“சுந்தரம் இப்ப தான் நாம தைரியமா இருக்கணும்.. மனசை விட்டுடாத..”
என கூறினார் சிவசுப்ரமணியம்.
‘இவங்க யாரும் அடுத்து என்ன செய்யிறதுன்னு யோசிக்கிறா மாதிரி தெரியலையே.. இது சரி வராது.. லேட் ஆக ஆக பிரச்சனை தான்..’ என நினைத்தவன் தானே வந்து பேசும் முடிவுடன் மாடி ஏற,
தந்தையே இப்படி உடைந்து அழுகவும் பயம் இன்னும் அதிகமாக இனி தன்னை காப்பாற்ற வழியே இல்லை என்பதாய் பேயறைந்தாற் போல் நின்றிருந்த அனன்யாவை கண்டு கமலினியும் சுதாரித்து விட்டாள்.
“வாழ்க்கையே முடிஞ்சு போறளவு எல்லாம் இங்க ஒன்னும் நடக்கல ப்பா.. நம்மை பேச இங்க யாருக்கும் தகுதி இல்ல.. அதை பத்தி யோசிச்சு நேரத்தை வீணாக்காம அந்த பொறுக்கியை என்ன செய்யிறதுன்னு பாருங்க.. இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விடக் கூடாது..”
“என்ன ஒன்னும் நடக்கல..?? இவ செஞ்சது என்ன சாதாரண விஷயமா டி.. அந்த பையனை எதுவும் செஞ்சு அவன் கோபத்தில் இவ ஃபோட்டோவை நெட்டில் போட்டுட்டால் நினைச்சு பார்க்கவே பயமா இருக்குடி.. இவ சரியா இருந்து இருந்தால் நமக்கு ஏன் இந்த நிலமை..”
என்று அம்பிகாவும் சத்தமிட,
“திரும்பத் திரும்ப ஏன் அதையே சொல்றீங்க.. ஆமா அனு பண்ணது எல்லாம் தப்பு தான் இல்லைன்னு சொல்லல.. அது வயசு கோளாறில் பண்ணிட்டாள்.. ஆனா அந்த பொறுக்கி பைய பண்ணது குற்றம்.. ஒரு பொண்ணை ஏமாற்றி அவளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துட்டு இருக்கான்.. அதையும் நம்ம அனு பண்ணதையும் ஒப்பிட்டுப் பேசாதீங்க..
இவ்வளவு நாள் யார்கிட்டவும் சொல்லாம அவனோட சித்திரவதையை எல்லாம் அனுபவிச்சது எத்தனை கொடுமை..! அவ செஞ்ச தப்பை நினைச்சு நிறையவே மருகி தவிச்சு இருப்பாள்.. போதும் ப்பா.. இனி நாம அவளுக்கு தைரியம் தான் கொடுக்கணும்.. நாமே அவளை கைவிட்டா மாதிரி பேசலாமா..”
என எல்லாருக்கும் பொதுவாய் அழுத்தமாய் சொல்ல பெரியவர்களுக்கும் அவள் சொல்வதன் உண்மை முகத்தில் அடித்தது போல் புரிந்தது. முதலில் குடும்பம் அவளுக்கு உறுதுணையாக நின்றாள் தானே வெளி உலகை அவள் துணிவாய் எதிர்க் கொள்வாள்.
“அவனை போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணி உள்ள தள்ளாமல் விட மாட்டேன்… ராஸ்கல்..”
என்று ஆத்திரம் கொண்டவளை,
” நீ சொன்னது எல்லாம் சரி தான் கமலி.. ஆனா போலீஸ் கிட்ட போய் நாமே பிரச்சனையை ஊரை கூட்டி சொல்ல வேண்டாம்.. நாளைக்கு அவன் வர சொன்ன இடத்திற்கு நாங்க போறோம்… அவன் போக்கில் போயே அவனை பார்த்துக்கலாம்..”
என சுந்தரமூர்த்தி மறுத்துக் கூறினார்.
“நீங்க போய் மட்டும் என்ன செய்வீங்க…?? அடிச்சால் சரிவராதுன்னு கொஞ்சம் முன்னாடி நீங்க தானே ப்பா சொன்னீங்க.. போலீஸ் கிட்ட போனால் தான் இவங்களுக்கு எல்லாம் சரியான தண்டனை கிடைக்கும்..”
“கமலி நீ சின்ன பொண்ணு.. உனக்கு புரியல.. சும்மா இரு..”
“என்ன புரியல.. நீங்க தான் புரியாம பேசுறீங்க.. அவன் யார் எப்படி பட்டவன்னு தெரியாமல் அவன் கிட்ட போய் மாட்டிக்க போறீங்களா..? அத்தோட இவனை மாதிரி ஆளுங்க முகத்தை கிழிச்சால் தான்.. இன்னொரு பொண்ணுக்கு இது நடக்காம இருக்கும்…”
“போலீஸ் கிட்ட மட்டும் என்ன நியாயம் கிடைக்கும்.. ஒன்னும் நடக்காது.. சொல்லி அவங்க விசாரணை பேரில் நம்மையும் தான் இழுத்து அடிப்பாங்க.. அதுக்குள்ள அவன் என்னென்ன எல்லாம் செய்வானோ..? பொம்பள பிள்ளை விஷயம் வெளியே தெரியாம நாமே முடிச்சுடலாம்..”
