உயரமான பாறை மீது அமைந்துள்ள கோவில் என்பதால் அங்கிருந்து பார்க்க மொத்த திருச்சி மாநகரமே அத்தனை அழகாய் காட்சியளித்தது.
சாமி கும்பிட்டு மூவரும் அந்த இரம்மியமான சூழலை தான் இரசித்து அமர்ந்து இருந்தனர்.
தினகரன் குடும்பம் சற்று முன் கிளம்பியிருக்க அதன்பின் தான் கமலினிக்கு இயல்பாக இருக்க முடிந்தது.
இங்கிருந்து தெரியும் கோபுரங்களையும் கட்டடங்களையும் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்த அபூர்வா,
“அப்பாவோட இங்க உட்கார்ந்து தான் நிறைய விளையாடி இருக்கேன்.. இப்படி தான் அங்க இருக்கிற பில்டிங்ஸ் எல்லாம் காட்டி கதை சொல்லுவார்…”
என்று தன் தந்தையை நினைத்து புன்னகையோடு சொன்னாள்.
“பெரியப்பாக்கு பெண் பிள்ளைன்னா அத்தனை இஷ்டம்..!! ஆனா முகிலன் அண்ணா, ஆதின்னு இரண்டு பேரும் பசங்களா போயிட்டாங்களா.. அடுத்து நம்ம வீட்டில் நான் பிறந்தபோது அவ்வளவு கொண்டாடினது பெரியப்பா தானாம்..!! அப்பா தாத்தாவை விட அதிக செல்லம் கொடுக்கிறது அவர் தான்..!! அப்புறம் அனன்யா பிறந்த மறு வருஷம் நீ பிறந்த..!! பெரியப்பா சந்தோஷத்தை கேட்கவும் வேணுமா..?? ஊரை கூட்டி விழா எடுத்து கொண்டாடினார்..
அவர் அடிக்கடி சொல்லுவார்.. அபூர்வாவை சும்மா படிக்க வைச்சேன் கட்டிக் கொடுத்து கடமையை முடிச்சேன்னு எல்லாம் விட மாட்டேன்.. எனக்கு அவளை ரொம்ப பெரிய ஆளாக்கணும்.. நாலு பேரு அவளை பார்த்தால் எழுந்து மரியாதை கொடுக்கிற அளவு படிச்சு அவ பெரிய பதவியில் உட்காரணும்..!! கண்டிப்பா என் மகளை நான் அப்படி ஒரு நிலையில் பார்ப்பேன்னு சொல்லிட்டே இருப்பாராம்..”
கடந்த காலத்தை நினைவு கூர்ந்து கமலினி பேச தானும் தலையாட்டிய அபூர்வா,
“ம்ம்.. அம்மாவும் சொல்வாங்க…”
என்றாள்.
“பெரியப்பா இறந்தபோது முகிலன் அண்ணாக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஆதியும் படிச்சு முடிக்கிற டைம்.. ஆனா நீ தான் ரொம்ப சின்ன பாப்பா..!! பிரைமரி ஸ்கூல் கூட தாண்டல.. அதனால உன்னை நினைச்சு தான் பெரியம்மா அழுதுட்டே இருப்பாங்க..!! அப்போ இருந்து உன்மேல எல்லாருக்கும் தனி கவனம் தான்.. நீ எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்.. எல்லாரோட ஆசையும் பெரியப்பா ஆசைப்படி உன்னை ரொம்ப மதிப்பு மிக்க ஒரு பதவியில் அமர்த்தி அழகு பார்க்கணும்னு தான்.. ஆனால் அது நிறைவேறாதுன்னு நினைக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு…”
“ஏன்… ஏன் அப்படி சொல்ற..?? எங்க அப்பாவோட கனவை நிறைவேத்த என் மனசுல எவ்வளவு வைராக்கியம் இருக்குன்னு உனக்கு தெரியாது.. யூ.பி எஸ்.சி க்ளியர் பண்ணி கலெக்டர் ஆகி காட்டுவேன்.. பார்.. அப்போ தெரியும்..”
கமலினி அப்படி சொல்லவும் சட்டென்று ரோஷம் பொங்க அபூர்வா பேச,
“அப்படியா..?? அப்போ அதே வேகத்தோட தான் இப்பவும் படிச்சுட்டு இருக்கீங்க இல்ல.. எக்ஸாம்ல எல்லாம் மார்க் பயங்கரமா எடுத்து இருப்ப தானே..”
