மாதவன் மீண்டும் பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்தான். அவனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்தது. அவனுடைய இந்த மாற்றத்தை இன்னமும் சாந்தாவல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு இப்பொதும் மங்கையின் குடும்பத்தை ஆவதில்லை. மாதவனின் மாற்றத்திற்கு பின்னால் ஒரு கதை இருந்தது.
அந்த ஊரில் அன்றைய இரவு, அன்பிற்கு ஒரு புது வித அனுபவம் தான். சங்கீதா கல்யாணத்தின் போது கூட, அன்பு அங்கே தங்கவில்லை. திருமணம் மதுரையில் நடந்ததால், எல்லாம் மண்டபத்திலேயே தங்கிக் கொண்டனர். அவளைத் திருமணம் முடித்துக் கொடுத்ததில் இருந்து இப்போது தான், அங்கு தங்குகிறான்.
“ஊர் திருவிழா விஷயமா வெளிய போயிருக்கார். நைட் எந்நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துடுவார் அன்பு..!” என்றான் மாதவன்.
இருவரும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தனர்.
“உங்க ஊர் செம்மையா இருக்கு மாதவன். செம்ம கிளைமேட்.. திரும்பிப் பார்க்குற இடமெல்லாம் மரம் செடின்னு ஒரு மாதிரி நல்லா இருக்கு..” என்றான் அன்பு.
“எல்லாமே நல்லா இருக்கும். ஆனா, இங்கயே இருந்து பழகினவங்களுக்கு அது பெருசா தெரியாது. இதை விட்டு வெளியே போகும் போது தான் தெரியும், சொந்த ஊரோட அருமை..” என்றான் மாதவன். அவனுடைய பேச்சிலிருந்தே புரிந்து கொண்டான், அவனும் அப்படி நினைத்திருக்கிறான் என்று.
“சங்கீதாவுக்கும், உங்களுக்கும் ஏன் ஒரு ஒட்டுதலே இல்லை. நான் பார்த்த வரைக்கும் அவளுக்கு செய்ற எல்லாமே செய்றிங்க. ஆனா, அதையும் மீறிய ஒரு பாசம் தெரியலையே ஏன்..?” என்றான் மாதவன்.
அவனின் கேள்விக்கு அன்புவின் சிரிப்பு தான் முதல் பதில். அந்த சிரிப்பில் அன்பு இன்னமும் கொஞ்சம் அழகனாய் தெரிய,
“பதில் சொல்லலை நீங்க..” என்றான் மீண்டும்.
“அப்படியெல்லாம் இல்லை மாதவன். சங்கியை எனக்குப் பிடிக்கும். ஆனா, என்னவோ தெரியலை வளர வளர அவ எண்ணங்கள் கொஞ்சம் மாற ஆரம்பிச்சது. எல்லாரும் சரின்னு நான் சொல்ல வரலை. ஆனா, நான் எதுலையும் சரியா இருக்கனும்ன்னு நினைப்பேன். ஒருவேளை அதனால கூட உங்களுக்கு அப்படி தோணலாம்..” என்றான் அன்புச்செழியன்.
“இப்ப கூட சரியான பதிலை சொல்லாம, மழுப்புறிங்களே..” என்றான் மாதவன்.
“அது நல்லா இருக்காது மாதவன்.. அப்பறம் என் தங்கச்சியை நானே விட்டுக் கொடுத்த மாதிரி ஆகிடும்..” என்றான் அன்பு.
“நேத்து வரைக்கும் கல்யாணத்தை பத்தின ஒரு எண்ணம் இருந்தது. ஆனா, இன்னைக்கு அப்படி இல்லை. எனக்குள்ள சில குழப்பங்கள் இருக்கு. அதை தீர்த்து, நான் தெளிஞ்சா தான் கல்யாணம் பண்ணுவேன்..!” என்றான் அன்பு.
“யாரையாவது லவ் பண்றிங்களா..?” என்றான்.
“சரியா தெரியலை..” என்று அன்பு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காதம்பரியின் குரல் கேட்க, இருவரும் சென்று விட்டனர். மாதவன் கேட்க நினைத்த கேள்விகள் மட்டும் அப்படியே இருந்தது.
