தூக்கி சொருகிய சேலையோடு சமையலறையில் மதிய உணவை சிரத்தையுடன் சமைத்துக் கொண்டிருந்தாள் தமயந்தி.
சமையலை முடித்து விட்டு தன் செல்ல மகளுக்குப் பிடித்த கேசரி கிண்டியவள், அதில் கொஞ்சத்தை எடுத்து நாவில் வைத்து ருஷி பார்த்து திருப்திபட்டுக் கொண்ட நேரத்தில், “அம்மா..” என்ற அழைப்புடன் வீட்டினுள் ஓடி வந்தாள் ஸ்ரீ.
“வந்துட்டியா?” என்று உட்சாகமாய் கேட்டவளின் குரலில் அவளது மனதின் மென்மைக்கு எதிரான ஒரு இறுக்கம் இழையோடியது.
“ம்மா! நான்தான் ஃபர்ஸ்ட்டு மார்க் வாங்குவேன்னு அப்போவே சொல்லிருந்தேன்ல? சொன்ன மாதிரியே தவணைப் பரீட்சைல நான்தான் கிளாஸ்ல முதலாவதா வந்திருக்கேன்ம்மா..” என வந்ததும் வராததுமாய் குதூகலத்தில் துள்ளியவாறு தோளில் தொங்கிய பையைப் பிரித்து, அதனுள் இருந்த ரிப்போர்ட் கார்டை எடுத்துக் காட்டினாள் ஸ்ரீ.
சீருடையின் காலரை உயர்த்திக் காட்டி, “தமயந்தியோட பொண்ணுன்னா சும்மாவா?” என்று கேட்டவாறு தாயை மிதப்பாகப் பார்த்த ஸ்ரீ, அப்போது தான் கண்ணுற்றவளாக, “அட! ரவா கேசரியா..” என்று கேட்டவாறு கடாயில் கை விட வர,
“ஸ்ரீ..” பல்லிடைக்குள் மகளின் பெயரை உச்சரித்தவள் பட்டென்று அவளது கையில் ஒரு அடி வைத்தாள்.
“அம்மா..” என சிணுங்கினாள் சிறியவள்.
“முதல்ல போய் பிரெஷ்ஷாகி, யூனிஃபார்ம் மாத்திட்டு வா.. இல்லனா அம்மாவுக்கு கெட்ட கோபம் வந்திடும் ஸ்ரீ! எப்பவும் சொல்லிட்டே இருக்க மாட்டேன்.” எனக் கண்டிப்புடன் சொன்னவளைப் பார்த்து நாடியைத் தோளில் இடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து அறைக்குள் புகுந்து கொண்டாள் ஸ்ரீ.
பதினைந்து வயதை இன்னும் சில மாதங்களில் எட்டிப் பிடிக்கவிருக்கும் அவ்விளம் மொட்டுக்கு தாயென்றால் வானளவு இஷ்டம்! அதேபோல் தமயந்தியின் உலகமே அவளின் ஒற்றைப் புத்திரி தான் என்றாலும், தன் அன்பை வெளிப்படையாகக் காட்டி விட்டால் மகள் கட்டுப்பாடுகளை மீறிச் சென்று விடுவாளோ என்ற பயத்தில் கடுமையை கையாள்கிறாள் அவளிடத்தில்..
ஹாலில், சுவற்றோடு ஒட்டியபடி இருந்த சிறிய மேஜையில் உணவை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த தமயந்தி, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தவளை பார்த்தாள்.
அவளின் மென்னுடலை பச்சை நிறப் பாவாடையும் இளமஞ்சள் சட்டையும் கச்சிதமாய் தழுவி இருக்க, இடையைத் தாண்டிய தழைத்த நீள் கூந்தல் அழகாக விரித்து விடப்பட்டிருந்தது.
முன்நெற்றியை ஆக்கிரமித்திருந்த முடிக்கற்றைகளை காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டவாறு வந்து நின்ற அழகு மயிலைக் காணும் போது தமயந்தியின் இதழ்களில் தன்னிச்சையாய் புன்னகையில் விரிந்தது.
கூடவே, கிள்ளினால் இரத்தம் சொட்டி விடுமோ என நினைத்து விடும்படி சிவந்த தோள் நிறத்தைக் கொண்டவளைப் பார்க்கும் போது, என்றும் போல் அவனவளின் நினைவு மனதை அலைக் கழித்தது.
முயன்று அவனது சிந்தனைகளை ஒதுக்கித் தள்ளியவள்..
