவே கூட வந்து தன் சுக துக்கங்களை பங்கிட்டு.. மதிப்பும் மரியாதையுமாய்.. மகன் மகளென நிறைவானதொரு வாழ்க்கையையும் கையில் கொடுத்து.. கடைசியில் தன்னை விட்டுச் சென்றும் விட்ட தன் உற்ற துணையின் இழப்பு இன்றளவும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
கண்கள் கலங்க அதை அவர் மனதோடு ஏதோ பேசிக் கொண்டிருக்க.. நந்தாவின் அம்மாவும் அத்தை ரேவதியும் கூட கலங்கிப் போய் தான் இருந்தனர்.. தானும் இதற்கு காரணம் என்ற நினைவில் நந்தாவும் மகிழும் தங்களுக்குள் இறுகி நின்றிருந்தனர்.
பூஜை முடிந்ததும் படைப்பில் இடப்பட்டிருந்த உணவில் இருந்து கொஞ்ச கொஞ்சம் எடுத்து வேறொரு இலையில் வைத்த சரவணன் அதை நேராக எடுத்துச் சென்று மகிழின் கையில் கொடுத்தார்.. அவளும் அதை தயக்கமின்றி வாங்கிக் கொள்ள.. நந்தாவிடம் தீர்த்தச் செம்பைக் கொடுத்தார்.
இருவரும் அந்த மண்டபத்திலிருந்து கீழே இறங்கி வந்து.. சற்று தள்ளி இருந்த காம்பௌண்ட் சுவர் மீது மகிழ் அந்த இலையை வைத்து.. நந்தாவின் கையில் இருந்து செம்பை வாங்கியவள் அவன் வலது உள்ளங்கையில் நீர் விட்டாள்.. அதை அவன் தெளித்ததும் மீண்டும் இருவரும் மண்டபத்தை நோக்கி நடந்தனர்.
மகிழின் தாத்தா ‘ஏன்டா.. போறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே.. என் தலையில இந்தப் பொறுப்பை சுமத்திட்டு நீ மட்டும் போனது எந்த வகையில சேர்த்தி சொல்லு‘ என நினைவு தெரியும் முன்னே தன் தோழனாக இருந்தவரிடம் அவர் மானசீகமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அமிர்து அவ்வாவும் பதினேழு வயதில் திருமணம் முடித்து வந்ததில் இருந்து தான் பேரன் பேத்தி எடுக்கும் வரையிலும் உடன்பிறவா சகோதரனாக தனக்கு தோள் கொடுத்தவரின் நியாபகங்களை எண்ணிப் பார்த்தார்.. மகன்கள் சண்டையில் அநியாயமாக நட்பு பலியிடப் பட்டுவிட்டதே என சாரதாவை ஏக்கமாகப் பார்த்தார்.
காகம் வந்து படைப்பை எடுத்ததும் மூவரும் ஒன்றும் பேசாமல் விலகி நடக்க.. அவர்களை நிற்கும்படி கூட சொல்ல முடியாத தங்கள் இயலாமையை எண்ணி நந்தாவின் குடும்பத்தினர் கவலையுடன் பார்த்தனர்.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்துவிட.. ராகவன் ஒன்றும் கேட்கவில்லை.. மகிழுக்கே அவரது பொறுமையும் அமைதியும் ஆச்சரியம் தான்.. பாட்டிகளின் வளர்ப்பில் கேட்பதற்கு முன்பே அனைத்தும் கிடைத்து வளர்ந்தாலோ என்னவோ கொஞ்சம் பிடிவாதம், முன்கோபம் அதிகம்.. நியாயவாதி என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.. சட்டென்று கை நீளும்.. அவர் இவ்வளவு அமைதியாக அங்கு இவர்கள் சென்று வந்ததை ஏற்றுக் கொண்டதே அதிசயம் தான்.
நாட்கள் எவ்வித ஏற்ற இறக்கமுமின்றி கழிய.. வீடு, பள்ளி என வாழ்க்கை இயந்திரம் சீராகச் சுழலத் துவங்கியது..
அன்றும் வழக்கம் போல சிற்றுந்தில் ஏறிய மகிழும் முத்துவும் ஏதோ கதையளந்தபடி வர.. அவர்கள் போகும் ரூட்டில் பள்ளியும் கல்லூரியும் இருக்க.. சிற்றுந்து முழுக்க இளமைப் பட்டாளம் தான்.. அவ்வளவு பேச்சு சத்தத்திற்கு நடுவிலும் உங்களுக்காக நான் இருக்கேன் என சவுண்ட் சிஸ்டம்
சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம்
என்னை சீராட்ட வரணும்,
பொன்னி பொன்னி
நதி நீராட வரணும்
என்னை என்னை
நிதம் நீ ஆள வரணும்,
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு,
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு,
அன்பே ஓடி வா
(மினிபஸ் கலெக்ஷன்ஸ்) என பாடிக் கொண்டிருந்தது.
