“ஷ்ஷ்.. ரிலாக்ஸ் கமலி.. நீ ஏன் பதட்டம் ஆகுற.. சர் பேசினதை நீ கேட்கலையா..” என சொல்ல,
“அதனால தான் பதட்டமா இருக்கு.. கரிகாலனை அவ பார்க்கவே கூடாதுன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்.. என்ன செய்ய போறாங்க தீனா..”
என அலைப்புறுதலோடு பார்த்தாள். அந்த பொறுக்கியை வாழ்க்கையில் இனி எப்போதும் அனன்யா சந்திக்கவே கூடாது என்பது தான் அவளின் எண்ணமாக இருந்தது.
“அவன் இருக்கிறது லாக்கப்ல..!! அனு கூட போறது இன்ஸ்பெக்டர்..!! இதில் நீ டென்ஷன் ஆக அவசியமே இல்ல கமலி..” என்றவன்,
“விடேன்.. கடைசியா அனு ஒரு தரமான குட் பை சொல்லட்டும்..” என கண்ணடிக்க,
“ஏங்க நீங்க வேற..” என்றாள் பதட்டம் குறையாமல்.. தங்கை வரும்வரையில் அவள் சரியாக மாட்டாள் என அவனுக்கும் புரிந்தது.
அழகிரியை தொடர்ந்து வந்த அனன்யாவின் கால்கள் ஒன்றோடு ஒன்று பின்னியது.
உள்ளுக்குள் பயம் அலையலையாய் தாக்கினாலும் முயன்று துணிவை இழுத்து பிடித்தாள்.
வரிசையாக இருந்த சிறைகளில் கடைசி அறையின் அருகில் வந்து நின்றவர் அனன்யாவிடம் திரும்பி,
“மத்தவங்களை விட பாதிக்கப்பட்ட உங்களுக்கு தான் கோபமும் கொந்தளிப்பும் அதிகமா இருக்கும்.. ஆனால் அதை காட்ட சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்ல.. இன்னைக்கு உங்களுக்கு நான் அந்த வாய்ப்பை தரேன் அனன்யா.. அவனால வாழ்க்கையை தொலைச்ச எல்லா பெண்களோட பிம்பமாக இப்போ நீ நிக்கிற.. உன் மனசுக்கு அவனை என்ன செய்யணும்னு தோணுதோ.. செய்யலாம்.. அதன் விளைவு என் பொறுப்பு..!! இந்தா..”
என கூறி அவள் கையில் இலத்தியை கொடுத்தவர் சிறையின் கதவை திறந்துவிட தயக்கமாய் அதனை வாங்கியவளுக்கு நடந்தவை எல்லாம் மனக்கண்ணில் ஓட இலத்தியில் பிடி இறுகியது.
ஒரு முடிவுடன் இலத்தியை ஏந்தி உள்ளே செல்ல சற்று இருண்டு கிடந்த அறையின் ஓரத்தில் கைகளில் விலங்கிடப் பட்டு சுருண்டு கிடந்தான் கரிகாலன்.
காலடி ஓசையில் காவலர் தான் வருவதாய் எண்ணி தலையை திருப்பி பாரக்க அவனின் வசீகரமான தோற்றம் சிறை வசத்தால் வதைந்து நலிந்து இருந்தாலும் முகத்தில் கொஞ்சமும் தன் தவற்றை உணர்ந்த பாவம் இல்லை. இன்னமும் அதே அலட்சியம் தெரிக்க அனன்யாவிற்கு ஆக்ரோஷம் படமெடுத்து நின்றது.
காவலர் இல்லை நிற்பது அனன்யா தான் என இரண்டு மூன்று முறை கண்சிமிட்டி உறுதிப்படுத்திக் கொண்டவன் முகம் விகாரமாக,
“ஏய்.. ***** உன்னால தாண்டி எல்லாம்..!!”
என அவன் எழுந்தது தான் தெரியும் மறுவினாடி,
“டேய்..” என்ற பெருங்குரலோடு இலத்தியோடு பாய்ந்து விட்டாள் மங்கை..!!
கைகளில் விலங்கும் சரியாக உண்ணாத பயனால் எழுந்த பலவீனமும் அவனை சாய்க்க அவளை தடுக்க கூட முடியவில்லை. கண்மண் தெரியாமல் அவள் தாக்கியது உயிர் வதையை கொடுக்க ஒரு கட்டத்தில்,
“அனு.. விட்ருடி.. ப்ளீஸ்டி.. வலிக்குது.. என்னால முடியல.. சாரிடி.. என்னை விட்டுடு.. ப்ளீஸ் இனிமே நான் உன் பக்கமே வர மாட்டேன் டி.. நான் செஞ்ச எல்லாமே தப்பு தான.. அய்யோ வலி உயிர் போகுது டி..”