“இன்னைக்கு டியுஷன் நடக்குமா அம்மா?” என்று கேட்ட மகளுக்கு ஆமோதிப்பாய் சிறு தலை அசைப்பை பதிலாக வழங்கியபடி இருக்கையில் அமர்ந்து கொள்ள,
“அப்போ இன்னைக்கும் வெளிய எங்கேயும் போக முடியாதா அம்மா?” என சலித்துக் கொண்டாள் ஸ்ரீ.
பதில் கூறாமல் தனக்கும் மகளுக்குமாய் தட்டில் உணவு பரிமாறிய தயமந்தி, உணவைப் பிசைந்து வாயருகே கொண்டு செல்லும் போது,
“முதல்ல எனக்கு..” என என்றும் போல் அக்கவளத்தை அதிரடியாய் தன் வாயில் திணித்துக் கொண்டவள்,
“அது எப்படிம்மா உங்களால இவ்ளோ டெலிஷியஸா சமைக்க முடியுது? ஸ்கூல் பிரண்ட்ஸ் வந்து, ஷேர் பண்ணி சாப்பிட்டுக்கலாம் வாடினு என்னையும் கூப்பிடுவாங்க.
இப்போதைக்கு நான் உங்க எல்லார்கிட்டயும் கோபம்னு சொல்லிட்டு ஓடிப் போய் புளியமரத்துக்கு கீழ உக்காந்து தனியாவே சாப்பிட ஆரம்பிச்சிடுவேன். அம்மா கைப்பட செஞ்ச சாப்பாட்டை மூணு நேரம் மூக்கு முட்ட சாப்பிட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது.
என் பிரண்ட்ஸ் கூட உங்க சாப்பாட்டுக்காக தான் என்னையும் கூட்டா சாப்பிட அழைப்பாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!” எனப் புகழ்ந்து தள்ளினாள்.
கண்களை சுருக்கி மகளை நோக்கி ஆராய்ச்சிப் பார்வை செலுத்திய தமயந்தி, “நீட்டி முழக்காம விஷயத்தை சொல்லுடி!” என்றாள், பொங்கி வந்த சிரிப்பை இதழுக்குள் மறைத்துக் கொண்டு.
திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் திருதிருவென விழித்தாள் ஸ்ரீ.
அவளை கேலியாகப் பார்த்த தமயந்தி, “இன்னைக்கு கொஞ்சம் அதிகப்படியா ஐஸ் வைச்சுட்டே ஸ்ரீகுட்டி. இப்போ சொல்லு, என்ன விஷயம்?” என்று வினவினாள்.
கீழுதட்டைக் கடித்து விடுவித்த ஸ்ரீ, நெற்றி வகுட்டிலிருந்து வழிந்து முகத்தில் விழுந்த முடிக்கற்றையை காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டவாறு, “அம்மா..” என்று அழைத்தாள் ராகமாய்!
“நெளிஞ்சு முடிச்சிட்டு விஷயத்தை பொறுமையா என்கிட்ட சொல்லிடு என்ன..” என அலட்டிக் கொள்ளாமல் சொல்லி விட்டு உணவில் கவனம் செலுத்தினாள் தமயந்தி.
ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்!
உணவுத் தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் தயக்கமாய் நிமிர்ந்து, “ஸ்கூல் டெஸ்ட்டுல ஃபர்ஸ்ட்டு மார்க் வாங்கினேன் இல்லையா அம்மா?” என்று மெதுவாக தன் பேச்சை ஆரம்பித்தாள்.
“அதுக்கு..”
“அதனால கணக்கு வாத்தியாரு என்னை ஒரு போட்டியில கலந்துக்க சொல்லி ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. முடியாதுனு மறுத்தேனா.. ஸ்கூல் புள்ளைங்க முன்னாடி கன்னாபின்னானு கண்டபடி திட்டிட்டாரு..”
மகளை கூர்ந்து பார்த்தவள், “நீ ஏன்டி மறுக்கணும்? அதுவும் இல்லாம வாத்தியார் முன்னால முடியாதுனு மேனர்ஸ் இல்லாம சொல்லிருப்ப நீ!” என முறைப்புடன் கூற,
“ஐயோ, இல்லம்மா! நான் தமயந்தியோட பொண்ணுல்ல.. மேனர்ஸ் இல்லாம நடந்துக்குவேனா?” எனப் பதறினாள் சிறியவள்.
