நாம் சொல்லும் பெண்ணை திருமணம் செய்துகொள்வான் என்ற நம்பிக்கையில்தான் காஞ்சனாவிடம் தைரியமாக பெண்கேட்டார். தற்போது அதிரூபன் இப்படி சொல்லவும் மாரியப்பனிற்கு மனம் தாளவேயில்லை.. அதன் பின் நிறையமுறை அதிரூபனிற்கு அழைத்து நீ விரும்பும் பெண் யாரென கேட்டுவிட்டார்கள்.
ஆதிரையிடம் தன் மனம் திறக்காமல் இவர்களிடம் சொல்லி பட்டுமாவை காரணமாக்கி திருமணம் தடைபெற்றுவிட்டால் என்னசெய்வதென்றே ஆதிரையைப் பற்றி எந்த தகவலும் கொடுக்காமல் இருந்தான் அதிரூபன். என்ன ஆனாலும் ஆதிரையை விடப்போவதில்லைதான்.. ஆனால் ஆதிரையின் மனதை கஷ்டப்படுத்தி அவளோடான திருமணத்தை கடினமாக்கிக்கொள்ள விரும்பாமல் அமைதிகாத்தான்.
கணேசன் காஞ்சனாவை பார்த்து வந்து பதினைந்து நாள் ஆகியிருக்க.. காஞ்சனா கணேசனிற்கு அழைத்தார். அதிரூபன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதை எப்படி சொல்வதென கணேசன் அமைதி காக்க.. ‘கணேசா.. யாரு போன் பண்றாங்க.? நீ வாக்குல இருக்க.?” என்றார் மாரியப்பன்.
‘அட இவன் யாருடா..? பேசின விசயத்தை திரும்பவும் பேசக்கூடாதுன்னு சட்டமா இருக்கு.?” என கடுகடுத்து.. ‘சரி அதை பேசலன்னா என்ன.? பேசுறதுக்கு விசயமா இல்ல.? அன்னைக்கு ஆதிம்மா வரதுக்குள்ள நாம கிளம்பிட்டோம்ல.? ஆதிம்மா எங்களைப் பத்தி என்ன சொன்னுச்சி அப்படியிப்படின்னு நான் எதுவோ பேசிக்கிறேன்.. நீ கால் பண்ணு.. அது ஃபோன் செய்தும் நாம பேசலைன்னா இன்னும்தான் தப்பாகும்..” என்றார்.
தந்தை சொல்வதும் சரியென தோன்ற கணேசன் காஞ்சனாவிற்கு அழைத்தார். ‘அப்பா..” என காஞ்சனாவின் குரல் அன்போடு ஒலிக்க.. ‘ம்.. எப்படிடா இருக்க.?” என்றார் பாசமாக.
‘நல்லாயிருக்கேன்ப்பா..”
‘என் பேத்தி வேலைக்கு போயிருக்கா.?”
காஞ்சனா.. ‘ஆமாம்ப்பா.. அண்ணா அண்ணி.. மருமகன்லாம் நல்லாயிருக்காங்களா.?” என்றார் ஆவலாக.
‘எல்லாரும் நல்லாயிருக்காங்கமா.. பேரன் சென்னையிலயிருந்து இன்னும் வரல.. வரதுக்கு இன்னும் ஒரு மாசம் பக்கம் ஆகும்னான்.. கல்யாண விசயம் போன்ல பேசவேணாம்னு அவன் வந்ததும் பேசலாம்னு இருக்கேன்.. நாம பேசிக்கிட்டது இன்னும் அவனுக்கு தெரியாது..” என்றார் கூடுதல் தகவலாக.
ம்.. காஞ்சனாவின் ஆவலான விசாரிப்பிலேயே திருமண விசயம் பேரனிடம் பேசினோமா என்ற ஆவல் தெரியவும் இவ்வாறு சொன்னார் மாரியப்பன்.
‘சரிங்கப்பா..” என்க..
‘அங்க என் பேத்திகிட்ட இதுபத்தி பேசுனியாமா.? ஆதிம்மா என்ன சொன்னுச்சி.?”
