சுந்தரமூர்த்தி வேலை விஷயத்தில் மிகவும் ஸ்ரிக்ட் என்பதால் ராகவியும் பிரபுவும் வாயே திறக்காமல் அடுக்கி வைப்பதில் மட்டுமே கவனமாய் இருந்தனர்.
அவர் சென்றதும், “என்ன கோபம் என் கமலிக்கு..”
என்று எதுவும் நடக்காதது போல் கேட்ட சுந்தரமூர்த்தியை மேலும் முறைத்து,
“என்ன ப்பா இது… நமக்கு தேவையா..”
என கேட்க,
“தேவை தான்.. நானும் ரெண்டு பொண்ணு வைச்சு இருக்கேன்.. அந்த அக்கறையில் அவர்
கேட்டதும் எனக்கு தெரிஞ்ச விபரம் சொன்னேன்.. இதில் என்ன இருக்கு..”
என்று அசட்டையாய் கூற,
“அவங்க முகத்தை பார்த்தால் இந்த கல்யாண பேச்சு மேல தொடரும்னு தோணல.. அந்த ஆளு கல்யாணத்தை நாம தான் கெடுத்தோம்னு ஆகவா..?? “
அவளோ மன சஞ்சலத்தோடு கூறினாள்.
தினகரன் குடும்பத்தோடு இவர்களுக்கு பகை எதுவும் இல்லை. அவளின் தாத்தாவை கொண்டு இன்னமும் உறவில் தான் இருக்கிறார்கள்..!! அப்படி இருக்க இதனை கொண்டு எதுவும் பிரச்சனை எழுமோ என்று கவலையாய் இருந்தது.
“நான் அவனை பத்தி தப்பா சொன்னா மாதிரி நீ ஏன் பயப்படுற கமலி..?? நான் சொன்னதில் எதுவும் பொய் இருக்கா சொல்லு..”
தினகரனிடம் அவள் நேரடியாய் பேசியது கூட இல்லை என்றாலும் அவனை நன்றாகவே தெரியும்.. முக்கியமாய் இங்கே கடைக்கு வர தொடங்கிய பின்பு இன்னும் அருகில் பார்க்கிறாள். ஒரு நாள் ஒரு பொழுது அவனை பற்றிய நல்ல எண்ணம் வந்ததே இல்லை.
அதுவும் அவன் அக்கா ஸ்வர்ணாவின் திருமணத்தின் போது பெரிய மனிதராய் அவள் தந்தையே அவனை நிறுத்தி பேச முயன்றபோதும் அவரை அவமானபடுத்துவது போல் பேசி சென்றது பிடித்தமின்மையை அவன் மேல் வளர்த்தது.
அதனை எல்லாம் யோசித்தபடியே சுந்தரமூர்த்தியின் கேள்விக்கு,
“இல்ல ப்பா..” என்று சொல்ல,
“அவங்க தான் சமந்தம் பண்ண போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு நானா இதெல்லாம் பேசினேனா..”
என்று அவர் மீண்டும் கேட்டபோதும் அவள் மறுத்து தலையசைக்க,
“அப்புறம் என்ன..? விட்டு தள்ளு.. இனி கல்யாணம் பேசுறதும் மறுக்கிறதும் அவரவர் விருப்பம்…”
என்று அதனை முடித்து, “நேரம் ஆகுதுல நீ வீட்டுக்கு கிளம்பு.. உங்க அம்மா உனக்காக காத்திட்டு இருப்பா..” என்றார்.
காலையில் சேர்ந்தே வந்தாலும் தந்தை மதியம் சாப்பிட்டபின் வீட்டிலே ஓய்வெடுக்க வேண்டும் என்பது கமலினியின் ஆணை..!! மீண்டும் அவர் மாலையில் வந்த பின்னர் இவள் சென்றுவிடுவாள். இரவு வரை சுந்தரமூர்த்தி இருந்து கடையை அடைத்துவிட்டு வருவார். இதுவே அவர்களின் வழக்கம்..!!
அதற்கும் மேல் தந்தையிடம் தர்க்கம் செய்யாமல் தன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட சாலையில் அவனது கடையை கடக்கும் போது பார்வை அவளையும் அறியாமல் அங்கே சென்றது.
‘ஈகில் விஷன் – சிசிடிவி செக்கியூரிட்டி சிஸ்டம்..’
என்ற பெயர் பெரிதாய் வரைந்து இருக்க கண்ணாடி கதவை தாண்டி உள்ளே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த தினகரன் முகம் தெரிந்தது.
கமலினி பார்த்த அதே நேரம் அவனும் எதார்த்தமாய் அவளிடம் திரும்ப சட்டென்று வேகமாய் பறந்துவிட்டாள்.
***
மாடியில் ஒற்றை படுக்கை அறைக்கொண்ட சின்ன வீடு அது..!!பேச்சுலர்ஸ் வசிக்கும் வீடு என்பது முதல் பார்வையிலே சொல்லிவிடலாம்.
தொலைக்காட்சியே அங்கு மேசை என்பதுபோல் அதன் தலையில் நிறைந்து கிடந்த பொருட்களும் அதுவே ‘ஹோம் தியேட்டர்’ என்பது போல் கீழே கால்மேல் கால் போட்டு படுத்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்த ஒருவனும், தோள்பட்டையும் காதும் ஒட்டிவிட்டதுபோல் திறன்பேசியை பிடித்துக் கொண்டு இளிப்போடு கடலை போட்டப்படி வெட்டியாய் இருந்த கைகளால் சுவரில் கிறுக்கிக் கொண்டு ஒருவனும் என அந்த வீட்டின் கூடம் கால் வைக்க இடமின்றி அடைத்தது போல் இருந்தது.
