“வீட்டில் எல்லாம் யார்கிட்டவும் சொல்லிடாதே கமலி… உன்கிட்ட சொன்னதே எனக்கு கில்ட்டியா இருக்கு..”
என அலைப்புறுதலோடு சொல்ல தன் சிந்தனை கலைந்த கமலினி அவள் தோளில் கைபோட்டு,
“இங்க பார் வைஷு.. நீ அவளுக்கு நல்லது நினைச்சு தான் என்கிட்ட சொன்ன.. இது தப்போ துரோகமோ கிடையாது… இதுவும் அக்கறை தான்.. இனிமே எல்லாம் நான் பார்த்துகிறேன்.. நீ இதை எல்லாம் யோசிக்காம எப்போதும் போல இரு….”
என்று புன்னகையோடு சொல்லி அவள் பயத்தை போக்கினாள்.
அதன் பின்னே சற்று தெளிந்து தானும் புன்னகைத்த வைஷ்ணவி,
“ம்ம்.. இப்ப தான் நிம்மதியா இருக்கு… தேங்க்ஸ் மை டியர் ஜிமிக்கி கம்மல்..”
என கூறி அவளை இடுப்போடு கட்டிக்கொள்ள அவளின் தலையை கோதிக் கொடுத்த கமலினி மனம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தது.
அதன்படி அந்த வார இறுதியில் கோவிலுக்கு போகலாம் என்று கூறி அனன்யாவோடு கிளம்பியவள் அப்படியே அபூர்வாவையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
அதே சமயம் தினகரன் குடும்பமும் அவனின் புதிய தொழிற்சாலை சிறப்பாக அமைய வேண்டும் என்ற வேண்டுதல்காக அதே உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தான் வந்திருந்தனர்.
பக்கத்தில் ஏதோ வேலை இருப்பதாக சொல்லிய தினகரன் முதலில் அம்மா அப்பாவை விட்டுவிட்டு செல்ல இருவரும் மெதுவாய் படியேறிக் கொண்டிருந்த போதே அவர்களை கண்டுவிட்டாள் அபூர்வா…!!
பார்த்ததுமே உற்சாகமாய்,
“அத்தை…” என்று அழைத்து கையசைக்க யாரோ என்று நினைத்து திரும்பிய கமலினி அங்கே லலிதாவை கண்டதும் திகைத்தாள்.
இத்தனை நடந்த பின்பு அவர்களை காணும்போது சங்கடமாய் இருக்க,
“லூசு அபூ.. ஏண்டி அவங்களை கூப்பிடுற..” என அனன்யாவும் அவசரமாய் கையை பிடித்து தடுக்க அதற்குள் லிங்கேஸ்வரன், லலிதா இருவருமும் பார்த்து விட்டனர்.
“நம்ம அத்தையும் மாமாவும் தானே டி.. பார்த்தால் பேசுறது மரியாதை தானே..”
என்று பேசியவள் அறிவை மெச்சிக்க தான் தோன்றியது. இவர்களை கண்டதும் முகம் மலர சில படிகள் ஏறி அருகில் வந்தனர்.
“நல்லா இருக்கீங்களா மா.. நீங்க மட்டும் தான் வந்தீங்களா..”
என்று விசாரித்த லலிதாவின் பார்வை கமலினி மீதுபடிய வலிந்து புன்னகைத்து,
“ஆமா அத்தை…”
என்று மட்டும் பதில் சொன்னாள். நல்ல கலகலவென இருக்கும் பெண் இப்படி முகம் பார்க்க தயங்கி ஒட்டாமல் பேசுவதன் காரணம் புரிய மனதிற்கு கஷ்டமாக இருந்தது.
‘ ச்சே.. எல்லாம் நல்ல விதமா நடந்து இருந்தால் எங்க வீட்டுக்கு உரிமையான பொண்ணா பேசி இருக்கும்..”
என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதே பாவனையில் தன் கணவரை ஏறிட அவரும் உணர்ந்து இமைகளை மூடி திறந்து சமாதானம் கூறினார். எல்லாம் சில வினாடிகளில் நடக்க யாருக்கும் சங்கடம் நிலவாமல் அபூர்வாவே,
“நல்லா இருக்கோம் அத்தை.. நீங்க மாமா எல்லாம் எப்படி இருக்கீங்க..!! இந்த லாக்டவுன் முடிஞ்சு கோவில் எல்லாம் திறந்த பின்னாடியும் நாங்க கோவில் எல்லாம் வரவே முடியல.. அதான் இன்னைக்கு கமலி கூட்டிட்டு வந்தாள்.. வாங்க.. இன்னும் எவ்வளவு படி இருக்கு.. ஏறிட்டே பேசலாம்..”
படபடவென பேசிக் கொண்டே படியேற அவளோடு அனன்யாவும் சேர்ந்துக் கொண்டதால் கமலினி மட்டும் சற்று பின் தங்கி மெதுவாய் வந்தாள்.
