கமலினி மடியினில் கவிழ்ந்து அழுதுக் கொண்டிருந்த அனன்யாவிற்கு யார் முகத்தையும் பார்க்க கூட திறனில்லை.
அவள் சொன்ன விஷயங்களை கேட்டு
மொத்த வீடும் அலண்டு தான் போயிருந்தது. சுந்தரமூர்த்தி அப்படியே இடிந்து அமர்ந்துவிட அழுகையும் ஆவேசமுமாய் அனன்யாவை அடிப்பின்னி எடுத்துவிட்டார் அம்பிகா.
‘ ஏண்டி.. உன் புத்தி இப்படி போச்சு.. உன்னை நான் நல்லா தானே வளர்த்தேன்.. இப்படி வாழ்க்கையையே கெடுத்துட்டு வந்து நிற்கறீயே பாவி.. பெத்த வயிறு எரியுது டி.. ஐயோ..’
என சொல்லி சொல்லி அடிக்க அனைத்தையும் வாங்கிக் கொண்டு நின்றாள் அனன்யா. அவர்களை தலை குனிய வைத்த குற்றவுணர்வு அடித்தே கொன்று விட்டாலும் போதும் என தோன்றியது.
எங்கோ யாருக்கோ கேள்விப்படும் சம்பவம் இன்று தன் வீட்டில் தன் தங்கைக்கு நடந்தது என்பதை ஏற்க முடியாமல் திகைத்து நின்ற கமலினியும் அம்பிகாவை தடுக்காமல் நிற்க சிரமப்பட்டு ஏறி வந்து இருந்த அமிர்தம் தான் தன் மருமகளை பிடித்து நிறுத்தினார்.
“ஏற்கெனவே சாக துணிச்சவளை நீ அடிச்சே கொல்ல போறீயா..? அவளை விடு அம்பிகா..”
என்று கலக்கமாய் சொல்ல மேலும் அழுதவர்,
“பாருங்க அத்தை.. என்ன செஞ்சிட்டு வந்து நிற்கிறானு.. செல்லம் கொடுக்காதீங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேனே… யாராவது கேட்டீங்களா..!! அந்த சனியன் புடிச்ச ஃபோனால தான் குடியை கெடுத்து இருக்கா.. கண்டவன் கிட்ட இவளுக்கு என்ன பழக்கம் வேண்டிக் கிடக்கு.. சின்ன பிள்ளை.. சின்ன பிள்ளைன்னு செல்லமா விட்டு இவ பண்ணிருக்க காரியம் சின்ன பிள்ளை பண்றதா..?”
என ஆற்றமாட்டாமல் அமிர்தமிடம் புலம்ப அவருக்கும் அழுகை தான் வந்தது.
“டேய்.. சுந்தரம்..” என்று மகனை அழைக்க அவர் அசையாமல் வெறித்த பார்வையோடு அமர்ந்து இருக்கவும்,
“என்ன செய்யிறது புரியலையே ஆண்டவா..!! நீ உடனே உங்க மாமாவை வர சொல்லு அம்பிகா..!! அவர் வரட்டும்.. எனக்கு என்ன நடக்குமோ பயமா இருக்கு..”
என்று படபடக்க அம்பிகாவும் கண்களை துடைத்துக் கொண்டு சிவசுப்பிரமணியத்தை அழைக்க நகர்ந்து விட்டார்.
அடித்துவிட்ட அம்பிகாவை காட்டிலும் எதுவும் பேசாமல் சிலையாய் இருக்கும் கமலியையும் சுந்தரமூர்த்தியையும் கண்டு தான் இன்னமும் பயமாக கமலினி கையை பற்றி,
“இப்ப என்ன டி..? காப்பாத்திட்டோம்ன்னு வருத்தமா இருக்கா.. மறுபடியும் போய் சாகணுமா..? அதுக்கு தானே உன்னை இத்தனை வருஷம் பாசமா வளர்த்தாங்க.. போ.. யாரும் தடுக்க மாட்டோம்.. போடி..”
என தள்ளிவிட,
“அக்கா.. ஸாரி க்கா.. என்ன பண்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருந்தது..”