என்று தலை சாய்த்து அவள் கேட்ட பாவனையில் அபூர்வாவினால் சட்டென்று பதில் சொல்ல வரவில்லை.
“இந்த தடவை தான் கொஞ்சம் கம்மி.. ஆனா செமஸ்டர்ல அதை சரி படுத்திடுவேன்…”
என திக்கி திணறி சொல்ல,
“அதை வார்த்தையால கூட உன்னால உறுதியா சொல்ல முடியல.. எப்படி செஞ்சு காட்டுவ அபூ..” என்றவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அபூர்வா அமைதியாகிவிட அவள் எதிர்பார்க்காத தருணத்தில் கையில் இருந்த திறன்பேசியை பிடிங்கி விட்டாள்.
“இந்த மொபைலை இப்பவே என் முன்னால அன்லாக் பண்ணி உன்னோட வாட்ஸ்அப் ச்சேட்ட எந்த தயக்கமும் இல்லாம காட்ட முடியுமா அபூ..”
சட்டென்று கமலி பிடிங்கியதையே எதிர்பார்க்காதவள் அவளின் கேள்விக்கு எங்கனம் பதில் அளிக்க கூடும்..!!
அபூர்வாவின் தொடர் மௌனத்தில்,
“எனக்கு எல்லாம் தெரியும் அபூ..” என்று சொல்ல அதிர்ந்து நிமிர்ந்தவள் உடனே பார்த்தது அனன்யாவை தான்..!!
“அவளை ஏன் பார்க்கிற.. மேடமும் உன்கூட்டு தானே.. அவங்க அப்படியே சொல்லிட போறாங்களாக்கும்..” என்று அவளுக்கும் ஒரு குட்டு வைத்து,
“என்கிட்ட உங்களுக்கு எந்த லிமிட்ஸ்ஸும் இருந்ததே இல்ல… எதையும் அசால்ட்டா பேசிடுவீங்க.. அப்படி இருக்கப்போ இதை சொல்ல வேண்டாம்னு மறைக்க நினைக்கும்போதே அது தப்புன்னு உங்க மனசுக்கு தோணலையா..?”
என்றாள் அழுத்தமாய்..!!
“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் அவங்க இல்ல கம்மல்.. ரொம்ப நல்லவங்க… நான் எல்லாம் சொல்லிடுறேன்..”
என்று அவள் ஆரம்பிக்கும்போதே தடுத்து,
“அது யார்.. அவன் எப்படி பட்டவன் என்றது எல்லாம் அடுத்த பட்சம்..!!
நான் உன்னை கோபப்பட்டு அடிக்கவோ இல்ல நம்ம குடும்ப மானத்தை வாங்கிட்டேன்னு அட்வெய்ஸ் பண்ணவோ மாட்டேன்..
ஏன்னா நானும் உன் வயசை கடந்து தானே வந்து இருக்கேன்.. இந்த ஏஜ்ல அழகான பசங்கனா பார்க்க தோணும்.. அவிங்க நம்மை சைட் அடிச்சா ஜிகுஜிகுன்னு இருக்கும்.. பின்னாடி சுத்தினா கெத்தா இருக்கும்.. ஆர்வமா நாலு வார்த்தை பேசிட்டால் வயித்தில் பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும்.. உண்மை தான்.. அது தப்பும் கிடையாது.. ஆனா அதை சாதாரண இரசிப்போடு கடந்து வந்திடனுமே தவிர அதையே வாழ்க்கையா நினைச்சு எல்லையை தாண்டும்போது தான் தப்பாகுது அபூ..
அவனை நல்லவன்னு சர்டிஃபிகேட் கொடுக்கிற சரி.. அடுத்து என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணி அவ்வளவு தானா உன் வாழ்க்கை…??”
“இல்ல கமலி… அவரும் நான் கலெக்டர் ஆக சப்போர்டிவ்வா இருப்பேன்னு சொல்லி இருக்கார்…”
“எப்படி.. இப்போ நீ படிச்சு நல்ல மார்க் எடுக்க சப்போர்டிவ்வா இருக்கானே.. அப்படியா..”
என்று நக்கலாய் அவள் சொல்லிக் காட்ட மீண்டும் அவள் சிரம் தாழ்ந்தது.
