சென்னையில் மிகவும் பிரசித்தப் பெற்ற அந்த ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் சைவ அசைவ பாகுபாடின்றி அந்த ஐவர் குழு ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க கரிகாலன் மட்டும் உணவில் கவனம் இன்றி தன் திறன்பேசியை எடுப்பதும் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தான்.
சில நிமிடங்களில் அவனை கவனித்த நண்பன் அருள்,
“டேய்.. என்ன டா..?? அதை வைச்சுட்டு ஒழுங்கா சாப்பிடுற வழியை தான் பாறேன்..”
என்று சொல்ல அப்போதும் ஃபோனில் கவனம் வைத்தபடியே,
“எனக்கு போதும் டா.. ஒரு வேலை இருக்கு.. நீங்க சாப்பிடுங்க.. நான் வந்திடுறேன்..”
என்றவன் தன் கார்ட்டை எடுத்து பக்கத்தில் இருந்தவன் கையில் கொடுத்து,
“இந்தா.. நான் வர தாமதம் ஆகிடுச்சுன்னா.. ப்பே பண்ணிட்டு கிளம்பிடுங்க..”
என்று சொல்லி எழும்ப மற்றவர்கள் அவனை ஆச்சரியமாக தான் பார்த்தனர்.
“டேய்.. கொடை வள்ளலே.. எப்படி டா.. உன்னால மட்டும் முடியுது.. நீ கிளம்பவும் எங்க ட்ரீட்ன்னு சொல்லிட்டு பில்லை எங்களை கட்ட வைச்சுடுவியோன்னு பக்குனு ஆகிடுச்சு..”
என்று அருள் சொல்ல,
“அடச்சை.. நல்ல எண்ணம் உனக்கு.. என்னை என்ன உன் கேஸ்ன்னு நினைச்சியா..?”
என கரிகாலன் முறைக்கவும்,
“அவன் கேட்கிறது நியாயம் தானே.. நம்மில் நல்லா சம்பாதிக்கிற ரெண்டே பேர் ப்ரசாத்தும் விக்கியும் தான்.. கொரோனால அவன்களே பஞ்ச பாட்டு தான் பாடுறானுங்க.. உனக்கு வேலை போய் ஒரு வருஷம் ஆச்சு.. அப்படி இருந்தும் உன் கையில் மட்டும் பணம் புரளுதே.. எப்படி.. டேய் காலா.. உண்மையை சொல்லுடா.. நீ யாரு.. மும்பையில் இதுக்கு முன்னாடி என்னவா இருந்த..”
என ஏக வசனத்தில் சந்தேகம் கேட்டு குறுகுறுவென பார்க்க,
“அடப்பாவி.. உயிர் நண்பன்களுக்கு ஒரு வேளை சோறு போடணும்னு நினைச்சது ஒரு குத்தமாடா..!! விட்டால் நக்சல், அல்கொய்த்தா கேங்ல நீங்களே என்னை சேர்த்து விட்டுட்டுவீங்க.. இனி எதுவும் நான் செய்யல.. ஆளை விடுங்க சாமி..”
என கையெடுத்து கும்பிடவும்,
“டேய்… டேய்.. பேசி பேசி இவனை கெடுத்து விட்டுடாதீங்க டா.. நமக்கு சோறு முக்கியம்.. அது எப்படி வந்தால் என்ன.. காலா நீ போயிட்டு வா மச்சான்.. டேய் நீங்க மூடிட்டு சாப்பிடுங்க..”
என்று விக்கி முடித்து வைக்க சிரிப்போடு அங்கிருந்து ஓய்வறை அருகே வாஷ்பேஷனில் கையை கழுவிட்டு நிதானமாய் தன் முககவசத்தையும் கூலர்ஸும் அணிந்து கண்ணாடியில் தன் முகத்தை அழகு பார்க்க கரிகாலனின் பிம்பம் அருகே மற்றோரு பெண்ணின் முகம் தெரிந்தது.
தன் பின்னால் நின்ற பெண்ணை கண்ணாடியில் பார்த்து கையசைத்து,
“ஹாய் பேபி.. இப்ப தான் வரீயா..”
என கேஷ்வலாய் கேட்க செந்நிறமாய் மாறிவிட்ட கண்களும் துடிக்கும் உதடுகளும் என தோளில் மாட்டியிருந்த கைப்பையை இறுக்கி பிடித்து ரௌத்திரமாய் நின்றிருந்த அப்பெண்,
“பொறுக்கி.. பொறுக்கி..”
என அவனை சரமாரியாய் அடிக்க அசைந்தே கொடுக்காமல் நின்றான் கரிகாலன். தற்போது ஆட்களே இல்லாத அவ்விடத்தில் இக்காட்சி யார் கண்களிலும் சிக்கவில்லை.
சில நிமிடங்களுக்கு பின் எளிதாய் அவள் கையை தடுத்து பிடித்து,
“போதும்.. அவ்வளவு தான்.. கோபம் தீர்ந்ததுல.. கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு கிளம்பு..”
