பத்து நாள் முடிந்திருக்க.. ராதாவும் பாலனும் வந்திருக்க.. கணேசன்.. ‘வா ராதா..” என்றார் சுரத்தில்லாமல்.
நாளை ப்ரியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் ஆதலால் அனைவர் முகமும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ‘அண்ணா.. ப்ரியாக்கு கும்பிட நாளைக்கு பட்டுவ அழைச்சிட்டு வாங்க..” என்றார் கெஞ்சலாக.
‘அழைச்சிட்டு வரேன் ராதா.. ஆனா பட்டு கையால எந்த சம்பிரதாயமும் செய்ய கூடாதுனு ரூபன் சொல்லியிருக்கான்..” என்றார். கணேசன் சொல்லும் விதமே அவருக்கும் அது கூடாது என்பதை உறுதிபடுத்தியது.
‘பட்டுமா கையால செய்ய வச்சா ப்ரியாமேல சந்தேகம் வரும்னு ரூபன் அத்தனை சொல்லியும் இன்னும் கூட எங்களுக்கு தெரியாதாண்ணா.? நீங்க அழைச்சிட்டு மட்டும் வாங்க.. குழந்தை பக்கத்துல இருக்கட்டும்.. ப்ரியா ஆத்மா சாந்திக்காக..” என கண்ணீர் வடித்தார் ராதா.
உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆதிரைக்கும் கண்கள் கலங்கியது. பெத்த மகளை பறிகொடுத்ததோடு பேரப்பிள்ளையையும் தள்ளி நிறுத்தும் சூழல் அத்தனை எளிதல்ல எனப்புரிந்தவளிற்கு மனம் கணத்தது.
‘அப்படிலாம் எதுவும் நடக்காது.. ஆதியை தனியா விடவேணாம்.. இத்தனை நெருங்கின சொந்தம்.. நம்மளை ஏன் கூட்டிட்டு போகலன்னு சந்தேகம் வந்திடும்.. அதனால மருமகளையும் கூட்டிட்டு வாங்க.. கனகா ஆதியை கூப்பிடு ஒரு வார்த்தை சொல்லிடறேன்..” என்றார் பாலன்.
கனகா அழைக்கவும் வெளியே வந்தாள் ஆதிரை. ‘நல்லாயிருக்கியா ஆதிம்மா..?” என்றார் தன் சோகம் உள்ளடக்கி.
நல்லாயிருக்கேன் என்பதாய் ஆதிரை தலையசைக்க.. கண்ணீரோடு மகளின் பிரிவை சொல்லி, “நாளைக்கு முதல் வருட திதி, வந்திடுமா..” என வேதனையோடு அழைத்தார்.
‘அம்மா..” என ராதவின் கையைப் பற்றிக்கொண்ட ஆதிரை.. ‘ப்ரியாவும் அவங்களும் சின்ன வயசிலயிருந்து ஒன்னா வளர்ந்ததும்.. ஒருவருசம் முன்ன விஷ காய்ச்சல் வந்து இறந்ததையும் அவங்க சொன்னாங்க..” என தானும் வருந்தி.. ‘நான் வரேன்ம்மா..” என்றாள்.
ஆதிரையின் அம்மா என்ற அழைப்பு ராதாவிற்கு நிம்மதி தர மீண்டும் அழைப்பு விடுத்து கிளம்பினர். அடுத்த நாள் கணேசன் குடும்பத்தோடு ப்ரியா வீட்டிற்கு சென்றார். ப்ரியா வீட்டில் ஒரு மணிநேரம் வரை தாக்குப்பிடித்த குழந்தை அதன்பின்னே “பட்டு வீட்டுக்கு போலாம்..” என சிணுங்க ஆரம்பித்தாள்.
‘ராதா சீக்கிரம்.. பட்டு அழ ஆரம்பிக்கிறா..” என அவசரப்படுத்தினார் கணேசன்.