‘அது..” என காஞ்சனா தயக்கத்தோடு இழுக்க.. காஞ்சனாவின் தயக்கம் உணர்ந்;து.. ’எதுவாயிருந்தாலும் சொல்லு காஞ்சிமா..” என ஊக்கினார் மாரியப்பன்.
‘அவ இங்க எங்களோடவே இருக்க ஒத்துக்கிற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்லிட்டிருக்காப்பா.. என்னை விட்டுட்டு எங்கையும் போகமாட்டாளாம்..”
‘ஹா..ஹா.. அப்போ வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லு.. அதுக்கெதுக்கு இப்படி சுத்தி வளைக்கிற.?” என சிரித்தவர்.. ‘அது சின்னபொண்ணுமா.. அவங்கப்பா இருந்தா இப்படி யோசிச்சிருக்காது.. இப்போ யாருமில்லாம உன்னை தனியா விட்டுட்டு வர யோசிச்சி இப்படி சொல்லியிருக்கும்..” என பெருமையோடு சொல்லி..
‘ஆதிம்மாவை ரூபனுக்கு கேட்டது பத்தி சொன்னியா.?” என விசயத்திற்கு வந்தார்.
பரிதாபப்படறதாயிருந்தா பணங்காசுதான் கொடுப்பாங்க.. இப்படி பொண்ணு கேட்கமாட்டாங்கன்னு ராஜாத்தி அண்ணி சொல்லியும் ஆதி ஒத்துக்கல, உங்கம்மாவை விடு ஆதிம்மா.. கணேசைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. கணேசனும் அவங்கப்பாவும் ரொம்ப நல்ல மாதிரின்னு சின்ன வயசுல நீங்க என்னை பார்த்துக்கிட்டது.. எனக்காக எங்கப்பாகிட்ட சண்டைபோட்டுதுன்னு இளங்கோவும் ரொம்ப நேரம் எடுத்து சொன்னாப்பில..
அப்போவும் அவங்க நல்லவங்களாவே இருக்கட்டும்.. நானா வேணாம்னேன்.? அதுக்காக அவங்க பையனை என்னால கல்யாணம் செய்துக்க முடியாது.. எங்கப்பா இருக்கிறப்போ இல்லாத உறவு இப்போன்னு இல்ல, எப்பவுமே வேணாம்.. எனக்கு அத்ததை வீடும் சித்தப்பா வீடும் மட்டும் போதும்ன்னு பிடிவாதமா சொல்லிட்டா..
ராஜாத்தி அண்ணிதான் நம்ம சொன்னா கேட்க மாட்டான்னு கர்ணனுக்கு போன் செய்து விசயத்தை சொல்லி ஆதிகிட்ட பேச சொன்னாங்க.. அவன் என்ன சொன்னானோ.. அரைமணிநேரத்துக்கு மேல ரெண்டு பேரும் பேசிட்டிருந்தாங்க.. அவன்கிட்ட பேசினதுக்கப்புறம்தான் சரி வர சொல்லுங்க.. அவங்க மகனை எனக்கு பிடிச்சிருந்தா பார்க்கலாம்னு சொன்னாப்பா..” என்றார் வருத்தமான குரலில்.
‘ம்.. இவ்ளோ தூரம் யோசிக்கிதா என் பேத்தி..” என மாரியப்பன் வியப்பாய் சொல்ல.. ‘பெரியவங்க நாம ஆசைப்பட்டா நடந்திடுமா காஞ்சனா.. ஆதி சொல்றதும் சரிதானா.? நம்ம ரூபனை ஆதிம்மாக்கு பிடிக்கனும்ல.? ரூபன் வர இன்னும் ஒரு மாசம் பக்கம் ஆகும்.. அவன் வந்ததுக்கப்புறம் ஃபோன் செய்யிறேன்.. அது வரை ஆதிகிட்ட இனி கல்யாண விசயம் பேசாத..” என்றார் கணேசன்.