என்று அவள் தோளில் கதறி அழுக,
” நீ இழுத்து வைச்சு இருக்க பிரச்சனையைவிட இப்ப பண்ணின விஷயம் தான் டி தாங்கவே முடியல.. எங்க மேல எல்லாம் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாததால தானே செத்தே போயிடலாம்ன்னு நினைச்சு இருக்க.. எங்ககிட்ட வந்து சொன்னால் உன்னை என்ன செஞ்சுட போறோம்.. கொஞ்சம் கவனிக்காம விட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும்.. எங்களை எல்லாம் நினைக்காமல் சுயநலமாக சாகணும்ன்னு முடிவு பண்ணிட்டேல..”
என்று தொண்டை அடைக்க கமலினி கூறவும்,
“தப்பு பண்ணிட்டேன்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிடுங்க..”
என கெஞ்சினாள். அதற்கும் மேல் அந்த சிறு பெண்ணை என்ன சொல்லி என்ன பயன் என்று அமைதியாகி விட்டாள் கமலினி.
இங்கே தினகரனோ என்ன நடந்து இருக்கும் என்று தெரியாமல் தவிப்பாய் மீண்டும் மீண்டும் அவளுக்கு முயற்சித்தான்.
கமலினி கத்த தொடங்கிய சில வினாடிகளிலே அழைப்பு நின்று போனதால் என்னவென்று கணிக்க முடியவில்லை. ஏதோ பெரிய பிரச்சனை என்பது புரிய ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஆதவனை அழைத்தான். அவனுமே இரண்டு மூணு தவறிய அழைப்புகளுக்கு பின்னரே எடுக்க,
“டேய் ஆதவா.. கமலினி வீட்டில் ஏதோ பிரச்சனை நினைக்கிறேன்.. நீ உடனே அவங்களுக்கு கால் பண்ணி எல்லாரும் நல்லா இருக்காங்களா விசாரி..”
என்று துரிதப்படுத்த,
“அதுக்குள்ள உனக்கு எப்படிடா தெரியும்” என அதிர்ந்து கேட்டான் ஆதவன்.
தாத்தா அலைபேசியில் அம்பிகாவுடன் என்ன பேசினாரோ காரணம் எதுவும் சொல்லாமல் அங்கே உடனே செல்ல வேண்டும் என மொட்டையாக சொல்லிக் கொண்டு ஆதவனுடன் கிளம்பிவிட்டார்.
இவனின் விடாத கேள்வியில் இப்போது தான் மேலோட்டமாக கூறியிருக்க இவன் எப்படி சரியாக கேட்கிறான் என அதிர்ச்சியாய் இருந்தது.
ஆதவனின் கேள்வியை தள்ளி வைத்து,
“அப்போ உண்மையாவே பிரச்சனை தான்ல.. என்னாச்சு..?? யாருக்கு என்ன..? மறைக்காமல் சொல்ற நீ..”
என கேட்க சற்று தயங்கினாலும்,
“அனன்யா சூசைட் அட்டெம்ட் பண்ணிருக்கா டா.. ஏதோ ஒரு பையன்கிட்ட மாட்டி இருக்கா.. பயத்தில் இப்படி பண்ணிருக்கு..!! என்ன விஷயம்ன்னு நேரில் போனால் தான் தெரியும்.. நானும் தாத்தாவும் போயிட்டு இருக்கோம்..” என கூற தினகரனுக்கு இருக்கும் நிலையின் தீவிரம் புரிந்தது.
எனவே தேவையில்லாமல் எதுவும் பேசாது,
“நானும் வரேன்டா.. கால் மணி நேரத்தில் நான் அங்க இருப்பேன்..”
என சொல்ல,
“வேணாம் டா டேய்..” என சொல்லும் போதே வைத்தும் விட்டான்.
‘இவன் என்ன நிலமை புரியாம வரேன்னு சொல்றான்.. சொல்லி இருக்கவே கூடாதோ.. வந்தால் அங்க எப்படி எடுத்துப்பாங்க தெரியலையே..!!”
அதற்கு வெறும் தலையை மட்டும் அசைத்த தாத்தா வேறெதுவும் சொல்லவில்லை. பாவம்..!! அந்த வயதான மனிதரும் இத்தனை பெரிய இடரை எதிர்பார்க்கவே இல்லை. ஸ்தம்பித்து இருந்தார்.
இவர்கள் வந்த அதே நேரம் தினகரனும் தன் பைக்கில் வந்து இறங்கினான். தாத்தாவின் முகத்தை பார்க்கவே பாவமாக இருக்க அருகில் வந்து அவர் கையை பற்றியவன்,
“எதுவும் நம்ம கையை மீறி போகலை தாத்தா.. சரி பண்ணிடலாம்.. நீங்க தான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும்..”