‘மொழியாள் பட்டு..” என குழந்தையை தன்னிடம் வாங்கிக்கொண்ட ஆதிரை.. ‘சாமி கும்பிடும்போது அழக்கூடாதுடா.. சாமி கோவிக்கும், அப்புறம் பட்டம்மாவும் அழுவேன்..” என குழந்தையை சமாதனம் செய்ததை பார்த்த சுதாகரன் பாலன் ராதாவிற்கு பெருத்த நிம்மதியானது.
பிறகு ப்ரியாவிற்கு படைத்து முடித்ததும் சாப்பிட்டு கிளம்பலாம் என கணேசன் சாப்பிட அமர.. அங்கே பரிமாற ஆயத்தமான கனகாவிடம்..
‘ரூபன் அவசர கல்யாணம் செய்துக்கிட்டானாமே.. மருமக குழந்தையை நல்லா பார்த்துக்கிறாளா.? இல்ல மூத்தார் குழந்தைனு..” என விசாரித்தார் ஒரு பெண்மணி.
‘மொழியாள்மா.. தாத்தாகிட்ட இருங்க.. நான் பட்டுக்கு சாப்பிட எடுத்து வரேன்..” என கணேசனிடம் குழந்தையை ஒப்படைத்து அப்பெண்மணியிடம் சென்றாள் ஆதிரை.
ஆதிரை வரவும் ‘நாம பேசுறதை கேக்க வரா.. உங்க மருமக சரியான ஆளுபோலயே..” என அப்பெண்மணி முகம் சுழித்து நகரப்போகவும்.. ‘அவசர கல்யாணம்னாலும் அவரை ரொம்ப பிடிச்சதாலதான் செய்துகிட்டேன். பட்டு என் வயித்துல பிறக்கலன்னாலும் அவ உடம்புல ஓடுறது என்புருசன் ரத்தம்.. அவரோட பொண்டாட்டி நான், பட்டு அவர் குழந்தையில்ல.. எங்க குழந்தை..” என்றாள் அதிகாரத் தோரணையில்.
முகம் வாடியபடி அப்பெண் நகர்ந்திட.. ராதாவிடம்..‘அம்மா.. இப்படி ஆளுங்களை தள்ளிவைங்க..” என்றாள் உரிமையாக.
கனகா.. ‘சரிடாம்மா.. சரிடாம்மா.. எல்லாரும் ஒன்னு போல இருப்பாங்களா.? அவங்க என்னவோ சொல்லட்டும்.. நாம எதுக்கு கண்டுக்கனும்.?” என தேற்றினார் ஆதிரையை.
‘இதுக்குத்தான் அவர் எங்கையும் குழந்தையை பழக விடமாட்றார்..” என்றாள் சிறு கோபத்தோடு.
‘சரி சரி இனி குறைச்சிக்கிறேன்..” என ஆதிரையின் கோபம் தணிக்க தேறுதலாய் சொன்னார் ராதா.
சுதாகரன் அனைத்தையும் பெருமையோடு பார்த்திருக்க.. அவனிடம் பேசியிராத ஆதிரை.. ‘அவர்மேல எனக்கு உண்மையான அன்பிருக்கும்போது அவர் ரத்தமான பட்டுவை எப்படி மாமா என்னால பிரிச்சி பார்க்கமுடியும்..? சுதாண்ணா பெருமையா பார்க்கிற அளவுக்கு நான் என்ன செய்துட்டேன்.? எங்க குழந்தையை நான் பார்த்துக்கிறது பெரிய விசயமா.?” என சுதாகரனின் பார்வைக்கு கணேசனிடம் குறைபட்டாள்.
‘அப்படியில்ல ஆதிம்மா.. நீயும் பட்டுவும் இப்போதான் முதல்முறையா என் தங்கை வீட்டுக்கு வந்திருக்கிங்க.. சுதா அந்த சந்தோசத்துல பார்த்திட்டிருக்கான்..” என்றார் கணேசன்.
ஒவ்வொருவரையும் உறவுமுறை சொல்லி அழைத்ததும்.. ஆதிரையிடம் குழந்தை ஒன்றுவதும்.. குழந்தைக்காக பேசுவதும் என அனைவரையும் கவர்ந்திருந்தாள் ஆதிரை.
