நீண்ட நெடிய நான்கு வருடங்களுக்குப் பிறகு, சொந்த ஊரில்,சொந்த வீட்டின் முன் நிற்கிறாள் இசை. அவளின் உணர்வுகளை ரோகிணியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. பழைய நியாபகங்கள் இசையின் மனதில் அணி வகுக்க, மறக்கவே முடியாத அந்த நாளும் அவளுக்கு நினைவில் வந்து போனது.
“வீடு ரொம்ப அழகாயிருக்கு இசை..” என்றாள் ரோகிணி.
அதைக் கேட்ட இசையின் முகத்தில் ஒரு வெற்றுச் சிரிப்பு மட்டுமே. அவர்கள் அனைவரும் உள்ளே சென்ற பிறகும் கூட, இசைக்கு தயக்கமாக இருந்தது.
“மம்மி..! போலாம் மம்மி..!” என்று அகரன் சொல்லிக் கொண்டிருக்க,
“என்ன செல்வி..? உன்னோட வீட்டுக்குள்ள போறதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்..” என்றான்.
“நான் வரேன்னு அம்மாக்கு தெரியுமா…?” என்றாள் இசை.
“இல்லை, தெரியாது. அதே மாதிரி அன்புக்கும், அவர் குடும்பத்துக்கும் கூட தெரியாது நீ யார்ன்னு..” என்றான் மாதவன்.
மனதில் இருந்த வைராக்கியத்தை ஓரமாக தள்ளி வைத்து விட்டு, கயல்விழிக்காக மட்டுமே, அந்த வீட்டிற்குள் தயக்கமாக நுழைந்தாள்.
அவள் ஓடியாடி விளையாடிய வீடு. அவளுக்கு நடந்த அனைத்து நல்லது கெட்டதிலும் அந்த வீட்டிற்கு பங்கு உண்டு. மறக்க நினைத்த நினைவுகள் சுகமாய், சுமையாய் அவள் மனதை அழுத்த, அந்த அழுத்தம் கொடுத்த பாரத்தை அவளால் தாங்க முடியவில்லை.
அன்பு குடும்பத்தை வரவேற்றுக் கொண்டிருந்த மங்கையின் பார்வை இசையின் மீது விழ, அவருக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் பிரமை பிடித்தவர் போன்று நின்றுவிட்டார். அவரைப் பார்த்தவுடன், ஓடிச் சென்று அவரை கட்டிக் கொள்ள நினைத்த கைகளை அடக்கிக் கொண்டு, கூட்டத்தில் ஒருத்தி போல் அங்கு சென்று அமர்ந்தாள் இசை.
“இசை..! அம்மாகிட்ட போய் பேசு..! அவங்க முகமே எப்படி இருக்கு பாரு. இத்தனை வருஷத்துல இன்னமுமா உன்னோட கோபம் குறையலை..” என்று ரோகிணி சொல்லிக் கொண்டிருக்க, அகரனை கீழே இறக்காமல் மடியிலேயே அமர்த்திக் கொண்டிருந்த இசையின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.
இசையை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த அன்பிற்கு எதுவோ சரியில்லையென்று பட்டது. இங்கு வந்ததில் இருந்து இசையின் முகமே சரியில்லை என்று நினைத்தான்.
“எப்படி இருக்கீங்க சம்பந்தி..” என்று காதம்பரியும், பல்லவனும் கேட்க, மங்கைக்கோ வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. அவர் பார்வை இசையின் மீதும், அவள் மடியில் இருந்த அகரனின் மீதும் தான் இருந்தது.
“என்னாச்சு..? ஏன் ஒரு மாதிரி இருக்காங்க..?” என்றார் காதம்பரி.
“அது ஒண்ணுமில்லை அத்தை..” என்றான் மாதவன்.
