“என்ன அமைதியாகிட்ட… உன் நண்பன் குட்டு வெளியாகிடுச்சுன்னு அதிர்ச்சியா இருக்கா..”
“ஜெய்ந்த்.. இதெல்லாம் சத்தியமா எங்களுக்கு தெரியாது டா.. என்னால இப்பவும் நம்ப முடியல.. பொண்ணுங்க விஷயத்தில் அவன் கொஞ்சம் வீக் தான்.. ஆனால் இப்படி எல்லாம் செய்யிறவன்னு நினைச்சுக் கூட பார்க்கல…”
“ஒரே வீட்டில் தான இருக்கீங்க.. அதெப்படி தெரியாம இருக்கும்.. என்ன அவன் மாட்டினதும் கழண்டுக்க பார்க்கறீயா…?”
“எனக்கும் தங்கச்சி இருக்கா டா.. இவனை மாதிரி ஒருத்தனை கூட வைச்சுட்டே சுத்தி இருக்கோமே..!! அவளையும் இவன் அப்படி எதுவும்..”
சொல்லகூட வாய் கூசியது அவனுக்கு..!! நெஞ்சம் பதறியது.
விக்னேஷ் முகத்தில் உண்மையான பயமும் பதற்றமும் தெரிய ஜெயந்த் சற்று அமைதியாகி விட்டான்.
“ஒரே வீட்டில் இருக்கோம்ன்னு தான் பேரு.. அவன் என்ன வேலை பார்க்கிறான்னு எனக்கே தெரியாது ஜெயந்த்.. அடிக்கடி மாறிக்கிட்டே இருப்பான்.. சில நாள் வேலை போயிருச்சுன்னு சொல்லி வீட்டில் சும்மாவே இருப்பான்.. அவன் அப்பா அம்மா எல்லாம் உயிரோட இல்ல.. ஒரே ஒரு அண்ணன் தான்… அவருக்கு கல்யாணம் ஆகி செட்டில் ஆனதும் இவனோட பெருசா காண்டக்ட் கிடையாது..!! எந்த பொறுப்பும் இல்லாம இஷ்டம் போல திரிவான்.. ஆனா அவன் கையில் பணம் இருந்துட்டே இருக்கும்.. நல்ல தாராளமா செலவு செய்வான் எங்களுக்கும் சேர்த்து..!! அதனாலேயே அவனுக்கு எங்கேந்து பணம் வருதுன்னு பெருசா கவனம் வைச்சது இல்ல.. அது தான் நாங்க பண்ண பெரிய தப்பு.. மத்தபடி எங்களுக்கு..”
என சொல்ல வந்து பின்,
“எனக்கு தெரியாது… ஏன்னா யாரை நம்புறது வேண்டாம்னே தெரியல டா.. சந்தோஷ், அருள் மேலயும் இப்ப எனக்கே சந்தேகமா இருக்கு..” என வலியோடு கூறிக் கொண்டிருக்க அப்போது சரியாய் வீடு திரும்பினான் அருள்..!!
“நீ இன்னும் ஆபீஸ் கிளம்பலையா விக்கி..” என்றவன் ஜெயந்தனை பார்த்ததும்,
“ஸார் யார்.. பிரெண்டா..” என்றான் ஸ்நேகமாய்.. அவன் கையில் மதுபாட்டில்கள் அடங்கிய பை இருந்தது.
விக்னேஷ் பதில் சொல்லாமல் அவனையும் பையையும் பார்க்க,
“காலா இப்ப போயிருக்க ப்ராஜக்ட் சகசஸ் ஆக போகுதாம்.. அதான் நமக்கு ட்ரீட் தர இதை எல்லாம் வாங்க சொல்லி கார்ட் கொடுத்துட்டு போனான்.. நைட் செம்மயா ரகளை பண்றோம்..”
என நிலைமை தெரியாமல் உற்சாகமாக சொல்லி வந்தவன்,
“பாஸ் நீங்களும் எங்களோட நைட் ஜாயின் பண்ணிக்கோங்க.. இதுக்கு எல்லாம் கரிகாலன் கணக்கே இல்லாமல் செலவு செய்வான்..” என்று ஜெய்ந்தனையும் அழைக்க,
“அந்த தாராள பிரபுக்கு ப்ராஜக்ட் எங்க திருச்சியிலா பாஸ்.. இது எத்தனையாவது பிராஜக்ட் தெரியுமா..? ஐ மீன் எத்தனாவது பொண்ணுன்னு..”