‘சரிண்ணா..” என ஆமோதித்த காஞ்சனா.. ‘ஆதிரை அவங்கப்பா மாதிரி கொஞ்சம் முன்கோபிதான்.. அதுக்காக என் மகளை தப்பா நினைச்சிடாதிங்கண்ணா.. ரொம்பவெல்லாம் முரண்டு பிடிக்கமாட்டா.. பெரியவங்க எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா..
அவங்கப்பா செத்ததுக்கப்புறம் ரொம்ப பொறுப்பாகிட்டா.. முக்கியமா அவ கல்யாணத்துக்கு ஒத்தக்காததுக்கு காரணம் என்னை பிரிய முடியாததுதான்..” என்றார் தன்மையாக.
‘நம்ம ஆதியை நான் தப்பா நினைப்பேனா.? ஆதிம்மாவை மருமகளாக்கிக்க எங்களுக்கு கொடுத்து வச்சிருக்கோ என்னவோ.? ஒருவேளை என் மகனை ஆதிம்மாக்கு பிடிக்கலன்னாலும் நானே நல்ல பையனா என் தங்கை மகளுக்கு பார்ப்பேன்.. சம்பந்தி ஆகலன்னாலும் அண்ணன் தங்கையா நம்ம உறவு சாகும் வரை தொடர்ந்திருக்கனும்..” என்றார் கணேசன்.
‘ரொம்ப சந்தோசம்ண்ணா..” என காஞ்சனா சொல்ல.. ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த மாரியப்பனிற்கு மனம் தாளவேயில்லை.. தன் மகளைப் பற்றி எதுவும் மறைக்காமல் அனைத்தும் காஞ்சனா சொல்லும்போது இத்தனை பெரிய விசயத்தை இனியும் சொல்லாமல் இருப்பது பெரும் தவறென தோன்ற.. ‘காஞ்சிமா..” என்க.. ‘சொல்லுங்கப்பா..” என்றார்.
‘அன்னைக்கு இருந்த சூழல்ல முக்கியமான விசயத்தை சொல்லாம விட்டுட்டேன்..” என குரல் இறங்கினார் மாரியப்பன்.
‘ரூபனுக்கு குழந்தையிருக்குதான்.. ஆனா இன்னும் கல்யாணமாகல..” என கணேசன் சொன்னதுதான்.. ‘ச்சி.. இது அதைவிட அசிங்கம்.. இப்படி பையனுக்கு என் பொண்ணை கேட்டிங்களா.?” என்றார் இன்னும் ஆத்திரமாக.
கணேசன்.. ‘காஞ்சிமா.. சில விசயங்களை என்னால சொல்லமுடியல.. ஆதிம்மாவை நான் குறைவா நினைப்பேனா.?” என்றார் மன்றாடலாய்.
‘போதும்ண்ணா உங்க சங்காப்த்தம்..” என கமறியவர்.. பின்னே சுதாரித்து.. ‘ராமசாமி புள்ளதானன்னு என்னை ரொம்ப இளப்பமா நினைச்சிட்டிங்கள்ல.? எங்கப்பனுக்கு புள்ளையா பதினேழு வருசம்தான் இருந்தேன்.. அதுக்கப்புறம் இருபத்தி ஏழு வருசமா நான் ஆறுமுகம் பொண்டாட்டி.. அவர் பெத்த புள்ளைய இப்படி பையனுக்கு கேக்குறிங்களா.? அவர் மட்டும் உயிரோட இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும்..” என ஆற்றாமையோடு கத்தி..
‘பாசமும் இல்ல ஒன்னுமில்லன்னு என் மக அப்பவே சொன்னா.. நான்தான் கேக்கல..” என அழுகையோடு தன்னைத்தானே நொந்து..
‘உங்கிட்ட பணமிருக்குனா அது உங்களோட.. உங்க பையன் முறையில்லாம பெத்த புள்ளைக்கு ஆயா வேலை செய்ய என் பொண்ணு ஆளில்ல..” என உக்கிரமாய் திட்டி இணைப்பை துண்டித்தார் காஞ்சனா.
