சில நாட்களுக்கு பின் அன்று தான் அலுவலகத்தில் இருந்து திரும்பும் சமயம் ஈகில் விஷனுக்கு வந்தான் ஆதவன். முன்னறையில் கடை பையனே நிற்க,
“தீனா இல்லையா டா..” என விசாரித்தான்.
“இருக்காரு ண்ணே.. உள்ள சர்வீஸ் ரூம்ல தான் இருக்கார்..” என்று அவன் சொல்லவும் சரியென தலையசைத்துவிட்டு உள்ளே செல்ல குடோன் போல மொத்த சரக்குகள் அடுக்கியுள்ள அந்த இடத்தின் ஒரு பகுதியில் அவன் சொன்ன அறை இருந்தது.
கதவை திறந்து ஆதவன் வந்தபோது தினகரன் பழுதான பயோமெட்ரிக் சென்ஸார் ஒன்றை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கு கடையில இருப்பியான்னு யோசிச்சுட்டே தான் வந்தேன்.. இப்ப எல்லாம் ஃபேக்டரில தான் முழு நேரம் இருக்க போலையே..”
என்ற கேள்வியோடு அவன் முன்னே அமர சென்ஸாரில் பிரச்சனை என்னவென்று கண்டுக் கொண்டதால் அதனை மார்க் செய்து வைத்துவிட்டு,
“ஆமா ஆதி… கடையை பசங்க தான் பார்த்துகிறாங்க.. இன்னைக்கு தான் நானே வந்தேன்..” என்றான்.
“சரி.. விஷயம் தெரியுமா..? அந்த பொண்ணு கெளசல்யா சூசைட் பண்ணி செத்துடுச்சாம்..”
“என்னடா சொல்ற.. யார் அந்த கௌசல்யா..? “
இறப்பு செய்தி கேட்ட பதைப்போடு தினகரன் விசாரிக்க,
“அதான்.. போன வாரம் ஒரு பொண்ணோட ஆபாச வீடியோ ச்சேட் வெளியாகி வைரலா ஷேர் ஆச்சே..!! அந்த பொண்ணு தான்..”
என்றதும் புரிய முகம் ஒருவித இறுக்கத்தை தத்தெடுத்தது.
“அதுக்கு ஒரு அஞ்சு வயசு பையன் இருக்கானாம்.. பாவம்.. அந்த பிள்ளையை பத்தி கூட யோசிக்காமல் இப்படி ஒரு காரியத்தை செஞ்சு வைச்சுட்டு இப்ப அந்த பிள்ளையையும் தவிக்கவிட்டு போய் சேர்ந்திடுச்சு.. என்ன ஜென்மமோ…”
என்று முகம் சுழித்து சொல்லி தினகரனுள் கொதித்த அனலை தன்னை அறியாமலே ஊதிவிட்டான்.
“ஆமாடா.. அவளை என்ன ஜென்மம்ன்னு குத்தம் சொல்ற நாம எல்லாம் ரொம்ப உத்தமனுங்க தான் இல்ல..”
என்று திடீரென தீனா சத்தமிடவும்,
“ஏன் நாம என்ன தப்பு பண்ணினோம்..?? அவ குற்றவுணர்வுல அவமானத்தில் தூக்கு மாட்டி செத்தால் யார் பொறுப்பு..!!”
என்று கேள்வியோடு,
‘இவன் என்ன சம்மந்தமே இல்லாமல் பேசுகிறான் என்பது போல் பார்த்து வைத்தான்.