என சொல்ல அவனை புழுவாய் அருவெறுத்து பார்த்தவள்,
“ச்சை.. மனுஷனா நீ.. உன்னை எல்லாம் நம்பி லவ் பண்ணேன் பார்..
என்னை தான் செருப்பால அடிக்கணும்..”
என்று சொல்ல வெடித்து சிரித்தவன்,
“நீ லவ் பண்ணியா..?? காமெடி பண்ணாதே..!! நீ என்னை யூஸ் பண்ணிக்க நினைச்ச.. நான் முந்திக்கிட்டேன்.. அவ்வளவு தான்..”
என அலட்சியமாய் தோளை குலுக்கி சொல்லிய மறுவினாடி அவள் கையை முதுகின் பின்னே முறுக்கி,
“தேவையில்லாம பேசி.. நேரத்தை வீணாக்காத…”
என மிரட்ட வலியில் கண்ணீர் வழிந்தது.
“பேசல.. ப்ளீஸ்.. கையை விடு..”
என்று வலியோடு சொல்ல
அவன் கையை விட்டதும் வேகமாய் கைபையில் இருந்து இரண்டு கட்டு பணத்தை எடுத்து அவன் மேல் விட்டெறிந்தாள்.
கூச்சமே இன்றி அதனை இலாவகமாய் பிடித்து கண்களாலே அதனை ஸ்கேன் செய்துவிட்டு,
“பக்கா பேபி..” என கட்டை விரலை
தூக்கி காட்டியவன் அப்படியே விரல்களை சுழற்றி அதில் ஊதி,
“எல்லாம் க்ளியர்.. இனி உனக்கு டென்ஷன் இல்ல… கிளம்பு..”
என சிரிக்க அவன் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் வேகமாய் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
கரிகாலனும் அவளை கண்டுக்கொள்ளாது தன் பேண்ட் பாக்கெட்டில் பணத்தை திணித்தவன் விசிலடித்தபடி மீண்டும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து முடியை சரி செய்ய அவனின் திறன்பேசி சிணுங்கியது.
‘Uni_k_princess’ பெயரை தாங்கி வந்திருந்த செய்தியை கண்டதும் நேரம் பார்க்க அது அவளின் கல்லூரி நேரம் என தெரியும்..!!
“ஹே.. உனக்கு இப்போ க்ளாஸ் இல்லையா..”
என பதில் கேள்வியை அனுப்ப,
“க்ளாஸ் நடந்துட்டு தான் இருக்கு.. ஆனால் உங்க இன்டெர்வியூ என்னாச்சுன்னு தெரியாமல் என்னால கான்சன்ரேட் பண்ண முடியல.. அதான் பேக் உள்ள ஃபோனை வைச்சு யாருக்கும் தெரியாம டெக்ஸ்ட் பண்றேன்..”
என்று அவள் அனுப்பியதில் அவன் இதழில் நையாண்டியாய் ஓர் சிரிப்பு..!!
அதற்கு நேர்மாறாய்,
“எனக்கு வேலை இந்த தடவையும் கிடைக்கல.. ப்ளீஸ் மா.. என்னை நினைச்சு வருந்தாமல் படிப்பில் கவனம் வை.. நீ என் மேல வைச்சு இருக்க அன்பை நினைச்சால் ஐ ஃபீல் எமோஷனல்.. என் அம்மா கூட என்னை இப்படி நினைக்கல..”
என உருக்கமாய் சொல்லியதில் மறுப்பக்கம் அப்பெண் நிச்சயம் ராக்கெட் இல்லாமலே விண்வெளியை தொட்டு இருப்பாள்.
“நீங்க ஃபீல் பண்ணாதீங்க கே.கே..!! என் அன்பு உங்களை சுற்றி எப்பவும் இருக்கும்..!! இதைவிட ஒரு நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும் பாருங்க..”
“தேங்க்ஸ்டா மா.. சரி.. நீ க்ளாஸ் பார் நான் நைட் பேசுறேன்..”
என்று பேச்சை முடித்து திறன்பேசியை ஷர்ட் பாக்கெட்டில் போட்டவன் எதுவுமே நடவாததுபோல் வெகு இயல்பாய் அங்கிருந்து வெளியேறினான்.
**
அன்றைய காலை பொழுதினில் சுந்தரமூர்த்தியின் வீடு அமளிதுமளியாகி இருக்க அவற்றை எதையும் கண்டுக் கொள்ளாது தன் காலை சிற்றுண்டியோடு தொலைக்காட்சி முன் சம்மணமிட்டு அமர்ந்து இருந்தாள் கமலினி.
புதிதாய் வெளியாகி இருந்த ஓர் நகைச்சுவை படம் ஓடிக் கொண்டிருக்க அதில் மும்முரமாய் இருந்தவளை,
“ஏய் கமல்..” “கமலு..” “டி ஜிமிக்கி கம்மல்..”
என விதவிதமான ‘செல்ல’ பெயர்கள் கொண்டு கொல்லைபுறத்தில் இருந்து ஒரு கும்பல் அழைக்க பல்லை கடித்து,
“என்னங்க டி.. கம்மலு, தோடுன்னீங்க வந்து வாயிலே மிதிப்பேன்..”