“நீ பார்த்த உலகம் ரொம்ப சின்னது அபூ.. நம்ம வீடு, சொந்தம், ஸ்கூல், காலேஜ் இதை தாண்டி நீ இன்னும் யோசிக்க கூட இல்ல.. இப்போ உன்கிட்ட நல்லா பேசுற நல்லா பழகுற எல்லாரும் நல்லவங்களா தான் தெரிவாங்க.. ஆனா அது அப்படி இல்லைன்னு இந்த உலகத்தை தாண்டி பார்க்கும் போது தான் புரியும்..!!
உலகம் தெரியாத வெகுளியாகவும் கூண்டு கிளியாகவும் இன்னோர் மனுஷனோட கைப்பிடிச்சு அவனோட பாதுகாப்பில் மட்டும் வாழ்ந்து முடிக்கிறது எல்லாம் பெருமை கிடையாது..
நம்மோட சிறகை விரிச்சு இந்த பரந்த வானத்தில் நாமாக தான் சுத்தி வரணும்..!!
என்னையே எடுத்துக்கிட்டால் என் சிறகை விரிச்சு என் இஷ்டம் போல தான் சுற்றி வரேன்.. இது கொடுக்கும் சந்தோஷத்தை அனுபவிச்சால் தான் புரியும்..
என் எதிரில் வர்றது பாம்போ பல்லியோ என்னால இனங்காண முடியும்.. எங்க தாழ்ந்து போகணும்.. எங்க தாண்டி போகணும்ன்னும் எனக்கு தெரியும்.. இனி எனக்கான வாழ்க்கையை எந்த கூட்டில் சேர்த்தாலும் நான் வாழ்ந்திடுவேன்.. அந்த தன்னம்பிக்கை உங்களுக்கும் எப்போ வருதோ அப்போ வந்து காதல் கல்யாணம் இதை பத்தி எல்லாம் பேசுங்க.. முடிவு எடுங்க..
தங்க கூண்டு அழகா இருக்குன்னு சிறகே முளைக்கும் முன்னாடி அதுக்குள்ள அடைஞ்சுக்க ஆசைப்படாதீங்க.. அவ்வளவு தான் சொல்ல முடியும்..”
கமலினி நிதானமாய் பேசி முடிக்க அபூர்வா, அனன்யா இருவரும் வாயே திறக்கவில்லை.
“என்ன சத்தமே இல்ல..?? யார் இவ கிட்ட போட்டு கொடுத்து இருப்பான்னு தானே யோசிக்கிறீங்க..”
என்று கமலினி கேலியாய் பார்க்க,
“ச்சே.. இல்ல கமலி..” என்றனர் இருவரும் ஒன்று போல..!!!
“அப்படியே நான் பேசி அடுத்த நிமிஷம் மாறுற அளவு எல்லாம் நீ அப்பாவி கிடையாது தெரியும்.. நான் சொன்னதை அப்புறம் நிதானமா யோசிச்சு பார்.. உனக்கே புரியும்..”
என்றவள், “சரி யாரந்த பையன்..?? உன் காலேஜ் மேட் ஆ..?” என்று கடைசியாய் விசாரித்தாள்.
ஆரம்பத்தில் அவனை பற்றி தைரியமாய் சொல்ல முனைந்த அபூர்வாவிற்கு இப்போது பெரும் தயக்கமாய் இருக்க,
“ஜெய்ந்த்.. ஜெய்ந்தன் மாமா..” என்றாள். அதில் புருவங்கள் சுருங்க,
” லலிதா அத்தையோட இரண்டாவது பையனா..??” என்று கேட்கவும் ஆம் என்பதாய் தலையசைக்க
கைக்கட்டி அபூர்வாவை பார்த்தவள்,
“ம்ஹும்.. அதான் லலிதா அத்தைக்கு ஸ்பெஷல் கவனிப்பாக்கும்.. சரி.. அவனோட எப்படி பழக்கம்..?”
என்று விசாரணையாய் கேட்க,
“முன்ன இருந்தே நல்லா பேசுவாங்க..!! அடிக்கடி பொதுவா எங்கேயாவது பார்த்தால் நிறுத்தி பேசுவாங்க.. இப்போ வேலைக்காக சென்னை கிளம்பும்போது நான் தான் லவ் சொன்னேன்..”