அங்கே இசையின் வீட்டில், அகரன் அனைவரையும் தன்னுடைய பேச்சால் கட்டி இழுத்துக் கொண்டிருந்தான். அவனை விட்டு இம்மியும் நகரவில்லை மாறனும், கயலும்.
“இப்படி சந்தோஷமாய் சிரித்து பேசி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது..” என்று எண்ணியவளுக்கு பெருமூச்சு தான் வந்தது. மங்கை இவர்களைப் பார்த்தும் பார்க்காதவரைப் போல் இருந்து இசையின் சந்தோஷத்தை தனக்குள் பதிய வைத்துக் கொண்டார்.
“அக்கா..! நீ போய் தான் ஆகணுமா..? பேசாம இங்கயே இருந்திடேன்..” என்றான் மாறன் மீண்டும் ஏக்கமாக. அவனைப் பார்த்த ரோகிணிக்கு கூட பாவமாய் இருந்தது.
“அங்க அன்பு சார், என்னை நம்பி நிறைய பொறுப்பு குடுத்திருக்கார் மாறா. அப்படி திடீர்ன்னு எல்லாம் வேலையை விட முடியாது. அது மட்டுமில்லாம, கண்டிப்பா என்னால இங்க இருக்க முடியாது. காரணம் என்னன்னு உனக்கே தெரியும் தான..” என்றாள் இசை. அதற்கு மேல் அவர்களும் வற்புறுத்தவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து, அவளைப் பார்த்ததே பெரிய விஷயம் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டனர்.
அவர்களும் பழைய விஷயங்களைப் பற்றி பேசவில்லை. இசையும் அதைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவள் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறாள் என்று ரோகிணியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
“ஆனா ரோகிணி.. மாதவன் இப்படி பொறுப்பா மாறுவான்னு நான் நினைச்சு கூட பார்க்கலை..” என்றாள் இசை.
“உன்னோட விஷயத்துல இருந்து கூட திருந்தியிருக்கலாம் இசை. அடிப்படையில் மாதவன் கெட்டவர் கிடையாது. அவங்கம்மா போதனையில் உங்களைப் பிடிக்காம போயிருந்திருக்கும். ஆனா, வளர்த்த பாசம் இருக்குமில்ல ..” என்று ரோகிணி சொல்ல, அதுவும் சரிதான் என்று தோன்றியது இசைக்கு.
நான்கு வருடங்களுக்குப் பிறகு, மங்கையின் கையால் சமைத்த உணவு. கலங்கிய கண்களை வெளியே காட்டாமல், அமைதியாக சாப்பிட்டாள் இசை.
“அக்கா..! அம்மா கூட பேசேன்..” என்றான் மாறன்.
“பெத்த பொண்ணுகிட்ட எவ்வளவு ஈகோ அவங்களுக்கு. நான் என்னமோ தப்பு பண்ண மாதிரி… நியாயத்துக்கு நான் தான் கோபப்படனும். ஆனா, என் மனசு மரத்துப் போய் பல நாள் ஆச்சு. அவங்கவங்க பங்குக்கு என்ன செய்யணுமோ, எல்லாம் நல்லா பண்ணிட்டாங்க..! இனி பண்ண ஒண்ணுமில்லை..” என்றாள் விரக்தியுடன். அவள் பேசுவதை அடுப்படியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மங்கைக்கு, மகளின் நிலை கண்டு வேதனை நெஞ்சை அடைத்தது.
அவளின் வேதனைக்கும், இந்த நிலைமைக்கும் அவரும் ஒரு காரணம் என்பதால் தான் அமைதியாக இருக்கிறார் மங்கை.
இசை வந்ததில் இருந்து அவளுடைய அறைக்கு செல்லவே இல்லை. அந்த அறைக்கு செல்லவே அவளுக்கு அப்படி ஒரு பயமாக இருந்தது. தம்பி, தங்கைகளுக்கு நடுவில் அகரனை படுக்க வைத்துவிட்டு படுத்தவளுக்கு, தூக்கம் என்பது துளியும் இல்லை. அவள் நினைக்கக் கூடாது என்று நினைத்திருந்த அனைத்து விஷயங்களும் அவள் கண் முன்னால் வந்தது.