எத்தனை துணிவிருந்தா என் பொண்ணை கேட்டுருப்பாங்க என மனம் தாளவேயில்லை காஞ்சனாவிற்கு.. எங்கப்பா செய்ததுக்கு அவங்ககிட்ட ஏன் கோபம் காட்டுறிங்கன்னு உங்களை திட்டினேன்.. ஆனா இப்போதான தெரியுது அவங்க சுயநலம்.. என புகைப்படத்திலுள்ள கணவனிடம் புலம்பிக்கொண்டிருந்தார் காஞ்சனா.
வேலை முடிந்து இரவு ஒன்பது மணிபோல் ஆதிரை வர.. அன்னையின் முகம் கண்டதும் எதோ சரியில்லையென கண்டுகொண்டவள் யோசனையோடே முகம் கழுவி வெளியே வர.. ‘ஆதிம்மா..” என பொங்கினார் காஞ்சனா.
‘என்னம்மா ஆச்சு.? உங்கப்பா பொண்டாட்டியேது திரும்ப வந்தாங்களா.?” என பதறினாள் ஆதிரை.
இல்லையென தலையசைக்க.. பிறகு நிம்மதி பெருமூச்சிழுத்தவள்.. தனது கல்யாணம் பேசியிருக்கிறார்கள் என நினைத்தவள்.. ‘என்னம்மா.? அப்பா அண்ணன் நியாபகம் வந்துடுச்சா.?” என்றாள் கனிவாக.
ஆமாம் என தலையசைத்தவர்.. ‘உங்கப்பா இருந்திருந்தா இப்படி செய்திருப்பாங்களா.?” என கண்ணீர் விட்டார்.
‘யாரு என்னம்மா செய்தாங்க.?” என்றாள் கவலையாக.
‘அவங்களை விடு ஆதிம்மா.. என் பொண்ணுக்கு எப்படி மாப்பிள்ளை கொண்டு வந்து நிறுத்தறேன் பாரு..” என்றார்.
ஆதிரைக்கு விசயம் விளங்கவே.. பெருத்த நிம்மதியடைந்தவள்.. ‘ஹா..ஹா.. உங்க கணேசன் அண்ணா என்னை வேணாம் சொல்லிட்டாங்களா.? அதுக்குத்தான் இத்தனை அழுகையா.?” என்றாள் சிரிப்போடு.
‘அவங்க யாரு உன்னை வேணாம்னு சொல்ல.? உங்க பையனுக்கு என் பொண்ணை தரமாட்டேன்னு நான் சொன்னேன்..” என கோபமாக நடந்ததை விளக்க ஆரம்பித்து அழுகையோடு முடித்தார்.
ஆதிரைக்கும் கோபம் வந்தபோதும்.. எப்படியோ கல்யாண பேச்சு நின்றதே என்ற நிம்மதி வர.. ‘இப்படிபட்டவங்களுக்காக என் அம்மா கண்ணீர் விடலாமா.? இப்பவாவது அவங்க காட்டினது பாசம் இல்ல வேசம்னு தெரிஞ்சதேன்னு சந்தோசப்படுவியா.?” என்றாள் ஆறுதலாக.
‘அட விடும்மா.. ஆக மொத்தம் ஆதிரை கிரேட் எஸ்கேப்.. இதை செலிபரேட் பண்ணனுமே..” என சந்தோசமாய் யோசித்தவள்.. ‘இன்னைக்கு நான் சமைக்கிறேன்.. நீ சாப்பிடுவியாம்..” என்றாள் சிரிப்போடு.
‘எப்படியோ.. மகள் இதை ஏமாற்றமாக நினைக்காமல் விட்டாளே என நிம்மதியானவர்.. இளங்கோவிடமும் ராஜாத்தி அண்ணிகிட்டயும் இதைப் பத்தி சொல்லிட்டு.. கல்யாண பேச்சு ஆரம்பிச்சிட்டு ரொம்ப தள்ளி போடக்கூடாது.. எல்லாருமா சேர்ந்து நல்ல பையனா பார்க்கலாம்னு சொல்லனும்.. என முடிவெடுத்தார் காஞ்சனா.