அவர் பார்வை இசையின் மீது இருப்பதைப் பார்த்த காதம்பரி,
“இவங்க எல்லாரும் அங்க நம்ம வீட்ல குடியிருக்கவங்க. அந்த பொண்ணு இசையும், ரோகிணியும் தம்பியோட கம்பெனியில தான் வேலை பார்க்குறாங்க. நம்மகிட்ட வேலை செய்றவங்களை எப்பவும் நம்ம குடும்பத்துல ஒருத்தரா பார்க்குறதுதான வழக்கம். அதான் அவங்களையும் கூட்டிட்டே வந்துட்டோம். நம்ம சங்கீதா வாழ வந்த வீட்டைப் பார்க்கனும்ன்னு அவங்களுக்கும் மனசுக்குள்ள இருக்கும்ல்ல..” என்றார் காதம்பரி.
“அவங்க கேட்டாங்களா..?” என்று பல்லவன் முறைக்க,
“சொன்னேங்க..!” என்றார் காதம்பரி.
“நம்ம கேட்டமாம்… பாரு இந்த ஆன்ட்டி எப்படி அள்ளி விடுறாங்கன்னு..” என்று ரோகிணி எரிச்சல் பட, அப்போது தான் உள்ளே வந்தான் மாறன். அவன் இசையை கவனிக்காமல் உள்ளே செல்ல, இசை அவனைப் பார்த்து விட்டாள். இந்த நான்கு வருடங்களில் அவன் நன்றாக வளர்ந்திருந்தான்.
“அம்மா..! நீங்க சொன்னதை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்..! கயல் எங்கம்மா..?” என்றான். மங்கை பதில் பேசாமல் இசையின் பக்கம் பார்வையைக் காட்ட, அப்போது தான் அவளைப் பார்த்தான் மாறன். பார்த்தவனுக்கு அதிர்ச்சி, சந்தோசம் எல்லாம் ஒரே நேரத்தில் கலந்து வர, அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், புரியாமல் தவித்து நின்றான்.
“செல்வி அக்கா..!” என்று கத்தியே விட்டான்.
அன்பும், மற்றவர்களும் புரியாமல் பார்க்க, நேராக இசையின் அருகிலேயே சென்று விட்டான் மாறன்.
“இத்தனை நாளா எங்க போன செல்வியக்கா..! நான் என்ன பண்ணேன்..? என்மேல உனக்கு என்ன கோபம்..? செல்வியக்கான்னு உன் பின்னாடியே சுத்திட்டு தான இருந்தேன்..?” என்று அவன் சின்னப் பையன் போல் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
“செல்வியா…?” என்ற அன்பு அதிர்ந்து போக, அவனுடைய குடும்பத்தில் இருந்தவர்களுக்கும் அதே அதிர்ச்சி தான்.
“மாறா… அழாதடா மாறா..” என்ற செல்வியின் கண்களிலும் கண்ணீர் வந்தது.
“உனக்கு என்ன கோபம்ன்னாலும் என்கிட்டே சொல்லிட்டு போயிருக்கலாம். ஆனா, சொல்லாம நீ பேசாம போய்ட்ட.. இங்க எவ்வளவு பிரச்சனை தெரியுமா..? அப்பா, இப்போ வரைக்கும் அம்மா கூட பேசுறதே இல்லை..!” என்றான் மாறன்.
இவர்களைப் பார்த்த மாதவனுக்கும் கண்கள் கலங்கிப் போயிருக்க, அன்பிற்கு ஏதோ புரிவதைப் போல் இருந்தது.
“என்னடா மாறா சொல்ற..? இவங்க பேரு செல்வி இல்லை இசை..” என்றாள் சங்கீதா.
“என்ன இசை இதெல்லாம்..? இவங்க சொல்றது எல்லாமே நிஜமா..?” என்றான் அன்பு.
“ஆமா..!” என்பதைப் போல் அவள் தலையாட, சங்கீதாவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
“என்னங்க நீங்க..? உங்கப்பாவுக்கு ரெண்டு தாரம்ன்னு தான சொன்னிங்க..? இப்ப இது யாரு புதுசா..?” என்று அந்த இடத்திலேயே கத்த ஆரம்பித்து விட்டாள்.