செல்வியின் கழுத்தில் தாலி கட்டி முடித்தவுடன் கதிர், பிறந்த வீட்டு சீதனம் எதுவும் வேண்டாம் என்று சொன்னவுடன் ராஜாங்கத்திற்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
“எந்த சீரும் வேண்டாம்ன்னா என்ன அர்த்தம் மாப்பிள்ளை..?” என்று ராஜாங்கம் கோபமாக கேட்க,
“எதுவும் எனக்குத் தேவையில்லைன்னு அர்த்தம். அவளுக்கு என்ன தேவையோ, அதை வாங்கிக் குடுக்கத் தான் நான் இருக்கேனே..?” என்றான் கதிர்.
“எங்க சீதனம் வேண்டாம்.. ஆனா எங்க பொண்ணு மட்டும் வேணுமா..?” என்றார் அவர்.
“இத்தனை நாளும் நான் அப்படி சொல்லலியே மாமா..! என்னை இப்படி பேச வச்சது நீங்க தான். அமுதா பண்ண தப்புக்கு என்னை எதுக்கு குற்றவாளி ஆக்கி நிக்க வச்சிங்க. அப்படியே அவ ஓடிப் போறது தெரிஞ்சிருந்து, அதை நான் உங்ககிட்ட சொல்லாமலேயே விட்டிருந்தாலும், அதுல தப்பென்ன இருக்கு. மத்தவங்க விஷயத்துல நான் எப்படி தலையிட முடியும்…”என்றான் கதிர்.
“சாந்தா அப்படி பேசுனது தப்புத்தான் மாப்பிள்ளை. அதுக்காக நீங்களும் இப்படி சீர் வேணாம், எதுவும் வேணாம்ன்னு சொன்னா, ஊருக்குள்ள நாலு பேர் என்ன பேசமாட்டங்க… அமுதா ஏற்கனவே எங்க நிம்மதியைக் கெடுத்துட்டு போய்ட்டா. நீங்களும் உங்க பங்குக்கு எங்களை நோகடிக்காதிங்க..” என்றார் ராஜாங்கம்.
“உங்களை வேதனைப் பட வைக்கணும்ன்னு நினைச்சு நான் இதை சொல்லலை. அதே சமயம் எனக்கும் தன்மானம் இருக்கு. அவங்க எது பேசுனாலும் சரின்னு சொல்லிட்டு போக, நான் ஒன்னும் நீங்க கிடையாது பாருங்க..” என்றான்.
கதிர் பேசியதோடு மட்டும் விடவில்லை, செல்வியை எந்த பொருளையும் வாங்கிக் கொண்டு வர அனுமதிக்கவில்லை. செல்விக்கு என்ன செய்வதென்றே தெரியாவில்லை. அவள் குழப்பத்துடன் மங்கையின் முகத்தைப் பார்க்க,
“நீ கதிர் கூடவே போ..!” என்ற செய்தி தான் ஒளிந்திருந்தது.
மங்கையே சம்மதம் கொடுத்த பிறகு செல்வி மற்ற யாரையும் என்ன கேட்கப் போகிறாள்..? யாரையும் சட்டை செய்யாமல், கதிருடன் சென்று விட்டாள்.
“ஒருத்தி என் மானத்தை வாங்கிட்டு போய்ட்டா. இன்னொருத்தி, பெத்த தகப்பன் குத்துக்கல்லாட்டம் நின்னுட்டு இருக்கேன். சட்டை செய்யாம புருஷன் கூட போய்ட்டா. எதுக்குமே இங்க எனக்கு மதிப்பில்லை. அந்த லட்சணத்துல பொண்ணுங்களை வளர்த்து வச்சிருக்கிங்க..?” என்று காரணமே இல்லாமல் கத்தத் தொடங்கினார்.
மங்கைக்கு இது பழக்கம் தான். ராஜாங்கம் கோபமாக இருந்தால், அவர் அமைதியாக இருந்தே, சண்டையை நிறுத்தி விடுவார். ஆனால், சாந்தாவோ பதிலுக்கு பதில் பேசி, சண்டையை வளர்த்து அதை பெரிதாக்கும் ரகம்.