“குற்றவுணர்வுன்னு சொல்ல அவ என்ன குற்றம் பண்ணினான்னு சொல்ல வர.. எது அந்த வீடியோ ச்சேட்டா..?” என்ற தீனா,
“அது அவளோட அந்தரங்கம் ஆதி.. அவளுக்கும் அவ பேசிய அந்த ஆளுக்கும் சுயவுணர்வோட நடந்த தனிப்பட்ட விஷயம்..!! அதை எடுத்து போட்டு விமர்சிக்க நமக்கெல்லாம் யார் உரிமை கொடுத்தா..?? அந்த ஆளை அவ காதலிச்சு இருக்கலாம்.. அவளை கல்யாண பண்ணிக்க இருந்தவனா கூட இருக்கலாம்.. ஒருவேளை அவ புருஷன் உயிரோட இருந்து இவன் கள்ளகாதலனாவே இருந்துட்டு போகட்டும்.. அது அவ குடும்ப பிரச்சனை.. நீயோ நானா மூக்கை நுழைச்சு நாட்டாமை பண்ண என்ன இருக்கு..?
அவனை நம்பி அவ பேசிய வீடியோவை சோசியல் மீடியாவில் போட்டு ஆசிங்கப்படுத்திய அந்த தறுதல பண்ணது குற்றம்..!!
வெக்கமே இல்லாம ஏதோ சமூக சேவை மாதிரி, ‘ மச்சான்.. அந்த வீடியோ பாத்தியா..’ ன்னு தன் கூட்டத்திற்கே ஷேர் பண்ணி அவளை மேலே அசிங்கப்படுத்திய தெரு நாய்ங்க பண்ணது குற்றம்…!!
தான் பெரிய யோக்கியன் மாதிரி மீம்ஸ் போட்டு கலாய்கிறேன்னும் ‘இந்த பெண் செய்த காரியத்தை பாருங்கள்..’னு தலைப்போட கேவலம் லைக்ஸ் கமென்ட்காக அவளை மானபங்கம் படுத்திய எச்ச பசங்க பண்ணது குற்றம்..!!
அதில் எல்லாம் ‘ வீடியோ லிங்க்..’ கிடைக்குமான்னு நாக்கை தொங்க போட்டு கமெண்ட்ல தேடி அலையிற அந்த கூட்டம் பண்ணது குற்றம்..!!!
மனசில் அழுக்கை சுமந்துகிட்டு, ‘ ச்சே இவ எல்லாம் என்ன பொம்பளை’ன்னு பொங்கி எழுற கலாச்சார காவலர்கள் பண்ணது குற்றம்..!!
இந்த குற்றத்திற்கு எல்லாம் சேர்த்து தான் தண்டனையை அவளுக்கு கொடுத்திட்டோம்.. செத்து போற அளவுக்கு அவ மகாபாதகம் ஒன்னும் செஞ்சுடல.. அதை அவ்வளவு பெரிய விஷயமாக்கி ஒரு பொண்ணை மனசால சித்திரவதை செஞ்சு கொன்று இருக்கோம்..!! பாவம் டா.. இந்த சமூகமே சேர்ந்து செஞ்ச பாவம்..”
என்று உணர்ச்சிகரமாய் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த சில நொடிகள் ஆதவனுக்கு பேச்சே எழவில்லை. அவனுக்கு பாதி புரிந்தும் புரியாத நிலை தான்..!!
“அந்த பொண்ணு மேல தப்பே இல்லைன்னு சொல்றியா..?”
என சந்தேகம் கேட்க மூச்சை இழுத்துவிட்டு,
“அவ தப்போ சரியோ அது நமக்கு தேவை இல்லாததுன்னு சொல்ல வரேன்..
அந்த வீடியோ அந்த பெண்ணோட அனுமதி இல்லாம வெளியாகி இருக்கு.. அதை நாம பார்க்க நேர்ந்தது தற்செயலா இருக்கலாம்.. ஆனா அதை இன்னோர்த்தர் கிட்ட பகிருவதும் பேசுவதும் தப்புன்னு சொல்ல வரேன்…
அப்படி அனுமதி இல்லாம ஒரு பொண்ணோட பையனோட ஆபாசமான ஃபோட்டோ,வீடியோ, ஆடியோ ஏதோ ஒன்னு.. நாம பார்க்க நேர்ந்தாலும் அதை ஒரு விஷயமா எடுத்துக்காம கடந்து போகிற மனநிலை நம்ம மக்கள் மனசில் எப்ப வருதோ அப்ப தான்.. ஆபாசத்தை ஒரு ஆயுதமா பயன்படுத்திக்கிற வக்கிரம் புடிச்சவனுங்க கொட்டம் அடங்கும்..”