என்று சொல்ல கமலினி பத்ரகாலியாகவே மாறிவிட்டாள்.
“பொம்பள பிள்ளை.. பொம்பள பிள்ளைன்னு அமுக்கி வைச்சு வைச்சு தான் இததனை தைரியமா அவிங்க சுத்துறாங்க.. அவனுக்கு ஏன் ப்பா பயப்படணும்.. என்ன செஞ்சுடுவான்..?? மிஞ்சு போன அசிங்கமா போட்டோஸ் போடுவான்.. போடட்டும்.. அந்த ஃபோட்டோ தான் இவ வாழ்க்கையை நிர்ணயிக்க போகுதா..? தெரியாதவங்க ஒரு ரெண்டு நாள் பேசுவாங்க.. தெரிஞ்சவங்க
என்ன ஒரு ரெண்டு மாசம் பேசுவாங்களா…? அப்புறம் அடுத்த ஆளை பார்க்க போயிட்டே இருப்பாங்க.. அப்படி இல்லைன்னா கூட இவங்க பேசுறது கேட்காத தூரம் போயிடலாம்.. ஏன்னா இந்த உலகம் அவ்வளவு பெருசு..!!
மானம் போச்சு.. மரியாதை போச்சுன்னு எல்லாம் நாம சாக முடியாது. சக மனுஷிக்கு நடக்கிற கொடுமையை கண்டும் காணாமல் இருக்கிற இந்த சமூகம் தர கால் பைசாக்கு பிரயோஜனம் இல்லாத மரியாதை நமக்கு தேவையே இல்லை…”
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடியாய் விழ,
சற்று முன் தற்கொலை செய்துக் கொள்ள முயன்றவளை கூட,
“இதுக்கா சாக நினைச்சோம்..” என்று யோசிக்க வைத்து இருந்தாள்.
அந்த அறை வாயிலில் வந்த நின்ற தினகரன் முகத்தில் மெச்சுதலாய் ஒரு புன்னகை..!!
‘எதற்கும் பயந்து ஒடுங்கி போகும் ரகமில்லையே என்னவள்.. இந்த ராணி எந்த ராஜாவையும் எதிர்பார்த்து காத்திருக்க மாட்டாள்..’
அந்த நிலையிலும் அவன் மனம் பெருமை அடைவதை தடுக்க முடியவில்லை.
“கமலினி சொல்றது தான் சரி.. அவன் பின்னால யார் எல்லாம் இருக்காங்க தெரியாது.. அப்படி இருக்கும்போது நீங்க எந்த முன்னேற்பாடும் இல்லாம போறது அவனை சுதாரிக்க வைச்சுடும்..”
என தினகரன் திடீரென பேச அனைவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர். கமலினி உட்பட யாருமே அவன் வருகையை எதிர்பார்க்கவில்லை.
அவனிடம் கடைசியாய் திறன்பேசியில் பேசிக் கொண்டிருந்தது இப்போது தான் அவளுக்கு நியாபகமே வந்தது.
சுந்தரமூர்த்தி ஆதவனை முறைக்க,
“என்னோட தான் தினகரனும் வந்தான்..”
என்று சிவசுப்ரமணியம் சொல்லவும் அவர் இருக்கும் நிலையில் இதற்கு எல்லாம் வாக்குவாதம் செய்ய சக்தி இல்லை.
“உங்களுக்கு எது சரின்னு படுதோ.. அதையே செய்யுங்க அப்பா.. அவ வேணும்னா நம்மை எல்லாம் யோசிக்காம விட்டுட்டுப் போக நினைச்சு இருக்கலாம்.. ஆனால் என் உடம்புல உசுரு இருக்கிற வரை என் பொண்ணுங்களை எதுக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்..”
தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருந்த சுந்தரமூர்த்தி தழுதழுத்த குரலில் கூற,
“அப்பா..” என்ற கதறலோடு ஓடி வந்து அவர் கையில் முகத்தை புதைத்துக் கொண்டு குலுங்கி அழுதாள்.
‘ஸாரி ப்பா.. மறுபடியும் இப்படி பண்ணவே மாட்டேன்.. ஸாரி…’ என தேம்பி தேம்பி அவள் அழுததில் பெற்றோர் மனம் இளக கலங்கிய கண்களோடு சுந்தரமூர்த்தி ஆறுதலாய் அவள் தலையை கோதிக் கொடுத்தார் என்றால் அம்பிகாவும் அவளின் கையை பற்றிக் கொள்ள அந்த நொடியே அனன்யா மனம் பாதுகாப்பாக உணர்ந்தது.
“என் பேத்தி சொன்னால் சரியா தான் இருக்கும்.. கமலி நீ சொல்லுமா.. என்ன செய்யலாங்கிற…”
“இது சைபர் க்ரைம் தாத்தா.. நேரில் கூட போய் கம்பளைண்ட் கொடுக்கணும்ன்னு அவசியம் இல்ல.. ஆன்லைனில் கொடுத்தால் போதும்.. அதுக்குன்னு தனி வெப்சைட் இருக்கு..”