“அதெல்லாம் விடு! உனக்கு ஏன் போட்டியில கலந்துக்க முடியாது?”
“அம்மா அது..”
“எந்த சாக்கு போக்கும் நீ சொல்லத் தேவையில்ல ஸ்ரீ. அம்மா சொல்றேன் கேளு, நீ கண்டிப்பா போட்டியில கலந்துக்குற! நான் வாத்தியாருக்கு ஃபோன் போட்டு சொல்லிடறேன்.”
“அம்மா, வேற வேற ஊர்ல இருந்து பிள்ளைங்க நிறைய பேர் செலக்ட்டாகி வருவாங்குறதால, இங்க இல்ல.. போட்டி ச்..சென்..னை.ல நடக்..”
“நோ!” என மகளின் பேச்சில் இடையிட்டு குரலுயர்த்திக் கத்திய தயமந்தி, கையை உதறிக் கொண்டு வேகமாக சமையலறை சென்று விட,
“இதுக்கு தான் நான் முன்னாடியே மறுத்துட்டேன் அம்மா..” என வேதனையுடன் முணுமுணுத்தாள் ஸ்ரீ.
அவளுக்கும் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஆசையாகத் தான் இருந்தது. ஆனாலும் சென்னைக்கு ஒருபோதும் தன்னை தாயானவள் அனுப்பி வைக்க மாட்டார். தன்னை அழைத்து செல்ல சம்மதிக்கவும் மாட்டார் என்பதை இதற்கு முன்னரே பல தடவைகள் திட்டு வாங்கி உறுதிப் படுத்தி வைத்திருந்தவளால் தாயைத் தாண்டி தன் ஆசையை நிறைவேற்ற முடியுமென்று தோன்றவில்லை!
பெருமூச்சு விட்டவளுக்கு தாயின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த பிறகு, உணவு தொண்டைக் குழியைத் தாண்டி இறங்க மறுத்தது.
மெதுவாக இருக்கையைத் தள்ளிக் கொண்டு எழுந்து நின்றவள் கிட்சேனுக்குள் நுழையும் போது, சிங்கில் போடப்பட்டிருந்த எச்சில் பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்தாள் தமயந்தி.
“அம்மா..” சிறு குரலில் அழைத்தவளைத் திரும்பிப் பாராமலே, “சாப்பிட்டுட்டியா ஸ்ரீ குட்டி?” என்று கேட்டவள் தட்டுக்காக கையை நீட்ட,
“சாப்பிட முடியலம்மா என்னால..” என உணவு மீந்திருந்த தட்டைப் பார்த்தவாறு அப்பாவியாக பதில் இயம்பினாள் ஸ்ரீ.
“ஏன்?”
“பசிக்கல அம்மா..”
“உணவை வீணாக்க கூடாது ஸ்ரீ. அதுக்காக தானே விடிஞ்சா அந்தி படற வரைக்கும் ஒவ்வொருத்தங்களும் உழைக்கிறாங்க.. எங்கே.. தட்டை இங்க கொடு!” என்றவள் கையைக் கழுவிக் கொண்டு வந்து, தட்டிலிருந்த உணவைப் பிசைந்து மகளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.
“அம்மா அந்த போட்..”
“ஆங் ஸ்ரீகுட்டி! காலைலயே பக்கத்து வீட்டு தேவி பாட்டி உன்னைத் தேடி வீட்டுக்கு வந்திருந்தாங்க. நீ போய் அவங்களைப் பார்த்துட்டு வா என்ன.. நேத்து தான் பையன் வீட்டுல இருந்து வந்திருப்பாங்க போல..” என நாசூக்காக அந்த விஷயத்தைப் பற்றி பேச வந்தவளின் வாயை அடைத்தாள் தமயந்தி.
அதைப் புரிந்து கொண்ட ஸ்ரீ அதற்கு மேலும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.
தாய் ஊட்டிய உணவை மனதிருப்தியுடன் உண்டு முடித்தவள் போட்டியில் கலந்து கொள்ளும் தன் ஆசை கனவாகவே போய் விட்ட வேதனையுடன் அறைக்கு நோக்கி நகர்ந்தாள்.
“கேசரி வேணாமா ஸ்ரீகுட்டி?”
சட்டென்று நடையை நிறுத்தியவள் தன் கவலையை தூர விரட்டி விட்டு தாய் நீட்டிய கேசரித் தட்டை துள்ளலுடன் வாங்கிக் கொள்ள, ஆதூரமாய் மகளின் தலை வருடி விட்டாள் தயமந்தி.