ராஜாங்கம் சொன்னதை சாந்தாவல் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
“என்னமோ..நான் வளர்த்தது சரியில்லைன்ற மாதிரி பேசுறிங்க..? இவ்வளவு பேசுற நீங்க, நல்லா வளர்த்திருக்க வேண்டியது தானே..?” என்று பதிலுக்கு சொல்ல, ராஜாங்கத்தின் கோபம் எல்லை மீறி அங்கு ஒரு கலவரமே நடந்து முடிந்திருந்தது.
ஒரு சின்ன வாய்த் தகராறு, பெரிய பிரச்சனையில் கொண்டு போய் விட்டிருந்தது.
கதிருடன் அவனுடைய வீட்டிற்கு சென்ற செல்விக்கு எதையோ இழந்ததைப் போல் இருந்தது. அங்கிருந்து வரும் வரை தெரியாத தனிமை, இப்போது நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. அதிலும், கதிரின் உறவினர்கள் பலர் தன்னை முறைத்து பார்ப்பதைப் போன்றே தோன்றியது அவளுக்கு.
“ஏன் ஒரு மாதிரி இருக்க செல்வி..?” என்றான் கதிர்.
“ஒண்ணுமில்லை..! ஆனா, அம்மாவை எல்லாம் விட்டுட்டு வந்தது ஒரு மாதிரி இருக்கு. உள்ளூர் தான், இருந்தாலும் என்னவோ மனசுக்குள்ள கவலையா இருக்கு..” என்றாள், எதையும் மறைக்காமல்.
“சாரி செல்வி..! அப்படி பேசனும்ன்னு நினைச்சு நான் பேசலை. ஆனா, அவங்க அப்படி பேசுனதும் தப்புத்தானே..?” என்றான் கதிர்.
“அதுவும் தப்புத்தான்..” என்று ஒத்துக் கொண்டாள் செல்வி.
“அப்பறம் என்ன..? ப்ரீயா விடு. அவங்க செய்ற சீர் தான் வேணாம்ன்னு சொன்னேன். அவங்களை வேண்டாம்ன்னு நான் சொல்லவே இல்லையே. அது அவங்களுக்குப் புரியலைன்னா, நான் என்ன பண்றது..?” என்றான் சன்னமான சிரிப்புடன்.
“மனசுல ரொம்ப விவரம்ன்னு நினைப்பாக்கும்..” என்று செல்வி பழைய படி, வாய் பேச ஆரம்பிக்க,
“இப்பதாண்டி பழைய மோடுக்கு வந்திருக்க. செல்வி இப்படி இருக்குறது தான் எனக்குப் பிடிக்கும். எப்பவும் சிரிச்சு சந்தோஷமா, வாய் பேசிகிட்டு, யாரையும் சட்டை செய்யாம, உனக்குப் பிடிச்சதை செஞ்சுகிட்டு…இப்படியே இரு. நீ நீயா இரு..” என்றான்.
“எங்க அப்படியே இருக்குறது. நான் நானா இருக்கணும்ன்னா, எங்க வீட்ல தான் இருந்திருக்கணும்..” என்றாள் சிரிக்காமல்.
இவர்கள் சகஜமாக பேசிக் கொண்டாலும், மண்டபத்தில் நடந்த விஷயங்களை மணிகண்டனால் மறக்க முடியவில்லை. கதிர் தாலியைக் கட்டியது கூட அவருக்கு பிடிக்கவில்லை தான். மகனுக்காக அமைதியாக இருந்து விட்டார்.
இரண்டு குடும்பங்களும் பேசி முடித்து, ஏற்பாடு செய்த திருமணம் தான்.. உப்பு,புளி பெறாத வார்த்தைகளால் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வீடு செல்விக்கு ஒன்றும் புதிதில்லை. அங்கிருந்தவர்கள் யாரும் புதிதில்லை. ஆனால் என்னவோ ஒன்று குறைவதாக நினைத்தாள். அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மங்கையிடம் இருந்து அவளுக்கு போன் வர, கதிர் தான் செல்வியிடம் பேச கொடுத்தான்.
“எதையும் நினைக்காம சந்தோஷமா இருக்கணும் செல்வி. அப்பா ரெண்டு நாளைக்குத் தான் கோபமா இருப்பார். உன்மேல அவருக்கு என்னைக்கு கோபம் வந்திருக்கு..?” என்றார் மங்கை.