“ஏற்கனவே தெளிவா சொன்னது தான் சங்கீதா. உங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். எங்க வீட்ல மொத்தம் ஐந்து பேர்ன்னு. செல்வியைப் பத்தியும் நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், அமுதாவைப் பத்தியும் சொல்லியிருக்கேன்” என்றான் மாதவன்.
“செல்வின்னு தான சொன்னிங்க..? இந்த இசை தான் அந்த செல்வின்னு சொல்லைலை தானே..?” என்றாள்.
“நீயென்ன லூசாடி..? செல்வியும் அவதான். இசையும் அவதான்..” என்று மாதவன் ஒரு அதட்டல் போட, அப்படியே வாயை மூடிக் கொண்டாள் சங்கீதா.
சங்கீதாவின் திருமணத்தின் போதே, அனைத்தையும் சொல்லியிருந்தனர். அவர்கள் செல்வி என்று சொன்னதால், அவர்களுக்கும் இசையைத் தெரிந்திருக்கவில்லை.
அன்பு யோசனையுடன் இசையை பார்த்துக் கொண்டிருந்தான். யோசனையில் அவன் புருவன் நெறிய, என்ன முடிவு எடுப்பது என்று அவனுக்குள் ஒரு சிறு தயக்கம். அதோடு பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“என்ன இசை..? இவ்வளவு பெரிய வீட்டுப் பொண்ணா, அவ்வளவு சாதரணமா இருந்த..? இந்த ரோகிணி கூட என்கிட்டே சொல்லாம மறைச்சுட்டா பாரேன்..?” என்று ரோகிணியின் அம்மா, ஆதங்கப்பட,
இசையின் மடியில் இருந்த அகரன், இசையின் கலங்கிய கண்களைப் பார்த்து,
“குட்டிப் பையனை குடுக்கா..” என்ற மாறன் அகரனைத் தூக்க முற்பட,
ஏனோ அவனிடம் போக மறுத்தான் அகரன்.
“டேய்..! நான் உன் மாமாடா. வாடா குட்டி…” என்றான் மாறன்.
அகரன் அண்ணாந்து இசையைப் பார்க்க,
“போ..!” என்று தலையசைத்தாள் இசை. அப்போதும் மாறனிடம் தயங்கித்தான் சென்றான் அகரன். அவனைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்ற மாறன், வரும் போது கயலையும் கூட்டிக் கொண்டு வெளியே வர, வெளியே வந்த கயல்விழி, பாய்ந்து வந்து தன்னுடைய அக்காவைக் கட்டிக் கொண்டாள்.
“எங்கக்கா போன..? நாங்க என்ன பண்ணோம்..?” என்று அவளும் ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க,
“இதென்னமா… குடும்பமே இப்படி அழுது வடியுது..?” என்ற சங்கீதாவிற்கு முகத்தில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
அன்புச்செழியனின் அருகில் வந்த மாதவன் அவனின் கைகளைப் பிடித்து,
“ரொம்ப தேங்க்ஸ் அன்பு..! உங்களோட உதவியை நான் மறக்கவே மாட்டேன்..!” என்றான் மாதவன்.
“என்ன சொல்றிங்க..? அண்ணா உங்களுக்கு என்ன உதவி பண்ணான்..?” என்றாள் சங்கீதா.
“அது.. இந்த பொண்ணு பார்க்குற விஷயம் எல்லாம் சும்மா. நான் தான் அன்பு கிட்ட சொல்லி உங்களை எல்லாரையும் கூட்டிட்டு வர சொன்னேன்..!” என்றான் மாதவன்.