‘சென்னை வேணாம் ஸ்ரீகுட்டி. அங்கே போக நான் விரும்பல. நீயும் போக கூடாதுனு ஆசைப்படறேன். உன் ஆசையை மறுக்குற இந்த அம்மாவை நீ மன்னிச்சுடு!’ என மனதளவில் மகளிடம் மன்னிப்பு யாசித்தவள் தன் முடிவு சரியானது தானா என்ற யோசனையிலே நேரத்தைக் கடத்தினாள்.
சற்று நேரத்தில், பள்ளி செல்லும் வயதுடைய இளசுகள் கூட்டங் கூட்டமாக புத்தகமும் கையுமாக வீட்டுக்கு முன்னால் ஆஜராகினர்.
அந்த ஊரில் பெரிய தமிழ் டியுஷன் சென்டரை நடாத்திக் கொண்டிருப்பது தமயந்தி தான். குறைந்த கட்டணத்தில் நெடு நேரத்துக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பிள்ளைகளின் தமிழறிவு மட்டத்தை உயர்த்தி விடப் போராடும் தமயந்தியிடம் வாரத்தில் ஞாயிறு தவிர்ந்த மற்ற ஆறு நாளுமே டியுஷனுக்காக பிள்ளைகள் கூடி விடுவார்கள்.
அதற்காகவே காத்திருந்தது போல், “நான் தேவி பாட்டியைப் பார்த்துட்டு வர்றேன் அம்மா..” என்று கூறிக் கொண்டு அங்கிருந்து சிட்டென பறந்தாள் ஸ்ரீ.
வந்தவள் நேராக பிரேக்கடித்து நின்றது அந்தத் தெரு முனையில் இருக்கும் புல்வெளியில் தான்!
அங்கே அவளுக்காக காத்திருந்த பொடிசுகள் சில, “அக்கா வந்திடுச்சு..” என்ற கூச்சலுடன் அவளை நோக்கி ஓடி வர, கழுத்திலிருந்த மெல்லிய துப்பட்டாவை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டு விளையாட ஆயத்தமானாள் ஸ்ரீ.
“கீர்த்தி வரலையா?” என்று தன் சமவயது தோழியைப் பற்றி விசாரிக்கும் போதே, தன் பிங்கி சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தாள் கீர்த்தி.
இனியென்ன.. மாலை மயங்கி வானம் கருமை வண்ணம் பூசிக் கொள்ளும் வரை விளையாட்டு ஓயவில்லை.
இறுதியில், மட்டையை ஒரு ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு கல்லில் அமர்ந்தவளின் ஆடை வியர்வையால் நனைந்து போயிருந்தது. முகம் களைப்பில் பயங்கரமாக சோர்ந்து காணப்பட்டது.
“இருட்டிருச்சுடி. அப்பா திட்டும்.. நான் வர்றேன்!” என்று விட்டு கீர்த்தி அங்கிருந்து பறந்து விட, இளசுகளுடன் கதையளந்தவாறு வீட்டை நோக்கி நடந்தாள் ஸ்ரீ.
அவள் வீட்டுக்கு வரும் போது டியுஷன் வந்திருந்த பிள்ளைகள் வீட்டிலிருந்து சென்று விட்டிருக்க, உணவு மேஜையில் தலைசாய்த்து கண் மூடியிருந்தாள் தமயந்தி. தாயின் நெறிந்திருந்த புருவங்களைப் பார்த்ததுமே சின்னவளுக்குப் புரிந்து போனது, அவள் உறங்கவில்லை. யோசனையில் இருக்கிறாள் என்று!
சத்தம் எழாதவாறு மெல்லக் காலடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவள் அறையை நெருங்கும் போது,
“எங்கே போயிருந்த ஸ்ரீகுட்டி?” என்று திடீரென கேட்ட குரலில் துள்ளி விழுந்தவள், “அம்மா..” என்ற அழைப்புடன் திரும்ப, எந்தவித அசைவும் இல்லாமல் அப்படியே தான் படுத்திருந்தாள் தமயந்தி.
“அம்மா நான்..”
“உன்னை தேவி பாட்டி தேடினதா சொன்னேனே.. கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டியாடி நீ?”
முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவள், “அவங்களைப் பார்க்க போகலாம்னு தான் வீட்டை விட்டு வெளிக்கிட்டேன். ஆனா காலு என் பேச்சை மீறி கிரௌண்ட் பக்கம் போய்டுச்சு அம்மா.. நான்.. நான் நைட்டு தேவி பாட்டியைப் போய் பார்க்கறேன்!” என்றாள் நல்ல பிள்ளையாக.