“இப்ப அவரை நினைச்சு யார் கவலைப் பட்டாங்க. எனக்கு கவலையெல்லாம் உங்களை நினைச்சு தான்..” என்றாள் செல்வி.
“எப்படி அள்ளிவிடுறா பாரு.. என்னமோ இவளுக்கு மனசுக்குள்ள ஒண்ணுமே இல்லைன்ற மாதிரி..” என்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் கதிர்.
இதில் லட்சுமி மட்டும் தான் எந்த கவலையுமின்றி, மகனின் முதல் இரவுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தது தான்.
அன்றைய இரவு, கதிருக்கு ஒரு மறக்கமுடியாத இரவாகத்தான் அமைந்தது. செல்விக்கு வெறும் வாயைத் தவிர, வேறு எந்த விபரமும் இல்லை என்று நன்றாக உணர்ந்து கொண்டான். அதை அவளிடம் சொல்லி, அடி வாங்கவும் மறக்கவில்லை. ஆரம்பத்தில் நடந்த சிறு பிரச்சனையைத் தவிர, அவர்கள் வாழ்வில் எந்த குறையுமில்லை. செல்வி சந்தோஷமாக இருந்தாள்.
கதிரின் நியாபகத்தில் அவள் அழுது கொண்டிருக்க, பக்கத்தில் படுத்திருந்த கயல் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
“அக்கா..! என்னக்கா ஆச்சு..?” என்று எழுப்பும் போது தான் தெரிந்தது, இவ்வளவு நேரமும் கடந்த காலத்தில் இருந்திருக்கிறோம் என்று.
“ஆங்.. அது வந்து ஒண்ணுமில்லை கயல், நீ தூங்கு..” என்றாள். அவள் எழுந்தவுடன் அகரன், அவளைத் தேட, அவனை அருகில் அணைத்துக் கொண்டாள் இசை.
பத்தொன்பது வயதில் கல்யாணம்.. வாழ்க்கையைப் பற்றிய வரைமுறைகளை அறியாத வயதிலேயே அவளுக்குத் திருமணம் முடிந்திருந்தது. எப்படியோ அதில் பொருந்தியும் போய்விட்டாள் என்பதை விட கதிர் அவளை அப்படி மாற்றி விட்டான். அவனையன்றி அவளுக்கு வேறு எதுவும் தெரியாத ஒரு அன்பான கட்டமைப்பிற்குள் அவளைக் கொண்டு வந்து விட்டான். திருமணத்திற்கு பிறகும் படிப்பேன் என்று சொன்னவளுக்கு, அந்த படிப்பைப் பற்றிய எண்ணமே இல்லாமல் போனது தான் ஆச்சர்யம். நல்லவேளை, எப்படியோ.. படித்துக் கொண்டிருந்த டிகிரியை முடித்திருந்தாள் தேனிசைச்செல்வி.
மறுநாள் விடிந்ததில் இருந்து, அவளை விருந்தாளி போல், ஒவ்வொருவராய் வந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் யாரிடமும் சரியாக பேசவுமில்லை. அதற்காக பேசாமல் இருக்கவுமில்லை.
“பிள்ளை அப்படியே உன்னை மாதிரியே இருக்கான் செல்வி..” என்ற வாரத்தைகளைக் கேட்டு அவள் காதில் ரத்தம் வராத குறைதான். அது அவளுக்கே தெரியுமே.
“விடிந்தும் விடியாமலும் வந்து நின்ற ராஜாங்கத்தை தான் அவளால் மறக்க முடியவில்லை. மிகவும் சோர்ந்து, கொஞ்சம் வயோதிகமாக தெரிந்தார் ராஜாங்கம். அவரின் நிம்மதியின்மையே இந்த சோர்வுக்கு காரணம் என்று தேனிசைச்செல்விக்கு தெரியவா போகிறது..?
“மனுஷன் அப்படியே உக்கி உருகிப் போய் நிக்குறாரு.. மனசு இறங்குதா..? மனசு கல்லு தான் போல. நான் தான் இத்தனை நாள் தெரியாம இருந்திருக்கேன்..” என்ற மங்கையின் புலம்பல் காதில் விழுந்தாலும், எதுவும் கேட்காதவள் மாதிரியே கிளம்பி கொண்டிருந்தாள்.