என்று பதில் கூறியவள் குரல் தேய்ந்து மறைந்தது. அதில் கமலினிக்கு இன்னும் கோபம் வந்தது தான். ஆனால் மேலும் மேலும் வார்த்தையால் அவளை காயப்படுத்தி பிரயோஜனம் இல்லையே..!!
பெருமூச்சு விட்டவள்,
“நான் மறுபடியும் இதை பத்தி உன்கிட்ட பேசவே போறது இல்ல அபூ.. உன்னோட வழி தங்ககூண்டா, பரந்த வானமா எதுன்னு நீ தான் முடிவு பண்ணனும்…”
என்றதோடு பேச்சை நிறுத்தி,
“நேரமாச்சு கிளம்பலாம் வாங்க..” என்று எழுந்து நகர வேகமாய் அருகில் வந்து அவள் விரலோடு விரல்களை இறுக்கமாய் கோர்த்துக் கொண்டாள் அபூர்வா. தன் கோபத்தை தணிக்க அவளின் முயற்சி என்பது புரிந்து தானும் ஆறுதலாய் பிடித்துக் கொண்டாள்.
இந்த பேச்சு வார்த்தை நடுவே அனன்யாவின் வெளிறிய தோற்றத்தை இருவருமே கவனிக்கவில்லை. கனவில் நடப்பது போல் இவர்கள் பின்னோடு எழுந்த அனன்யாவின் திறன்பேசி சிணுங்க திரையில் மின்னி மறையும் ‘கே.கே..’ என்ற எழுத்துக்களை அசையாமல் பார்த்தாள். உள்ளுக்குள் எழும் உதறலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே தன் தவறில் தேள் கொட்டியது போல் மாட்டி முழித்து நின்றவளுக்கு இப்போது கமலினி சொற்கள் தன் தவறை பெரிதாய் காட்ட பயத்தில் அழுகை பொங்கியது.
“அனு..”
இவள் வராமல் நிற்பதை கண்டு கமலினி உரக்க அழைக்க சட்டென்று கண்ணீரை விழுங்கி திறன்பேசியை அணைத்தவள் ஓடி போய் அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்து சேரும் வரையிலும் அவனின் அழைப்பு விடாது தொடர பல்லை கடித்து காத்திருந்தவள் தனிமை கிடைத்ததும்,
“ஏன் ஓயாம அடிக்கிறீங்க… வெளியே இருக்கேன்னு தான் மெசேஜ் பண்ணேன்ல…”
என்றாள் கோபமாய்..
“நீ சொல்லி ஒரு மணி நேரம் ஆச்சு.. இன்னமும் வெளியவே தான் இருக்கேன்னு எனக்கு எப்படி தெரியும்.. இன்னைக்கு காலேஜ் கூட இல்லையே.. இவ்வளவு நேரம் உனக்கென்ன வேலை..”
என கரிகாலனின் குதர்கமான கேள்வியில் எரிச்சல் மண்டியது.
“உங்களுக்கு வேற வேலை இல்லையா கே.கே..!! நான் எங்க போறேன்.. எத்தனை மணிநேரம் வெளியே இருக்கேன்னு கணக்கு எடுத்துட்டு இருந்தீங்களா…”
“ஏன் டி கேட்க மாட்ட..? ஆரம்பத்தில் நான் வேளை தவறாமல் கால் பண்ணி பேசும்போது உங்களை போல யாரும் இல்லைன்னு பெருமை பேசிட்டு.. இப்போ கசக்குது இல்ல..! என்ன கழட்டிவிட பார்க்கிறீயா..?”
அவனின் குத்தல் வார்த்தைகளை கேட்கவே பிடிக்கவில்லை.
‘இவனா தன்னிடம் உயிர் உருக பேசியவன்..’ என ஆயிரமாவது முறையாய் உள்ளம் மருகியது.
“இப்படியே பேசிட்டு இருங்க.. ஒருநாள் இல்ல ஒருநாள் அதை தான் செய்ய போறேன்..”
“ஹோ அந்த அளவுக்கு ஆகி போயிடுச்சுல.. உன்னை அப்படி எல்லாம் விட மாட்டேன்.. இப்பவே உன் அப்பாவுக்கு ஃபோனைப் போட்டு நியாயம் கேட்பேன்… உங்க வூட்டு பொண்ணு என்னை காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திடுச்சுன்னு..”