என அவன் கேட்டதும் திகைத்து பார்த்தான். ஜெய்ந்தன் பார்வையில் தெரிந்த உக்கிரமும் விக்கியின் சந்தேக பார்வையும் அவனுக்கு எதையோ உணர்த்த சட்டென்று தன் உணர்வை மறைக்க பெரும் பாடாக இருந்தது. ஜெயந்தன் யாரென்று தெரியாத நிலையில் அவன் போலீசாக இருந்தால் என்ற பயமும் இருந்தது. அவனை காட்டிக் கொடுக்கவே நெற்றியில் வியர்வை முத்தாய் அரும்ப,
“நீங்க என்ன கேட்கறீங்க.. எனக்கு எதுவும் தெரியாது சர்..” தடுமாறினான்.
“பொய் சொல்றன்னு பச்சையா தெரியுதுடா..பரதேசி..”
என்று அருளின் சட்டையை பிடித்த விக்கி,
“பொறுக்கி நாயிங்களா.. எத்தனை பொண்ணோட வாழ்க்கையை வீணாக்கி இருக்கீங்க.. அவங்க சாபம் எல்லாம் சும்மா விடுமாடா.. அப்படி ஒரு ஈன பொழப்பில் நானும் சாப்பிட்டு இருக்கேன்னு நினைச்சாலே அருவெறுப்பாக இருக்கு.. எப்படி டா கொஞ்சமும் உறுத்தலே இல்லாமல் உலவ முடியுது.. இனியும் அப்படி இருக்கலாம் நினைக்காதீங்க..
சாவுடா… காலத்துக்கும் ஜெயில் கிடந்து சாக போறீங்க.. ஜெய்ந்த் இவனுங்களை சும்மா விடாதீங்க..”
என கோபமாய் உலுக்க அவன் வார்த்தைகளில் ஜெயந்தனை போலீஸ் என்றே முடிவு பண்ணிக் கொண்ட அருள் பயத்தில் உளற ஆரம்பித்தான்.
” சர் எனக்கே இப்ப கொஞ்ச நாளாக தான் சர் அவனை பத்தி தெரியும்.. நானும் அவனுக்கு அட்வெய்ஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்.. அவன் கேட்கல சர்.. எனக்கு அந்த பொண்ணுங்க யாருன்னு கூட தெரியாது சர்.. நான் அப்படி பட்டவன் இல்ல.. என் மேல கேஸ் எதுவும் போட்டுடாதீங்க.. வீட்டுக்கு தெரிந்தால் என்னை கொன்னே போட்டுடுவாங்க..
நான் எனக்கு தெரிஞ்சது வரை சொல்லிடுறேன்…”
என கெஞ்சவும் விக்னேஷ் ஜெயந்தன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்கும் அவன் போலீஸ் என நினைத்து பேசுவது புரிந்தாலும் உண்மையை சொல்ல விழையவில்லை.
கைகளை கட்டிக் கொண்டு,
“என்ன தெரியும் உனக்கு..” என தோரணையாக ஜெயந்தன் கேட்டான்.
“அவன் இன்ஸ்டாவில் பிரபலம் என்றதால பொண்ணுங்க அவங்களே தேடி வந்து அவன்கிட்ட பேசுவாங்க சர்..!! அவன் அதை தான் தன்னோட ப்ளஸ்ஸா பார்க்கிறான்.. அதை வைச்சு எப்படி பணம் பண்ணலாம்னு ஐடியா பண்ணி தான் இனிக்க இனிக்க பேசி அந்த பொண்ணுங்ககிட்ட பணம் கறக்க ஆரம்பிச்சு இருக்கான்.. சில பேர் அவன்கிட்ட நெருங்கி பழகும்போது அவன் குணம் அறிஞ்சு விலகி இருக்காங்க.. அது அவன் ஈகோவை சீண்டவும் அவங்களை வரவைக்க போட்டோஸ் வீடியோஸ் காட்டி மிரட்டி அவனுக்கு அடிபணிய வைச்சு இருக்கான்.. அப்படி எந்த பொண்ணும் அவனை எதிர்த்தது இல்ல.. மாட்டிப்போம்ன்னு பயமே அவனுக்கு கிடையாது சர்.. அதுவே ஒரு வகையில் அவனுக்கு வழமை ஆகிடுச்சு..”
என அவன் கேட்டிருந்த இருவருக்கும் இரத்தம் கொதித்தது.
“நீயும் அவன் போடுற பிச்சையை எதிர்பார்த்து அவனுக்கு மறைமுகமாக உதவிட்டு இருந்து இருக்க.. அப்படி தானே.. இந்த வேலைக்கு பேர் என்ன தெரியுமா..?”
என விக்கி கேட்டதில் அவன் தலை தன்னால் தாழ்ந்தது.
“வேறென்ன என்ன எல்லாம் உன்கிட்ட சொல்லி இருக்கான்..”
என ஜெயந்த் கேட்கவும்,
“அவ்வளவு தான் எனக்கு தெரியும் சர்.. ஆனா அந்த பொண்ணுங்க எல்லாரோட ஃபோட்டோஸ் வீடியோஸும் நம்பர் வைஸ் ஃபோல்டர் போட்டு வைச்சு இருக்கான்..!! நான் பார்த்து இருக்கேன்.. என்னால அதை அக்சஸ் பண்ணி எடுக்கவும் முடியும்..”
என்றவன் பின்னர் ஏதோ யோசித்துவிட்டு அறையினுள் ஓட விக்கி,ஜெய்ந்தும் அவனை தொடர்ந்து சென்றனர்.
கரிகாலனின் கப்போர்ட் சாவியை தேடி எடுத்தவன்,
“அவனோட லேப்டப் இங்க தான் இருக்கும் சர்.. நான் சொன்ன எல்லாமே அதில் தான் இருக்கு.. அதை நான் எடுத்து தரேன்.. என்னை மட்டும் விட்டுட்டுங்க சர்…”
என்றான். அருள் போன்ற சுயநலவாதிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்…?! கரிகாலனின் பணம் தனக்கு தேவையாக இருந்த வரையில் அவனின் வால் பிடித்து அலைந்தான். இன்று தனக்கே ஆபத்து என்றதும் தான் தப்பினால் போதும் என்று அவனை காட்டிக் கொடுத்து விட்டான்.
மடிக்கணினியில் கடவுச்சொல் கடந்து அந்த போல்டர் திறப்பதில் அருளுக்கு எந்த சிரமும் இல்லை. அதில் இருந்த எண்ணிக்கை கண்டு மனம் கனத்து போனது. எத்தனை பெண்களின் கண்ணீர் இது..!!
மடிக்கணினியை அப்படியே வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியன் நடந்த அனைத்தையும் தினகரனிடம் அழைத்துச் சொல்லி,
“நான் உடனே அங்கே கிளம்பி வரேன் அண்ணா..!! கரிகாலனை அரெஸ்ட் பண்ணி இருப்பாங்க தானே.. இந்த லேப்டப்பை என்ன செய்ய போறீங்க.. போலீஸ் கிட்ட ஒப்படைக்க போறீங்களா..!”
என வினவினான்.
“இல்ல டா.. லாயர் சர் அவங்களை முழுசா நம்ப வேண்டாம்னு சொல்றாங்க.. யோசிச்சு பார்த்தால் அதுவும் சரி தான்.. இப்ப நீ சொன்னது எல்லாம் கேட்ட பின்னால எனக்கு ஒரு யோசனை தோணுது..”
“என்னது அண்ணா..”
என்றதும் ஒரு பிரபல நியூஸ் ச்செனல் பெயரை சொல்லி,
“நீ யார் என்னனு அடையாளம் தெரியாம விஷயத்தை லெட்டர்ல எழுதி லேப்பை அவங்க ஹெட்ஆபிஸில் ஒப்படைச்சுடு..!! அதுக்கும் மேல அவங்க பார்த்துப்பாங்க.. மீடியா போனால் இந்த விஷயம் வேகமா அடுத்த கட்டத்தை அடையும்..”
என்று முடிவாக கூறினான். கரிகாலன் பற்றிய உணமை மக்களுக்கு அனன்யாவை கொண்டு வெளியாக வேண்டாம் என்றே அவனுக்கு தோன்ற இந்த முடிவில் உறுதியாக நின்றான்.
“கொஞ்சம் கவனிக்காம விட்டு இருந்தால் என்ன வேணும்னாலும் நடந்து இருக்கும்… கடவுளோட சித்தம் அவ தூக்கு போட மேல ஏறி நிற்கும்போதே காப்பாத்திட்டாங்க..”