“எனக்கும் இப்பத்தான் தெரியும் சங்கீதா. நீங்க இங்க வந்தாதான் ஒரு குடும்பத்தை ஒன்னு சேர்க்க முடியும்ன்னு மட்டும் தான் மாப்பிள்ளை சொன்னார்..அப்ப கூட எனக்கு ஒன்னும் புரியலை. ஆனா, மாதவன் வந்ததுல இருந்து இசைகிட்ட ஏதோ பேசிட்டே இருந்தார். அப்பவே எனக்குள்ள ஒரு சந்தேகம்..அது இப்போ கிளியர் ஆகிடுச்சு..” என்றான் அன்பு.
ஏனோ அவனின் முகத்தில் கொஞ்சம் தெளிவும், பிரகாசமும் இருந்ததைப் போல் இருந்தது அனைவருக்கும்.
இவ்வளவு பேச்சு வார்த்தையிலும், மங்கையும், இசையும் பேசிக் கொள்ளவே இல்லை.
“என்னைத் திட்டம் போட்டு வரவச்சிருக்க மாதவா…” என்ற இசையின் முகத்தில் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க, அவளின் இந்த முகத்தைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான். அவர்கள் அறிந்த இசை அன்பானவள் மட்டுமே.
“எனக்கு வேற வழி தெரியலை செல்வி. நாங்க வந்து கூப்பிட்டிருந்தாலும் கண்டிப்பா நீ வந்திருக்க மாட்ட. இல்லைன்னா, இப்பவும் எங்கையாவது கிளம்பிப் போயிருப்ப. அதான் இப்படி வரவச்சேன். வேற எந்த தப்பான நோக்கமும் இல்லை..!” என்றான் மாதவன்.
“ஏதாவது சொத்துப் பத்திரத்துல கையெழுத்துப் போடணுமா..? சொல்லுங்க, மொத்தமா போட்டுக் கொடுத்துட்டு போறேன். ஆனா, கண்டிப்பா இங்க இருக்க மாட்டேன்..!” என்று இசை சொல்ல, ஆவேசமாய் அவளின் அருகில் வந்த மங்கை, அவளை ஓங்கி அறைந்தார். அந்த அறைக்கும் அசையாமல் இசை நின்றிருக்க,
“உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடி. நாங்க தப்பு பண்ணோம் தான். அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை எனக்கு எதுக்குடி..? என்னைய மொத்தமா கொன்னு புதைச்சுட்டு போய்டு..” என்ற மங்கை, இத்தனை அடக்கி வைத்திருந்த அழுகையை எல்லாம் அழுது தீர்த்தார்.
“உங்களுக்கு எப்பவுமே நான் பெரிசில்லையே..? எப்பவும் என்னை அடிக்க, அதட்ட மட்டும் தான் தெரியும். வேற என்ன தெரியும் உங்களுக்கு..?” என்றாள் இசை குரலை உயர்த்தி.
அவளுக்கு இப்படி கூட பேச வரும் என்பதையே அன்று தான் உணர்ந்தனர் அனைவரும்.