என்று கடினமாய் சொல்ல அவன் செய்ய கூடியவன் தான் என சமீபத்தில் உணர்ந்து இருந்தவளுக்கு குளிரெடுத்தது. அவள் பதில் சொல்லாமல் விசும்பவும் மறுமுனையில் கரிகாலன்,
“அழறியா யுனி.. ஹே.. நான் சும்மா சொன்னேன் டா.. உன்னை போய் அப்படி சொல்வேனா..!! உனக்கே தெரியும்ல நான் உன்மேல எவ்வளவு காதல் வைச்சு இருக்கேன்னு.. நீ என்னை விட்டு விலகினா மாதிரி பிஹெக் பண்ணவும் என்னால தாங்க முடியல டா..!! அழாத சரியா.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வீடியோ கால் பண்றேன்.. என்ன.. அப்போ சிரிச்சிட்டே என்கிட்ட பேசணும்..”
அப்படியே இறங்கி அன்பொழுக பேசி அவனே அழைப்பையும் வைத்துவிட ஜடமாக அமர்ந்து இருந்தாள் அனன்யா. சில நாட்களாய் இவை எல்லாம் அவளுக்கு வழக்கமான ஒன்று.. மீண்டும் கரிகாலன் அழைக்கும்போது அவள் சிரிப்போடு பேசி தான் ஆகவேண்டும்..!! இல்லை எனில் ஏதேனும் செய்து வைப்பான்..!
என்னென்ன கற்பனையில் ஆசையாய் மிதந்து இருந்தாள். அனைத்திலும் நெருப்பை அள்ளிக்கொட்டியது போல் உண்மை சுட்டது.
எந்த முகத்தை புகைப்படத்தில் பார்த்தால் கூட பூரித்து
போவாலோ அந்த முகத்தை இப்போது பார்த்தாலே பயந்து வந்தது.
கரிகாலன் என்றால் அவளுக்கு கொள்ளை இஷ்டம்..!! அவனின் அழகும், நடிப்பும், நடை, உடை என அனைத்தும் அவளை கவர்ந்து இழுக்க அவள் வயதிற்கே உரிய ஆர்வத்தோடு அவனை இணையத்தில் தீவிரமாய் பின் தொடர ஆரம்பித்தாள்.
அவனின் ரீல்ஸ்களையும் கண்டெண்ட் வீடியோக்களையும் எத்தனை முறை பார்த்தாலும் சலித்ததே இல்லை. பொதுவெளியில் பின்னூட்டம் செய்ய தயங்கி அவனின் ஸ்டேட்டஸ்களுக்கு
தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புவாள். அவன் தனக்கு பதில் அனுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாம் அவளுக்கு இல்லை.
ஒரு சினிமா நடிகன் போல அவனை தலையில் வைத்துக் கொண்டாடி திரிவாள் அனன்யா.
அப்படி தன்னுடைய ஆதர்ஷ நாயகன் தனக்கு பதில் அளித்தான் என்றபோது மயங்கி விழாத குறை தான்..!! கால் தரையில் படாமல் காற்றில் தான் பறந்து இருந்தாள். ஆசை அறிவை மழுங்கடிக்க அவனோடு தானாக வழியே பேச்சை வளர்த்தாள்.
தன் தோழிகளுடன் அதனை தம்பட்டமடிக்க,
“மேடம் செலிப்ரிட்டி ஓட எல்லாம் பிரெண்ட்ஷிப் வைச்சு இருக்கீங்க.. சமூகம் பெரிய இடமோ..”
என்று எல்லாம் அவர்கள் கிண்டல் செய்யும்போது கர்வமாக கூட இருந்தது. கரிகாலன் – அனன்யா பேச்சு தினந்தோறும் தொடர அதனை அவன் காதலாக மாற்றியபோது உலகிலே மிக பெரிய அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தாள். அனைத்தையும் தன் தோழிகளுடன் பகிரும் அவள் தன் காதல் விஷயத்தை சொல்ல விரும்பவில்லை. ஏனோ அவர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம்..!!
அவனின் மிட்டாய் பூசப்பட்ட வார்த்தைகளில் கிறங்கி அவனே தன் சர்வமுமாய் பாவித்து வந்தவளுக்கு முதல் அடியாய் வந்தது தான் கௌசல்யாவின் அழைப்பு..!!