“இசை நீ கொஞ்சம் யோசி..! இவங்க எல்லாருமே உன்மேல எவ்வளவு பாசமா இருக்காங்க..? நீ ஏன் இவங்களுக்காக இங்க இருக்கக் கூடாது..?”என்றாள் ரோகிணி.
“இவங்களுக்காக நான் ஏன் இருக்கணும் ரோகிணி..? எனக்கு அகரன் மட்டும் போதும்..! என் வாழ்க்கையே அவனுக்காக மட்டும் தான்..” என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.
“போ..! யாருக்கென்ன..? இத்தனை நாள் எப்படி இருந்தியோ அப்படியே இரு. எங்களைப் பத்தி உனக்கென்ன கவலை..? அடியே கயலு.. தேவையில்லாம இவளை நினைச்சு நீங்க ஏண்டி உங்களை வருத்திக்கிறிங்க..? இனி யாரைப் பத்தியும் கவலைப் படாதிங்க. அதான் பார்த்திங்கல்ல.. நல்லாத்தான் இருக்கா. வேலைக்கு போறால்ல.. அந்த திமிரு..” என்று மங்கை தன்னுடைய இயலாமையில் பேசிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது அது. இசை கிளம்புகிறேன் என்று சொன்னதால் வந்த கோபம் அதுவென்று.
மனசைக் கல்லாக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தாள் இசை. கயலையும், மாறனையும் விட்டு வருவது அகரனுக்கு கூட கஷ்ட்டமாக இருந்தது. இருவரும் அவன் வயதினரைப் போல் அவனுடன் விளையாடி, அவனை அவர்கள் பக்கம் இழுத்திருந்தனர்.
அங்கே மாதவனின் வீட்டில் இருந்து அன்புச்செழியனும் கிளம்பியிருந்தான்.
“நீங்க எப்போ வரீங்க மாப்பிள்ளை..?”
“நான் இன்னும் ரெண்டு நாள்ல வந்திடுறேன் அத்தை..! சங்கீதாவையும் நானே கூட்டிட்டு வரேன். ரெண்டு நாள் இங்கயே இருக்கட்டும்..” என்றான் மாதவன்.
“பரவாயில்லை மாப்பிள்ளை..! சங்கீதா எங்க கூடவே வரட்டும். அவளுக்கு இங்க யாரைத் தெரியும். அது மட்டுமில்லாம இந்த பட்டிக்காட்ல அவளுக்கு பொழுதும் போகாது..” என்றார் காதம்பரி. எல்லாம் சங்கீதா அவரிடம் சொன்னது தான். அதை அப்படியே மாதவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“பரவாயில்லை..! நீங்க என் மருமகளை கூட்டிட்டு போங்க. அமெரிக்காவுல இருந்த புள்ள.. இங்க எப்படி இருக்க முடியும்..” என்று சாந்தாவும் சேர்ந்து கொண்டு பேச,
“ஏன்..? நானும் அங்க இருந்து தான் வந்தேன்..” என்றான் மாதவன் வெடுக்கென்று. இருந்தாலும் அவள் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் எதுவும் பேசக் கூடாது என்று அமைதியாய் இருந்து விட்டான்.
அவர்கள் கிளம்பியது தான் தாமதம்…
“என்னமோ ஊர்ல இல்லாத மகளைப் பார்க்க போனிங்களே.. பேசுனாளா அந்த சிறுக்கி..?” என்று சாந்தா நீட்டி முழக்க,
“போய் வேலையை பாரும்மா.. உனக்கு அவங்களைப் பேசலைன்னா தூக்கமே வராது..” என்றான் மாதவன்.
ராஜாங்கம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“என்னையவே சொல்லுடா மாதவா.. உங்கப்பன் முகத்தைப் பாரு, எப்படி வாடிக் கிடக்குன்னு. அப்படி என்ன அவளுக்கு வீம்பு. ரெண்டு வார்த்தை..எப்படி இருக்கிங்கன்னு கேட்டா குறஞ்சா போய்டுவா..?” என்றார் சாந்தா.