“அம்மாகிட்ட பார்த்து பேசு இசை..! எதுக்கு கண்ட்ரோல் இழக்குற..?” என்று ரோகிணி சொல்ல,
“முடியலை ரோகிணி..! இவங்களை எல்லாம் பார்க்கவே கூடாதுன்னு தான, இத்தனை நாள் கண்ணுக்கு காணாம நிம்மதியா இருந்தேன். ஆனா, விதி என்னை இங்க கொண்டு வந்து நிக்க வச்சிருக்கு பாரு.. கடைசி வரைக்கும் நான் நிம்மதியாவே இருக்கக் கூடாதுன்னு என் தலையில எழுதியிருக்கும் போல..” என்ற இசையைப் பார்த்த ரோகிணிக்கு பாவமாய் இருந்தது என்றால், அன்பு செழியனுக்கு அதற்கு மேல் இருந்தது. அவளின் கண்ணீரைத் துடைத்து, அவளை தன்னுடைய அணைப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. ஆனால் இருக்கும் சூழ்நிலையும், அவளின் நிலையும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
“அப்போ எங்க மேல உனக்கு இருந்த பாசம் எல்லாம் பொய்யா செல்வியக்கா..!” என்ற மாறனின் கேள்விக்குத் தான் அவளிடம் பதில் இல்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்பை மட்டுமே கொடுத்தவன் மாறன். சகோதரன் என்பதையும் தாண்டி, அவனுக்கு எல்லாமே செல்வியாகத் தான் இருந்திருக்கிறாள். மங்கையை அவன் ஒருநாளும் தேடியதில்லை. தமக்கை மடியையே தாய் மடியாகக் கொண்டு அவன் நெடுநாட்கள் உறங்கியிருக்கிறான். அவன் இப்போது அப்படி கேட்கவும், அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“எப்படி பேசுவா..? என்ன பேசுவா..? யாரைப் பத்தியும் அவளுக்குக் கவலையில்லை மாறா..? நாம இருக்கோமா, செத்தோமான்னே அவளுக்குக் கவலையில்லை..!” என்று மங்கை வெடிக்க, இவர்கள் பிரச்சனையில் என்ன பேசுவதென்று தெரியாமல் அனைவரும் அமைதியாக இருக்க, சங்கீதாதான் வாயைத் திறந்தாள்.
“இசை, உங்களுக்கு இது ஓவரா தெரியலை..எதுக்காக இப்படி எல்லார் முன்னாடியும் சீன் போட்டுட்டு இருக்கீங்க..?” என்றாள். அவள் அப்படி கேட்டது தான் மாயம். அவளைத் திரும்பி முறைத்த இசையின் கண்களில் தீப்பொறி பறந்தது.
“வாயை மூடிட்டு இருக்குற வரைக்கும் தான் உனக்கு நல்லது..!” என்று இசை கையை நீட்டி எச்சரிக்க,
“இப்ப அவ என்ன சொல்லிட்டான்னு இப்படி பேசுற இசை..?” என்றார் காதம்பரி.
“மருமகளுக்குன்னு சில கடமைகள் இருக்கு. இதுவரைக்கும் அது எதையும் நீ செஞ்சதா நான் கேள்விப் படவேயில்லையே..?” என்றாள் இசை.
“அதை.. ஊரை விட்டு ஓடிப் போன நீயெல்லாம் பேசக் கூடாது…” என்று சங்கீதா சொல்ல,
“சங்கீதா..” என்று ஒரு அதட்டல் சத்தம் விழுந்தது. அன்பு தான் அவளை அதட்டியிருந்தான்.
“உங்க பிரச்சனையை நீங்க பேசித் தீர்த்துக்கோங்க.. சங்கீதா நீ உங்க வீட்டுக்கு கிளம்பு. வாங்க மாப்பிள்ளை..!” என்ற அன்பு ஆளுக்கு முன்னால் வெளியே செல்ல முற்பட,
“உட்காருங்க அன்பு சார்..! சாரி” என்றாள் இசை. அன்பும் வேறு வழியில்லாமல் அமர்ந்தான். அந்த இடத்தில் பேசக் கூடாது என்று நினைத்தான்.
“இங்க பொய்யா வந்தமோ…உண்மையா வந்தோமோ..? ஆனா, கயல் ரொம்ப நல்லவ அன்பு சார். உங்களுக்கு அவளை மாதிரி ஒரு பொண்ணு தேடுனாலும் கிடைக்காது. பொய்யா வந்த விஷயத்தை ஏன் உண்மையாக்க கூடாது..?” என்றாள் இசை.
“எனக்கும் அப்படித்தான் தோணுது அன்பு..” என்றார் பல்லவன். இத்தனை நாட்கள் கழித்து அவனுடன் பேசியிருக்கிறார். ஆனால் அன்பு எதற்கும் பதில் சொல்லவில்லை.