தன் யோசனையில் அக்கம் பக்கம் உணராமல் தலை குனிந்து கமலினி ஒவ்வொரு படியாய் அடியெடுத்து வைக்க,
“எதுவும் வேண்டுதலா..?” என கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர அவளுக்கு அருகில் கைப்பிடியை பிடித்து நின்றிருந்தான் தினகரன்.
‘சுத்தம்.. இவனும் வந்து இருக்கானா..?’
என திகைத்தவள் வேகமாய் முன்னே பார்க்க அவர்கள் பேசிக்கொண்டே
மக்களோடு கலந்து திரும்பியே பார்க்காமல் போவது தெரிந்தது.
“இல்ல…பக்கத்தில் ஒரு மனுஷன் உன்னையே கவனிச்சுட்டு வர்றது கூட தெரியாம தீவிர வேண்டுதலில் இருந்தா மாதிரி இருந்துச்சு..?? என்ன வேண்டின.. பிள்ளையாரப்பா இந்த தினகரன் கிட்ட இருந்து மட்டும் என்னை காப்பாத்திடுன்னா…”
என்று கேட்டவன் கிண்டல் தான் செய்கிறான் என பார்த்தால் தெரியாத அளவு இயல்பாய் முகத்தில் அவன் மேலே படியில் அடியெடுத்து வைத்தபோது தன்னை போல் அவளும் அவன் உடன் சேர்ந்து ஏறியதில் தான் கொஞ்சமே கொஞ்சம் அந்த புன்னகை எட்டிப் பார்த்தது. அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..?? 24×7 நான் உங்க நினைப்பாவே திரியுறேனா..?? அப்படி எதுவும் நினைப்பு இருந்தால் அதை அப்படியே தூக்கி குப்பையில் போடுங்க…”
என்று எடுத்த வேகத்தில் அவள் சீறி பாய அதில் திகைத்து,
“ஹே.. சரி சரி.. நான் சும்மா தான் கேட்டேன்.. எதுக்கு இவ்வளவு டென்ஷன்…”
என தன்மையாக கேட்க அவளும் இறங்கி வந்தாள்.
“நீங்க இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்ல தெரியும்.. என்கிட்ட நீங்க இப்படி பேசுறதில் உங்க இன்டன்ஷன் என்னனு புரியது… அது எனக்கு அன்கம்ஃபர்டபிள்ளா தான் இருக்கு தினகரன்..”
வெளிப்படையாகவே கமலினி சொல்லிவிட,
“ம்ஹும்…” என்று தன் முன்னுச்சி முடியை கோதி சேர்ந்து இயங்கும் தங்கள் பாதங்களை பார்த்தபடி சில படிகள் ஏறினான்.
காதலை உணர்ந்த பின் அதனை உரிய இடத்தில் சேர்க்கும்வரை மனம் கொள்ளும் தவிப்பை அவன் முழுதாக அனுபவித்து வருகிறான். முற்றிலும் அறியாத ஓர் புது உணர்வு.. நரம்புகளில் மீட்டும் இசையாய் அவனுள் இன்பம் கொடுத்தாலும் அதனை வெளிப்படுத்த தெரியாமல் மூச்சை அடைத்தது.
அவளிடம் நேராக பேசுவதா..? என்ன பேசுவது..? எப்படி சந்திப்பது.. ? எங்கே தொடங்கி எங்கே முடிப்பது.. என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம்..!!
இந்நிலையில் அவளை எதிர்பாராமல் இங்கே கண்டதும் ஒரு மகிழ்ச்சி என்றால் அபூர்வா, அனன்யா தன் பெற்றோருடன் சென்று அவள் மட்டும் தனியே வருவது இன்னும் உற்சாகமாக அதே ஆசையில் இரண்டு இரண்டு படிகளாய் தாவி வந்து பேசினால் இதோ வழக்கமான அவளின் கட் அண்ட் ரைட் பதில்..!!
‘உன் பாடு கஷ்டம் தான் டா..’ என பரிதாபம் கொண்டது மனம்..!!
அவன் என்ன சொல்வான்..? என்று திரும்பி திரும்பி அவன் முகத்தை பார்த்தவள் தினகரனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாததால்,
“என்ன பதிலே காணும்..??”
என தானே கேட்டாள்.
“உனக்கு என்னை எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல.. ஆமா.. நான் இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்ல தான்.. எனக்கே நான் பேசுறது, நினைக்கிறது எல்லாம் புதுசா தான் இருக்கு.. ஆனா மனசில் ஒரு நோக்கத்தை வைச்சு செயற்கையா எதுவும் நான் செய்யல.. இதுவும் என்னோட ஒரு பரிமாணம் அப்படி சொல்லலாம்..”
என்றவன் பக்கவாட்டில் அவள் முகம் பார்த்து, “காதல் பரிமாணம்..” என்று சொல்ல அதிர்ந்து அவளும் திரும்பி அவனை நோக்கினாள்.