“ஏன் மாதவா.. செல்வி அங்க நம்ம சம்பந்தி வீட்ல தான் தங்கியிருக்கான்னு சொல்றாக..? உண்மையாவா..?” என்றார்.
“ஆமாப்பா..! எனக்கே இப்பத்தான் தெரிஞ்சது. இங்க குடி வந்து ஒரு மாசம் தான் ஆகும் போல. ஆனா, அன்பு மச்சான் கம்பெனில தான் வேலை பார்த்துட்டு இருந்திருக்கா இத்தனை நாளும்..” என்றான் மாதவன்.
“ஊர்ல பாதி சொத்து நமக்கு இருக்கும் போது, எம்மக அங்க போய் வேலைக்கு போய்கிட்டு இருக்காளா..?” என்றவரின் மனம் வெம்பிப் போனது.
“நீ சென்னை போகும் போது, ஒரெட்டு என்னையும் கூட்டிட்டு போறியா..? நான் என் பேரனை கூட சரியா பார்க்கலை. செல்வி கைகால்ல விழுந்தாவது நான் அவனைப் பார்த்துட்டு வந்துடுறேன்..” என்றார் ராஜாங்கம். அவர் எந்த அளவிற்கு அவளின் பாசத்திற்கு ஏங்கிப் போயிருக்கிறார் என்பது அவரின் பேச்சிலிருந்தே தெரிந்தது.
“இங்க அசிங்கப்பட்டது பத்தாதுன்னு… இனி மெட்ராஸ் வரைக்கும் போய் அசிங்கப் பட போறிங்களா..? நீங்கல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டிங்க..” என்று கத்தியபடி அவர் வேலையைப் பார்க்க சென்று விட்டார் சாந்தா.
“அம்மாவுக்கு வேற வேலையில்லை. செல்வி மனசு கண்டிப்பா மாறும்ப்பா..! நீங்க கவலைப் படாதிங்க..” என்று மாதவன் அவருக்கு ஆறுதல் சொல்ல,
“செல்வி பிள்ள ரொம்ப கஷ்ட்டப் பட்டிருச்சு மாதவா. நானும் என்னோட பிடிவாதத்தை விட்டிருக்கலாம். ஆனா, இப்படி வீட்டை விட்டு போய், வைராக்கியமா இருப்பான்னு நான் நினைக்கவேயில்லை மாதவா. சின்ன பொண்ணுன்னு நினைச்சேன். என் பொண்ணு இப்போ எப்படி இருக்கா தெரியுமா..? என்னாலேயே நம்ப முடியலை.” என்று அவர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க,
“விடுங்கப்பா, நம்ம செல்விதான.. சீக்கிரம் புரிஞ்சுப்பா..” என்று முடித்துவிட்டான் மாதவன்.
தேனிசைச்செல்வி அவர்களைப் பார்த்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவள் எப்போதும் வேலைக்கு சென்று கொண்டிருக்க, சங்கீதாவிற்கு நான்காம் மாதம் முடிந்து ஐந்தாம் மாதம் ஆரம்பித்திருந்தது.
இசை யாரென்ற உண்மை தெரிந்ததில் இருந்து அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள் சங்கீதா. காதம்பரியையும் அப்படியே இருக்க வைத்தாள். பல்லவன் கூட சொல்லிப் பார்த்தார்,
“இத்தனை நாள் அந்த பொண்ணு யாருன்னு தெரியாது..? அதான் இப்போ நம்ம மாப்பிள்ளையோட தங்கச்சின்னு தெரிஞ்சு போச்சே.. இனியும் இப்படி பேசாம இருக்குறதுல அர்த்தம் இல்லை காதம்பரி. அது தப்பும் கூட..” என்றார்.
“நீங்க பேசாம இருங்கப்பா..! அவளுக்கு ரொம்பத்தான் திமிரு. அன்னைக்கு என்னை எப்படி முறைச்சா..? இவளை முதல்ல வீட்டை காலி பண்ண சொல்லுங்கம்மா..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எதிரே நிழலாட, நிமிர்ந்து பார்த்தாள் சங்கீதா. அன்புச்செழியன் கோபமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.