என மன்றாட ஆரம்பித்தான். அரைமணி நேரம் இடைவிடாது அடித்து துவம்சம் செய்ய இலத்தி முறிந்தே விட்டது. அத்தோடு நிறுத்தி அவனை நோக்க உயிர் பயத்தை அவன் கண்களில் பார்த்தபோது ஓர் குரூர திருப்தி..!!!
அவன் மேலே வீசி எறிந்தவள் இரத்தமாய் வீங்கி இருந்த முகத்தில் உமிழ்ந்துவிட்டு சரசரவென வெளியேறிவிட்டாள்.
அடித்த அவளின் கைகளே சுள்ளென்று வலிக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தள்ளாடி சுவற்றில் சாய்ந்து நின்றவள் உள்ளம் மட்டும் அத்தனை ஆசுவாசத்தை உணர்ந்தது.
“அனன்யா.. ஆர் யூ ஆலரைட்..?”
என்று வினவி அவளை அக்கறையாக பார்த்த அழகிரி அந்த நிமிடம் அவளுக்கு அருள் கொடுக்க வந்த சாமியாய் தெரிய கண் கலங்க கையெடுத்து கும்பிட்டாள்.
“இனி நிம்மதியா தூங்குவேன் சர்.. ரொம்ப நன்றி..”
என உணர்ச்சிகரமாய் சொல்ல,
“விடு ம்மா.. உன்னை விட ரெண்டு வயசு தான் சின்னவ என் பொண்ணு.. அவளுக்காக செஞ்சதா தான் நான் நினைக்கிறேன்..” என்றவர்,
“இங்கிருந்து போன அப்புறம் இவனுக்கு என்ன நடக்கும்..?? எப்படி இருப்பான்..? எதுவும் என் கையிலும் இல்ல.. என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. ஆனால் உன்னோட வாழ்க்கையில் இத்தோட இவன் அத்தியாயம் முடிஞ்சதுன்னு நினைச்சுக்கோ..”
என ஆழமாய் பார்த்து சொல்ல அவர் கூற வருவதன் அர்த்தம் விளங்கியது.
ஆம்..! நம் நாட்டில் எல்லா குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவது இல்லையே..!! விஷ்வரூபமாய் எழும் பல குற்றங்களின் முடிவு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போய் விடுகிறது. மறக்கடிக்கப்படுகிறது என்பதே கசப்பான உண்மை..!!
‘அதனை நீ எதிர்பார்க்காதே.. உன்னை பொறுத்த வரையில் இந்நொடியுடன் மறந்து விடு..’ என்பதே அவரின் கூற்றாக இருக்க அதனை புரிந்துக் கொண்டு,
“கரிகாலன் செத்துட்டான் சர்..” என தீர்க்கமாய் கூறினாள்.
“ரைட்.. நீங்க போகலாம் அனன்யா.. நல்லா படிங்க..”
என்று சொல்ல அவரிடம் விடைபெற்று அங்கிருந்து வந்தபோது அவளுக்காக வெளியே கமலினி, தினகரன், அனந்தராமன் மூவரும் காத்திருந்தனர்.
ஓடி வந்து அக்காவை கட்டிக் கொள்ள,
“ஷ்ஷ்.. ஓகே.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என சமாதானம் செய்தாள்.
அழகிரியுடன் இன்னும் சில விபரங்கள் பேசிவிட்டு அனந்தராமனும் கிளம்ப அனுவை அழைத்துக் கொண்டு இவர்களும் புறப்பட்டனர்.
காரில் செல்லும் வரையிலும் அனன்யாவிடம் கமலினி எதுவும் கேட்கவில்லை. அவள் தன்னை நிலை படுத்திக் கொள்ள அவகாசம் கொடுத்து அமைதியாகவே வர சற்று நேரத்தில் தீனா காரை ரெஸ்டாரெண்ட் ஒன்றில் நிறுத்தினான்.
“ஏதாவது சாப்பிட்டு போகலாம்..” என்று அவன் சொல்லவே,
“இல்ல.. வேணாம் மாமா.. வீட்டுக்கு போறோம்..” என்று அவசரமாய் கூற,
“அட.. நீ அடிச்ச அடிக்கு கண்டிப்பா கொலை பசி எடுக்கும்ன்னு தெரியும்… மெதுவா சாப்பிட்டு போகலாம்.. எந்த அவசரமும் இல்ல..!!”
என கூறியவன்,
“என்ன கமலி.. சொல்லு..”
என அவளை பார்க்க,
“போலாம் டி.. என்ன அவசரம்..!! வா…”
என நிதானமாக கதவை திறந்து விட்டு இறங்க சொல்லி தானும் இறங்கினாள்.