குழந்தை வீட்டிற்கு போக நச்சத்தொடங்க.. ‘சாய்ங்காலம் வரை இருண்ணா..” என்றார் ராதா.
கணேசன் ஆதிரையைப் பார்க்க.. ‘நீங்க வேணா இருங்க மாமா.. பட்டுவை இவ்வளோ நேரம் சமாளித்ததே பெரிய விசயம்.. நானும் தாத்தாவும் கிளம்பறோம்..” என்றாள்.
ரூபனும் இல்லாத நேரம் ஆதிரை தனியே இருக்க வேணாம் என நினைத்தவனாய்.. ‘ஆதிரையோட நீங்களும் கிளம்புங்க மாமா. பட்டு அழுதா அவங்கப்பா என்னை திட்டுவான்..” என்றான் சுதாகரன்.
ரூபனிற்கு வரப்போகும் மனையாள் தன் பேத்தியை சரியாய் பார்த்துப்பாளா என ஒருவருடமாய் தவித்திருந்த சுதாகரன் ராதா பாலனின் மனம் வெகுவாய் சமன்படவும்.. ப்ரியாவின் பிரிவுத் துயரத்தையும் மீறி மனதில் ஓர் இதம் பரவிட.. இன்முகத்தோடு வழியனுப்பினர்.
—- —— ——
மேலும் பத்து நாட்கள் கடந்திருக்க.. ரூபன்மீது அத்தனை கோபமாய் இருந்தாள் ஆதிரை. ப்ரியாவின் நினைவு தினத்தில் நடந்தது.. மொழியாள் என தான் சூட்டிய பெயரை குழந்தை அங்கீகரித்தது.. தன்னோடு இணக்கமாய் பழகுவது என அனைத்தும் சொல்ல ரூபனிற்கு ஆதிரையோடு சேர்த்து கணேசனும் தினமும் அழைத்துப்பார்த்தார்.
யார் அழைப்பையும் ரூபன் ஏற்கவில்லை. அதோடு இருபது நாளில் வருகிறேன் என சென்றவன் தற்போது இருபத்தி ஐந்து நாட்களாகியும் வராமல் இருந்ததோடு போன் கூட செய்யாமல் இருப்பதை தாளமுடியாமல்.. வரட்டும் பேசிக்கிறேன் என கோபத்தோடே தூங்கியிருந்தாள்.
அதிகாலை இரண்டு மணிக்கு வந்த அதிரூபன் தன்னிடமிருந்த சாவி கொண்டு சத்தமின்றி உள்ளே வந்து ஆதிரையருகே சாய்ந்தான் ஆயாசமாக.
நள்ளிரவு வரை ரூபனை திட்டித் தீர்த்த ஆதிரை தற்போது ஆழ்ந்த தூக்கத்திலிருக்க.. மனைவியின் இடையை வளைக்க சின்னதாய் அசைந்தாள்.
‘இரண்டு நாளா தூங்கல.. செம டையர்டா இருக்குடா பெரியபட்டு.. ஒரு ஒன்னவர்..” என தூங்கிக்கொண்டிருந்தவளிடம் பர்மிசன் சொல்லி கண்ணயர்ந்தான்.
அதிகாலை மூன்றரை மணிபோல் ஆதிரையால் அசைய முடியாமல் போகவே கண்விழித்தவள் அருகிலிருந்த கணவனை கண்டதும் முதலில் அதிர்ந்து பிறகு பெரும் கோபத்தோடு அவனின் கையை விலக்க முற்பட அதில் கண்விழித்தான் அதிரூபன்.
ஆதிரையின் கோபத்தை கண்டுகொள்ளாமல் நேரம் பார்க்க.. ‘அச்சோ.. மூன்றரை ஆகிடுச்சா..” என அவசரமாய் பாத்ரூம் செல்லவும்.. திரும்பவும் கிளம்பிடுவானோ என ஆதிரையின் கோபம் இன்னும் அதிகமாக.. முகத்தில் புத்துணர்ச்சியோடும் இலகுவான உடையோடும் வந்தான் ஆதிரையிடம்.