அந்த அகண்ட விழிகளோடு முதல் முறையாய் பதில் சொல்ல வராமல் அவள் திகைத்து நின்ற அழகில் காதல் ஊற்றாய் பொங்க இதழ் மலர்ந்தவன்,
“உன்னோட நிறைய நிறைய பேசணும்.. உனக்கு என்மேல எந்த ஃபீலிங்ஸ்ஸும் இல்ல தெரியும்.. ஆனால் வரவே வராதுன்னு இல்லையே..!!! உனக்கு பிடிச்சா தான் எதுவும்னு சொன்ன..!! உனக்கு என்ன பிடிக்கும் எப்படி இருந்தால் பிடிக்கும்னு தெரிஞ்சுக்க தோணுது..!! ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே..?”
என்று எதிர்பார்ப்போடு கேட்க,
“அதுக்கு..?” என கேள்வியாய் நிறுத்தினாள்.
அதனையே சம்மதமாய் எடுத்துக் கொண்டு வேக வேகமாய் யோசித்தவன்,
“ம்ம்..ம்ம்.. ஒரு ஒன் வீக் எனக்காக டைம் கொடேன்.. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வர்றா மாதிரி.. உனக்கு அப்பவும் பிடிக்கலைன்னா நானே தாத்தாகிட்ட வந்து பேசுறேன்.. எங்க வீட்டில் பின் வாங்கினால் தாத்தா இத்தனை பிடிவாதமா நிற்க மாட்டார் தானே… நாங்க மறுக்கிறோம்ன்னா இவன் என்ன என் பேத்தியை வேண்டாங்கிறதுன்னு அவரே தேவையில்லைன்னு முடிவு பண்ணிடுவார்.. உங்க அப்பாக்கும் தாத்தாக்கும் இருக்கிற பிரச்சனையும் தீர்ந்திடும்.. எப்படி…”
வழிக் கண்ட குஷியில் உற்சாகமாய் பேசினான். அவனை மேலும் கீழும் பார்த்தவள்,
“சினிமா வேற நிஜம் வேற தினகரன்.. என்ன எதிர்பார்க்கறீங்க.. நான் வந்து உங்க வீட்டில் ஒரு வாரம் இருப்பேன்னா..”
என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினாள்.
“அது முடியாது தான்.. ஆனால் கொஞ்ச நேரம் சேர்ந்து நேரம் செலவழித்தால் கூட போதும்.. வேணா இப்படி செய்யலாம்.. நீ எப்பவும் ஈவினங் ஸ்கூட்டியில் வீட்டுக்கு போவ தானே.. ஒரு வாரம் எனக்காக பஸ்ல போ.. ஜஸ்ட் ஒன் வீக்.. அந்த அரைமணி நேர டிராவலிங் எனக்கு போதும்..”
என்று அந்த நிமிடத்தில் தோன்றிய யோசனையை சொல்ல அதற்குள் கடைசி படிகளை எட்டி இருந்தனர்.
“நீங்க முதல்ல சினிமா மோடில் இருந்து வெளியே வந்து ரியாலிட்டியை யோசிங்க..” என்று மட்டும் கூறியவள்
தனக்காக தங்கைகள் வாசலிலே காத்திருக்க கூடும் என்பதால் அத்தோடு பேச்சை நிறுத்தி தாண்டி செல்ல,
“கமலினி….” என்ற அவனின் அழுத்தமான அழைப்பில் அவள் கால்கள் மேலே நகர மறுத்தது. அவள் அருகில் நடந்து வந்தவன்
“நீ வருவ.. நான் காத்திருப்பேன்..” என்று மட்டும் சொல்லி சென்றுவிட அசையாமல் சிலையாய் நின்றுவிட்டாள். இத்தனை உயரம் ஏறி வந்ததை காட்டிலும் அவனிடம் பேசியது தான் மூச்சை அடைத்தது.
இவளை தேடிக் கொண்டு அங்கே வந்துவிட்ட அபூர்வாவும் அனன்யாவும்,
“எங்க பின்னாடி தான் வந்துட்டு இருக்கேன்னு நினைச்சோம்.. நீ இங்கேயே நின்னுட்டியா.. என்னாச்சு கம்மல்..”
என்று ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து உலுக்க அபூர்வாவை கண்டதும் தான் இன்று தான் இங்கே வந்த முக்கிய காரணம் மூளைக்கு உரைத்தது.
“ஆங்.. ஒன்னும் இல்ல.. இப்பவாவது என் நினைப்பு வந்ததே வாங்க..” என்று கூறி அவர்களோடு உள்ளே நுழைந்தாள்.
பிள்ளையார் சன்னதிக்கு வந்தபோது எதிரே தினகரனும் தன் பெற்றோருடன் நின்றிருந்தான்.
கண்களை மூடி கைகளை கூப்பி மும்முரமாய் அவன் வேண்டுதலில் இருக்க சில நிமிடங்கள் தாண்டியும் அவன் முகத்தையே தான் பார்த்து நிற்கிறோம் என அவள் உணரவே இல்லை. அவள் உணர்ந்து பார்க்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை.