மிக பரபரப்பான பின்னணி இசையோடு தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளில் துளியும் கவனம் இல்லை என்றாலும் அதையே உத்து உத்து பார்த்துக் கொண்டிருந்தார் லிங்கேஷ்வரன்.
ஆனால் அவற்றை மீறி லலிதாவின் குரல் ஓங்கி தான் ஒலித்தது.
“இந்த விதியை நான் எங்க போய் சொல்வேன்.. உலகத்தில் வேறு இடமே இல்லைன்னு இந்த கேடுகெட்ட குடும்பத்தில் மாட்டிக்கிட்டு தினம் தினம் என் உசுரு போகுது..”
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த தரமான சம்பவத்திற்கு (அதாங்க கல்யாணம்) இப்போது வருந்தும் மனைவியை நினைத்து சிரிப்பதா.. அழுவதா தெரியவில்லை அவருக்கு..!!
“இத்தனை வருஷம் ஆகியும் என் குடும்பத்தை நிம்மதியா இருக்க விட கூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு இருக்காங்களே..!! அண்ணனும் இல்ல தம்பியும் இல்லனு ஒதுங்கிய அப்புறமும் நம்ம விஷயத்தில் ஏன் தலையிடணும்..?? அவங்க பிள்ளைங்க மட்டும் நல்லா இருப்பாங்களா..!! நாங்க யாருக்கும் எந்த பாவமும் பண்ணது இல்லையே.. என் புள்ளையோட வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்.. ராஜாவாட்டம் இருக்கும் என் புள்ளைய பத்தி தப்பா பேசின வாய் எல்லாம் அவிஞ்சு தான் போகும்.. அவங்க பிள்ளைங்க மட்டும் என்னத்தை வாழ்ந்து கிழிக்க போகுதுனு நானும் பார்க்க தானே போறேன்..”
ஆக்ரோஷமாய் லலிதா சபிக்க காது கேளாதவர் போல் அமர்ந்திருந்த மனிதர் இன்னும் கொஞ்ச நேரமும் அதையே கடைபிடித்து இருக்கலாம்.. பாவம்..!!
“லலிம்மா எதுக்கு பிள்ளைங்க மேல எல்லாம் சாபம் கொடுக்கிற.. யார் தீனாவை பற்றி தப்பா சொன்னான்னு நமக்கு உறுதியா தெரியாத போது.. என் கூட பிறந்தவங்களை இதில் இழுக்கலாமா…”
என கூறி தானே வந்து தலையை கொடுத்தார். அவ்வளவு தான் லலிதாவிற்கு வந்ததே ஓர் கோபம்..!! கையில் வைத்திருந்த எதையோ தொம்மென்று போட்டு சேலை முந்தானையை எடுத்து சொருகி அவரிடம் வந்துவிட்டார் சண்டை போட..!!
“இம்புட்டு நடந்த அப்புறமும் இன்னும் பாசம் பொங்குதோ..?? தீனாவிற்கு அமைய இருந்த வாழ்க்கையையே கெடுத்துவிடுவாங்க.. ஆனால் பதிலுக்கு நான் வாய் திறந்து வார்த்தையால எதுவும் பேசினால் கூட குத்தமா..??? நல்லா இருக்குங்க உங்க நியாயம்..!!
பேசினது யாருன்னு வெத்தலைல மை
போட்டு வேற சொல்லனுமா..?? அதான் என் அக்கா மாமியார்,
“உன் புருஷன் வீட்டு ஆளுங்களே நல்ல விதமா சொல்லல.. நாங்க எந்த நம்பிக்கைல பொண்ணை கொடுப்போம்.. முறை பொண்ணுங்க அத்தனை இருக்கும் போது நீ உன் அக்கா சொந்ததில் எடுக்க நினைக்கும் போதே யோசிச்சு இருக்கணும்.. அக்காளும் தங்கச்சியுமா சேர்ந்து திட்டம் போட்டு ஏமாத்த பார்க்கறீங்களா..”னு நேரடியாய் நாக்கை பிடுங்கிக்கிறா மாதிரி என் கிட்ட கேட்டாங்களே.. எனக்கு நல்லது நினைக்க போய் என் அக்காவுக்கும் தலை இரக்கமா போயிருச்சு..
கண்டிப்பா நான் அவங்களை சும்மா விடமாட்டேன் பார்த்துக்கங்க.. அவங்களுக்கு பரிந்து பேசிக்கிட்டு வந்தீங்கன்னா பழையபடி அவங்க காலை சுத்தியே தாராளமா இருங்க.. ஆனா பொண்டாட்டின்னு என்னை தேடி வந்துடாதீங்க..”
என படபடவென லலிதா பொரிந்ததில்
லிங்கேஷ்வரனுக்கு தான் மூச்சு வாங்கியது.
“லலிதா.. போதும்..”
என அதட்டினாலும் அதற்கும் மேல் லலிதாவை கோபித்துக் கொள்ளவே முடியாது அவரால்.!!
புத்தி இல்லாதவன் போல் திரிந்த தன்னை முழு மனிதராய் மாற்றியது அவரது தர்மபத்தினி தானே..!! அதற்காக லலிதா பாடுப்பட்டவை கொஞ்சம் நஞ்சம் அல்ல..!! இன்று தன் குடும்பம் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு அவர் தானே காரணம்.. அந்த மரியாதை மனைவி மீது என்றுமே இருக்கும்.. லலிதா கூறினால் சரியாக இருக்கும் என உறுதியாய் இருப்பார்.
‘பொண்டாட்டி தாசன்..’ போல் அதற்கு ஏதேதோ அடைமொழி கொடுத்தபோதும் அவர் கண்டுக் கொள்ளவே மாட்டார். ஏனெனில் அவர்கள் யாரும் தனக்காக எதுவும் செய்ய போவது இல்லை என்ற உண்மையை உணர்ந்தவர்..
இருப்பினும் இரத்த சொந்தங்கள் மீது கொண்ட பாசம் எட்டி பார்க்க தான் செய்கிறது. இன்றும் அதே போல் மனம் பரிந்துக் கொண்டு வந்தாலும் மனைவியின் கோபத்தில் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட அதற்குள் இவர்கள் பஞ்சாயத்தை பொறுக்க மாட்டாமல் தன் அறையில் இருந்து வெளியே வந்தான் தீனா.
“இப்ப என்ன நடந்து போச்சுன்னு இவ்வளவு சண்டை.. மனுஷனுக்கு கொஞ்சமாவது நிம்மதி இருக்கா இந்த வீட்டில..”
கத்தவில்லை என்றாலும் அத்தனை கோபம் அவன் முகத்தில்..
சட்டென்று லலிதா கண்களில் கண்ணீர் வழிய,
“என்னை என்ன டா செய்ய சொல்ற.. இந்த மனுஷன் மட்டும் சரியா இருந்திருந்தால் நான் ஏன் கிடந்து கத்துறேன்.. இவிங்களோட இன்னும் எத்தனை காலம் தான் போராடுறது.. முடியல..”
என்று உடைந்து அழுகவும் தினகரனின் கோபம் பாலில் தெளித்த தண்ணீராய் சட்டென்று இறங்க,
“ம்மா..”
என அருகில் வந்து கையை பிடித்துக் கொள்ள மனைவியை பார்த்திருந்த மனிதரும் மௌனமாய் அமர்ந்துவிட்டார்.
“அழாதே ம்மா முதல்ல.. அப்பா என்ன செய்வார்.. அவரை குறை சொல்லி எந்த பயனும் இல்லை.. அதுங்க எல்லாம் ஒரு ஆளுன்னு அவங்களை நினைச்சு வருத்தப்படுற நீ..!! அவங்க அவங்க செய்யிற பாவம் அவங்க தலைல தான் விடியும்.. அதை விட்டு தள்ளு..
அந்த பொண்ணு வீட்டில் வேண்டாம்னு சொல்லிட்டால் என் வாழ்க்கையே கெட்டு போயிடுமா.. ஏன் நான் அவ்வளவு தாழ்ந்து போயிட்டேன் நினைக்கிறீங்களா..”
என்று அவன் கேட்க பதறியவராய்,
“என்ன டா நீ..” என்று ஆற்றாமையோடு சொல்ல,
“அப்புறம் நீங்க பேசுறது அப்படி தான் இருக்கு.. பத்தோட பதினொன்னா இந்த பொண்ணையும் நினைச்சுக்கோங்க.. கல்யாணம் மட்டும் வாழ்க்கை இல்ல ம்மா.. எனக்கு நிம்மதி தான் வேணும்.. ப்ளீஸ் கொஞ்ச நாள் அந்த பேச்சே எடுக்காதீங்க.. அப்படி அவசரமா உங்களுக்கு ஒரு கல்யாணம் பார்த்தே ஆகணும்னா.. தம்பிக்கு பாருங்க.. என்னை விட்டுடுங்க..”
என சொல்லிவிட்டு விடுவிடுவென அவன் மாடியேறி சென்றுவிட கணவனும் மனைவியும் போகும் அவனையே வருத்தமாய் நோக்கினர்.
நேராய் மொட்டை மாடி வந்து நிலவிடம் தஞ்சம் புகுந்த தீனாவின் மனம் இன்னமும் கோபத்தில் தான் தகித்தது.
‘பத்தோடு பதின்னொன்று’ என எளிதாய் சொல்லி விட்டாலும் இந்த முறையும் தடைப்பட்டு போன ஏமாற்றம்
ஊசியாய் தைத்தது.
இது சுந்தரமூர்த்தியால் தான் என உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியும்.. இருப்பினும் தன் பெற்றோரிடம் சொல்லும் எண்ணம் அவனுக்கு இல்லை.
இதனை அறிந்தால் நிச்சயம் லலிதா அவர் வீட்டிற்கே சென்று சுந்தரமூர்த்தியின் தந்தை சிவசுப்ரமணியமிடம் சாமியாடி விடுவார். தானாய் எடுத்து கொடுத்து இதனை அனைவர் வாயிற்கும் அவலாக்க விருப்பமில்லை.
“முன்பு பெரியப்பா.. இப்போ இவரா..! பெரிய மனுஷன்னு ஊர் உலகத்துக்கு முன்னால சால்வை போர்த்திக்கிறது.. ஆனால் செய்யுறது எல்லாமே சில்லறை தனம்..”
வேடதாரியாய் திரியும் தன் சொந்தங்களை நினைக்கவே வெறுப்பு மண்டியது. இவர்கள் தினகரனுக்கு இடைஞ்சல் தருவது இது முதல் முறை அல்ல..!! இவன் எப்படி வளர்கிறான் பார்க்கிறேன் என வஞ்சம் வைத்து செய்தனர்.
தொழில் தொடங்க முனைந்தபோது இந்த இடமும் கடையும் தினகரனுக்கு கிடைக்க கூடாது என லிங்க்கேஷ்வரனின் உடன் பிறந்த அண்ணன்கள் இருவரோடும் சேர்ந்து சுந்தரமூர்த்தியும் மறைமுகமாய் பல வழியில் முயன்றனர். எல்லாவற்றையும் முறியடித்து அதே இடத்தில் ஈகில் விஷனை வெற்றிகரமாய் நிறுவினான்.
அவனின் தமக்கை ஸ்வர்ணா திருமணத்தின் போதும் தந்தை வழி உறவுகளாய் எதிலுமே கலந்துக் கொள்ளவில்லை. எப்படியும் தன் மகள் திருமணத்தை நடத்திக் கொடுக்க வேண்டி தங்களிடம் தான் லிங்கேஷ்வரன் வந்து நிற்பார் என இறுமாப்போடு நினைத்திருந்தனர்.
ஆனால் திருமணத்திற்கு வந்து வாழ்த்திவிட்டு உண்டு சென்றால் போதும் என்பது போல் பத்திரிக்கை வைக்க மட்டுமே அவர் வந்து செல்ல பெரிய மூக்குடைப்பாய் ஆனது.
அடுத்து அவர்கள் குறியாய் தினகரனின் திருமணம்..! இரண்டு வருடங்களுக்கு முன் வரன் பார்க்க தொடங்கும் போது இவர்கள் கேட்கும் முன்னே லிங்கேஷ்வரனின் தங்கைகள் இருவரும் தானாக வந்து,
“நீ தப்பா எடுத்துக்காதே ண்ணா.. உன் கூட சம்பந்தம் வைச்சுகிட்டா பெரிய அண்ணன்களுக்கு பிடிக்காது.. அண்ணன்களை பகைச்சுகிட்டு நாங்க என்ன செய்யிறது.. தினகரனுக்கு வெளியவே நல்ல இடமா நாம பார்க்கலாம்..”
என நாசுக்காய் மறுத்துவிட்டனர்.
தீனாவும் அப்போது அதனை பெரியதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பின் பார்த்த ஒவ்வொரு சம்மந்தமும் தடைப்பட்டே போக திருமண செய்துக் கொள்ள இருந்த பற்றே விட்டு போயிற்று.. அதுவும் அங்கே இங்கே சுற்றி இறுதியாய் தன் தோற்றத்தில் வந்து நிற்பதே வெறுப்பாக,
‘ இது தான் நான்.. இப்படி தான் இருப்பேன்’ என்ற அலட்சியமும் வந்தது.
எல்லாவற்றையும் தன் நினைவடுக்கில் மீட்டு புரட்டிக் கொண்டிருந்தவன்,
என்று நேர்மறையாய் தனக்கே சொல்லிக் கொள்ள மனநிலையை கொஞ்ச கொஞ்சமாய் அந்த நிலவின் அமைதியை தத்தெடுத்தது.
எத்தனை நிமிடங்கள் அப்படியே நின்றானோ ஸ்வர்ணாவிடம் இருந்து வந்த அழைப்பே அவனின் மௌன நிலையை கலைத்தது.
அவனின் மனநிலை ஓரளவு தெளிந்திருக்க வெகு நாட்களுக்கு பிறகு தமக்கை தானாக அழைக்கவும் ஏற்று,
“சொல்லு க்கா.. எப்படி இருக்க.. வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா..”
மகிழ்ச்சியுடனே நலம் விசாரிக்க மறுமுனையில்,
“நல்லா இருக்கோம்டா.. நீ எப்படி இருக்க..” என்ற ஸ்வர்ணா பின்,
தீனா.. அக்கா மேல வருத்தமா இருக்கீயா டா..”
குரல் இறங்கி ஒலிக்க பாவமாய் கேட்டாள்.
“ஏன்.. எதுக்கு திடீர்னு இப்படி கேட்கிற க்கா..”
“உனக்கு நான் எதுவுமே பண்ணலயே தீனா.. உன் வாழ்க்கைல இப்ப என்னனென்னமோ நடக்குது.. உனக்கு அக்காவா இருந்து நான் என்ன செஞ்சேன்.. எதிலுமே கலந்துக்காம யாரோ மாதிரி உட்கார்ந்து இருக்கேன்.. தப்பு தானே அது.. ஸாரி டா..”
தவறு செய்து விட்டவள் போல் மிகுந்த கவலையோடு வெளிப்பட்ட தமக்கையின் பேச்சில் குழம்பி,
“உனக்கு என்ன ஆச்சு இப்ப..? லூசு மாதிரி நீயா எதாவது கற்பனை பண்ணிட்டு மனச உளப்பிக்காத க்கா..”
என்றவன் பின் சட்டென்று புரிந்துக் கொண்டு,
“அம்மா ஃபோன் பண்ணாங்களாக்கும்..”
என்று கேட்க, “ஆமா டா.. சாயிங்காலம் பேசினாங்க..” என்று சொல்லவும் நெற்றியை தேய்த்து “நினைச்சேன்..” என முணுமுணுத்தான்.
“பெரிம்மாவோட மாமியார் அம்மாவை ரொம்ப பேசிட்டாங்களாம்.. சொல்லி ரொம்ப வருத்தபட்டாங்க.. நானும் உன் மேல அக்கறையே இல்லாமல் ‘நான் உண்டு.. என் குடும்பம் உண்டு’னு சுயநலமா இருந்துகிட்டேனாம்.. என்னை பேச கூட விடல.. அவ்வளவு வசவு..”
என்றவளுக்கு இப்பவும் அவை காதில் ஒலிப்பது போல் இருந்தது. அப்படி தான் பிடித்து நன்றாக வாங்கியிருந்தார் லலிதா.
“உனக்கு ஒரு அண்ணன் மாதிரி இருந்து அத்தனையும் பார்த்து பார்த்து செஞ்சான்டி அவன்.. அந்த பாசம் கொஞ்சம் கூட உனக்கு தெரியல தானே.. இல்லைனா இப்படி எனக்கென்ன வந்ததுன்னு இருப்பியா..?? நீ என்ன சின்ன பிள்ளையா..? ஒரு அக்காவா உனக்கே மனசுல இதெல்லாம் தோண வேண்டாமா..”