‘ஒரு ஃபோன் கூட செய்ய முடியாதா.?” என ஆதிரை தீயாய் முறைக்க.. ‘முதல் பத்து நாள் மலைப் பிரதேசத்துல சூட் போனது.. அங்க சிக்னல் கிடைக்காது. அடுத்து ஐஞ்சி நாள் சிக்னல் கிடைக்கிற இடத்துலதான் இருந்தோம்.. ஆனா யாரோடவும் பேச முடியாத அளவுக்கு ப்ரியாவோட நியாபகம் மனசை படுத்திடுச்சி.. ப்ரியா இறந்த நாளுக்கு அத்தை வர சொல்லுவாங்கனு போனை சுவிட் ஆப் செய்துட்டேன்.
திரும்பவும் பத்து நாள் அதே மலைப்பிரதேசத்துல சூட்.. நேத்துதான் முடிஞ்சது. ரொம்ப அழுக்கு மூட்டையாகிட்டேன்.. சென்னை வந்து குளிச்சிட்டு நேர என் பொண்டாட்டியை பார்க்க வந்துட்டேன்..” என்றான்.
‘ஐஞ்சி நாள் கேப் இருந்தும் கால் பண்ணல.. மெசேஜ் கூட பண்ணல.. ஒன்னும் தேவையில்ல..” என ஆதிரை திமிற.. அதிரூபனின் பிடியும் கூடியிருக்க.. ‘என்னை நெருங்குற அளவுக்கு இப்போ ஓசை கேட்டுச்சாக்கும்..?” என்றாள் காரமாக.
‘ஹாஹா.. இல்லையா பின்ன.? சரி விடு அதையும் செக் செய்திடலாம்..” என ஆதிரையின் இதயத்தில் தன் காதை வைத்தான் அழுத்தமாக.
‘ஏய்..” என சிலிர்த்து சிவந்த ஆதிரை ரூபனை விலக்க போராட.. ‘இதோ இப்போ கேக்குதே.. சும்மா தாறுமாறா..” என கிறக்கத்தோடு சொல்லி.. ‘பட்டு பட்டு..” என அவ்விடத்திலேயே அழுந்த முத்தமிட ரூபனை விலக்கவும் முடியாமல் அவனின் அதிரடி செயலை தாளவும் முடியாமல் பேச்சற்றுப் போனாள் ஆதிரை.
ஆதிரையின் தடுமாற்ற நிலையை ரசித்தவனாய் வெகு நிதானமாய் இதழுக்கு முன்னேற ரூபனின் வசீகர ரூபத்தில் அவனிடம் பேச நினைத்த அனைத்தும் மறந்தாள் ஆதிரை.
ஆதிரையை கண்ட நாளிலிருந்து கோபம்.. வெறுப்பு.. அவஸ்த்தை.. தடுமாற்றம் போன்ற உணர்வுகளை மட்டுமே பார்த்திருந்தவன்.. ஆதிரையின் தற்போதையை நிலையில் மயங்கியவனாய்.. ‘ப்பா.. எத்தனை வேகமா உன் ஹார்ட் பீட் எனக்கு சம்மதம் கொடுக்குது பார்த்தியா..?” என்றான் பெருமையாக.
‘அதெல்லாம் ஒன்னுமில்ல..” என ரோசத்தோடு சொல்ல வந்தவள் சிணுங்கலாய் மறுக்க.. ‘அஹான்.. அப்போ இரு வேற மாதிரி நிரூபிக்கிறேன்..” என அவளின் உடை களைந்து, ஆதிரையின் மனதிற்கு மற்றுமொரு முத்தமிட்டு அவளின் இதயத் துடிப்பை இன்னும் அதிகமாக்கி.. ‘இப்போ கேக்குதா.?” என கேட்க.. ஆதிரை பேச்சற்றுப்போக.. மனைவியின் தற்போதைய ரூபத்தில் மொத்தமாய் மயங்கிய அதிரூபன் தனக்கான தேடலில் இறங்க.. ரூபனுள் மலர்ந்தாள் ஆதிரை.