என்று அவன் சொன்னதும் ஜெய்ந்தன்
கண்கள் கலங்கி விட்டது.
“என்னால நம்பவே முடியல.. ஏன்னா அவ அப்படி செஞ்சா.. என்னை பத்தி யோசிக்கவே இல்லையே ண்ணா அவ..”
மனம் கேட்காமல் கலங்கி அண்ணனிடம் புலம்ப,
“என்ன டா பேசுற நீ..”
என்று தினகரன் அதிர்ச்சியாய் கேட்டான்.
“அவளும் நானும் லவ் பண்ணோம் அண்ணா… சில காரணங்களால அவளும் நானும் பிரிஞ்சு இருக்க முடிவு பண்ணோம்.. ஆனா.. ஆனா அவ எப்படிண்ணா என்னை மறப்பா..?”
“நீ என்ன புதுசா ஒன்னு சொல்ற..? உனக்கு எப்படி அந்த பொண்ணோட பழக்கம்..?! அத்தோட அந்த கரிகாலன் லவ் பண்ணி ஏமாத்திட்டான்னு தான் அவ சூசைட் பண்ண ட்ரை பண்ணா.. அப்புறம் எப்படி உன்னை லவ் பண்ண முடியும்..”
“அதான் எனக்கும் புரியல.. என்னால ஏத்துக்கவே முடியல அண்ணா.. ஏதோ குழப்பம் இதில் இருக்கு.. பிளீஸ்
அபூர்வாவை என்கிட்ட ஒரே ஒரு தடவை பேச சொல்லுங்க ண்ணா..”
“அபூர்வா வா..???”
“ஆமா அபூ தான்.. அவ சூசைட் பண்ணிக்கிற ஆள் எல்லாம் கிடையவே கிடையாது..”
“டேய்.. ஏன்டா போட்டு சாகடிக்கிற.. நான் சொன்னது அனன்யாவை.. பிரச்சனை நடந்தது எல்லாம் அனன்யாவுக்கு தான்..”
“அனன்யா வா..??” என்று திகைத்த ஜெயந்த்,
“ஆதவன் தங்கச்சின்னு சொன்னீங்க..”
என்று கேட்க,
“ஏன் அனன்யாவும் அவன் தங்கச்சி தானே..” கடுப்பாய் தினகரன் கேட்டு வைக்க சட்டென்று ஜெய்ந்தன் மனதில் ஓர் நிம்மதி..!!
“நேத்து நீங்க சொன்னதில் இருந்து என் உயிரே என்கிட்ட இல்ல..!! செத்துட்டேன்… என் அபூ அப்படி எல்லாம் எனக்கு துரோகம் செய்ய மாட்டான்னு என் மனசு சொல்லிட்டே இருந்துச்சு.. என் நம்பிக்கை வீண் போகல..”
“மண்ணாங்கட்டி.. இப்ப தான் காலேஜ் வாசலையே மிதிச்சு இருக்க பச்ச பிள்ளை அது.. அவகிட்ட காதல் கீதல்ன்னு மனசை கெடுத்து வைச்சிட்டு அதை என்கிட்டவே தைரியமா வேற சொல்ற நீ..!! இந்த விஷயம் ஆதவனுக்கு தெரிஞ்சால் அவன் என்ன நினைப்பான் கொஞ்சமாவது யோசிச்சுயா நீ..”
ஜெயந்தன் பேசவே இடம் கொடுக்காமல் வசை மழையாய் பொழிந்தவன்,
“ஊருக்கு தானே வருவ.. வா பேசிக்கலாம்..” என்று வைத்துவிட அண்ணனின் திட்டு எல்லாம் கொஞ்சமும் பாதிக்கவில்லை. இதயத்தை அடைத்துக் கொண்டு இருந்த ஏதோ ஒன்று விலகியது போல்
ஆசுவாசம் கொண்டவன் தினகரன் சொன்னதை செய்து முடித்தான்.
இப்படி தன்னை சுற்றி ஆழமாய் குழி தோண்டப்பட்டதை அறியாமல் அனன்யாவை இரையாக்க வலை விரித்து காத்திருந்த கரிகாலன் அவளுக்கு கெடுவாக அவன் கூறிய அதே நேரத்தில் போலீஸாரால் கைது செய்யப் பட்டான்.