என்று உறுதியாய் மொழிந்தவன் இறுதியில்,
“ஆனா அது நடக்க இன்னும் எத்தனை யுகம் ஆகுமோ..”
என வெறுப்போடு சொல்லி தன் வேலையை தொடர ஆதவனுக்கும் தீனா சொல்ல வருவது தெளிவாய் விளங்கியது. எனவே
“மத்தவங்க பத்தி தெரியல டா.. ஆனால் இனி நான் அப்படி கடந்து போக பழகிடுவேன்…”
என்று மனதார உறுதிக் கொண்டான். யாரோ ஒரு பெண் என்ற நிலையில் உரையாடிய இவர்கள் இந்த பெண்ணின் மரணத்தில் தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று அறிந்திருந்தால்..???
“ஏதேதோ பேசி ஏற்கெனவே நிறைய டென்ஷன்ல இருக்கிற உன்னை.. இன்னும் சூடாக்கிட்டேன்..”
என இலகுவாய் சொன்ன ஆதி,
“ஆமா.. ஃபேக்டரில இப்ப என்ன வேலை நடந்துட்டு இருக்கு.. மிஷினரிஸ் செட் பண்றதா..??” என கேட்க,
“அது முடிஞ்சுது… ஃபேக்டரிக்கு ட்ரைன்டு ஆட்களை தேர்ந்து எடுத்து சேர்க்கும் வேலை தான் இப்ப நடந்துட்டு இருக்கு.. கூடவே இந்த BIS certificate-க்கு தேவையான ஃபைல்ஸ் ஆவணப்படுத்தும் வேலையும் நெட்டி முறிக்குது.. கடைக்கே இன்னைக்கு தான் வரேன்..” என அணிவகுத்து நிற்கும் வேலைகளை விளக்க இந்த குறுகிய காலத்தில் அதிகரித்த அவனின் வேலைப்பளு புரிந்தது.
ஆம்.. தொழிலில் கண்காணிப்பு கேமரா மற்றும் இதர உயிரளவு கருவிகளை மொத்தவிற்பனையாக விநியோகம் செய்வதோடு அவன் நின்றுவிடவில்லை.
சிசிடிவி கருவிகளை சொந்தமாய் தயாரித்து தன் ஈகிள் விஷனை ஒரு தனி பிராண்டாக உருவாக்குவதே அவனின் திட்டம்..!! அதற்கான முறையான பயிற்சிகளையும் கற்ற நிலையில் கடந்த ஆறு மாதமாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டிய பணிகளை தான் சிறிது சிறிதாக செய்து வருகிறான்.
“ஃபேக்டரி திறக்க இன்னும் கொஞ்சம் மாசம் ஆகும்னு சொல்லிட்டு இருந்த..? ஆனால் இப்ப கவர்மென்ட் அப்ரூவல் வாங்கி லாஞ்ச் பண்ண ரொம்ப வேகமா எல்லாம் பண்ணிட்டு இருக்க.. எதுக்கு இந்த அவசரம்..?”
“எல்லாம் ஒரு காரணமா தான் ஆதி… சீக்கிரமே திறக்கணும்.. திறப்பு விழாவுக்கு முதல் பத்திரிக்கை உன் சித்தப்பாவுக்கு தான்..”
என்று இதழ் வளைத்து பூடகமாய் அவன் கூறியதை ஆதவன் பெரிதாய் கவனிக்கவில்லை.