என ஆரம்பித்து பொழிந்த வசவு மழையில் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
ஸ்வர்ணா லிங்கேஷ்வரனை போலவே வெகுளி..!! வெளியுலக ஞானம் இன்றி
வீட்டு புறாவாகவே வளர்ந்தவள். இப்போது இடம் மட்டும் மாறியிருக்க இந்த சில வருட திருமண வாழ்வில் அவளின் குண இயல்பில் பெரிதாய் மாற்றம் இல்லை. யாராவது எடுத்து கூறினால் அதை அப்படியே அழகாய் செய்வாள். ஆனால் தானாக அதனை சிந்தித்து செயல்பட தெரியாது.
அவளை மாற்ற முயன்று புரண்டு ஒன்றும் முடியாமல் அவள் போக்கிலே லலிதாவும் விட்டுவிட்டார்.
அன்னை பேசியதையே நினைத்து நினைத்து மனம் கேட்காமல் இப்பொழுது தம்பிக்கு அழைத்து இருந்தாள்.
“எனக்கும் ஆசை இல்லாம இருக்குமா டா.. ஆனா என்ன செய்ய.. இங்க என் நிலைமை தெரியும் தானே.. ஏற்கெனவே இன்னும் பிள்ளை இல்லைனு இஷ்டத்திற்கு என்னை ஆட்டி படைக்கிறாங்க.. இதை சமாளிக்கவே எனக்கு சரியா இருக்கு.. நான் வேற என்ன தான் செய்வேன்.. அம்மா நான் பேசுறதையே கேட்கல..”
விட்டால் மறுபடியும் அழுது விடுபவள் போல் ஸ்வர்ணா பேசவும் அந்த தமையனான தம்பிக்கு மனதே பொறுக்கவில்லை.
“அக்கா எனக்கு உன்னை தெரியாதா..? இல்லை உன் பாசம் தான் தெரியாதா..?? இதெல்லாம் செஞ்சு தான் நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல..
அம்மா பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்காத.. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி கூட அப்பாவை அவ்வளவு திட்டு..!! ம்ஹும்.. அவங்க ஆசை நிறைவேறாத ஆதங்கம் அவங்களுக்கு.. அதனால தான் எல்லார் மேலயும் கோபம்..!! நம்மை விட்டால் வேற யாருகிட்ட அவங்க ஆதங்கத்தை காட்ட முடியும்.. கண்டுக்காம விட்டுடு..”
என்று ஆறுதல் கூறியவன் பின்,
“உன் மாமியார் வீட்ல என்ன தான் நடக்குது.. டாக்டர் தான் இரண்டு பேருக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல.. காத்திருங்கன்னு தெளிவா சொல்லிட்டாங்க தானே.. இன்னமும் உன்னை ஏன் குடையுறாங்க.. நீயும் அந்நியாத்திருக்கு பயப்படாத க்கா..
அதான் உன்னை நல்லா பயன் படுத்திகிறாங்க.. தைரியமா பேசு.. இல்ல நான் வந்து பேசிக்கிறேன்..”
அழுத்தமாய் சொல்ல அவன் வந்து எப்படி பேசுவான் என அறிந்தவளாய்,
“ஹான்.. மறுபடியுமா.. வேண்டாம் டா.. நானே பார்த்துகிறேன்.. அதான் உன் மாமா என் பக்கம் தானே இருக்கார்.. நான் சமாளிச்சுடுவேன்..” என்று அவசரமாய் கூறினாள்.
“நீ என்னைக்கு மாமாவை விட்டுக் கொடுத்து இருக்க..?? உன்னால தான் அமைதியா இருக்கேன்.. இல்லைனா இந்த தீனா யாருன்னு தெரிஞ்சு இருக்கும்.”
“அவங்களுக்கும் தெரியும்டா.. நீ போன தடவை வந்து பேசிய பேச்சிற்கே இன்னும் எஃபக்ட் இருக்கு.. அதனா முன்ன மாதிரி ரொம்ப எல்லாம் இல்ல நீ கவலை படாத..”