இவர்களை தாண்டி பால்கனி சென்றால் அங்கே சுவரில் சாய்ந்து இருவிரலால் வெண்சுருட்டை பிடித்து ஊதியப்படி மறுக்கையில் வைத்திருந்த திறன்பேசியின் தொடுத்திரையில் கட்டைவிரலால் அலட்சியமாய் தேய்த்துக் கொண்டிருந்தான் அவன்.
நல்ல உயரமும், பால் நிறமும், அலையலையாய் கேசமும், வசீகரமான முகமும் பார்க்கும் யாரையும் அழகன் என்றே நினைக்க வைக்கும்..!!
‘மயக்கம் என்ன’ படத்தில் வரும் ஒரு வசனத்தை அவன் படவரியில் ‘ரீல்ஸ்’ செய்து இருக்க அதற்கு வந்த கருத்துக்களை தான் படித்துக் கொண்டிருந்தான்.
“Wow.. Looking handsome babe..”
“Plz.. Oru hii sollunga…”
“Luv you baby…”
“Enaku ore oru reply pannen… Plz.. Plz..”
“Ur eyes r killin’ man..”
என்ற வரிகளே வெவ்வேறு வகையான வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெற்று இருக்க அதனை தவிர்த்து ‘இதயக் கண்கள்’ மற்றும் ‘முத்தமிடும்’ உணர்வுருகள் மட்டுமே ஆயிர கணக்கில் குவிந்துக் கிடந்தது.
பொதுவான பதிவில் இத்தனை என்றால் உள்பெட்டியில் உருகும் வசனங்கள் இன்னும் ஏராளம்..!! அதில் முக்கால் பங்கு இவனை தங்களோடு பேச சொல்லி கெஞ்சும் பெண்களே ஆகும்..!!
இவர்கள் அனைவரும் நேரில் அறிமுகம் இல்லா ஒருவனிடம் இத்தனையும் பேசுவார்களா..? கிடையாது..!! முகம் பார்க்காமல் எங்கோ இருந்து பேசும் துணிச்சல் மட்டுமே பேச வைக்கிறது.
ஆனால் ‘எதற்காக அவன் தன்னோட பேச வேண்டும் என உருகுகிறோம்…?? அவன் சொந்த வாழ்க்கை பற்றி சிறு துணுக்கும் தெரியாமல் அவனின் தோற்றத்தில் மட்டுமே ஈர்க்கப்பட்டு ஈசலாய் மொய்கிறோம் என்ற பிரக்ஞை இன்றி சுற்றும் கூட்டம் அது..!!
புகை தரும் போதையைவிட இந்த புகழ் தரும் போதையே அவனை அதிகம் கிறங்க செய்தது. அனைத்தையும் பார்த்தாலும் எதற்கும் அவன் பதில் அனுப்ப மாட்டான். அவன் பேச்சை தொடரும் ஆட்களை மிக மிக கவனத்தோடு தேர்ந்தெடுப்பான்..
‘ஏன் என்று கேட்டால்..?? ‘ அது போக போக புரியும்..!!
உள்பெட்டியில் புதிதாய் வந்திருந்த குறுஞ்செய்திகளை பார்வையிட்டு கொண்டிருந்தவன் விரல்கள் அவன் எதிர்பார்த்து இருந்த ‘Uni_K_Princess’ என்ற ஐடியில் தேங்கி நின்றது.
அவனுக்கு தெரியும் அவள் இன்றும் எதாவது சொல்வாள் என்று.. ஆனால் இதுவரை அவளுக்கு எந்த பதில் அனுப்பியது இல்லை. இப்போது,
“ஏன் சோகமான டயலாக்ஸ் எல்லாம் பேசுறீங்க.. ப்ளீஸ் இனி செய்யாதீங்க… உங்களை அப்படி பார்த்தால் மனசு கஷ்டமா இருக்கு.. “
என அனுப்பி இருக்க படித்ததும் ஏளனமாய் சிரித்துக் கொண்டவன் அந்த பெயரை சொடுக்க அவளின் தன்விவர பட்டியலில் பெயர், வயது, படிப்பு, பிடித்தம், பிடிக்காதவை என சகலமும் அவன்
பார்வையில் விழுந்தது.
அனைத்தையும் கணக்கில் கொண்டு மீண்டும் அவள் உள்பெட்டியை அடைந்தவன்,
“எப்பவும் ஜாலியாவே இருக்க முடியாதுங்க… இதைவிட அதிகமாவே என் வாழ்க்கையில் அனுபவிச்சுட்டு இருக்கேன்.. அந்த நரகத்தை பத்தி எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்..?? வெறும் இந்த ஒரு நிமிட வீடியோவை தாங்க முடியலைன்னு சொல்றீங்க…”
என்று அனுப்பி சில நிமிடங்கள் இடைவெளிவிட்டு,
“ஸாரி.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டேன்.. நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க..”
எனவும் அனுப்ப இரண்டுமே படிக்கப்பட்டது என்ற குறியை தொடர்ந்து சில நொடிகளிலே,
“ஐயோ.. ஸாரி எல்லாம் ஏன் கேட்கறீங்க..”
“நீங்க தப்பா எடுத்துக்கலனா உங்க கஷ்டம் எதுவா இருந்தாலும் ஒரு தோழியா நினைச்சு என் கிட்ட சொல்லலாம் இல்லையா..”
என்று மறுமொழி வந்திருக்க புதிய ஆட்டம் தொடங்கிய களிப்பு அந்த கரிகாலனின் கண்களில் மின்னல் வெட்டியது.