தமயந்தியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
மெதுவாக அறைக்குள் நுழைந்து கொண்ட ஸ்ரீயின் மனம், ‘அந்த போட்டி விஷயத்தைப் பத்தி அம்மா கிட்ட சொன்னது தப்போ..’ என யோசித்தாள்.
‘சென்னை’ என்ற சொல்லைக் கேட்டாலே தமயந்தியின் முகம் வாடி வதங்கி விடும். அன்றைய நாள் முழுதும் தாயின் சோர்வினால் சிறியவளுக்குமே எந்தவித உட்சாகமும் இன்றி ஏனோ தானோவென்று கடந்து போய் விடும்.
அதை அறிந்தும் சென்னையைப் பற்றி பேசி தாயின் முகத்திலிருந்த உயிர்ப்பை பறித்துக் கொண்டு விட்டேனே என நொந்து கொண்ட ஸ்ரீ, முகம் அலம்பி உடை மாற்றிக் கொண்டு தேவிப் பாட்டியைக் காண விரைந்தாள்.
•••••••••
இரவு வானில் காய்ந்து கொண்டிருந்தது நிலவு!
பேல்கனியில் போடப்பட்டிருந்த சாய்வு நாட்காலியில் சாய்ந்து இரவு வானையும், அதனை அழகுபடுத்திக் கொண்டிருந்த நட்சத்திரங்களையும் அசுவாரஷ்யமாகப் பார்த்திருந்தான் ஒருவன்.
சிந்தனைகள் கடிவாளமில்லாத குதிரையாய் தறிகெட்டு ஓடித் திரிந்து விட்டு வந்து குவிந்தது என்னவோ, ஒரே ஒரு இடத்தில் தான்! அந்தகால இனிமையான நாட்களுக்காக அவனது மனம் ஏங்கித் தவித்தது.
தலையை உலுக்கி இமை மூடும் போது கண்ணுக்குள் வந்து நின்ற அழகு வதனத்தை சிந்தையிலிருந்து தூரமாக்க முயன்று கொண்டிருந்த வேளையில், “மாமா..” என்ற அழைப்புடன் அவனின் தோள் தொட்டாள் நேத்ரா.
“சொல்லுடி..”
“நேரமாகிடுச்சு. நீங்க வரலைன்னா சாப்பிட மாட்டேன்னு நிக்கி அடம் பிடிக்கிறான். வந்து என்னனு பாருங்களேன் மாமா!” என சலித்துக் கொண்டவளை நோக்கி கேலிப் பார்வை வீசியவன்,
“அவனுக்கு உன்னை விட, அப்பா மேல தான் அதிகப் பிரியம்டி..” என பெருமையாய் கூறினான்.
“ம்க்கும்! ரொம்பத் தான்..” என நொடித்துக் கொண்டவளை கடுப்பேற்றும் விதமாய் சற்று சத்தமாகவே நகைத்தவன் எழுந்து வெளியே செல்ல,
“நாள் பூரா கூட நிக்கிறது நான்தானே! ஆனா அவன் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறான்.” என கடுப்புடன் முனகியவாறு கணவனின் கால்தடம் பற்றி அவன் பின்னாலே நடந்தாள் நேத்ராவும்.
உணவு மேஜையில் அமர்ந்து பீங்கானில் கரண்டியால் தட்டி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்த நிகித்ரன், தந்தையைக் கண்டதும் முகம் மலர்ந்தான்.
“என்னாச்சு மை பாய்? சாப்பிட முடியாதுனு அடம் பிடிச்சியாமே!” என்று கேட்டவாறு இருக்கையில் வந்தமர்ந்தவனின் பார்வை நேத்ராவைக் கிண்டலாக வலம் வர,
“போங்க மாமா.. நான் ரெண்டு பேரோடவும் கோவிச்சுகிட்டேன்!” என சிணுங்கி, முகத்தை இரண்டு கிலோ அளவுக்கு தொங்க வைத்துக் கொண்டு இருவருக்கும் உணவு பரிமாறத் துவங்கினாள் நேத்ரா.
தன்னை மீறி எழுந்த சிரிப்பை அடக்க வழியில்லாது நேத்ராவின் சோக முகம் கண்டு வாய் விட்டே சிரித்தான், விஷ்வஜித் ஷைலேந்திரன்!