“ம்க்கும்… ஊருக்கு கொஞ்சம் தள்ளி என்றதால நீ இடம் வாங்கி இத்தனை வேலை பார்த்தது எல்லாம் யாருக்கும் இன்னும் தெரியல.. தெரிய வரும்போது என் சித்தப்பா.. உன் பெரியப்பாஸ் எல்லாம் வயிறு எரிஞ்சே பொசுங்கிடுவாங்க இல்ல.. ஆமா.. என்ன…!! அவர் மேல திடீர் பாசம்..”
“அவரும் தான் என் மேல திடீர்னு பாசம் வந்து அப்பாவை பார்த்து அறிவுரை எல்லாம் சொல்லி இருக்கார்..”
“என்னடா சொல்ற..”
என குழப்பமாய் கேட்டவனிடம்,
“அப்பாவை பார்த்து அவர் மகளுக்கு மகேஷை தான் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.. தாத்தா பேச்சை நம்பிட்டு இருக்காதீங்க.. உங்க தகுதிக்கு ஏத்த வேற நல்ல இடமா பாருங்கன்னு சொல்லி இருக்கார்..”
என தன் வேலையை தொடர்ந்தபடி சொல்ல தலையில் அடித்துக் கொண்ட ஆதவன்,
“இவரோட பெரிய ரோதனை…!! ம்ச்… மாமா என்ன சொன்னாங்களாம்..”
என்று கேட்டான்.
“உலக அதிசயமா எங்க அப்பாவுக்கே கோபம் வந்திருக்கு..!!! ‘நான் எப்போ உன்கிட்ட பொண்ணு கேட்டேன்..?! சுப்ரமணி மாமா அப்படி சொன்னால் நீ
அவர்கிட்ட தான் இதை சொல்லணும்.. என் பையனுக்கு பெண் பார்க்க எனக்கு தெரியும்னு சொல்லிட்டு வந்து இருக்கார்.. ”
என்று சொன்னதும் ஆதவனுக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.
“தேவையா இந்த மனுஷனுக்கு.. தேடி போய் மூக்கொடைப்பு வாங்கி இருக்கார்..” என்றவன்,
“ஆனா அப்படி பேசியதும் நல்லதா போயிடுச்சு தீனா.. இந்த யோசனை சரிவராதுன்னு நீயோ நானோ சொன்னால் தான் உங்க வீட்டில் கேட்கிற நிலமையில் இல்ல.. இப்ப சித்தப்பா பேச்சில் லிங்கா மாமாவே உனக்கும் கமலினிக்கும் ஆன கல்யாண பேச்சு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருப்பார்.. அதை அவரே தாத்தாவிடம் தெரிய படுத்திட்டால் போதும்.. பிரச்சனை தீர்ந்திடும்..!!”
என நிம்மதியாய் சொல்ல சட்டென்று தினகரனின் கைகள் தன் வேலையை நிறுத்திவிட்டது. பார்வையை நிமிர்த்தாமல் விரல் நகத்தால் மேசையை கீறியவன் மனமோ,
“இல்லையே.. அப்படி எல்லாம் முடிஞ்சுடாது… முடிக்கிற ஐடியாவில் நானும் இல்ல..”
என்று சத்தமிட அதற்கு ஒலி வடிவம் கொடுக்காமல் மௌனமாய் இருந்துவிட்டான். இத்தனை வருடத்தில் ஆதவனிடம் அவன் எதையும் மறைத்தது இல்லை. இன்று ஏனோ தன் எண்ணவோட்டத்தை சொல்ல வாய் வரவில்லை.
ஆதவனும் வேறு பேச்சுகளுக்கு போய்விட அதனை அரைகுறையாய் காதில் வாங்கி கையில் இருந்த சென்ஸாரை உருட்டியபடி தன் சிந்தனையில் மூழ்கிவிட்டான் தினகரன்.