என்று அழுத்தம் கொடுத்து சொல்ல உண்மையில் அவை தைரியத்தை கொடுத்தது. சரி என்பதாய் தலையை மட்டும் அசைத்து அவர் உள்ளே செல்ல ஆதவனும் தினகரனும் பின் தொடர்ந்து உள்ளே வந்தனர்.
அவர்கள் மாடியில் தான் இன்னும் இருப்பது தெரிய சிவசுப்ரணியத்துடன் ஆதவன் மட்டுமே மேலே சென்றான்.
“நான் இங்கேயே வெய்ட் பண்றேன் ஆதி.. எதாவதுன்னா கூப்பிடு..”
என்று சொல்லி தினகரன் கீழேயே நின்று விட்டான்.
ஆளுக்கு ஒரு திசையில் எல்லோரும் அமர்ந்து இருக்க கணவரை கண்டதும் அமிர்தம் தான்,
“என்ன காரியம் பண்ணி வைச்சு இருக்கா பாருங்க..” என்று அழுகையோடு அருகில் சென்றார்.
அனன்யா கமலினி மடியில் இருந்து நிமிரவே இல்லை. அத்தனை அவமானமாக இருக்க கமலினி தான் தன்னை கேள்வியாக பார்த்த தாத்தாவிடம் அனைத்தையும் விளக்கி கூறினாள். வீடு இருந்த ஆழ்ந்த நிசப்தத்தினால் தினகரனுக்கும் அவள் குரல் நன்றாகவே கேட்டது.
கமலினி சொல்ல சொல்ல அவனின் முகம் சிவப்பேறியது. அந்த நொடி கரிகாலன் கையில் சிக்கி இருந்தால் அடித்தே கொன்று இருப்பான்.
‘ அயோக்கியன்.. எத்தனை பெண்களை இப்படி பயன்படுத்தி இருப்பான்..’ என்று நினைக்கவே கோபம் பொங்க விரல்களில் சொடங்கெடுத்து அடுத்து என்ன செய்யலாம் என வேகமாய் யோசித்தான்.
“இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி மறைச்ச அனு.. கொஞ்சம் விட்டு இருந்தால் என்ன நடந்து இருக்கும்.. படிக்கிற பொண்ணு தானே.. தைரியமா இருக்க வேண்டாமா..?? யார் அவன்..? அவனை பத்தின டீடெயில்ஸ் சொல்லு..!!! என் கையில் அந்த நாய் சிக்கட்டும்..”
ஆதவனும் ஆத்திரமாய் சொல்ல அதுவரை வாயே திறக்காத சுந்தரமூர்த்தி,
“என்னடா பண்ணுவ..?? போய் அடிப்பியா.. அதுக்குள்ள அவன் நம்ம குடும்ப மானத்தையே ரோட்டில் கொண்டு வந்து நிறுத்திடுவான்…”
என்று கத்தினார். அதில் திடுக்கிட்டு நிமிர்ந்த அனு,
“அப்பா..” என்று அழுகையோடு கூப்பிட ,
“பேசாத.. இனி ஒரு வார்த்தை நீ என்கிட்ட பேசவே கூடாது.. நானே கொன்றுவேன் உன்னை..” என விரல் நீட்டி ஆவேசமாய் எச்சரித்தார். கோபத்தை மீறி அவர் உடலில் மெல்லிய நடுக்கம் தென்பட,
“சுந்தரம்… என்ன பேசுற..”
என்று சிவசுப்ரமணியம் அதட்டவும் உடைந்து விட்டார்.
“என்னை என்ன ப்பா பண்ண சொல்றீங்க.. என்னால தாங்கவே முடியல ப்பா.. என் பொண்ணா இப்படி ஒரு காரியம் பண்ணி வைச்சு இருக்கான்னு என்னால நம்பவே முடியல.. இவ மேல தப்பு இல்லைன்னு சொன்னாலும் யாரு ஏத்துப்பா..!! வயசு பொண்ணு.. வெளியே நாலு பேருக்கு தெரிஞ்சால் இவ வாழ்க்கை என்னாகும்.. நினைச்சாலே நெஞ்சை அடைக்குது..” என்று குலுங்கி அழுதுவிட கீழே நின்றிருந்த தினகரனுக்கும் கூட கஷ்டமாக இருந்தது.