அந்த அதிகாலை இளம் வெயிலில்.. நாற்று மேலே ஏறியிருக்கும் நாற்றாங்கால்களையும்.. அந்தச் சிறு பசுமைப் பகுதியைச் சுற்றி சேடை பாய்ந்து இருக்கும் மற்ற வயல்களையும்.. அதில் இருக்கும் தெளிந்த நீரில் நீந்தித் திரியும் மேகத்தின் உருவங்களையும் மகிழ் வேடிக்கை பார்த்தவாறே.. மாருதம் வந்து கலைக்கும் தன் முன்நெற்றி முடியை ஒதுக்கியவாறே முத்துவின் பேச்சிற்கு ‘உம்‘ கொட்டிக் கொண்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
அடுத்த நிறுத்தத்தில் பஸ் நிற்கவும் ஏறிய இரண்டு கல்லூரிப் பெண்கள்.. இவர்கள் சீட்டிற்கு அருகில் நின்றவாறே “மாமாவே எப்பையாவது தான் நம்ப ஊர் பக்கம் வரார்.. அதுக்குள்ள இந்த பஸ் வந்துடனுமா.. போடி” என புலம்ப
மற்றொருவள் “ஆமாடி.. நல்ல சான்ஸ்.. என்ன செய்யறது அடுத்த பஸ் இதை விடக் கூட்டமா வருமே” என்றவாறே இருவரும் ஜன்னல் வழியே குதித்து விடுபவர்கள் போல எட்டி எட்டிப் பார்க்க.. பஸ் கிளம்பவும் மகிழ் ‘யார்டா அந்த அப்பாட்டக்கர் மாமா‘ என பார்க்க.. அங்கு நந்தா தான் யாரோடோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
‘இவனையா சொல்றாளுங்க‘ எனத் திரும்பி அந்தப் பெண்களைப் பார்க்க.. “ஐயோ பஸ் போகுதே.. மாமா பாருடி எவ்வளவு ஹேண்ட்சம்னு” என ஒருத்தி பெருமூச்செறிய.. மற்றொருவள் “ச்சே.. செம.. ஆனா ஏன் ஷேவ் பண்ணாம சுத்துறார்னு தெரியலை” என ஒரு புறம் புலம்ப.. மகிழுக்கு காதில் புகை வராத குறை தான்.
முடிந்த அளவு அந்தக் கடுப்பை மறைக்கப் பார்க்க.. அவளை அறிந்து கொண்ட பாவத்துடன் முத்து இதழ் மடித்து சிரித்தாள்.. அதில் இன்னும் கோவம் கொண்டவள் “என்ன இளிப்பு.. இன்னுமா உன் நொண்ணனுக்கு மார்கெட் போகலை.. பாவம் சின்னப் பிள்ளைங்க.. ஊரை ஏமாத்துறவன்” என பரிதாபம் போல உச் கொட்டினாள்.
இப்போது நன்றாகவே சிரித்த முத்து “எனக்கு எல்லாமே ரிவைண்ட்ல பாக்கற மாதிரி இருக்கு.. நாம காலேஜ் போகும் போது இப்படி யாராவது அண்ணனைப் பத்திப் பேசினதைக் கேட்டு அவரை எப்படி டார்ச்சர் பண்ண.. இனி திரும்பவுமா” என அவள் மனதை அறிந்து கொள்ளப் பார்க்க
அதைக் கரெக்டாக கேட்ச் செய்த மகிழ் “எனக்கே விபூதி அடிக்கப் பாக்கறியா.. யாரோ யாரையோ பத்திப் பேசறாங்க.. எனக்கு என்ன.. ஆனாலும் அந்த நெட்டைக் காலனுக்கு இவ்வளவு சீன் எல்லாம் இல்லை” என உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.
‘தெரியும்டி உன்னைப் பத்தி‘ என்ற பொருளில் முத்து சிரிக்க அவரசமாக தன் பார்வையை ஜன்னலுக்குத் திருப்பிக் கொண்டாள்.. அவர்களது பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது இருவரையும் சற்றே முறைத்தபடி இறங்கினாள்.
முத்துவும் அவளைக் கேலி செய்தபடியே வர.. மகிழ்வாக ஆரம்பித்த அந்த நாளின் முடிவு பற்றித் தெரியாமல் மகிழும் மகிழ்வாககே தன் வகுப்புகளுக்குச் சென்றாள்.