‘பிரச்சனை தீர்ந்துவிடும்..’ என்று அவனின் வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் ரிங்காரமிட்டது. முதலில் தீனாவிற்கும் தாத்தா துவங்கிய இந்த பேச்சு புது பிரச்சனையாக தான் தெரிந்தது. ஆனால் இன்று அவரைவிட தீவிரமாய் அதனை தன் மனதில் ஏற்றிக் கொள்வோம் என கனவிலும் நினைக்கவே இல்லை.
ஒரே சந்திப்பில் ஒருவரின் எண்ண திசையை ஒருத்தியால் புரட்டி போட முடியுமா..?? நொடி பொழுதில் ஒருவர் மீது நேச விதை விழுந்து விருட்சமடைய முடியுமா..?? என்ற கேள்விகள் அவனை சில நாட்களாய் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. விடையாய் அவன் பெற்றது என்னவோ கமலினி தான்..!!
ஸ்வர்ணாவோடான அந்த சில நிமிட பேச்சில் அவளிடம் தொனித்த நேர்மறை சிந்தனையும் தன்னம்பிக்கையும் அவள் மீது ஒரு நல் அபிமானத்தை கொடுத்தது உண்மை தான்.. ஆனால் எப்போது அந்த அபிமானம் தன் எல்லைகளை கடந்து நேசமாய் உருமாறியது என்று தான் தெரியவில்லை.
வீட்டில் லிங்கேஸ்வரன் சுந்தரமூர்த்தியுடன் நடந்த சம்பாஷணையை கூறி,
‘தீனா சொன்னது சரி தான்.. பெரியவர் பேச்சை கேட்டு தேவையில்லாம கற்பனை வளர்த்தது நம்ம தப்பு.. இனி நாமே விலகுறது தான் மரியாதையா இருக்கும் லலிதா..’
என்று சொன்னபோதும் சரி இப்போது ஆதவன்,
‘பிரச்சனை தீர்ந்து விடும்..’ என்று சொன்னபோதும் சரி ஏமாற்றம் தொண்டை வரை அடைக்கிறது.
‘அப்படி எல்லாம் விட முடியாது..’ என கத்தி சொல்ல வேண்டும் போல் நா துடிக்கிறது. ஆனால் அதனை வெளிப்படையாய் சொல்ல விடாமல் சுந்தரமூர்த்தி என்ற சுவர் முட்டுக்கட்டையாக அவன் முன் நிற்கிறதே..!!!
தன் சுயமரியாதையை விடுத்து அவருடைய மகளின் மீது தனக்கு விருப்பம் இருப்பதை வெளிப்படுத்த முடியவில்லை.
‘இதுவரை பார்த்த பெண்களிடம் தோன்றாத சலனம் சுந்தரமூர்த்தி மகளிடம் தான் உண்டாக வேண்டுமா..??’
என பலமுறை தன் மீதே எழுந்த அதே கோபம் இப்போதும் இயம்பி அவனை வதைக்க குனிந்த தலை நிமிரவே இல்லை.
“சரி தீனா.. நேரம் ஆச்சு.. நான் கிளம்புறேன்..” என்று ஆதவன் எழும்போதும் வாய் திறக்காமல் தலையசைத்து விடைக்கொடுக்க அவனை வினோதமாய் பார்த்தவன்,
“ரொம்ப உன்னை போட்டு வருத்திக்காத டா.. இந்த மாதிரி சின்ன சின்ன வேலையை எல்லாம் பசங்களை பார்க்க சொல்லிட்டு கொஞ்சம் ஓய்வெடு..”
என அக்கறையாய் கூறி சென்றுவிட
எதிலும் நாட்டம் இல்லாமல் சோர்ந்து கிடந்த மனதிற்கு கடிவாளமிட்டு தானும் முன்னறை வந்தான். அதற்குள் வெளியே சென்ற ஆதவன் மீண்டும் அதே வேகத்தில் கடைக்குள் நுழைய,