“என்ன பேசிட்டு இருக்கீங்க..? இதுக்கு முன்னாடி கூட எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. இப்போ அது சுத்தமா இல்லை. அக்கா வாழ்க்கையிலேயே ஆயிரத்தெட்டு பிரச்சனை. இதுல தங்கச்சி மட்டும் எந்த லட்சணத்துல இருப்பா..” என்று காதம்பரி வாயை விட,
“உனக்கு என்னாச்சு காதம்பரி..? எப்பவும் நீ இப்படி பேச மாட்டியே..?” என்றார் பல்லவன்.
“பேச்சை விடுங்க..! இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம்..” என்றார் முடிவாக.
“அம்மா, வாங்க எங்க வீட்டுக்கு போகலாம்..” என்ற சங்கீதா அவர்களை அழைத்துக் கொண்டு செல்ல,
“விட்டுட்டு வந்திடுறேன்..” என்ற மாதவன், அவர்கள் பின்னால் சென்றான்.
“இவன் எப்ப வேலைக்கு போக ஆரம்பிச்சான். அதுவும் வெளிநாட்டுக்கெல்லாம்..” என்றாள் இசை புரியாமல்.
“படிச்சுட்டு சும்மா சுத்திட்டு இருந்தான். யாரும் பொண்ணு குடுக்கலை. உன்னோட பிரச்னைக்கு அப்பறம் அவன் ரொம்ப மாறிட்டான் செல்வி. அம்மாகிட்ட கூட ரொம்ப பாசமா இருக்கான்..!” என்றான் மாறன்.
“பார்த்தாலே தெரியுது..” என்ற இசை,
“சென்னையில எப்படிடா பொண்ணு கட்டுனான்..?”
“தரகர் மூலமாதான்க்கா.. அவங்களும் வசதியைப் பார்த்து குடுத்துட்டாங்க. அந்த அன்பு, அவர் மட்டும் தான் கடைசி வரைக்கும் கொஞ்சம் விருப்பம் இல்லாதவர் மாதிரி இருந்தாரு..” என்றான் மாறன்.
“ரோகிணி.. நீயும் அம்மாவும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு கிளம்பிடலாம்..” என்றாள் இசை.
“என்னது கிளம்ப போறியா..?” என்றான் மாறன்.
“இங்கயே இருக்க முடியாது மாறா. உனக்கு என்னைப் பார்க்கனும்ன்னா நீ அங்க வா..” என்றாள் இசை.
“உன்னோட பிடிவாதத்தை நீ விடவே மாட்டியா செல்வி..?? என்றாள் கயல்.
“உனக்கு சொன்னா புரியாது கயல். சில பிரச்சனைகளுக்கு தீர்வு தள்ளி இருக்குறது தான். நீங்க இவ்வளவு பேசுறிங்க. ஆனா, சிலர் இன்னும் என்னை அடிக்க மட்டும் தான் செய்றாங்க..? அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு தான் தெரியலை..” என்றாள் இசை.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, அகரன் மட்டும் எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த மங்கைக்கு அவனைத் தூக்கி கொஞ்ச வேண்டும் என்று மனம் முழுவதும் ஏக்கம் நிரம்பியிருக்க, இசைக்கு பயந்து அமைதியாக இருந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த வீட்டில் சுவாசிக்கிறாள்.நடந்த எதுவும் அவள் மனதை விட்டு போகவில்லை என்றாலும், தம்பி தங்கையின் அன்பிற்கு முன்னால், அவள் கொஞ்சம் இறங்கித்தான் போக வேண்டியது இருந்தது. மாதவனுக்கு இவளின் குணம் நன்றாக தெரியும். அதனால் தான் அவளை இங்கு வரவழைத்தான். அவனின் எண்ணமும் கொஞ்சம் நிறைவேறியிருந்தது.
அதற்குள் இசை வந்த செய்து, அந்த ஊரில் சில பேருக்கு தெரிய வர, அது அப்படியே தெரிய வேண்டியவர்களுக்கும் போய் சேர்ந்தது. ஆனால் அவர்களும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இசையை வந்து பார்ப்பார்கள்.