என்று சத்தமாய் திட்டினாள். அதற்கும் அசராது,
“மிதிப்ப.. மிதிப்ப.. முதல்ல இங்க வா.. எங்களுக்கு ஒரு கை குறையுது..”
என்று மீண்டும் சத்தம் வரவும்,
“ஹையோ.. இந்த எருமைங்க இம்சை தாங்க முடியலையே.. எல்லாம் இந்த பாட்டியை சொல்லணும்..”
என நொந்தவளாய் தலையில் அடித்துக் கொண்டாள்.
“அவ சாப்பிட்டு வருவா வைஷு..”
கமலினியின் அன்னை அம்பிகா அங்கே வந்தவராய் அவளுக்கு பதில் சொல்லவே,
“சரிங்க அத்தை.. சீக்கிரம் வர சொல்லுங்க…”
என்று அவளும் கூற அவசரமாய் குறுகிட்ட கமலினி,
“ம்மா உங்கிட்ட சொன்னேனா..” என பாய்ந்துவிட்டு வைஷுவிடம்,
“ஏய்.. எனக்கு வேலை இருக்கு.. நான் கடைக்கு போறேன்.. ஆள் பத்தலைனா உங்க அத்தையையே கூப்பிட்டுக்கோங்க..”
என்றாள் சத்தமாய்…
மீண்டும் உணவில் கவனமான மகளை முறைத்த அம்பிகா,
“என்ன கமலி.. எல்லாரும் வந்து இருக்காங்கன்னு தானே அப்பா உன்னை இருக்க சொல்லிட்டு போனாங்க.. மறுபடியும் கிளம்புறேன்னு சொல்ற.. பசங்க ஆசை படுறாங்கல்ல..”
என்று சொல்ல,
“ம்மா.. உனக்கு தெரியாதா… அந்த நாலு பிசாசும் சேந்தாளுங்கனா.. என் தலையை தான் உருட்டுங்க.. ஆளை விடு..”
என்று அவள் அலறாத குறையாய் கூறினாள். அதற்கும் அசாராமல் அம்பிகா,
“பரவாயில்ல.. ஓடி ஆடி விளையாண்டாளாவது உடம்பு குறையும்.. நீ இப்படி உட்கார்ந்தே இருந்து தான் யானை குட்டி மாதிரி வந்து இருக்க..”
என கடிந்துக் கொள்ள வாயில் வைத்திருந்த உணவை மெல்ல விழுங்கிவிட்டு,
“என்னோட உடம்பு ஜெனிடிக்கலா வந்ததுன்னு டாக்டர் சொல்லி இருந்தாங்க.. அதாவது நான் பாட்டியையும் அத்தையையும் தொடர்ந்து அவங்களை மாதிரி வந்து இருக்கேன்.. அப்போ சும்மாவே உட்கார்ந்து இருந்து யானை குட்டி மாதிரி வந்து இருக்கேன்னு சொன்னது என்னையா.. இல்ல என் பாட்டியையும் அத்தையையுமா ம்மா…”
என்று அப்பாவி குழந்தைப் போல் கமலினி கேட்க அதில் பதட்டம் கொண்டவராய் திரும்பி உள்ளே பார்த்தார். பின்னே அவரது மாமியாரும் நாத்தனாரும் அங்கே தானே இருக்கிறார்கள்..!
“உன்கிட்ட வாயை கொடுத்ததுக்கு எனக்கு தேவை தான்.. ஆளை விடுடி..”
என்று கூறி நகர்ந்தவர் அந்நேரம் காலிங் பெல் சத்தம் கேட்கவும் இங்கிருந்தே வெளி வாசலை பார்க்க திறந்திருந்த கதவின் அருகில் நின்றிருந்தான் ஆதவன்.
“ஆதவா… வாப்பா.. உள்ள வா..”
என்றபடி கூடத்திற்கும் வாசல் கதவிற்கும் இடையில் இருந்த நீள நடைப்பாதையை கடந்து அவன் அருகில் வந்து அம்பிகா வரவேற்க அவனும் செருப்பை வெளியே விட்டுவிட்டு உள்ளே நுழைந்தான்.
“என்ன நீ.. வேத்தாளு மாதிரி வெளியேவே நிற்கிற.. உள்ள வர்றதுக்கு என்ன..”
என்று அவர் கோபித்துக் கொள்ளவும்,
‘உங்க வீட்டுகாரர் இருந்தால்.. அப்படியே எஸ்கெப் ஆக தான்..’ என ஓடிய சிந்தனையை புறம் தள்ளி ஒரு அசட்டு புன்னகையை சிந்தியவன்,
“பாட்டி இப்போ எப்படி இருக்காங்க.. கண் முழிச்சிட்டாங்களா..?”
என விசாரிக்க அவரோ,
“அத்தைக்கு என்ன.. நல்லா இருக்காங்களே…” என சொல்லிவிட்டு செல்லவும் இவன் குழப்பமடைந்தான்.