என்றவள்,
“அனு அவன் உன்னை மிரட்டி பேசுன chat history, call records எல்லாம் இருக்கு தானே.. அவனுது ஒரிஜினல் ஐடி- யா..?”
என கேட்க கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவள்,
“இருக்கு கமலி.. அவன் பேசின வாய்ஸ் ரெகார்ட்ஸ் கூட இருக்கு.. அவன் கௌசல்யான்னு ஒரு பொண்ணையும்
இதே மாதிரி டார்ச்சர் பண்ணி இருக்கான்.. அவங்களுக்கு என்னை தெரிஞ்சு எனக்கு காண்டக்ட் பண்ணாங்க.. அப்போ தான் கரிகாலன் இப்படி பட்டவனே எனக்கு தெரியும்.. அவங்க இப்ப உயிரோட இல்ல..”
என கூறும் போதே குரல் நடுங்கியது. தன்னை மீட்டு,
“அவங்க பேசின records கூட இருக்கு கமலி..” என்று சொல்ல ஆதவனும் தினகரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
இவர்களுக்குள் விவாதம் வந்ததால் கௌசல்யாவை சட்டென்று இனங்காண முடிந்தது.
அன்று தினகரன் சொன்னதன் அர்த்தத்தை ஆதவன் முழுமையாக உணர்ந்தான்.
அனன்யா கூறிய அனைத்தையும் ஆவணப்படுத்திய கமலினி சைபர் க்ரைம் வலைத்தளத்தில் அனைத்தையும் விளக்கி முறையாக புகார் அளித்தாள்.
“கரிகாலன் கால் பண்ணினாலும் அட்டென் பண்ண வேண்டாம்.. அவன் வர சொன்ன இடத்தில் வந்து காத்து இருக்கட்டும்… அங்க யாரும் போக போறது இல்ல.. அவன் என்ன செஞ்சாலும் மனசை தளரவிடக் கூடாது.. சரியா..”
என பொறுமையாய் கூறினாலும்,
‘ எதுவும் நடக்கவும் விட மாட்டேன்..’ என மனதில் உறுதி பூண்டான்.
அவளும்,
“சரிங்க மாமா..” என்றாள். கரிகாலன் பற்றிய தகவல்களை தானும் பெற்றுக் கொண்டு,
“கமலினி போலீஸ் கால் பண்ணினால் உடனே எனக்கு சொல்லு..!!! முதலில் உன் மொபைல் என்னாச்சுன்னு பார்.. உனக்கு கால் பண்ணினால் ரிங் போகவே இல்ல..!! நான் காலையில் வரேன்..” என்று அவன் சொல்வதும் அவள் பதவிசாய் தலையசைப்பதும் ஏதோ பொண்டாட்டியிடம் சொல்வது போல் உரிமையாக தெரிய அதையும் மொத்த குடும்பமும் வேடிக்கை பார்த்தது. மாலையில் தினகரன் சொன்னது போல் இருவருக்கும் இடையில் விருப்பம் இருக்கும் போல என சுந்தரமூர்த்தியே எண்ணினார். ஆனால் அதனை பேச இது நேரம் அல்ல என்பதால் அமைதி காக்க,
“தாத்தா நீ இங்க தானே இருக்க போற..! அப்போ நானும் கிளம்புறேன்..”
என்று அவனுடன் விடைபெற்று ஆதவனும் கிளம்பினான்.
வெளியே வந்ததும் தினகரனை ஆதவன் மேலும் கீழும் ஒரு மாதிரி பார்க்க,
“என்ன டா..” என்று கேட்டபடி தன் பைக்கில் ஏறியமர்ந்தான்.
“இல்ல கூடவே சுத்துனீயே செவ்வாழ உனக்கு தெரியாமலா இருக்கும்ன்னு என் சித்தப்பா என்னை தான் கேட்பார்..”
“என்ன டா.. சம்மந்தமே இல்லாம உளறுற…”
“ஏது.. நான் உளர்றனா..?? உனக்கும் கமலினிக்கும் எத்தனை நாளா இது ஓடிக்கிட்டு இருக்கு..”
“ம்ச்.. அது இப்ப முக்கியம் இல்ல..” என்று நைச்சியமாய் அப்பேச்சை தட்டிவிட்டவன்,
கரிகாலனின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்றை எடுத்துக் காட்டி,
” கரிகாலன் தோளில் கைபோட்டு நிற்கிறான் பார்.. இவன் பேர் விக்னேஷ்.. ஜெய்ந்த் பிரென்ட் இவன்.. ஜெய்ந்த் கூட தான் வேலை பார்க்கிறான்.. இவனை பிடிச்சால் இந்த கரிகாலனோட பேக்கிரவுண்ட் தெரிஞ்சுடும்.. முதல்ல சிக்கட்டும் அப்புறம் இருக்கு..”
என்று தீர்க்கமாய் சொல்ல,
“ஹே.. செம்ம டா… முதலில் அதை பண்ணு..” என்றான் ஆதவனும்..!