மாதவனின் வீட்டில்…
“நீங்க எதுக்கு சம்பந்தி அங்க போனிங்க..? அவளே ஒரு மரியாதை தெரியாதவ..? இந்த மாதவனுக்குத் தான் கிறுக்குப் பிடிச்சிருக்குன்னா, அவன் பேச்சை கேட்டுட்டு நீங்களும் போயிருக்கிங்க பாருங்க..” என்று சாந்தா பேசிக் கொண்டே இருக்க,
“கொஞ்ச நேரம் பேசாம இரும்மா. இத்தனை வருஷம் கழிச்சும் உன் மனசு கொஞ்சம் கூட மாறலை. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..” என்றான் மாதவன்.
“நான் என்னடா பண்ணேன்..? நானா அவளை ஊரை விட்டு போக சொன்னேன். போனவ அப்படியே போயிருந்தா பரவாயில்லை. மறுபடியும் குடியைக் கெடுக்க வந்துட்டா..” என்றாள் சாந்தா.
“செல்வி என்ன, நீங்க திங்கற சோத்துலையா மண்ணள்ளி போட்டா? அவளைக் கரிச்சுக் கொட்டிட்டே இருக்கணும் உங்களுக்கு..” என்று மாதவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த இடத்தில் இருந்து எழுந்து விட்டான் அன்பு.
“இன்னைக்கு ஒரு நாள் தங்கிட்டு நாளைக்கு போங்க. அங்க இருந்து வந்த உடனேயே கிளம்பினா நல்லாவா இருக்கும்..?” என்று மாதவன் மன்றாடிக் கேட்க, அதற்குமேல் வீட்டு மாப்பிள்ளையை கெஞ்ச வைக்க அவனுக்கு இஷ்ட்டமில்லை.
“நான் அப்படியே வெளிய கொஞ்சம் போயிட்டு வரேன்..” என்றபடி கிளம்பி வந்தான். தங்கை வீடுதான் என்றாலும் அவனால் அதற்கு மேல் உள்ளே இருக்க முடியவில்லை.
உள்ளே இருக்கும் மனிதர்களைத் தான் அவனுக்கு பிடிக்கவில்லையே தவிர, அந்த ஊரையும் அங்கு நிலவிய பசுமையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
சங்கீதாவைக் கட்டிக் கொடுக்கும் போது, ராஜாங்கத்திற்கு இரண்டு மனைவிகள் என்று தெரியும் அன்பிற்கு. ஆனால் குடும்பத்திற்குள் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. மாதவனின் தங்கை அமுதா ஓடிப் போனது கூட தெரியும் அன்பிற்கு. எதையும் மறைக்காமல் உண்மையை பேசிய ஒரே காரணத்திற்காக மட்டுமே, மாதவனை அவனுக்குப் பிடித்திருந்தது.
அதுமட்டுமில்லாமல், முழு நல்லவன் என்று யாரையும் சொல்ல முடியாது என்று அன்புச்செழியனுக்கு தெரியும்.
இசையின் விஷயத்திலும் அவனுக்கு பல கேள்விகள் இருந்தது. அதில் ஒன்றுக்கு கூட விடைதான் தெரிந்திருக்கவில்லை. அவளைப் பற்றிய யோசனைகளிலேயே நடந்து கொண்டிருந்தான்.
“இப்போ என்ன செய்ய போற அன்பு..?” என்று உள் மனம் கேட்க,
“நான் என்ன செய்றது..?” என்றான் புரியாமல்.
“இசை சொன்ன மாதிரி அவ தங்கச்சி கயலைக் கட்டிக்க வேண்டியது தான..?” என்று மனம் கேட்க,
“இதுக்கு முன்னாடி எப்படியோ..? இனி கண்டிப்பா முடியாது..” என்று உறுதியாக மனதிடம் சொல்லி விட்டான் அன்பு செழியன். அவன் மனதில் உள்ளதை அவன் மட்டும் தானே அறிவான். ஓவொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்சனை.