யார் என்னவென்று தெரியாத அப்பெண்ணின் வார்த்தைகளை அவள் நம்பவே இல்லை. பதிலுக்கு பதில் தைரியமாக கேள்வி கேட்க,
“அய்யோ.. என்னை மாதிரி நீ ஆகிட கூடாதுனு தான் நான் பேசுறேன்.. புரிஞ்சுக்கோ.. நான் அனுப்பும் ஃபோட்டோஸை பார்..”
என்று பதட்டமாய் கூறியவள் அப்போது அவனுக்கும் தனக்கும் நடந்த உரையாடல்களை அனுப்பியவள் அவனோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அனுப்பி,
“என்னோட பையன் மேல சத்தியமா சொல்றேன்.. இது எல்லாமே உண்மை.. நம்பு மா..”
என்று பரிதவித்தாள். தான் அனுபவித்த எதையும் மற்றும் ஒரு பெண் அனுபவித்து விடவே கூடாது என்ற உறுதி அவள் மனதில் இருக்க தன்னையே ஆபத்தில் வைத்து அவளுக்கு உதவ நினைத்தாள்.
ஆனால் அனன்யாவோ அவளின் என் பையன் என்றதில் முகம் சுளித்து,
‘திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பவள் தன்னைவிட வயதில் சிறிய ஒருவனுடன் தன்னையே இணைத்து கூசாமல் பேசுகிறாள்.. என்ன பெண் இவள்..’
என்று தன் அவல நிலையை உணராமல் கௌசல்யா பற்றி இழிவாக எண்ணி அழைப்பை வைத்து விட்டாள். ஆனாலும் உள்ளே ஒரு நெருடல் இருந்துக் கொண்டே இருக்க கரிகாலனிடம் நேரடியாக கேட்டாள். அதற்கு அவன் கொடுத்த விளக்கத்தையும் முழுமையாக நம்பினாள். ஆனால் அப்பெண் யார் என்பது பற்றியும் அவள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் அனுப்பியது பற்றியும் மட்டும் அவனிடம் சொல்லவில்லை.
அவள் மறைத்ததற்கான காரணம் எங்கே அவன் அப்பெண்ணிடம் சண்டையிட போய் வேறு எதுவும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வானோ என்ற அக்கறையில் தான்..!!!
ஆனால் நடந்தது எல்லாமே வேறாக கௌசல்யாவின் மரணமும் அதன் காரணமும் அவள் முன் விஷ்வரூபம் எடுத்து நின்றது.
கௌசல்யாவின் ஆபாச காணொளி வெளியான நாளும் அன்று தனக்கும் கரிகாலனுக்கும் நடந்த சண்டையும் என அனைத்தையும் பொருத்தி பார்க்கும்போது உண்மை விளங்க ஆடி போய்விட்டாள். உடல் நடுங்கி போக பித்து பிடித்த நிலை தான்..!!
அப்போது தான் எத்தனை பெரிய ஆபத்தில் தான் சிக்கி இருக்கிறோம் என்றது அவளுக்கு புரிந்தது. தன் உயிரையும் பணயம் வைத்து கௌசல்யா செய்ய நினைத்த உதவி புரிய அதிலிருந்து அவளுக்கு தூக்கம் என்பதே இல்லை. கண்ணை மூடினால் கண்முன் கௌசல்யா உருவம் தோன்றி இம்சித்தது.
கரிகாலனிடம் இருந்து உடனே விலகவும் தைரியமில்லை. தனக்கு அவனை பற்றி தெரிந்துவிட்டது என அறிந்தால் என்ன செய்வானோ என்ற பயத்தில் அவனிடம் இயல்பாக இருப்பது போலவே நடித்தாள். கொஞ்ச கொஞ்சமாய் அவனிடம் இருந்து விலகிவிட வேண்டும் என எண்ணி இருந்தாள். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பது போக போக தான் புரிய தொடங்கியது. ஏனெனில் ஒரு அடி விலகினால் கூட அவன் பல மடங்கு திருப்பி கொடுக்கிறான்.
முன்பு காதல் மயக்கத்தில் கண்ணிற்கு தெரியாத பல விஷயங்கள் இப்போது பூதாகரமாய் தெரிய சுற்றி அவளுக்கென அத்தனை பேர் நிழலாக இருந்த போதிலும் தன்னை சூழ்ந்த இருளுடன் தனி ஒருவளாய் போராடிக் கொண்டிருந்தாள் அப்பாவை..!